Wednesday, June 11, 2014

மிதவை - நாஞ்சில் நாடன்


தண்ணீரில் மிதந்து செல்லப் பயன்படும் எதையும் மிதவை எனலாம். இது தவிர சாதாரனமாக மிதந்துகொண்டிருக்கும் எதையும் மிதவை எனலாம்.

வாழ்க்கை எனும் கடலில் இழுத்துச் செல்லப்படும் மக்கள்தான் இங்கு மிதவை எனப்படுகின்றனர். அவர்கள் நினைத்ததுபோலெல்லாம் பயணம் செய்ய இயலாது. அலை இழுத்துச் செல்லும் திசையில்தான் செல்ல முடியும். அதிர்ஷ்டமிருப்பின் நல்ல இடத்திலும், இல்லையெனில் சாக்கடையிலும் போய் விழுவோம்.

பம்பாய் எனும் மாபெரும் மனிதக்கடலுக்குள் தினமும் மேலும் மேலும் மக்கள் வெள்ளம் வந்து சேர்ந்துகொண்டே இருக்கிறது. அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை முறை, குறிப்பாய் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை பம்பாய் செல்லாமலேயே நாம் அறிந்து கொள்ளமுடியும், மிதவை நாவல் மூலமாக.

சிறுவயதில் நான் படிக்கும் விதத்தைப் பார்த்து எனது அப்பா எபோதும் சொல்லும் ஒரு வசனம், மதுரை ராகவேந்திர விலாஸ்ல போயி சீனு அனுப்புனார்னு சொல்லு, டேபிள் கிளீனர் வேலை நிச்சயமா ராகவன் மாமா தருவார்ரா என்பது. ஆனால், மிதவையில் பட்டணத்திலிருந்து வரும் பெரியப்பாவின் கருனைக்காக, அவரது சிபாரிசுக்காக காத்திருக்கிறான். எந்தத் தகவலும் வராமல் போக, அப்பா உழும் நிலத்தின் உரிமையாளர் பம்பாய்க்கு அனுப்பி வைத்து விடு, அவனை எங்கையாவது உக்காத்தி வச்சிர்ரேன் என்று சொல்லும் உறுதிமொழியை நம்பி பம்பாய்க்குப் பயணமாகும் ஒரு கிராமத்தான சந்திக்கும் அனுபவங்களே கதை.

ஆனால், இது கதையா எனில் நாஞ்சில் நாடன் ஆம் எனச் சொல்லக்கூடும். ஆனால், இன்றைய பம்பாயின் நிதர்சனத்தை சண்முகம் மூலம் நமக்குச் சொல்கிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவனது எண்ணங்கள் மாறுவதையும், எப்படி இருப்பதை வைத்து சமாளிப்பது என்பதைக் குறித்த சிந்தனையுடனே இருக்கிறான். நான் பம்பாயில் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்வதற்காக ஒவ்வொரு ஏஜென்ஸியாக ஏறி அலைந்த காலம் ஞாபகம் வருகிறது. அப்பொது இருக்கும் காசுக்குள்ளேயே சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்துகொண்டே இருக்கும். ஒரு நாள் கூட சட்டைபையில் என்ன இருக்கிறது எனத் தெரியாமல் சாப்பிடும் நாள் வாய்த்ததேயில்லை.

காலமெனும் கடலில் இழுத்துச் செல்லப்படும் சிறு மிதவையென சண்முகத்தை உருவகம் செய்து கதை சொல்கிறார். நாகர்கோவிலின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும்போது என்னவாகப்ப்போகிறானோ என்ற எண்ணமும், பின்னர் சென்னையில் பெரியப்பாவின் வீட்டில் பெரியப்பாவின் உண்மையான உதவியின்றி இருக்கின்ற காலமும், பின்னர் திடீரென அய்யர் மூலம் கிடைக்கும் பம்பாய் பயண வாய்ப்பும், அப்படியே...

நாஞ்சில் நாடனின் எழுத்துகளில் மிக முக்கியமாக நான் உணர்வது அலங்காரமற்ற சுட்டெரிக்கும் உண்மையை பொட்டென போட்டு உடைத்து விடுவது.

கும்பமுனியாக இன்னொரு வேஷம் கட்டி அவர் எழுதிய எழுத்துகளும் அந்த வகையே. சமூகத்தைச் சாட நஞ்சில் நாடன் கட்டும் இன்னொரு வேஷம் கும்பமுனி.

மிதவையாக இருக்கும் சண்முகம் கரைசேர்ந்தானா என்பதே கதை. ஆனால், அவன் படும் அலைக்கழிப்புகள் எல்லாமே கெட்டும் பட்டணம் போய்ச் சேர்ந்த பலரின் வாழ்க்கைக்கதையாய் தெரிவதற்கு வாய்ப்புகளே அதிகம். சண்முகம் படும் பாட்டில் பெருவாரியானதை நானும் பட்டிருக்கிறேன், மும்பையில் இல்லாமல் ஆந்திராவிலும், கர்நாடகாவிலுமாக.

மிதவை : கஷ்டபட்டு முன்னேறிய அனைவருக்கும் தனது வாழ்க்கையை திரும்பிப் பார்த்தது போலிருக்கும். அவசியம் வாசியுங்கள் என சிபாரிசு செய்வேன்.

விஜயா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது இந்த நாவல்.

Tuesday, June 10, 2014

ஆதிகாலத்து ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய் மிட்டாய்க்கடை

மதுரையில் ”ஆதிகாலத்து ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய் மிட்டாய்க்கடை” என ஒரு கடை இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

மீணாட்சி கோவிலின் கிழக்கு கோபுரத்திலிருந்து புதுமண்டபத்துக்குள் நுழைந்து வெளியேறினால் வலதுகைப்பக்கம் 3 வது கடை. (வலப்புறம் இருக்கும் கடையில் முதல் கடை) ஏனெனில் அருகிலேயே அதே பெயரில் அண்ணனோ, தம்பியோ கடைபோட்டிருக்கிறார்கள்.

அதன் ஸ்பெஷல் காராச்சேவு.. பட்டை வத்தலை அரைத்து காரத்துக்காக சேர்த்திருப்பார்கள். காரம் பிடிப்பவர்களுக்கு தேவாமிர்தம். பிடிக்காதவர்களுக்கு, காரமா என அலறுபவர்களுக்கு ஒரே ஒரு சேவு குச்சியை வைத்துக்கொண்டு ஒரு தட்டு சோற்றை உள்ளே தள்ளிவிடலாம்.

எனது அப்பாவுக்கு ”படுக்கார முத்தே” என்றழைக்கபடும் பட்டை வத்தல், பெருங்காயம், புளி சேர்த்து பிசைந்த சட்னி போன்ற வஸ்து பிடிக்கும். ஒரு துளி நாக்கில் எடுத்து வைத்தாலே கண்ணீர் மல்கும்.  அவரைப்போன்ற ஆட்களுக்கு இன்றுவரை அதன் சேவுக்காகவே அந்தக்கடையில் இருந்து வாங்கி வரச் சொல்வார்கள். போன ஜனவரியில் ஊரிலிருந்து எனது நண்பர்களுக்காக அரைக்கிலோ காராச்சேவு துபாய்க்கு கொண்டு சென்றிருந்தேன். ஒரே ஒரு சேவை வாயில் போட்டவர்கள் ஏய், என்ன இது பட்டவத்தலையே அரைச்சு சேவு மாதிரி செஞ்சிருக்காய்ங்களா என மதுரைக்கார நண்பரே கேட்டார். பின்னர் முழுதும் நானே வரும்போதும், போகும்போதும் தின்று தீர்க்க வேண்டியதாகிற்று.

வாய்ப்புக்கிடைத்தால் அவர்களின் சூடான அல்வா ஒரு வாயும், இந்த காராசேவையும் காம்ப்னேஷனாக வைத்து சாப்பிட்டுப் பாருங்கள்.. வாழ்க்கைக்கும் மறக்காத சுவையாய் இருக்கும்.
2427LikeLike ·  · 

சேவா டாக்டர் என்ற டாக்டர் குமரகுருபரன்

சேவா டாக்டர் என்ற டாக்டர் குமரகுருபரன்....

கல்லுப்பட்டியில் 80களில் வந்தஒரு ஆஸ்பத்திரியின் பெயர் சேவா ஆஸ்பத்திரி. பெயருக்கு உண்மையாக அன்றுமுதல் இன்றுவரை சேவை செய்துகொண்டிருக்கிறது.

80களில் 5 ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரையும் கொடுத்து அனுப்புவார். 

பேரப்பாத்துட்டு ஓசிக்கு வைத்தியம் பாக்குற ஆஸ்பத்திரின்னுல நெனச்சேன்னு சொல்ற கெளவிகளிடம் சரி, அடுத்தவாட்டி வந்தா காசுகுடுன்னு சொல்லி அனுப்பிருவார்.

மதியம் 2 மணிக்கு சாப்பிடச் செல்வார். அப்பவும் ஒரு சில கெளவிகளும், பெருசுகளும் அமர்ந்திருக்கும் ஆஸ்பத்திரி வாசலில். என்னான்னு கேட்டா பஸ்ஸுக்கு காசில்ல. வெயில்தாழ போலாம்னிருக்கேன்னு சொல்ற பெருசுகளுக்கு காப்பி வாங்கிக் குடுத்து பஸ்ஸுக்கும் காசு குடுத்து விடுவார்.

மறந்தும் இவ்வளவு காசு கட்டுனாத்தான் ஆஸ்பத்திரிக்குள்ள வரனும்னு சொல்ல மாட்டார். பிரசவம் எல்லாம் 99 சதவீதம் சுகப்பிரசவம்தான். கத்தி வைத்தல் கடைசி ஆப்ஷன் இந்த ஆஸ்பத்திரியில்.

இன்று சொந்தக்கட்டிடத்தில் இரு மாடிகளாக இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஊசி போட்டு மாத்திரை வழங்கி, சிரப்பு, டானிக் எல்லாம் சேர்த்து 75 ரூபாய் வாங்குகிறார்.

எங்களின் குடும்ப டாக்டரான இந்த குமரகுருபரன். அம்மா இறப்பதற்கு ஒரு மாதம் முன்னரே வீட்டுலையே வச்சிப் பாருங்க. நான் முடிஞ்சத செய்றேன்னார். நாங்கதான் அப்பல்லோவுக்கு கூப்டு போனோம். பொறப்ட உடனே சொல்லிட்டாரு. 1 மாசம் அல்லது 1.5 மாசம் வச்சி எல்லா டெஸ்ட்டும் செஞ்சிட்டு 5 லட்ச ரூபா புடிங்கிட்டு விடுவாங்க. ஆனா, உங்களுக்கு அம்மாவ நல்லா பாத்துகிட்டோம்கிற திருப்திதான் மிச்சமா இருக்கும்னார். அதுதான் நடந்தது.

யாருக்கும் அவர் பெயர் குரகுருபரன் என்பதுகூட தெரியாது. சேவா டாக்டர் என்ற பெயரில் மட்டுமே அறியப்படுகிறார்.

இன்றும் மரியாதை நிமித்தமாக ஊரில் சந்திக்கும் சிலரில் இவரும் ஒருவர்.

இவர் மனைவி டாக்டர் தாரகேஸ்வரியும் இவருடன் இணைந்து பணிபுரிகிறார்.

எதுக்கு இந்தக் கதையென்றால் +2 முடித்ததும் நான் டாக்டர் ஆகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் என பேட்டியெல்லாம் கொடுக்காமல் உண்மையிலேயே சேவை செய்வதற்காக டாகடருக்கு படித்து சேவை செய்தவர்/ செய்பவர்.

கலில் ஜிப்ரான் வீடு மற்றும் அருங்காட்சியகம். (லெபனான் குறிப்புகள் - 2)

உலகமெங்கும் உள்ள மக்களால் விரும்பப்படும் மிஸ்டிக் (மிஸ்டிக் என்பதன் தமிழர்த்தம் என்ன?) கவிஞர், ஓவியர் மற்றும் தி ப்ராஃபெட் என்ற அழியா புத்தகத்தை உலகிற்கு அழித்த கலில் ஜிப்ரானின் வீட்டிற்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது எனது ஆசைகளில் ஒன்று. கம்பெணி செலவில் இந்த ஆண்டு கைகூடியது.

புஷ்ஷேர் என்றழைக்கப்படும் கிராமத்தில் இருக்கிறது. அந்தக் கிராமம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 1500 மீட்டர் உயரமான மலைமீது இருக்கிறது இக்கிராமம்.

உலகின் தலைசிறந்த கவிகளுக்கு என்ன நடக்குமோ அதுதான் இவருக்கும். பெய்ரூட்டிலிருந்து புஷ்ஷேர் என்ற ஊர் எனக் கேட்டுக்கொண்டேதான் செல்ல வேண்டியிருந்தது. கலில் ஜிப்ரான் பிறந்த ஊர் என வழிகேட்டதில் 3 பேர் மட்டுமே தெரியும் இப்படிப் போ என வழி சொன்னார்கள்.

முதலில் வீடு. இப்படி ஒரு அழகான வீட்டில் எதிர்த்தாற்போல பள்ளத்தாக்கும் இருக்கிறது. (தற்போது வீட்டின் எதிர்புறம் புதிய சர்ச்சொன்று கட்டப்பட்டுள்ளது)

எளிமையான ஆனால் அழகான வீடு. அந்தக்காலத்திலேயே டேபிள், மேசை வைத்து எழுதி, படங்கள் வரைந்திருக்கிறார். வீட்டில் நுழைந்ததும் வலதுபுறம் கட்டில். நேராக வரவேற்பறை, வலதுகோடி மூலையில் டேபிள் சேர்.

வீட்டைச் சுற்றிலும் அழகான தோட்டம். அங்கே அவரது மார்பளவு சிலையை அரசாங்கம் வைத்திருக்கிறது. அவரது இல்லத்தை சுற்றிப்பார்த்த நேரம் முழுக்க என்னைத்தவிர வேறு யாரும் இல்லை, காவலாளி உட்பட. 


கலில் ஜிப்ரானின் வீட்டின் உள்ளே நுழைந்ததும் கிடைத்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவரது எழுத்துக்களைப் படிக்கும்போது அவர் திராட்சை தோட்டங்கள் வழியாக அடந்து செல்லும்போது தாய்மார்கள் குழந்தைகளைப் பற்றிச் சொல்லுங்கள் எனக் கேட்கும்போது எப்படி இருந்திருப்பார் என மனது நினைத்துக்கொண்டே இருந்தது. நான் மனதில் வைத்திருந்த ஜிப்ரான் மறைந்து அங்கே படத்தில் இருந்த ஜிப்ரான் இடம் மாறிக்கொண்டார்.

வீடிருக்கும் சூழல் மிகவும் ரம்மியமாக, மிகக்குளிர்ச்சியாக, செடிகொடிகள் மற்றும் மரங்களுடன் இயற்கையுடன் இயைந்து இருக்கிறது, ஜிப்ரான் வாழ்ந்த காலத்தில் இந்த நாகரீக முன்னேற்றங்கள் ஏதுமின்றி, மின்சாரம் இன்றி மிகவும் ரம்மியமாய் இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். 

கொஞ்ச நேரம் அமர்ந்து அந்த மகிழ்ச்சியை முழுதும் அனுபவித்தேன். எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு வாய்ப்பு. இன்னும் இந்த கிராமத்தைப் பார்க்காத, கலில் ஜிப்ரானின் பெருமைகளை அறியாத இன்றைய தலைமுறை லெபனானிகள் இருக்கக்கூடும்.


பின்னர் அங்கிருந்து கிளம்பி அவரது பெயரில் இயங்கும் அருங்காட்சியகம் மற்றும் கல்லறைக்கு சென்றேன். அவர் இறக்கும்போது எங்கு. எப்படி புதைக்க வேண்டும், அவரது கல்லறையில் என்ன எழுதப்பட வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிவிட்டே இறந்திருக்கிறார்.

அருங்காட்சியகம்.

ஒரு அருமையான அருங்காட்சியகம் எப்படி இருக்கலாம், இருக்க வேண்டும் என்பதற்கு கலில் ஜிப்ரானின் அருங்காட்சியகமும் ஒன்று. 8000 லிபான்கள் நுழைவுக் கட்டணம். (5.5 டாலர்கள்) கையேடு ஒன்றும் தருகிறார்கள், அதில் எந்தெந்த அறைகளில் என்னென்ன வைக்கப்ட்டுள்ளது, அதற்கான விளக்கம் ஆங்கிலத்தில் அந்தப் புத்தகத்தில் இருக்கிறது. 

அருங்காட்சியகம் அமைந்திருக்கும் இடமே கொள்ளை அழகு. கோலப்பொடி செய்யும் கல்லால் ஆன மலை. அதைக் குடைந்து 4 அடுக்குகளில் 18 அறைகள் செய்து ஒவ்வொன்றிலும் அவரது பெயிண்டிங் மற்றும் புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் ஆகியன வைத்துள்ளனர். ஒவ்வொரு அறையிலும் இருக்கும் விஷயங்களுக்கும் தனித்தனி எண்கள் தரப்பட்டுள்ளது. ஒரு புகைப்படத்தின் கீழ் 3 என இருந்தால் அந்த அறை எண்ணை பார்த்து 3ம் நம்பரை வாசித்தால் அந்த புகைப்படம் பற்றிய விளக்கம் இருக்கிறது. கைடுகளே தேவைப்படாத அருமையான முயற்சி. கலில் ஜிப்ரான் போன்ற மிஸ்டிக்குகள் குறித்து காணச் செல்லும்போது கூட இன்னொருவர் இருப்பதே அசௌகரியம். இது நான் உணர்ந்தது. அருமையான புல்லாங்குழல் எல்லா அறைகளிலும் மெல்லிய சப்தத்தில் இசைக்கிறது. ஒவ்வொரு அறைக்கும் நாம் செல்லும்போது விளக்குகள் தானாகவே ஒளிர்கிறது. அருமையான லைட்டிங்குகள். உள்ளே கேமெரா கொடு செல்லவோ, படங்களை, ஓவியங்களை தொட்டுப்பார்க்கவோ அனுமதி இல்லை. கலில் ஜிப்ரான் கையால் வரைந்த ஓவியங்கள்.


தி ப்ராஃபெட் எழுத உந்துசக்தியாக இருந்தது அந்த குகைக்குள் வந்துகொண்டிருந்த மெல்லிய நீரோடை. அதை இன்றும் சிறப்பாக பராமரிக்கின்றனர். மிக மிக ரம்மியமான சூழல்.

ஜப்பானிய தூதரகம் இந்த அருங்காட்சியகத்திற்கு விளக்குகளும், சிசிடிவி கேமெராக்களையும் பொருத்திதந்துள
்ளது.

ஒரு குடைவரைக் கட்டிடத்தின் ஏதோ ஒரு மாடியில் நாம் மட்டும் தனியாக ஓவியங்களை மெல்லிய இசையுடன் காணும் அனுபவத்தை என்னவென்று சொல்வது. அதை அனுபவித்தால் நிச்சயம் வாழ்நாள் அனுபவமாக நிச்சயம் இருக்கும். 

அருங்காட்சியகத்தை நிர்வகிப்போருக்கு இந்தியாவில் இருந்து ஒருவன் இதைப் பார்க்க வந்திருக்கிறான் என்பதில் மிக்க மகிழ்ச்சி. அதனால், விதிகளை கொஞ்சம் தளர்த்தி எனக்கு சில புகைப்படங்களை எடுத்துக்கொள்ள அனுமதியளித்தார்.

கலில் ஜிப்ரானின் கல்லறை. :-

கிட்டத்தட்ட தரை மட்டத்திலிருந்து இரண்டு அடுக்குகள் கீழே உள்ளது கல்லறை. அவர் இறுதிக்காலத்தில் குகையாக இருந்த இப்பகுதியில் தங்கி படங்கள் வரைந்திருக்கிறார். தீர்க்கதரிசி புத்தகம் எழுதுவதற்கான உத்வேகம் இந்த மலைக்குகைக்குள்தான் அவருக்கு கிடைத்திருக்கிறது. 

கீழே கல்லறையில் அவர் கல்லறையில் எழுதச் சொன்ன வாசகங்களை ப்ரொஜெக்டர் மூலம் சுவற்றில் விழச் செய்துள்ளனர். (படங்களில் இருக்கிறது) 

கல்லறை திறந்தவாறே உள்ளது. கல்லறையின் உள்ளே அவரை வைத்து மூடி வைத்துள்ள பெட்டியை நாம் காணலாம். கீழே அதிகக் குளிர் என்பதால் ஹீட்டர் மூலம் அறையின் தட்பவெப்பத்தை சீராக வைத்துள்ளனர். 

சில படங்கள் கல்லறையின் உள்ளே எடுத்துக்கொண்டேன். கீழே கல்லறையில் இருக்கும்போது யாரோ சுவற்றில் சாய்ந்து நிற்பதுபோல ஒரு நிழல் சுவற்றில் விழுந்தது. ப்ரொஜெக்டர் மூலம் விழச்செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். அதைக் கேட்டு அவர்கள் ஆமாம் எனச் சொன்னால் நான் இழந்த அந்த சில விநாடிகள் பரவசத்தை இழந்துவிடுவேன் என்பதால் கேட்கவில்லை. (படங்களில் இருக்கிறது)

கிட்டத்தட்ட நீண்டகால நண்பனொருவனை வாழ்க்கையில் சந்திக்கவே முடியாதோ என நினைத்துக்கொண்டிருக்கும்போது அவனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை இன்று அனுபவித்தேன். 14.05.2014 என் வாழ்க்கையில் பொன்நாள்..


படங்களைக் காண இங்கே சொடுக்கவும். 

லெபனான் குறிப்புகள் -1

ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக லெபனானி ரொட்டியில் ஜத்தர் மற்றும் வெங்காயம், தக்காளி சேர்த்தரைத்துச் சேர்த்த ஒரு பசையை தடவி தரும் ரொட்டி இருந்தது. அதை மதிய உணவாக எடுத்துக்கொண்டேன்.

எனது நண்பர் ஒருவர் டவுண்டவுன் பெய்ரூட் அருமையாக இருக்கும் அவசியம் சென்று வாருங்கள் எனச் சொல்லி இருந்தார். அதனால் முதலில் டவுண்டவுன். நம்மூர் ஷேர் ஆட்டோ போல இங்கே ஷேர் டாக்ஸி கிடைக்கிறது. அதி என்னுடன் ஒரு சிரிய பெண்ணும் பயணம் செய்தார். அவருக்கு ஆங்கிலம் தெரிந்ததால் எங்கு இறங்கினால் டவுண்டவுனை முழுதும் கவர் செய்யலாம் எனக் கேட்டு இறங்கிக்கொண்டேன். அவர் சொன்னது மணிக்கூண்டு இங்கே பிரசித்தம். அப்படியே சுற்றி உள்ள பகுதிகள் குறிப்பாய் பார்லிமெண்ட்500 ஆண்டுகள் பழமையான தேவாலயம் எல்லாம் உள்ளது பாருங்கள் என்றார்.

முதலில் லெபனானில் பிடித்தது சுத்தம். கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளின் சுத்தத்தையும், அமைதியையும் பேனுகிறார்கள். ( நான் இன்று பார்த்த வரையில்) தாங்கள் அராபியர்கள் என்ற எண்ணமோ, அதற்குண்டான வெட்டி திமிரோ இல்லாமல் இருக்கின்றனர். 90% மக்களுக்கு ஃப்ரெஞ்ச் தெரியுமாம். எனக்கு தெரியாததால் சோதிக்க முடியவில்லை. 

ஒரு டாலருக்கு 1500 லிபான்கள். (லெபனான் பணம்) ஈராக்கும், ஈரானும்தான் மகா மோசம் என நினைத்துக்கொண்டிருந்தேன். லெபனானும் இந்த லிஸ்ட்டில்தான் உள்ளது. (பொருளாதாரம் அதளபாதாளத்தில்)

சாலைகள் அனைத்தும் ஐரோப்பாவையே நினைவு படுத்திக்கொண்டிருந்தன. நகருக்குள் பெரும்பாலும் 2 வாகனங்கள் செல்லும் வழி மட்டுமே. (2+2) 


தெருக்களுக்குள் இருவழிச்சாலை. ஆனால், எல்லோரும் கார்களை சாலையில்தான் நிறுத்துகிறார்கள். அதனால் எப்போதும் நெரிசல். 

போக்குவரத்து விளக்குகள் பல இடங்களில் அரைக்கிலோமீட்டருக்கு ஒன்று என்ற அளவில் இருக்கிறது. மொத்த பெய்ரூட்டில் பாதிக்கு மேல் மலைகளின்மீதே அமைந்துள்ளது. அங்கேயே சாலை, மின்சாரம், குடிநீர் எல்லாம் கிடைக்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் இருந்து, மால்கள் வரை, பள்ளிகளிலிருந்து, ஆஸ்பத்திரி, போலிஸ் ஸ்டெஷன்வரை எல்லாம் உண்டு.


இன்றைய ஊர் சுத்தலில் நம்முர் பையன்கள் மூவரை சந்தித்தேன். கட்டிட வேலைகள் செய்கிறார்கள். என்ன சம்பளம் எனக் கேட்டு அவர்கள் மனதை சங்கடப்படுத்த விரும்பவில்லை. அருகில் ஏதும் டீக்கடை இல்லை. எனவேகொஞ்சநேரம் ஊர்க்கதை பேசிவிட்டு கிளம்பினோம். மூவரும் சிவகங்கையை சேர்ந்தவர்கள். 

500 ஆண்டுகள் பழமையான தேவாலயம்..

500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தேவாலயம் சிதலமடைந்து இருந்ததை சரி செய்திருக்கிறார்கள். பழைய தரை, மற்றும் சுவர்களை எங்கெங்கு அப்படியே பயன்படுத்த முடியுமோ அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்கள். நம்மூரில் யேசுநாதர் ப்ரும்பாலும் சிலுவையில் மட்டுமே தொங்குகிறார். கொஞ்சம் நல்ல படமாக இருந்தால் தலையில் முள்கிரீடத்தை வைத்து விடுகிறார்கள். ஆனால், இங்கே யேசுநாதர் ராஜா கோலத்தில் இருக்கிறார். பாதிரியாரிடம் இப்படி படங்களை எங்கள் நாட்டில் பார்த்ததில்லையே எனச் சொன்னேன். அவர் யேசு கஷ்டப்பட்டது உண்மை. ஆனால், அவர் ராஜாக்களுக்கெல்லாம் ராஜா. எனவேதன் அவரை அரசர் கோலத்தில் வரைந்திருக்கிறார்கள் அந்தக்கலத்தில் என்றார். அதே தேவாலயத்தில் சிலுவையில் தொங்கும் யேசுநாதரும் இருந்தார். ஆனால் அவர் முதன்மையானவர் அல்ல அங்கே. ராஜாகோலம் உள்ள யேசுநாதருக்கே மூலஸ்தானம். 

அதே தேவாலயத்தின் பின்புறம் மரியத்துக்கும் தனி சாப்பல் உள்ளது. ரோமானியர்கள் காலத்தில் வரையப்பட்ட சில படங்களை (பீட்டர், பால் போன்றோர்) யும் வைத்திருக்கின்றனர். படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால், நான் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன். இப்படிப்பட்ட தேவாலயங்களை தேடிப்போய் பார்ப்பது என் வழக்கம் என்றதால் ஒரு ப்டம் மட்டும் தேவாலயத்தின் உள்ளே எடுத்துக்கொள்ள அனுமதியளித்தார். பின்னர் பாதிரியாரே என்னையும் தேவாலய வாசலில் வைத்து படம் எடுத்தார். 

பின்னர் கிரேக்கர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்த கட்டிடங்கள் அகழ்வாராயப்பட்டுள்ளது. லெபனான் அரசாங்கம் அதை தொல்லியல் துறைக்கு வழங்கவில்லையாம். வழங்கிய பின்னர் அந்த முழு இடத்தையும் கண்காட்சியாக மாற்றும் திட்டம் இருக்கிறதாம்.

பின்னர் துறைமுகம் பகுதிகளை சுற்றிப்பார்த்துவிட்டு அப்படியே காலாற நடந்தால் நான் எங்கேயோ சென்றுகொண்டிருந்தேன். அதனால் ஒரு டாக்ஸிக்காரரிடம் நம்பிக்கை ஏதும் இல்லாமல் இந்திய உணவகங்கள் ஏதும் இருந்தால் அங்கே கொண்டுபோய் இறக்கிவிடு என அரபியில் சொன்னதும் “அதான் எனக்கு தெரியுமே” ஸ்டைலில் ஒரு இடத்தில் இறக்கிவிட்டார். அது இந்திய சாமான்கள் விற்கும் பலசரக்கு கடை. 

நம்மூர் பஞ்சாபி 25 ஆண்டுகளுக்கு முன்னரே லெனபான் வந்து ஒரு லெபனான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு 3 பெண்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவருடன் ப்டம் எடுத்துக்கொண்டேன். பின்னர் அவரே அவருக்கு தெரிந்த ஒரு டாக்ஸிக்காரனை அனுப்பி ஒரு ஹோட்டலுக்கு அனுப்பினார். அங்கு இரவு உணவு முடித்து விட்டு ரூம் வந்து சேர்ந்து இந்தப் பதிவை எழுதுகிறேன்.. 


படங்களின் ஆல்பம் காண இங்கே சொடுக்குங்கள்.

லெபனான் - பைப்லோஸ்

நேற்றைய ஊர் சுற்றுதலில் இந்த தொன்மையான கடற்கரை கிராமமும் இடம் பெற்றிருந்தது. ஒரேடியா படங்களாக போட்டுத்தள்ளினால் நண்பர்களை இழக்க நேரிடலாம் என்பதால் இன்று வெளியீடு.. 

ரோமானியர்களின் கடற்கரையாக இருந்திருக்கிறது பைப்லொஸ் நகரம். காண்பதற்கு அழகான இடம். லெபனானிகளின் மாலை நேர பொழுதுபோக்கு இந்தக் கடற்கரையில் உள்ள ரெஸ்டாரெண்டுகளில் ஹூக்கா பிடிப்பது, சிற்றுண்டி சாப்பிடுவது, காதலர்களின் சந்திக்கும் இடமாகவும், சுற்றுலாப்பயணிகள் லெபனானில் தவறாது பார்க்கும் இடமாகவும் இது இருக்கிறது.

மீன்பிடி துறைமுகமாகவும் செயல்படுகிறது. உல்லாசப் படகுகள் கடலுக்குள் செல்ல இந்த வழியை பயன்படுத்துகின்றனர். சுற்றி வர அருமையான இடம். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஃபாஸில்களை தோண்டி எடுத்து வந்து விற்றுக்கொண்டிருக்கின்ற

னர். எனக்கு நம்பிக்கை வராததால் எதையும் வாங்கவில்லை.

சுற்றியபின்னர் ஒரு லெபனானி ரொட்டியை ஜத்தர் மற்றும் காய்கறிகளுடன் சாப்பிட்டுவிட்டு மாலையை நிறைவு செய்தேன்..

14.05.2014 லெபனான் டயரிக்குறிப்பு..

படங்கள் இங்கே..

Just asking..


பாரத பிரதமர் திரு. நரேந்திர மோதி பதவி ஏற்பு

திரு.நரேந்திர மோதி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் பதவி ஏற்பு விழாவின் வீடியோவை முழுதும் இப்போதுதான் கண்டு முடித்தேன்..

முதலில் இத்தனை நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைத்ததே அவரது மிகப்பெரிய சாதனை. இப்படி ஒரு யோசனையை சொன்னவுடன் நம் மக்கள் எவ்வளவு கேவலமாய் பேசமுடியுமோ அவ்வளவு பேசினர். 

பாக்கிஸ்தான் பிரதமர் வரமட்டார்... இந்த அசிங்கம் தேவையா என அவர்களே ஆருடம் கூறினர். 

எல்லாம் முடிந்து எல்லோரும் சபையை அலங்கரித்தவுடன் இந்தியாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய விழாக்களில், இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விழாக்களில் ஒன்றாகிப்போனது.

பார்க்கும்போதே எவ்வளவு பெருமையாய் இருந்தது? முதல் வரிசையில் சாமியார்கள் அணிவகுப்பு.. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் மற்றும் இதர சாமியார்கள் என களை கட்டியிருந்தது.

மந்திரி சபையை இத்தனை சுறுக்கிய பின்னரும் எத்தனை பெண்கள் பதவி ஏற்றனர். பாக்கிஸ்தான் அதிபருக்கும், ஆப்கன் அதிபருக்கும் நிச்சயம் ஆச்சரியமாய் இருந்திருக்கும்..

டாக்டர் நஜ்மா ஹெப்துல்லா மட்டும் குரல் கொஞ்சம் ஓவராய் நடுங்கிவிட்டது.

ஒரு இஸ்லாமியர் தாமரை படம் பொறித்த சட்டையுடன் வந்திருந்து ஆர்வமாய் கவனித்துக்கொண்டிருந்தார்.

மான் வேட்டை மைனருக்கெல்லாம் ஏன் அழைப்பு எனத் தெரியவில்லை.

தமிழகம் அதன் மரியாதையை பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மூலமும் நிர்மலா சீதாராமன் மூலமும் பெற்றுக்கொண்டது.

இறுதியில் போலோ பாரத் மாதாகி ஜி ஜெய் யும் கேட்டது.

அருமையாக எல்லோரும் வந்து கைகுலுக்கி நட்புகளை பரிமாறிக்கொண்டனர். முகமெல்லாம் பூரிப்பு இருப்பினும் மிக ஜெண்டிலாக நடந்துகொண்டார் மோடி.

இந்தியர் என்பதில் நான் பெருமை கொள்கிறோமா இல்லையோ நிச்சயம் நமது அண்டை நாட்டாருக்குஎப்படிப்பட்ட குழுவுடன் நாம் தொடர்பில், உறவில் இருக்கப்போகிறோம் எனத் தெரிந்திருக்கும்.

பதவி ஏற்கும் முன்னரே தனது கடமையை ஆரம்பித்து அண்டை நாடுகளில் சிறையில் இருந்த மீனவர்களை விடுதலை செய்ய வைத்திருக்கிறார்,.

இது தொடரவேண்டும் என்பதே எனது ஆசை.

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்...

நமது புதிய பிரதமருக்கும் புதிய அமைச்சரவைக்கும் வாழ்த்துகள் ..

தூர்தர்ஷன் இறுதியில் தாமரை மலர்வதைக் காட்டியது.. 


(27 மே 2014ல் எழுதியது)

பாபிலோன் - காலத்தால் அழிந்த நகரம்

இன்றைக்கு உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான பாபிலோன் சென்று வந்தேன். கிறிஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகழ் பெற்றிருக்கிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகள் வரை உயிர்ப்புடன் இருந்திருக்கிறது. 

நிறைய இடிபாடுகள் இருப்பினும் சதாம் ஹுசைன் உயிருடன் இருந்த காலத்தில் நிறைய எடுத்து கட்டி இருக்கிறார். வேறு வகையில் சொல்வதானால் அதை மீண்டும் உயிரூட்ட முனைந்திருக்கிறார். பாபிலோனில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக 5000 பேர் அமரும் ஆம்பி தியேட்டர் ( திறந்த வெளி கலையரங்கம்) அமைத்து அவர் அமெரிக்காவுடன் சண்டையிடும் முன்னர் வரை பாபிலோனில் வந்து தங்கி இருந்திருக்கிறார்.

பாபிலோனின் வரலாறெல்லாம் நெட்டில் தேடி படித்துக்கொள்ளுங்கள். கடைசியாய் இந்த நகருக்கு உயிரூட்ட முனைந்தவர் மாவீரன் அலெக்சாண்டர். ஆனால், அது முடியாமலேயே போயிருக்கிறது.

எனக்கு பெருத்த ஏமாற்றமாய் இருந்தது பாபிலோனின் தொங்கும் தோட்டங்கள் தான்..  நான் குறைந்தபட்சம் அதையாவது மீண்டும் எடுத்து கட்டி இருப்பார்கள் என நினைத்தேன். ஆனால், வெறும் சமதளத்தைக் காட்டி இதுதான் தொங்கும் தோட்டத்தின் தரைத்தளம் எனச் சொன்னார் கைடு.

பாக்தாதிலிருந்து கிட்டத்தட்ட 140 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கிறது ஹில்லா என்ற ஊர். அதன் அருகில் இருக்கிறது இந்த அழிந்துபோன பாபிலோன். ஈராக்கில் யாருக்கும் பாபிலோன் எனச் சொன்னால் தெரிவதில்லை. பாபில் என்றால் மட்டுமே தெரிகிறது. மேலும் பாபிலோன் எனக் கேட்டு என்னவென்றே தெரியாத டாக்ஸிக்காரர் 300 டாலர் போக வர கேட்டதுதான் இன்றைய ஜோக்.


மதியம் 12 மணிக்கு கிளம்பி மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தேன். வழியெங்கும் செக் போஸ்ட்டுகள். இஸ்லாமியர்களின் (ஷியாக்கள்) புனித தலமான நஜஃப் இதன் அருகில்தான் இருக்கிறது. ஒவ்வொரு செக் போஸ்ட்டிலும் பேர், ஊர் எழுதிக்கொண்டுதான் அனுப்புகிறார்கள். 

பாபில் பற்றி உனக்கு என்ன தெரியும்? பாஸ்ராவில் வேலை செய்யும் உனக்கு பாபிலோனில் என்ன வேலை? நீ இஸ்லாமியனா? இன்ன பிற கேள்விகள் எல்லாம் கேட்டுவிட்டு அனுப்புகிறார்கள்.

பாபிலோனில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து ஒரு போலிஸ் குழுவே பாதுகாக்கிறது. உள்ளே நுழைய கட்டணம் 20 டாலர்கள். கைடுக்கு 10 டாலர்கள். 

முதலில் பாபிலோனின் திறந்த வெளி கலையரங்கம் சென்று பார்த்தேன். பாபிலோன் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் இப்ப்டித்தான் இருந்திருக்கிறதாம். நம்ம சதாம் ஹுசைன் எடுத்து கட்டி அவருக்கும் ஒரு உப்பரிகையை அமைத்துக் கொண்டிருக்கிறார் மேடைக்கு நேர் எதிராக.

அருமையாக இருந்தது பார்க்க. பாபிலோனிலும் ஒரு அரன்மனை அமைத்து வாழ்ந்திருக்கிறார் சதாம். இன்றும் முழுப்பொலிவுடன் பராமரிக்கப் படுகிறது. 2 ஹெலிகாப்டர்களும் இருக்கின்ற்ன. போலிஸ் பயன்படுத்துவார்கள் போல.

அதன் பின்னர் பாபிலோன் நகரின் சாலைகளில் ஒன்றை இன்றும் அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் 600 ஆண்டுகளுக்கு முன்னரே அந்த சாலையில் அலெக்சாண்டர் நடந்திருப்பான் என்பதை நினைக்கும்போது எங்கு நிற்கிறோம் என்ற மகிழ்ச்சி எழுந்தது உண்மை. 

கால ஓட்டத்தில் இன்றைய ஈராக் அல்லது ஹில்லா நகரம் அந்தக்காலத்தில் இருந்ததைவிட கிட்டத்தட்ட 60 மீட்டர்கள் மேலே இருக்கிறது. எனவே கைடு சொல்லும் 50 மீட்டர் உயரமான வளைவு இது எனக்காட்டிய வளைவின் உச்சியில் அமர்ந்து நான் போட்டோ எடுத்துக்கொள்ளும் அளவு மண்ணுக்குள் புதைந்திருக்கிறது. 

பாபிலோனின் அடையாளங்களில் ஒன்று சிங்கங்கள். சாலையில் இருமருங்கிலும் பக்கத்திற்கு 62 வீதம் 124 சிங்கங்கள் இருந்திருக்கின்றன. 

பிரிட்டிஷார் நம் பழமையான சிலைகள், வைரங்களை எல்லாம் கொள்ளை யடித்துக்கொண்டு போனதுபோல இங்கேயும் நிறைய பொருட்களை, அடையாளங்களை எல்லாம் பிர்இட்டனுக்கு எடுத்துச் சென்றுவிட்டனராம். 

நீலக்கலரில் இருக்கும் கோட்டை வாயில் (பார்க்க படம்) உண்மையில் இருந்திருக்கிறது. அதை அப்படியே பெயர்த்து எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள் பிரிட்டிஷார். 

அரன்மனை, அவர்களின் கடவுள் எல்லாவற்றிலும் எதெல்லாம் எடுத்துப்போக முடியுமோ அத்தனையும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். பாபிலோனின் ஆண்ட மன்னர்கள் தினமும் வணங்கிய கோயில்கூட இன்னமும் அப்படியே இருக்கிறது. 



சதாம்கூட பழையதை தள்ளிவிடாமல் அதை உள்ளே வைத்து மேலே புதிதாய் ஜட்டி இருக்கிறார். எனவே முதலில் எப்படி இருந்தது என்பதை நாம் காணமுடியும். 

கிட்டத்தட்ட 2 மணி நேரம் சுற்றிவிட்டு வந்து சேர்ந்தேன். சாப்பாட்டை பற்றி எழுதக்கூடாதுதான்.. ஆனால், எனக்கு இன்றைய மதிய உணவாக ஒரு தட்டு நிறைய வெள்ளரிக்காயும், தக்காளியும், புதினா தலைகளும், வினிகரில் ஊறிய கேரட்டும் கிடைத்தது. 

பாபிலோனை கண்ட மகிழ்ச்சியில் இதெல்லாம் பொருட்டாகவே இல்லை. 

படங்களில் முடிந்த அளவு நான் கேட்ட விஷயங்களை பதிவு செய்கிறேன்.

முழு ஆல்பத்தையும் இங்கே காணலாம்.

சுற்றுச்சூழல் குறித்து பள்ளிகள் என்ன செய்யலாம்?

அபார்ட்மெண்டுகளில் இல்லாமல் தனி வீட்டில் வசிப்போர் வீட்டுக்கு குறைந்தது ஒரு வேப்ப மரமோ, புளிய மரமோ வளர்த்தால் எத்தனை கோடி மரங்கள் ஓராண்டில் உண்டாகும். 

அதே போல பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு 5ம் வகுப்பின் ஆரம்பத்தில் ஆளுக்கு 5 மரக்கன்றுகள் கொடுத்து வளர்த்து வரச் சொல்ல வேண்டும். 

நாங்கள் பள்ளியில் படிக்கும்போது எங்கள் நேரடிக் கண்கானிப்பில் வளர்ந்தமரங்கள் இன்று பெரிதாய் கிளை விரித்து நிற்பதை பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

1988ல் நட்டு 90களில் பள்ளியை விட்டு வெளி வரும்போதே அதற்கு நாம் தண்ணீர் ஊற்ற அவசியம் இல்லாத அளவு வளர்ந்து விட்டது.

இன்றும் எங்கள் பள்ளியின் விசேஷம் எங்கெங்கெல்லாம் காலி இடம் இருக்கிறதோ, அங்கெல்லாம் மரம் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். கூகிள் மேப்பில் எங்கள் ஊரைப்பார்த்தால் எங்கள் பள்ளி மட்டும் பச்சைப் பசேல் என்றிருக்கும்.

மரம் வளர்ப்பதையும், மழைநீர் சேகரிப்பதையும் தொடர்ந்து அரசாங்கம் ஊக்குவிப்பதுடன் தேவையெனில் நம்ம அம்மா போல சவுக்கையும் சுழற்றலாம்.

எத்தனை நாளைக்குதான் ஸ்டெட்டஸ் மட்டும் போட்டுக்கொண்டிருக்கப் போகிறோமோ?

நீ என்னடா செஞ்ச என என்னைக் கேட்க முடியாது. நான் நட்டு வளர்த்த வேப்ப மரங்கள் இன்று நிழல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.. 

பாக்தாத் விமான நிலைய சோதனையான சோதனைகள்

ஏழு கடல் தாண்டி, ஏழு மலைதாண்டி பாஸ்ராவுக்கு வந்தாயிற்று. பறப்பதென்னவோ ஒரு மணி நேரம். ஆனால், 4 மணி நேரம் முன்னதாகவே வந்திருந்து நடத்திக்கொடுக்கும்படி வேண்டுகின்றனர் பாக்தாத் விமான நிலையத்தார்.

ஏர்போர்ட்டுக்கு 4 கிலோமிட்டர் முன்னதாகவே நாம் இறங்கிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் விமான நிலையமே வைத்திருக்கும் ஜிம்சி அல்லது செவர்லேயில் ஷேரிங் டாக்ஸியில் விமான நிலையம் நோக்கி பயணம்.

முதலில் ஒரு செக்போஸ்ட். பாஸ்போர்ட் மற்றும் விமான டிக்கெட் இருக்கிறதா என.

அடுத்தது மோப்ப நாய்கள் வந்து செக் செய்யும் செக் போஸ்ட். வண்டியிலிருந்து எல்லோரும் இறங்கி தூரமாய் போய் நிற்க வேண்டும்.

அதற்கு அடுத்த செக் போஸ்ட்டில் மீண்டும் பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் பரிசோதனை மற்றும் லக்கேஜ் செக்கிங். உள்ளே இருக்கும் எல்லாவற்றையும் கீழே எடுத்துப்போட்டு செக்கிங். ஈராக்கியர்களுக்கு தாவு தீர்ந்து விடும். இந்தியன் என்பதால் கொஞ்சம் ரிலாக்ஸ்.

அதன் பின்னர் மீண்டும் எக்ஸ்ரே ஸ்கேனிங். நமக்கும் ஸ்கேனிங்.

ஏர்போர்ட் வந்தாயிற்று. மீண்டும் சாமான்களுக்கு எக்ஸ்ரே ஸ்கேனிங் மற்றும் நமக்கு ஸ்கேனிங்.

அடுத்து ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தாயிற்று. இப்போது உங்கள் விமானம் புறப்பட 1 மணி நேரம் முன்பு மட்டுமே செக்கின் கவுண்டருக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்.

அனுமதித்த பின்னர் மீண்டும் ஸ்கேனிங். லாப்டாப்பை வெளியே எடுத்து எல்லா சாமக்கிரியைகளும் மீண்டும்.

அடுத்து போலிஸின் உடல் சோதனை. அப்பாடா என செக்கிங் கவுண்டர் வந்து பெட்டியை போட்ட பின்னர்தான் நிம்மதி.

இப்போது இமிக்ரேஷன். பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்கிறார்கள். அரைவலில் போட்டோவும் எடுப்பார்கள்,

இதைத் தாண்டியபின்னர்தான் முழுதும் ஃப்ரீ. பெல்ட், வாட்ச் எல்லாம் எடுத்து கட்டிக்கொள்ளலாம்.

ஒருவகையில் இத்தனை செக்கிங் இருப்பதால்தான் இன்றுவரை ஏர்போர்ட்டில் குண்டு வெடித்ததில்லை, பாக்தாதே பற்றி எரிந்தாலும். 


(29.05.2014 ல் எழுதியது)

கல்லுப்பட்டி எனும் தனி நாடு அல்லது மாநிலம்

இந்தியாவுல மாநிலங்கள் பிரியும்போது தமிழ்நாட்டில் எங்களுக்கு ஏன் தனி கல்லுப்பட்டி கூடாது?

எல்லைகள்...

குஞ்சுபட்டி குறுக்கு ரோடு கிழக்கெல்லை

தேவன்குறிச்சி கிராம குறுக்கு ரோடு மேற்கெல்லை

கொட்டாணிபட்டி தெற்கெல்லை

சோலபட்டி வடக்கெல்லையாக கொண்ட தனிக்கல்லுப்பட்டி நாடு அல்லது மாநிலம் அடைந்தே தீருவோம்..

ஊரின் சிறப்புகள்..

தண்ணீர் கிடையாது (மிக முக்கிய தகுதி)

உழுந்தவடை - அதன் தேசிய அடையாளம்

நன்னாரி சர்பத் - தேசிய பானம்

காக்கா - தேசிய பறவை

கருவேலம் - தேசிய மரம்

தனி மனித வருமானம் : 50 டாலர்கள் (ஆண்டுக்கு)

மக்கள் தொகை : 1 லட்சம் ( 2025ல்)

எங்களுடன் இணைந்துகொள்ள திருமங்கலம், மோதக்ம் சுப்புலாபுரம், காடநேரி, சத்திரப்பட்டி, வில்லூர், குண்டத்தூர், பேரையூர் ஆகிய ஊர்களையும் (மாநிலமாக ஆகாமல் இருக்கும் பட்சத்தில்) அழைப்போம்.

வாருங்கள் உறுதியான மாநிலம் அமைப்போம்.. 

இது தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் எனகோரிக்கை வைத்துள்ள மக்களை கிண்டல் செய்வதற்கு அல்ல என்பதை நீங்கள் உணர்ந்தே இருப்பீர்கள்..

---
ஜூன் 3, 2014ல் எழுதியது

பாரதி



14 பேருடனான இறுதி ஊர்வலத்தில் படம் ஆரம்பிக்கிறது.. தமிழ் மக்களின் மனதில் சுதந்திர நெருப்பை ஊற்றியவனின் இறுதி ஊர்வலம். 

சாதிக்கொடுமைகள் வேண்டாம்..தன்னில் செழித்திடும் வையம் எனச் சொன்னவனையே பூணூல் போட்டாத்தான் மகள் கல்யாணத்துக்கு வரமுடியும் என மிரட்டுகிறது.

பிராமணர்கள், நாங்கள்லாம் உயந்தவர்கள் என்ற திமிரில்தானே ஆடுகிறீர்கள், ஆதி திராவிடனையும் பூணூல் இட்டு பிரம்மோபதேசம் செய்து ப்ராமணர்கள் ஆக்குகிறேன் எனக் கொதித்தவன்.

தான் ஒரு நல்லதோர் வீனை என உணர்ந்தவன். அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என பராசக்தியைக் கேட்கிறான்.

தனது குடும்பம், தனது மக்கள் என்று இல்லாமல் பிஜித்தீவில் பெண்கள் பட்டினியால் சாவதை நினைத்து கண்ணீர் விடுகிறான்.

கேளடா மானிடவா நம்மில் கீழோர் மேலோர் இல்லை என அல்றுகிறான், ஒருபயலும் கேட்கவில்லை. அவன் கதறியது இந்த தலைமுறைவரை கேட்கவில்லை என்பதுதான் இன்னும் சோகம்.

தாழ்த்தப்பட்டவனிடமிருந்த காசைக்கூட கையில் வாங்காத அளவு காசியில் தீண்டாமை தலைவிரித்து ஆடுவதைக் கண்டு பூணூலையே அறுத்தெறிகிறான். பிராமணனுக்கு ஒவ்வாத மீசையை முறுக்கு மீசையாக வைக்கிறான், தலையில் முண்டாசு கட்டுகிறான். உங்க மேல எனக்கு கோபம்டா, சக மனுஷனை நீங்கள் இழிவு செய்வதைக் கண்டு வந்த கோபமடா எனச் சொல்கிறான் தனது உடையால்.

அந்தக்கால மஹாராஜாக்களின் வாழ்வு எப்படி இருந்தது என்பதை எட்டையபுர மஹாராஜாவின் தினசரி அலுவல் சொல்கிறது.

தனது வித்யாகர்வத்தை, தான் யார் என உணர்ந்தவனின் திமிர் எட்டையபுரம் ராஜா வீட்டு வாசலில் நிற்கும்போது கீழே இறங்கிவராமல் ஷெல்லியின் கவிதையை வாசித்து மகிழ்கிறான். கோபமடைந்த ராஜா அவனை நாளையிலிருண்டு வேலைக்கு வரவேண்டாம் எனச் சொல்ல மாடியில் இருந்தபடியே வேலையில் இருந்து விடுதலை அளித்ததற்கு நன்றி எனச் சொல்லும் தைரியம் அளிக்கிறது.

நிவேதிதாவிடமிருந்து பெண்களை சமமாக நடத்தும் ஞானம் பெறுகிறான், ஊரில் இருந்து வந்ததும் முதல் வேலையாக செல்லம்மாவிடம் மன்னிப்பையும் கோருகிறான் பாரதி.

ஒரு சாதாரன குடும்பத்தலைவி எப்படி இருப்பாளோ அப்படி இருக்கவே முயலும் செல்லம்மா. கையில் காசோ, வீட்டில் சாமான்களோ இல்லாமல் இருக்கும்போது நாலுபேரை வீட்டிற்கு அழைத்து வந்து உணவிடச் சொல்லும் கணவனை எந்தப் பெண் மதிப்பாள்.?

பராசக்தியாவது கொஞ்சம் கண் திறந்திருக்கலாம்.

நமக்கு மூன்று தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் ஒரு தீர்க்கதரிசி தம்முடன் இருப்பதைக்கூட உனராமல் அவனை ஓட ஓட விரட்டினர். ஆனால், அவனும் சமூகத்தை திருத்துவதற்கு இறுதிவரை முயன்றான். பாபம், கூறுகெட்ட சமுதாயத்துக்காக வாழ்க்கை முழுதையும் கழித்து செத்தான்.

அவனை சமூகம் எப்படி நடத்தியது என்பதற்கு அவன் நீண்டநாள் கழித்து எட்டைய புரத்தில் கால்வைத்ததும் மக்கள் அவனை வரவேற்ற விதமே போதும்.

வாழ்க்கையையே தனது சமுதாயத்துக்காக இழந்தவனின் இறுதியாத்திரைக்கு அவனது சொந்தங்கள், குவளை உட்பட மொத்தம் 14 பேர்..

நமக்கா நல்ல வாழ்வு கிடைக்கும்?

பாரதி படத்தை பார்க்காதவர்கள் இருந்தால் அவசியம் பாருங்கள். இயக்கம், ஒளிப்பதிவு, இசை, நடிகர்கள் குறித்தெல்லாம் எழுத இப்போது மனசு இல்லை.


04.06.2014 ல் எழுதியது

இந்து தீவிரவாதத்திற்கான வெற்றியா?

பெருமாள் தேவன் என்பவர் ஃபேஸ்புக்கில் எழுதியது.. மிக முக்கியமான கருத்தும் கூட..

இந்து தீவிரவாதத்திற்கான வெற்றியா? 

மத்தியில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் போலி மதச்சார்பின்மைக்கு, ஊழலுக்கு, மக்கள் மீது அக்கறையின்மைக்கு கிடைத்த மரண அடியாகும். 

இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதில் இந்துக்கள் மட்டுமல்லாது இஸ்லாமியர், கிறிஸ்தவர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் என்று அனைவருக்கும் பங்குள்ளது. 

எனவே இந்து மதம் மீது பற்று வைத்துள்ளவர்கள் இந்த ஆட்சி மாற்றத்தை தங்களது தான்தோன்றித்தனமான செயல்களுக்கு பயன்படுத்தலாம் என்று நினைக்கக் கூடாது. பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். 

சிறுபான்மையினர் மீது தேவையில்லாமல் குற்றம்சாட்டவோ, காழ்ப்புணர்வுடன் நடந்துகொள்ளவோ தேவையில்லை. 

இல்லாவிட்டால் அதுவே மீண்டும் போலி மதச்சார்பின்மைவாதிகள் ஆட்சிக்கு வர வழிவகுக்கலாம்.

முத்தமிழ் வித்தோர்...

மண்ணெண்ணெய் வாங்க ரேஷன் கடைதன்னை அடைந்தேன்..

தென்னைபோல் வளர்ந்த ஒருவன் என்னைப்பார்த்துக் கேட்டான்.. அய்யா, என்ன எண்ணெய் வேண்டும் என்று..

அதற்கு நான் சொன்னேன், மண் எண்ணெய் வேண்டும் என்று..

அதற்கு அவன் சொன்னான், நல்லெண்ணெயும் நம்மிடம் உண்டு, கடலை எண்ணெயும் கடைக்குள்ளே உண்டு, பாமாயில் என்றொரு பகட்டு எண்ணெயும் பலகை மீது உண்டு, மண் எண்ணெய் இல்லை, என்ன செய்யச் சொல்கிறீர்கள் என்னை என்றான்..

அதற்கு நான் சொன்னேன், நல்லெண்ணெய் நமக்குதவாது, கடலெண்ணெய் கட்டுபடி ஆகாது, மண் எண்ணெய் உண்டா என்றேன்..

அதற்கு அவன் சொன்னான், மண் எண்ணெயை தர இயலாது என்றான்..

வாழ்க.. தமிழ் அன்னையை யாருக்கும் தர மறுத்த அந்த தலைமகன் வாழ்க..

இப்படி உளறிக்கொட்டினா, நீங்களும் முத்தமிழ் வித்தவர் ஆகலாம்..

இது மேற்படியார் சொன்ன டயலாக் இல்லை. ஆனால், இந்த ரேஞ்சில்தான் இருந்தது என்பதை மயில்சாமி, லக்‌ஷ்மணன்கள் 80களிலேயே சொல்லிவிட்டனர். ஆனால், இன்றும் படித்த, நாலும் தெரிந்த மக்கள் முத்தமிழ் வித்தவரை தமிழ் தொண்டாற்றியவர் என நம்பிக்கொண்டும், பாராட்டிக்கொண்டு இருப்பதைப் பார்க்கத்தான் ஆச்சரியமாய் இருக்கிறது.

ஏக் து ஜே கேலியே..சில குறிப்புகள்

நேற்றைக்கும் இன்றைக்குமாக பார்த்து முடித்தேன். என்ன ஒரு அழகான திரைக்கதை. லைலா, மஜ்னு கதைதான். ஆனால், அதை செதுக்கிய விதத்தில் பாலச்சந்தர் கலக்கி இருந்தார்.

முரட்டுக்காளை ரதியை முரட்டுக்காளையில் தமிழ் பெண்ணாகவும், இது ஹிந்திப்பெண்ணாகவும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. 

80களில் இனிமையான பாடல்களை தேன் சொட்டும் பாடல்கள் என விளம்பரம் செய்வார்கள். இதில் ஒவ்வொன்றும் மனதை தொடும் பாடல்கள். அதற்கேற்றார்போல படமாக்கலும்.

மாதவி கதாபாத்திரத்தையும் அருமையாக செதுக்கி இருக்கிறார் பாலசந்தர்.

அவர்களின் ரொமான்ஸும், இளமைத்துள்ளலுமாக படம் அப்படியே கட்டிப்போடுகிறது. இப்போது ரீ ரிலீஸ் செய்தாலும் செமையாக ஓடும் என நினைக்கிறேன். இப்போது வரும் படங்களின் தரத்தைப் பார்க்கும்போது இது இன்றும் இளமையாய், புதிதாய் இருக்கிறது.

க்ளைமாக்ஸை ஏன் இப்படி செய்து மனதை கனக்கச் செய்தாரோ கே.பி.

1981ல் வந்த படத்தை 2014ல்தான் பார்க்க வாய்த்துள்ளது. 


ஏக் துஜே கே லியே படத்தில் பிங்க் ஷேட் படம் முழுக்க வருகிறது.. 

ரதி முள்ளாய் இருக்கும் சங்கை கைகளுக்கிடையில் வைத்து நசுக்கினாலும் பிங்க் ரத்தம்தான்.. 

பாட்டுகள் அனைத்தும் சூப்பரோ சூப்பர்.. யுடியூப் க்கு ஒரு கும்பிடு. திடீர்னு தேரே மேரே பீச் மே பாட்டைப் பாக்கனும்னு தோன்றியது.. அப்படியே எல்லா பாடல்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

நீங்களும் முழுத்தொகுதியைக்கேட்க / பார்க்க கீழே லிங்க்..
.
http://www.youtube.com/watch?v=moVxfltTU_E