Monday, December 28, 2009

சொல்வனம் - இசைச் சிறப்பிதழ் குறித்து..


வலையுலகமெலாம் மொக்கைகளின் பின்னாலும், நுன்னரசியல்களின் பின்னாலும் சென்று அறிவியல் தந்த வசதியை வெட்டி அரட்டைகளாக ஆக்கி வைத்திருக்கும் இந்த சூழ்நிலையில், தமிழில் உருப்படியான வலை இதழ்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் ஒன்று சொல்வனம் என்பதை நிச்சயம் சொல்லலாம்.


மாதமிருமுறை, வித்தியாசமான கட்டுரைகளையும், முயற்சிகளையும், அபூர்வமான கலைஞர்களையும், அறிவியலையும் நமக்குத் தருவதில் காட்டும் முனைப்பில் அவர்களது சமூக அக்கறை புலப்படுவதைக் கானலாம்.


அதன் தொடர்ச்சியாக இந்த இதழை சொல்வனம் “இசைச் சிறப்பிதழ்” ஆக தயாரித்துள்ளது. நமது வாராந்தரிகளைப் பொருத்தவரை ”இசைச் சிறப்பிதழ்” என்றால் என்னென்ன வாத்தியங்கள் உண்டோ அவைகளைப் பற்றிய சிறுகுறிப்பும், அதை நடிகையர் வைத்திருப்பதுபோல படமிட்டும் வெளியிடுவது மட்டுமே. பெரிய பத்திரிக்கைகள், அதிகம் விற்கும் பத்திரிக்கைகள் என தங்களை அழைத்துக்கொள்ளும் குமுதம், விகடன் போன்ற இதழ்களும் இப்படித்தான் வெளியிடுகின்றன. விதிவிலக்குகளாக சில நல்ல கட்டுரைகள் வந்துவிடுவதும் உண்டு. இந்த மாதிரியான வணிக சூழ்நிலையில் , வலைப் ப்த்திரிக்கை ஒன்றில் இசையைப் பற்றி இப்படி ஒவ்வொரு கட்டுரையையும் மிக நேர்த்தியாக எழுதப்பட்டு, ஒரு நல்ல இசை ரசிகனுக்கு என்னெவெல்லாம் பிடிக்குமோ, அதை தரமான முறையில் வாசகர்களுக்கு வழங்கி இருக்கிறது சொல்வனம் குழு.


சேதுபதி அருணாச்சலம் எழுதிய பட்டம்மாள் ஒரு சமூக நிகழ்வு என்ற கட்டுரையில், எப்படி இன்றைய தலைமுறைக்கு நமது முந்தைய தலைமுறையின் இசையுலகின் அரசியைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் கூட இல்லாமல் நமது ஊடகங்கள் திரைப்படங்கள் மூலம் சமூகத்தை மழுங்கடித்து வைத்திருக்கிறது என்பதையும், சாதீய ரீதியான உணர்வு எப்படி தகுதியுள்ள ஒருவரை அவரது மறைவின்போது கூட புறக்கனிக்கச் செய்துவிட்டது எனபதைப் பற்றி அக்கறையுடனும், தற்போதைய தமிழ் சமூகம் குறித்தான கவலையுடன் எழுதியிருக்கிறார்.

வழக்கம்போல இலங்கை தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ”தாமரை பூத்த தடாகம்” என்ற கட்டுரையில் அவரது இளமைக் காலங்களில் அவருக்கிருந்த இசையுடனான அனுபவங்களை நல்ல நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறார்.


அதில் ஓரிடத்தில்

//தனக்குப் பக்கத்தில் ஒருத்தன் நின்று மினக்கெட்டு சுருதிப்பெட்டியை இந்த அமத்து அமத்துகிறானே, இவனுடன் கொஞ்சம் ஒத்துப்போவோமே, என்றெல்லாம் வேலுச்சாமி நினைக்கவில்லை. அவன் தன் பாட்டுக்கு பாடினான். நான் என் பாட்டுக்கு சுருதிப் பெட்டியை போட்டேன். அன்று வானொலியில் பாடியபோது அவன் பாட்டுக்கு பக்கத்து பக்கத்தில் தனியாக ஒலித்த சுருதி நான் உண்டாக்கியதுதான்.//

//அதன் பிறகு எப்படியோ செய்தி பரவி ஒருவரும் என்னை சுருதிபோட அழைக்கவில்லை. நானும் அதை பெரிய இழப்பாக கருதவில்லை. ஏனென்றால் நான் அப்பொழுது இசைப்பருவத்தை தாண்டி இன்னொரு பருவத்துக்குள் நுழைந்துகொண்டிருந்தேன்//

எனற தனது இசை அனுபவத்தை நகைச்சுவையுடன் பதிவு செய்கிறார்.


பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”க் கட்டுரையில் எப்படி ஒரு நல்ல இசையை அனுபவிக்க சங்கீதம் தெரிந்திருக்க வேண்டியதில்லை என்பதை தனது வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாகவே நமக்குக் காட்டுகிறார். தனது குட்டிக்கு பால் தராத ஒரு ஒட்டகம எப்படி இசைக்கு மயங்கி தாயுணர்வுடன் தனது குட்டிக்கு பால் தந்தது எனபதை குறித்தான ஒரு மங்கோலியத் திரைப்படம் குறித்து சொல்லும்போது இசையின் வலிமையை குறிப்பால் உனர்த்துகிறார்.


ரா.கிரிதரன் எழுதிய ”எப்படிப் பெயரிட” ( How to name it?") என்ற இளையராஜாவின் அருமையான இசைமுயற்சி எப்படி கண்டுகொள்ளப்படாமலேயே போனது என்பது குறித்தும், அதன் சிறப்பு குறித்தான கட்டுரை என்னைப்போன்ற இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு பூஸ்ட்டாக இருக்கும்..


ஒரு நல்ல நாதஸ்வர இசையில் மனம் கரையும் ஒரு வெள்ளையனைப் பற்றிய ஒரு கதை தி.ஜானகிராமனின் ”செய்தி” கதையிலும், இன்றைய சபாக்களில் பாடும் இசைக்கலைஞர்களின் தரம் குறித்தும், அவர்களது இசை அறிவு குறித்தும், சபாக்களில் பாட கிடைக்கும் வாய்ப்புகளுக்கு பின்னிருக்கும் அரசியல் பற்றியும் அங்கதமான நடையில் தேசிகன் எழுதியுள்ள “கல்யாணி” கதையும், ராமன்ராஜாவின் வழக்கமான அதிரடி நகைச்சுவையுடன் கூடிய அறிவியலைக் கலந்துதரும் ”வயலின் 35 லட்சம் டாலர், வசூல் 32 டாலர்” கட்டுரையும் வாசகர்களை அதிகம் கவரும்.

இதுதவிர கர்நாடக இசைப்பிரியர்களுக்கென எழுதப்பட்டுள்ள பல அரிய தகவல்களை உள்ளடக்கிய பல கட்டுரைகளும் இருக்கின்றன.

மொத்தத்தில் சொல்வனத்தில் இதுவரை வெளியான இதழ்களில் இந்த இசைச் சிறப்பிதழ் ஆகச்சிறந்த சொல்வனம் இதழ்களில் ஒன்றாக இருக்கும். இனிமேல் வரும் இதழ்கள் இதையும் விஞ்சும்படி தயாரிக்கவேண்டிய சோதனை சொலவனம் குழுமத்தாருக்கு...

ஆதரித்து, வாழ்த்த வேண்டிய இதழ் சொல்வனம் எனபதில் சந்தேகமில்லை..

Sunday, December 20, 2009

நேரில் கண்ட விபத்து

நேற்றிரவு வேலை விஷயமாய் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு ரவுண்டபவுட்டில் (நம்மூர் ரவுண்டானா) யூ டர்ன் அடிக்கக் காத்திருக்கிறேன்.. எனது வண்டியின் பின்னாலிருந்து டயர் அதிக பட்ச சத்தத்துடன் ரோட்டில் உராயும் சத்தம் கேட்கிறது. என்ன நடக்கிறது என திரும்பிப் பார்த்தால் ஒரு லேண்ட்க்ரூசர் ( டொயோட்டா) வண்டி முழுக்கட்டுப்பாட்டையும் இழந்து பக்கவாட்டில் நான்கு சக்கரங்கள் தேய அதிக பட்ச வேகத்தில் வந்து ரண்டபௌட்டின் கர்பில் மோதி தலைகீழாய் கவிழ்ந்து ரவுண்டானாவில் வைத்திருந்த கைகாட்டி மரத்தை கீழே சாய்த்து, அதன் விசையில் அப்படியே காற்றில் பறந்து, பறக்கும்போதே நேராகி, மீண்டும் தலைகீழாகி அதிக பட்ச சப்தத்துடன் தரையில் தலைகீழாய் மோதியது.

உள்ளே எத்தனைபேர் இருந்தனரோ.. நான் எனது காருக்குள்ளேயே அதிகபட்ச படபடப்புடன் ஹசார்டு லைட் அல்லது பார்க்கிங் லைட் எனப்படும் விளக்கை இட்டுவிட்டு ஒரு நிமிடம் கிட்டத்தட்ட என்ன செய்வதெனத் தெரியாமல் அமர்ந்திருந்தேன்.. அதற்குள் மூன்று, நான்கு வாகனங்கள் வந்து அவர்களுக்கு உதவ ஆரம்பித்து விட்டனர்.

அந்த அதிர்ச்சி வீடு திரும்பும் வரையிலும் விலகவேயில்லை.

மத்திய கிழக்கில் இதுபோன்ற விபத்துகள் கிட்டத்தட்ட ஏதேனும் ஒரு சாலையில் தினமும் நடந்துகொண்டுதானிருக்கிறது. இருப்பினும் இதுபோன்ற விபத்துகள் பற்றிய செய்திகளை போக்குவரத்து துறை ஒவ்வொரு சாலை நிறுத்தங்களிலும், வணிக வளாகங்களிலும், படங்களாகவும், வீடியோக்களாகவும் பொதுமக்களுக்கு காட்டினாலும் திருந்தியபாடில்லை.

நான் இந்தவிபத்திலிருந்து தப்பித்தது ஒரு அதிசய நிகழ்வு. அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஓடிவரும்போது அருகில் இருந்த சாலையில் எனது வாகனம் இருந்தது. ( அது ஒரு இருவழிப்பாதை) அதிர்ஷ்டவசமாக மட்டுமே எனது வாகனத்தின்மீது மோதவில்லை. மோதியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்கவும் விரும்பவில்லை. எனது கண்முன்னாலேயே எப்படிப்போய் உருண்டது? எவ்வளவு விசையுடன் அது சென்றது என்பதெல்லாம் நேரிலேயே கண்டிருந்ததால் யோசிக்க விரும்பவில்லை.

நரி இடம்போனால் என்ன வலம்போனால் என்ன மேலே விழுந்து பிடுங்காத வரை சரிதான்....இல்லையா?

Sunday, December 13, 2009

தோஹா (கத்தார்)வில் மழை.



கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று மாலை முதல் இந்த நிமிடம் வரை விட்டு விட்டு நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது.

நம்மூரில் பெய்வதுபோல அடைமழை நேற்றிரவும் இன்று அதிகாலையும் பெய்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் மழை என்பது அபூர்வம். நம்மூர்போல மழைக்கால மழையாக இருப்பதில்லை. எப்போதாவது ஏற்படும் புயல்சின்னங்கள் மூலமே மழை பெய்கிறது. ஆதலால் எப்போதும் சேதாரங்கள் இல்லாமல் மழைகள் செல்வதில்லை.

போன மாதம் ஜெத்தாவில் ( சவுதி)மழையினால் கிட்டத்தட்ட 120 பேர்கள் வரை இறந்தனர். 2007ல் ஏற்பட்ட கோரமான மழையினால் பல நாட்கள் மஸ்கட் (ஓமன்) நகரம் தண்ணீரில் தத்தளித்தது. குடிக்கக்கூட நீரின்றி மக்கள் சில நாட்கள் இருந்தனர். ஓமன் நாடு முழுதும் பேரழிவைச் சந்தித்தது.

மத்திய கிழக்கு நாடுகளில், சாலைகளில் தேங்கும் நீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் ஒன்றும் இருப்பதில்லை. மழை எப்போதவது பெய்வதால் அதற்கு தனிக்கவனம் செலுத்துவதில்லை. நம்மூர் போல எல்லாக் காலநிலைகளுக்கும் ஏற்ற "ஆல்வெதர்" சாலைகளும் கிடையாது. அதானாலேயே வண்டிகள் நீரில் அடித்துச் செல்லப்படுவதும், ஆட்கள் ஜலசமாதியடைவதும் சர்வசாதாரனமாக நடக்கிறது. நல்லவேளையாக கத்தாரில் அந்த அளவுக்கு பயங்கர மழையாக இல்லாமல் நல்ல மழையாகவே இதுவரை பெய்து வருகிறது.



மேகம் மறைத்த ஆசிய விளையாட்டுப்போட்டி நினைவு விளக்குத்தூண்.





மழையில் மிதக்கும் தோஹா.

இங்கு இன்னும் ஓரிரு வாரங்களுக்கு தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் இருக்கும் மன்னும், நீரும் தொடர்ச்சியக வண்டிச் சக்கரங்களில் அரைக்கப்பட்டு அது கூழாகி அந்த இடங்கள் மனிதன் கால் வைப்பதற்கே லாயக்கில்லாமல் ஆகி பின்னர் வண்டிச்சக்கரங்கள் மூலம் பல இடங்களுக்கு சென்று தூசியாகி மீண்டும் அதன் இருப்பிடம் அடையும்.

போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் இடத்திலுள்ள நீரைமட்டும் உறிஞ்சி வெளியே விடுவார்கள். இதர இடங்களுக்கு நான் மேலே சொன்ன கதிதான்..

நம்மூரிலாவது ஆங்காங்கே குளம் குட்டைகளில் ஒரு 10 முதல் 20 சதமான தண்ணீராவது சேரும், பின்னர் ஏதோ ஒரு வகையில் பயன்படும். ஆனால் இங்கெல்லாம் அப்படியே தாழ்வான இடங்களில் தண்ணீர் சேர்ந்து முழுதும் ஆவியாகியும், தரைக்குள்ளும் சென்று வீணாகும்.

நம்மூரில் மழைபெய்யும்போது ஏற்படும் மகிழ்ச்சி இங்கும் ஏற்படும். ஆனால் நம்மூர் போல கடைக்குப் போய் ரெண்டு பஜ்ஜியும், ஒரு டீயும் சாப்பிட்டு மழையை அனுபவிக்க முடியாது.. அல்லது வெளியே சென்று மழையில் நனைதல் சாத்தியமில்லை.

இனி இந்த மழை ஓய்ந்து வெயில் வந்துவிட்டால் அடுத்த வருடமோ இல்லை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரோதான் மழையைப் பார்க்க முடியும்.

இந்த முறை ஊருக்கு வந்துவிட்டு மழையைப் பார்க்காமல் சென்ற குறை இப்போது கத்தாரில் வந்த மழையினால் தீர்ந்தது. மழையைப் பார்க்காத ஒவ்வொரு ஆண்டும் மனதை என்னவோ செய்கிறது.. என்னமோ யாருமே இல்லாத அல்லது சீக்கிரம் அழியப்போகும் உலகில் வாழ்வதுபோன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இந்த 2009 இந்த மழையினால் அருமையாக கழிந்தது..

மழை பெய்து முடிந்தால் கடுமையான குளிர்காலம் ஆரம்பிக்கும். அதையும் அனுபவிக்க வேண்டியதுதான்..

சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ என்ற பாடலில் வரும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை..

அந்தப்பாடலின் ஒலியும், ஒளியும் இங்கே..




(படங்கள் எனது அலைபேசியில் எடுத்தது.)

Saturday, December 12, 2009

சீ திஸ் விமர்சனம் ஐ சே... ( குயிக் கன் முருகன்)


ரைஸ்பிளேட் ரெட்டிதான் வில்லன் சார்..

குயிக் கன் முருகந்தான் ஹீரோ சார்..

வில்லனோட ”வப்பு” தான் மேங்கோ சார்

”ரவுடி”தான் ரைஸ் பிளேட்டோட கையாள் சார்.

”மெக் தோசா” தான் ரைஸ்பிளேட் ரெட்டி விக்கிற தோசையோட பேரு சார்..

" குயிக் கன் முருகன சுடுறவன் இன்னும் பொறக்கலை, ஐ சே” அப்படின்னு சவுண்டு விடுற குயிக் கன்ன ரைஸ் பிளேட் ரெட்டி கொன்னுடுறான்..

குயிக் கன் முருகன் பசுக்களை பாதுகாக்கிற, சைவ உணவுக்கு ஆதரவு அளிக்கும் மாட்டுப் பையன், அதாங்க கவ் பாய் பாய் (cow Boy)

ரைஸ் பிளேட் ரெட்டி (நாசர்) ஊர்ல இருக்குற சைவ ஓட்டலையெல்லாம் அவனோட அடியாள்கள வச்சி பிடுங்கி அசைவ ஓட்டலா மாத்துறான். அத தட்டிக்கேட்ட குயிக் கன் முருகன சுட்டுக்கொன்னுர்ரான் ...

குயிக் கன் முருகன் மேல ( செத்து) போய் சித்திரகுப்தண்ட்ட பூமியில் ரைஸ்பிளேட் செய்யுற அநியாயங்களை எடுத்துச் சொல்லி மீண்டும் பூலோகத்துக்கே மனுஷனா பசுக்களை காப்பாத்துறதுக்கும், சைவ பழக்க வழக்கத்த காப்பாத்துறதுக்கும் திரும்பி வந்து பூமியில பெரிய ஆளா ஆய்ட்ட நம்ம ரைஸ் பிளேட் ரெட்டிய பழி வாங்குறதுதான் கதை.

நாலு பைட்டு, ஆறு சாங்கு, மூனு செண்டி கடைசியில சுபம்னு பாத்துப் பாத்து அலுத்துபோன ஆளுகளுக்கும், நகைச்சுவைய வித்தியாசமா குடுத்தா ரசிக்கத் தெரிஞ்ச ஆளுகளுக்கும் நான் இந்த படத்தை சிபாரிசு செய்வேன்.. கமல் டைப் காமெடியையும், வடிவேல் காமெடியையும், விவேக் காமெடியையும் மட்டுமே காமெடினு நம்புற ஆளுகளுக்கு.. தயவு செஞ்சு இந்தப் படத்துக்கு போயிறாதீங்க..

ரைஸ்பிளேட் ரெட்டியால சுடப்பட்டு மேலோகம் போற குயிக் கன்னுக்கு அங்க லட்சுமிசாமியப் பாக்குறாரு.. காலண்டர்ல பாத்த மாதிரியே இருக்குனு சொல்லிட்டு அடுத்த ரூமப்பாத்தா தேவலோக ரம்பைகள் ஸ்டெப் வச்சு டான்ஸுக்கு ட்ரெயினிங் எடுத்திட்டிருக்காங்க..

எப்படியாச்சும் பூமிக்குப் போயி அந்த ரைஸ்பிளேட் கிட்ட இருந்து பசுக்கள காப்பாத்தனும்னு சித்திரகுப்தன்ட்ட கெஞ்சுறார். அவரும் சீனியாரிட்டி மற்றும் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் விளக்கிட்டு இருந்தாலும் உங்க கேஸ் வித்தியாசம்கிறதனாலயும், வெஜிடேரியனிஸம்தான் இப்ப நீட் ஆஃப் த ஹவர் எப்படின்னு சொல்லி அவருடைய மறுஜென்மத்திற்கு (மறுபடியும் குயிக் கன் முருகனாவே)அப்ப்ரூவ் பன்றார்.

பூமிக்கு வந்து ரெட்டிய தேடிப்புடிச்சு அவன கொல்றதுதான் மீதிக்கதை.

இந்தியா கேட் பக்கத்துல மேலோகத்துல வந்து இறங்குறதும் அதுல ட்ரான்ஸ்மிஷன் எர்ரர் ஆகி பாதி ட்ரெஸ்ல வந்து இறங்குறவருக்கு மீதி ட்ரெஸ் மேலோகத்துல இருந்து சாரி ட்ரான்ஸ்மிஷன் எர்ரர் அப்படின்னு சொல்லிட்டு மீதி ட்ரெஸ்ஸும் வந்து இறங்குறதுல ஆரம்பிச்சு, வில்லனுக சுடுற துப்பாக்கிக் குண்டை பல்லுல கவ்வுறது, கையில புடிக்கிரது அப்படின்னு பல கிறுக்குத்தனமான ஜோக்ஸ்.


இதுக்கு நடுவுல் குயிக் கன் முருகனோட அண்ணன், மற்றும் அன்னிய பாக்குறதும், ரைஸ்பிளேட் ஆளுங்க குயிக் கன் முருகன்னு நெனச்சி கொன்றுவிட்டுஅவங்க அண்ணிய மெக் தோசைக்கு அருமையான ரெசிப்பிக்காக கொண்டுபோக பழிவாங்குறார் ஹீரோ, குயிக் கன்

ரம்பா வோட பேரு மேங்கோ.. ரைஸ்பிளேட்டோட காதலியா வர்ராங்க..நல்ல அழகு இந்தப்படத்துல..


இந்த படத்துல அப்படி என்ன விசேஷம்??

நம்ம எகத்தாளமா பாக்குற பழைய சினிமா படங்களையும், ஒருகாலத்துல எம்.டீ.வியிலோ, வி.டீவியிலோ வந்த “குயிக் கன் முருகன்” அப்படிங்கிற ஒரு கேரக்டரை அப்படியே கிண்டல் பன்னி ஒரு முழுநீளத் திரைப்படம் எடுப்பதென்பதும் அதை வனிக ரீதியாக வெற்றிபெற வைக்க முடியும் என்பதும் ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை.. ஆனல் நம்பி எடுத்திருக்கிறர்கள்.. வெற்றி பெற்றார்களா எனத் தெரியவில்லை.

கதை முன்னும், பின்னும் போவதும், தொடர்ச்சி இல்லாமல் போல தெரிவதும், காமெடிப் படத்தில் வில்லன் மிக சீரிஸாக இருப்பதும் பலவீனங்கள்..


பழைய கால முறையில் ட்ராப் த கன் ஐ சே என்பது போல எதற்கெடுத்தாலும் ஐ சே சேர்ப்பது நன்றாகத்தான் இருக்கிறது கேட்க..

கேரக்டர்களின் பெயர்களும் கன் பவுடர், ரவுடி எம்.பி.ஏ, ரைஸ்பிளேட் ரெட்டி, மேங்கோ டாலி என வித்தியாசமாய்த்தான் வைத்திருகிறார்கள்.

இந்துக்கடவுள்களை கிண்டல் செய்கிறார்கள்..ஆனல் இந்து கடவுள் படமல்ல. யாரையும் புண்படுத்தவோ, கிண்டல் செய்யவோ இல்லை.. அப்படி இருப்பின் அது தற்செயலே என சொல்கிறார்கள். நம்புவோம்..

இதர மதங்கள் சொல்லும் மேலுலகம் என ஒன்றிருப்பதை நம்பவில்லையோ, இவர்கள்??

மற்றபடி நான் ரசித்த ஒரு திரைப்படம் இது..

அதன் ட்ரெயில இங்கே

Wednesday, November 18, 2009

ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்




சங்க கால இலக்கியங்கள் நமக்கு அறிமுகம் ஆவதெல்லாம் ஏதேனும் ஒரு திரைப்படத்தின் பாடலில் முதல் இரண்டு வரியாகவோ அல்லது காதல் காட்சிகளில் பின்னனியாகவோ ஓட விடுதல் மூலமே..

காலஞ்சென்ற சுஜாதா அவர்கள் அடிக்கடி சங்க இலக்கியங்களில் உள்ள சுவைகளை அடிக்கடி மேற்கோள் காட்டியும் வந்தார்.

அதற்குப்பின்னர் தற்போது பல்கலைக்கழகங்களில் தமிழை முக்கியப்பாடமாக எடுத்து படிப்போர் தவிர இதர தமிழர்களுக்கு சங்க இலக்கியங்களில் பரிச்சியமோ, அப்படி ஒன்று இருப்பதை அறிந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே.

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது ஜெயமோகனின் சில புத்தகங்களை வாங்கி வந்தேன்.. அதில் சங்கச் சித்திரங்களும் ஒன்று.

அவருக்குப் பிடித்த சங்க காலப் பாடல்களை தமது வாழ்க்கை அனுபவங்கள் மூலம் கதையாகச் சொல்லி அந்தப் பாடலின் எளிய தமிழ் வடிவத்தை அந்தக் கட்டுரையின் இறுதியில் தருகிறார். படிக்க படிக்க சுவாரசியமாகவும், சங்க காலப் பாடலை நாம் நேரடியாக படிக்கும்போது ஒன்றுமே புரியாததுபோலத்தெரிந்த அதே பாடல் அவரது எளிமைப் படுத்தப்பட்ட பாடலை படித்த பின்பு மீண்டும் படிக்கும்போது கொஞ்சம் புரிந்துகொள்ள முடிகிறது.

பாடல்களை அக்குவேறாக ஆனிவேறாக அலசாமல், அந்தந்தப் பாடலுக்கு ஏற்றாற்போல் தனது வாழ்க்கை அனுபவங்களை சொல்லியிருப்பது படிக்க சுவாரசியமாய் இருக்கிறது. நமக்குப் பிடிக்காத விஷயங்களை நாம் எப்போதுமே தாண்டிச் செல்லவே விரும்புவோம். ஆனால் அதே விஷயத்தை நமக்குப் பிடித்ததுபோல அறிமுகம் செய்யும்போது அதன்மீது ஒரு மரியாதை வந்துவிடுகிறது. அதைத் தெரிந்துகொள்ள விழைகிறோம். அதைத்தான் இந்த சங்கச் சித்திரங்கள் செய்கிறது.

தமிழர்களின் சொத்தான சங்கப்பாடல்கள், கூலிக்கு மாரடிக்கும் பெரும்பான்மையான தமிழாசிரியர்களால் தானும் சரியாகப் புரிந்துகொள்ளாமல், தனது மாணவனுக்கும் சரியாக சொல்லித்தராமல் கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள் சங்கப்பாடல்களின் வாசனையே இன்றி பள்ளிக்கூடங்களைத் தாண்டிவந்துவிட்டது.

ஒரு நல்ல ஆசிரியனைபோல நல்ல விஷயங்களை நமது மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கும் ஜெயமோகனின் இந்த உழைப்பு பாராட்டப்படவேண்டியது.

ஏற்கனவே ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த சமயத்திலேயே பரவலான பாராட்டைப் பெற்றது இந்த சங்கச் சித்திரங்கள்.

Sunday, November 15, 2009

ராமன் ராஜா எனும் புன்னகைக்க வைக்கும் அறிவியல் கதை சொல்லி.

ராமன்ராஜா என்ற பெயர் எழுத்துலகில் எனக்கு அறிமுகம் ஆனது சொல்வனம் இதழில்தான். அவரது கட்டுரைகள் அனைத்தும் அறிவியல் சம்பந்தப்பட்ட ஆனால் பொதுவாக அதிகம் விவாதிக்கப்படாத வறண்ட தலைப்புகள்.

அப்படிப்பட்ட விஷயங்களை கையில் எடுத்துக்கொண்டு வாசகனை மிகுந்த ஆர்வத்துடன் படிக்க வைப்பதென்பது சவாலான விஷயம், சொல்லப்போனால் ஓரிரு கட்டுரைகளுக்கு மேல் அப்படி சுவாரசியமாக எழுதிவிட முடியாது.

தமிழில் சுஜாதாவுக்கு அறிவியலை எளிய மக்களுக்கு புரியும் வகையில் கொண்டு சென்றவர் என்ற நற் பெயரும், இலக்கியத்தை தேவையில்லாமல் எளிமைப்படுத்தினார் என்ற கெட்ட பெயரும் உண்டு.

அவரது வரிசையில் அறிவியல் கட்டுரைகளை எழுதுவதிலும் அதை எளிதாய் மாற்றுவதிலும், ஜனரஞ்சகமாக்குவதிலும், சொல்லப்படும் விஷயம் எந்த விதத்திலும் நீர்த்துப்போகாமலும் வாசகர்களுக்குத் தருவதில் வெற்றி பெற்று வருகிறார் திரு.ராமன் ராஜா அவர்கள்.

அவரது சொல்வனம் கட்டுரைகளில் காணப்படும் வித்தியாசமான தலைப்புகளினால் ஈர்க்கப்படும் வாசகன் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தால் அதன் சரளமான நடையிலும், நகைச்சுவையிலும் இருந்து வெளிவருதல் சாத்தியமில்லாத ஒன்று. ராஜன் ராமனின் விசிறியாக மாறிவிடுவார். அப்படிப்பட்ட சிறந்த நடையைக் கொண்டது அவரது எழுத்துக்கள்.

சில தலைப்புகள்..

சாத்தியத்தை மீறிய சத்தியங்கள்.

விழப்போகிறது

பளிச்சென்று எரிந்த பொருளாதாரம்

எறும்பு மூளையின் சிறந்த முடிவு.

மரணமில்லாத மனிதன் மகிழ்ச்சியாக இருப்பானா?

இன்னும் பல...

அவரது நான்கே நான்கு கட்டுரைகளை மட்டும் படித்துவிட்டு எனது கருத்தாக இதைப் பதிக்கிறேன். நிச்சயம் நீங்களும் நான் சொல்வதை உண்மை எனக் கண்டுகொள்வீர்கள்.

அவரது சொல்வனம் கட்டுரைகளின் சுட்டிகள் இங்கே.

Wednesday, September 16, 2009

இனிமேல் இன்று ஒரு தகவலை கேட்க இயலாது.


ஊடகங்களில் குரலால் மட்டுமே பிரபலம் அடைய வேண்டியது வானொலியில்தான்.. தமிழகத்தில் அனைவரையும் காலை 6.40க்கு மாநிலச் செய்திகளுக்கு முன்னதாக வரும் “ இன்று ஒரு தகவலை” கேட்காதவர்களே இருக்க முடியாது என்ற அளவில் தனது வித்தியாசமான குரலால் நல்ல நல்ல தகவல்களை நகைச்சுவையுடன் கலந்து சொல்வதை தமிழகமே கேட்டு மகிழ்ந்தது ஒரு காலத்தில்...

கிராமங்களில் இன்னிக்கு தென்கச்சி கதை நல்லா இருந்துச்சில்ல என ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளும் அளவு பிரபலமாக இருந்தது அவரது நிகழ்ச்சியும், அவரது குரலும்.


இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியின் வெற்றியின் காரனமே துனுக்குச் செய்திகளை கேட்க விரும்பும் நமது மனநிலைதான் என எண்ணுகிறேன். அதை தென்கச்சி அவர்கள் தனது குரலில் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தி கதை சொல்லும் பானியில் சொல்லி இறுதியில் ஒரு நகைச்சுவை துனுக்குடன் சொல்லியவிதம் நம்மையெல்லாம் ரசிக்க வைத்தது.

இவரது இன்று ஒரு தகவல் நிகழ்ச்ச்சி 1988 ஜூலையில் தொடங்கியது. அவர் வேலை செய்த நிலைய இயக்குனர் திரு.செல்வம் சொன்னதைத் தட்ட முடியாமல் ஆரம்பித்து பின்னர் அமோக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாகவும், அதிக பட்சவருவாயை ஈட்டித்தரும் நிகழ்வாகவும் ஆனபின்பு அந்நிகழ்ச்சி தென்கச்சி அவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக ஆனதாக அம்புலிமாமா வலைத்தளத்திற்கு அளித்த நேர்கானலில் கூறி இருக்கிறார்.

இனிய உதயம் என்ற இதழுக்கு பேட்டியளித்த இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்:

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

அது “ஈழத் தமிழர்கள்!'


அனைவராலும் விரும்பப்படும் அரிய மனிதராக வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்திருக்கிறார் திரு.தென்கச்சி கோ. சாமிநாதன்.

ஒரு அருமையான கதை சொல்லியை இழந்து வாடும் தமிழர் அனைவருக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது அஞ்சலிகள்.

அண்ணாகண்ணன் அவர்களுக்கு தென்கச்சி அளித்த நேர்கானல் இங்கே

Sunday, August 23, 2009

ரப்பர் - ஜெயமோகனின்





ஜெயமோகனின் முதல் படைப்பான ரப்பரை வாசிக்கும் அனுபவம் நேற்றுத்தான் கிடைத்தது.. வர்ணனைகளின் மன்னனாகத்தான் இருந்திருக்கிறார் அன்றும், இன்றும்...

அது ஊமைச் செந்நாயாகட்டும், மத்தகமாகட்டும், விஷ்ணுபுரம் ஆகட்டும் தனது வார்த்தைகளாலேயே சூழ்நிலையை கண்முன் கொண்டு வரும் கலையை வரப்பெற்றவர்.

மரவள்ளிகிழகிற்காக ஒரு குழந்தையை அடித்து கொன்றவன் பெருவட்டன் என்ற பட்டம் பெறுவதும் அந்த குடும்பம் மீண்டும் மீள்வதும் ரப்பர் நாவல் என கொள்ளலாம். நாயர்கள் நாடார்களை விலங்குகளைப்போல கொல்ல, நாடார்கள் நாயர்களுக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக வளர்ந்த கதை ரப்பர். கோடீஸ்வரர்களாக இருந்த நாயர்களிடம் கூலி வேலை செய்த நாடார்கள் ரப்பரால் பெருவட்டர்கள் ஆனதும் கொட்டாரங்கள் அமைத்ததும் நாயர்கள் பொருளாதார நிலையில் கீழ்நிலைக்கு போனதும் பற்றிய நாவல் ரப்பர்.

தனது சுயநலத்திற்காக இயற்கையை காவுகொடுத்து வளர்க்கப்பட்ட ரப்பரால் ஒரு இனம் உயர்ந்ததும் இன்னொரு இனம் தனது போலி கௌரவத்தாலும் பழம்பெருமையினாலும் அழிந்த கதை ரப்பர்.

இப்படி எப்படி வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்...

ரப்பரின் ஆரம்பமே ஒரு பண்னை வீட்டுக்குள் கார் நுழைவதிலிருந்து ஆரம்பிக்கிறது..ஒரு மிகப்பெரிய குடும்பத்தின், மிகப் பணக்காரக் குடும்பத்தின் அழகை வர்ணித்துக்கொண்டே அது மியூசியம்போல இருக்கிறது என கதையில் வரும் டாக்டரைப்போலவே நம்மையும் நினைக்க வைக்கிறார். அதற்கேற்றார்போல் வர்ணனை.

பெருவட்டன் என்பது குடும்பப் பெயர்.. அவர்கள் எப்படி பெருவட்டர்கள் ஆனார்கள்.. அதற்கு முன்பு அவர்களின் நிலை என்ன?? அந்த சூழ்நிலையில் அங்கிருந்த நாடார்களுக்கு நிகழ்ந்ததென்ன?? யார் செய்தது?? அங்கு சமூகத்தில் நடந்த கிறிஸ்தவ மதமாற்றம் குறித்தும் அது அந்த சூழ்நிலையில் எப்படி ஏற்பட்டது என்பதையும் அது எப்படி அவர்களின் வாழ்க்கையில் அந்தஸ்தைக் கூட்டியது என்பதையும், வாழ்ந்து கெட்ட குடும்பங்களைப் பற்றியும் ஏன் அப்படி ஆனார்கள் என்பதையும் அழகாக விவரித்துக்கொண்டே அந்த மாற்றங்களில் ரப்பரின் பங்கு என்ன என்பதையும் அழகாக விவரிக்கிறார்..

பெருவட்டன் குடும்பத்தில் இருக்கும் லிவியும், பிரான்ஸிசும், பெருவட்டத்தியும் (பெருவட்டரின் மனைவி) எதிர் எதிர் துருவங்களாக இருக்க, பெருவட்டன் அரசியல் சதுரங்கத்தில் கானாமல் ஆக்கப்படுகிறார். அவரது வாழ்க்கை தகப்பனார் பெரிய பெருவட்டன் சம்பாத்தியத்தில் ஆரம்பித்து இறுதியில் எல்லாவற்றையும் இழப்பதுடன் முடிவடைந்து விடுகிறது.

கங்காணி என ஒருவர் கதையில் பெரிய பெருவட்டரின் ஆரம்பகால நன்பனாக வருகிறார். அவரும், பெரிய பெருவட்டனும் இணைந்துதான் மலையை விவசாய பூமியாக்கி வளம் பெற்றனர். அவரைப்போலவே கிராமங்களில் இன்றும் எசமானனுகாக உழைக்கும் கங்காணிகளைப் பார்க்க முடியும். அவர்கள் எண்ணமெல்லாம் எப்படி தனது முதலாளிகளுக்கு உழைப்பது என்பதிலேயே இருக்கும். கங்காணி, பெரிய பெருவட்டர் மரணப்படுக்கையில் இருக்க அவரை வந்து சந்திக்கும்போது கங்காணியின் உடல்வலிமை கண்டு, பெருவட்டர் நாணத்தால் அவரை சந்திக்க அஞ்சுவதும், பெருவட்டரின் குடும்பத்தால் அவமரியாதையாக அவரை நடத்தும்போது புதுப்பணக்காரர்களின் வாழ்க்கையும், அதைப்பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் கங்காணியால் தாண்டிச்சென்றுவிட முடிகிறது, அவரது எளிய வாழ்க்கைமுறையினால், முதலாளியின் நிலைகண்டு வருந்துவதும், குழந்தைபோல அழுவதும் மிக இயல்பாய் சொல்லப்படுகிறது.

பணக்காரர் ஆன வழியை இறுதிக்கலத்தில் நினைத்துப்பார்க்கிறார் கிழவர். எதற்கு இவ்வளவு கொள்ளையும், கொலையும் செய்து சம்பாதித்தோம், எதற்காக என்ற எண்ணம் அவரை ஆட்கொள்கிறது. வாழும் காலத்தில் முரடனாகவும், யாருடைய உதவியும் தேவைப்படாத வாழ்க்கையை வாழ்ந்து இருந்த பெரிய பெருவட்டர் இறுதிக்காலத்தில் தனது அடிப்படித் தேவைகளுக்குக் கூட அவரது உதவிக்காக அமர்த்தப்பட்ட குஞ்ஞியின் உதவியில் வாழநேர்வதை நினைத்து சுயபரிதாபம் கொண்டு தனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுமாறு வேண்டுகிறார்.

அவர் உயிரோடு இருப்பதால் வீட்டை விற்கத்தயங்குகிறார் பெருவட்டர். அதனால் பெரிய பெருவட்டர் இறக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். பெற்ற தகப்பன் சாகவேண்டும் என நினைத்த அந்த எண்ணமே அவரைக் கொல்கிறது. ஆனால் வியாபாரத்தில் தப்பிக்க வேறு வழியில்லை. சொத்தை விற்றால்தான் முடியும் என்ற நிலை..இல்லையெனில் மொத்தமாக முழுகுவதுடன் கடனும் இருக்கும்.

பெருவட்டத்திக்கு (பெருவட்டரின் மனைவி) பல தவறான தொடர்புகள்..பெருவட்டருக்கும், பிரான்ஸிசுக்கும் கூடத் தெரியும். பெருவட்டருக்கு அவளது அழகின்மேல் மோகமும், அவள் தன்னை அவமதிப்பதுகூட அவளது உரிமை எனவும் நம்பத்தலைப்படுகிறார்.

பெருவட்டரின் வீட்டில் வேலைசெய்யும், அறைக்கல் குடும்பத்து பெண்ணான தங்கம் பெருவட்டத்தியால் அவ்வப்போது அவமரியாதை செய்யப்பட்டும் லிவியால் அவ்வப்போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டும் அவள் அங்கேயே தொடர்ந்து வேலைசெய்வது அவளது தேவை கருதியே. பெருவட்டருக்கும் அவரை அவமதித்த பழைய எஜமானர்களை மீண்டும் அவமதிக்ககூடிய ஒரு வாய்ப்பாகவே கருதினார். அதை வெளியே சொல்லாவிட்டாலும் மனதில் அதுதான். வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரிடமும் அவளது அறைக்கல் ராஜவம்சத்தைப்பற்றியும், அது வீழ்ந்ததையும் சொல்லி இன்று வேலைக்காரியாய் தனது வீட்டில் இருப்பதை சொல்ல விரும்பாதவர்போல அனைவரிடமும் சொல்லி விடுவார். பலவிதமான குணாதிசயங்களைக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரது வாழ்க்கையையும் ஜெயமோகன் தனது எழுத்துக்களின்மூலமாகவே கண்முன் நிறுத்துகிறார்.

பிரான்ஸிஸ், தாத்தாவின் செல்லப்பேரன். படிக்கும் காலத்தில் முரடணாகவும் படிப்பெதுவும் ஏறாமல் பள்ளிக்குச் செல்லாமலும் இருக்க தாத்தாவால் அரவணைக்கப்பட்டு அவனுக்கு ஒரு பாதுகாவலனாகவே விளங்குகிறார். ’படிக்க வேண்டாமா வேண்டாம், விவசாயம் செய்’ என்ற தாத்தாவின் அறிவுரையும் கேளாமல் தான் தோன்றித் தனமாக சுற்றும் பிரான்ஸிஸுக்கு தங்கத்தின் மீதான அனுதாபமும் அவளை லிவி உபயோகப்படுத்துவது தெரிந்தும் அவன்மீது எரிச்சல்படுகிறான். அவனை மதிப்பதாக இல்லை. இதே பிரான்ஸிஸ் தாத்தா படுக்கையில் கிடக்க யாரும் அவரை மதிக்காமல் இருப்பதை நினைத்து உள்ளம் புழுங்குகின்றான். அவனுக்கு உண்மையில் அந்த வீட்டில் எந்த பிடிப்புமில்லை தாத்தாவைத் தவிர. அவர் இறந்துவிட்டால் உடனே வெளியே சென்றுவிடவேண்டியதுதான் என்ற அளவில்தான் வீட்டின்மீதுள்ள அபிமானம். எல்லாக்கெட்ட பழக்கங்களும் கொண்டவன்.

கங்காணியின் பேரனாக வரும் லாரன்ஸ், தாத்தாவைப் போலவே எளிய வாழ்க்கை வாழ்ந்து தனது நாஞ்சில் பகுதியினுடைய சுற்றுப்புற சூழியல் கெடுதலுக்கு எதிராக தன்னாலான முயற்சிகளைத் தொடருகிறான். அதை மருத்துவர் ராமின் இடத்தில் வைத்து விவரிக்க தாத்தாவின் முடிவும் தொலைப்பேசியில் கிடைக்க லாரன்ஸ்-உடன் அவன் இணைவதாக கூறி முடிகிறது கதை.

’வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்பதைப் போல நாஞ்சில் நிலத்திற்கு சற்றும் பொருந்தாத ரப்பர் மரங்களை அதனால் கிடைக்கும் லாபத்திற்காக ’முதலாளிகள் ‘ பயிரிட வழக்கமான விவசாயம் நொடிய அதை எதிர்த்து களமிறங்குகிறான் லாரன்ஸ். ரப்பரால் கெட்டுப்போன சுற்றுப்புற சூழலையும் ரப்பரால் வளமடைந்த முதலாளிகளையும் அதன் பின்னிருக்கும் அரசியலையும் அழகாக விளக்குகிறார்.

நாவல் முழுக்க நாஞ்சில் நாட்டு வட்டாரவழக்கு மொழி பயன்படுத்தப்பட்டிருந்தாலும் நாவலின் ஓட்டத்தை அது ஏந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.


’நான் கடவுள்’ படத்தில் கடவுளை திட்டிய ஜெயமோகன் இதற்கு முன்னரே தனது முதல் நாவலிலேயே கடவுளை ஃபாதர் வாயிலாக திட்டியிருக்கிறார். அது கடவுளைக் குறித்தான அவமரியாதையோ எள்ளலோ அல்ல. கடவுளின் பிரதிநிதிகள் தனது தன்நிலை இழக்கும்போது அவர்கள் கடவுளை எவ்வளவு மதிக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே. ஜெயமோகனின் இதர நாவல்களைவிட எந்தவிதத்திலும் உயர்ந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் முதல் நாவலிலேயே தனது முத்திரையை பதித்திருக்கிறார் ஜெயமோகன்.


நாவல் கிடைக்குமிடம் : கவிதா பப்ளிகேசன் No. 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை - 17

Saturday, August 15, 2009

சுதந்திரதின வாழ்த்துக்கள்




கத்தாரில் சுதந்திர தினம்.

ஒவ்வொரு தேசிய விழாக்களும் இந்தியத் தூதரகம் சார்பாக சிறப்பாகக் கொண்டாடப்படும் கத்தாரில் இன்று 62வது சுதந்திர தினம் கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது.


கத்தாருக்கான இந்தியத் தூதர் திருமதி தீபா கோபாலன் வாத்வா இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் கூடியிருந்தவர்கள் தேசியகீதம் பாடி மரியாதை செய்தனர்.



பின்னர் நிகழ்ச்சிகள் தொடங்கின. சுதந்திரதின உரையை இந்தியத்தூதர் ஆங்கிலத்தில் வாசித்தார். அதன் பின்னர் தோஹாவில் உள்ள இந்தியப்பள்ளியான பிர்லா பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளின் தேசபக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.


அதைத் தொடர்ந்து இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியத்தூதர் கேக்கை வெட்ட அனைவருக்கும் அது விநியோகம் செய்யப்பட்ட்து.

அனைவருக்கும் இனிமையான சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழக்கத்தைவிட சிறப்பாகவும், அதிக அளவு இந்திய மக்களின் பங்களிப்புடன் விழா நடைபெற்றது. ஜவகர்லால் நேருவைப்போல வேடமிட்ட ஒருவர் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்தார்...



இந்திய சுற்றுலாத்துறையின் சார்பில் இந்திய சுற்றுலா குறித்து சிறு சிறு புத்தகங்கள் பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்தது.

கத்தாரில் இருந்து வெளியாகும் தி பெனின்சூலா என்ற ஆங்கில நாளிதல் இந்திய சுதந்திரதின சிறப்பு மலரை வெளியிட்டிருந்தது.


அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். வெல்க இந்தியா...

சுதந்திரதின நிகழ்ச்சிகளின் தொகுப்புப் புகைப்படங்கள் கீழே ஆல்பமாக..

Tuesday, August 4, 2009

அக்ரஹாரத்தில் பூனை - திலீப்குமார் - எனது எண்ணங்கள்


அக்ரஹாரத்தில் பூனை - திலீப்குமார் - எனது எண்ணங்கள்.

சமீபத்தில் சொல்வனத்தில் படித்த திலீப்குமார் எழுதிய அக்ரஹாரத்தில் பூனை என்ற இந்தக் கதை தமிழில் நான் படித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று எனச் சொல்வேன்.

குஜராத்திக் குடும்பத்தில் நடக்கும் இந்த கதை சொல்லும் விஷயங்கள் பல..

மிக எளிய நடையில் நமக்குக் கதைசொல்லும் பாணியில் ஒரு நகைச்சுவை இழையுடன் இந்தக்கதை சொல்லப்படுகிறது. முதலில் ஆச்சாரசீலராய் இருப்போருக்கும் மனதில் இருக்கும் வன்மம்.. இத்தனை வன்மத்தை இயல்பாய் மனதில் வைத்துக்கொண்டு சாதாரனமாய் இருப்பவர்களின் இன்னொரு முகத்தை காட்டுகிறது இக்கதை.

அதே சமூகத்தில் முரடனாகவும், தீய பழக்கங்கள் கொண்டவனாகவும் அறியப்படுபவனுக்கு (சூரி) இருக்கும் நல்ல எண்ணம் மற்றும் குணம் இரண்டு நிகழ்வுகளில் காட்டப்படுகிறது.

பூ விற்கும் பெண்ணிடம் வம்புசெய்பவர்களின் சைக்கிளைக் கோவில் குளத்துக்குள் வீசுவது.... நீதிக்குப் பின்தான் சாதி எனபது அவனது கொள்கை...

பூனையை பப்லிப் பாட்டி மூக்குப்பொடி தேய்த்து அது சித்திரவதை அனுபவிக்கும்போது கூடிநிற்பவர்கள் அதைப்பார்த்து சிரிக்க, பூனைபடும் அவஸ்தையைப் பார்த்து தாளமாட்டாமல் சிரிப்பவர்களை நோக்கி அவன் மிக மிக மோசமான கெட்டவார்த்தையை உதிர்த்துச் செல்வது என அவனுக்குள் இருக்கும் மனிதத் தன்மையை காட்டுவதும்..

பப்லிப்பாட்டியின் ஆசாரத்தன்மையையும், இறைவனுக்குப் பூஜை செய்யாமல் உணவு அருந்தாதவள் என்ற குணத்தை விஸ்தாரமாக விளக்கிவிட்டு, அதே பப்லிப் பாட்டி ஆத்திரத்தின் உச்சத்தில் வாயில்லாப் வாயில்லாப் பிராணியான பூனையைக் கொடுமைப் படுத்தக்கூட தயங்காதகுணத்தையும், தனது மருமகளை அவள் வார்த்தையால் விளாசுவதையும்.. பப்லிப் பாட்டியின் மகள் வியாதியால் அளவே இல்லாமல் பெருத்துக் கிடந்தும் அவளுக்காக கிழவி கண்ணிர் உகுப்பதையும், அவரது மருமகன் தன் மனைவியை உயிராக நினைப்பதையும் என பல குணாதிசயங்களைக் கொண்ட மக்களைக் கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர்.


அவரவர்களது குறைநிறைகளை ஏற்றி இறக்கிச் சொல்லாமல் அப்படியே சொல்லிச் செல்வதன்மூலம் கதையை இயல்பாய் இருக்கவிட்டிருக்கிறார் திலீப்குமார்

இந்தக் கதையைப்பற்றிய முன்னுரையாக சொல்வனத்தில் இப்படி இருக்கிறது...

// இந்தச் சிறுகதை ‘க்ரியா பதிப்பகம்’ வெளியீடாக வந்த ‘கடவு’ என்ற திலீப்குமாரின் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றது. இந்தச் சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு The Leeds University Journal-இல் 2005-ஆம் ஆண்டு வெளிவந்தது.//

ஆச்சரியமில்லை என நான் நினைக்கிறேன்.


திலீப்குமார் பற்றிய ஜெயமோகனின் பதிவு இது.
சொல்வனத்தில் திலீப்குமார் குறித்த திருமலைராஜன் எழுதிய அறிமுகப்பதிவு இது

Thursday, July 16, 2009

கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்



இந்திய குடியுரிமை இன்றியே இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர் யார் தெரியுமா?? (1987)

ஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும், இஸ்லாத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத்தந்த மகத்தான இந்த இஸ்லாமியர் யார் தெரியுமா??

பிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நிற்போம் என இந்திய இஸ்லாமியர்கள் முடிவெடுத்தபோது அவர்களின் முடிவுகளுக்கெதிராய் ஆங்கிலேயரை அகிம்சை வழியில் எதிர்த்தவர் யார் தெரியுமா??

1985ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, அன்பே உருவான ராமகிருஷ்ன பரமஹம்சரின் வடிவத்தை ஒத்த கான் அப்துல் கஃபார்கான் தான்.

ஒருங்கினைந்த இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் காவல்காரராக செயல்பட்டதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.


இளமைக் காலம் :-

1890ம் ஆண்டு ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார். உள்ளூர் முல்லாக்களின் எதிர்ப்புகளையும் மீறி இவரது தந்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த எட்வர்டு மிஷன் பள்ளியில் படித்து வந்தார். நன்றாகப் படித்த கஃபார் கான் அவரது ஆசிரியர் ரெவெரெண்ட் விக்ரம் என்பவரால் ஈர்க்கப்பட்டு சமூக முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு குறித்து அறிந்து கொண்டார்.

பள்ளி இறுதி ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் உயர்ந்த பதவியான தி.கைட்ஸ் என்ற பஷ்தூன் வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்ச பட்டம் வழங்கப்பட்டது. அந்தப் பட்டத்திற்குப் பின்னரும் இரண்டாம் தர குடிமகனாகவே தான் நடத்தப்படுவதை அறிந்ததும் அந்த கைட்ஸ் பட்டத்தை திருப்பி அளித்து விட்டார்.

அவரது அண்ணன் ஏற்கன்வே லண்டனில் படிக்க சென்றிருந்ததால் மேற்படிப்புக்கு லண்டன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாயின் அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒருபுறம், மற்றும் சமயத்திற்கு எதிரானதாக முல்லாக்கள் கருதியதாலும் தகப்பனாரின் நிலபுலன்களை பார்த்துக்கொள்ளத் தலைப்பட்டார். ஆனாலும் தனது சமூகத்திற்காக என்ன செய்வது என்பது பற்றியே அவரது மனம் நினைத்துக் கொண்டிருந்தது.

பாட்சா கான் ஆதல்..

தன்னால் தொடர முடியாத படிப்பை பிறர் தொடர உதவினார். பிரிட்டிஷார் புதியதாகப் பிரித்த வடமேற்கு மாகாணத்தில் அவர் வாழ்ந்த பஷ்தூனும் அமைந்து விட்டது. இது ரஷ்யாவுக்கும் பிரிட்டிஷ்ராஜ்ஜியத்திற்கும் அரசியல் ரீதியாக மிகமுக்கியமான இடமாக அமைந்து விட்டது, ஒருபக்கம் பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறை, மறுபக்கம் முல்லாக்களின் அடக்குமுறை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கஃபார்கான் தனது இருபதாவது வயதில் முதல் பள்ளியை உத்மன்சாய் என்ற இடத்தில் தொடங்குகிறார். அது உடனடி வெற்றியைத் தர அவரைப்போலவே சிந்திப்பவர்கள் அனைவரும் அவருடன் இனைந்தனர். 1915 முதல் 1918 வரை பஷ்தூன் இனமக்கள் வாழும் 500 மாவட்டங்களுக்கும் பயணம் செய்ததும், அவரது நட்புறவு செய்தியும் அவரை பாட்ஷாகான் என அழைக்கப்பட வைத்தது.

திருமணமும் குழந்தைகளும்

முதலில் ஒரு திருமணம், இரு குழந்தைகள். மனைவி இன்புளுயென்சாவில் மரணமடைய இரண்டாம் திருமணம் இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகளும், மகனும் பிறந்தனர். இரண்டாம் மனைவியும் வீட்டில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து இறக்கிறார். முதல் மனைவிக்கு பிறந்த அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.

குதாய்கித்மத்கர்:-

காலப்போக்கில் கஃபார்கானின் எண்ணம், செயல் எல்லாம் ஒருங்கினைந்த, மதச்சார்பற்ற, சுதந்திர இந்தியாவாகியது. அதற்கு அவர் காந்தியக் கொள்கையான சத்யாக்கிரகத்தைத் தேர்ந்தெடுத்தார். தனது கனவை அடைய அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு குதாய்கித்மத்கர் ( கடவுளின் சேவகர்கள்) எனப் பெயரிட்டார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பஷ்தூன் இனமக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் திரட்டினார். அவர்களிடம் கஃபார்கான் பேசும்போது..

“ நான் உங்களுக்கு போலிசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப்போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது”

இந்த இயக்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தது, பிரிட்டிஷாருக்கு எதிராக அஹிம்சையினாலும், ஒத்துழையாமையாலும். வடமேற்கு மாகாணத்தில் அது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் அரசியல் பிரிவை கஃபார்கானின் தம்பி டாக்டர்.கான் அப்துல் ஜாஃபர்கான் நடத்தி வந்தார். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீகைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா அவரது அரசை கலைக்கும் வரை முதல்வராக இருந்தார்.


இந்திய தேசியக் காங்கிரஸ் உடனான காஃபார்கானின் உறவு:-

தேசப்பிதாவும், அஹிம்சைக் கொள்கையின் முன்னோடியுமான காந்தியடிகளுடன் இதயபூர்வமான, எந்த உள்நோக்கங்களும் அற்ற ஒரு பக்திப்பூர்வமான உறவைப் பேனினார், கஃபார்கான். அவரது ”கடவுளின் சேவகர்கள்” படையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டது. இந்திய தேசிய காங்கிரசில் அவரை தலைவர் பதவியை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினர். நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கூறி அந்தப் பதவியையே மறுத்தவர்.



ஏப்ரல் 23, 1930 ஆண்டு காந்தியடிகள் அறிவித்த உப்புசத்தியாக்கிரகத்தை பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் தொடங்கினார். அதை எதிர்கொள்ள பிரிட்டிஷார் ஆயுதம் ஏதுமின்றி சத்தியாக்கிரஹ முறையில் போராட வந்த கஃபார்கானினால் வழிநடத்தப்பட்ட தொண்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொண்டர்களும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட்டதுபோலவே எந்த எதிர்ப்பும் காட்டாமல் துப்பாகிக் குண்டுக்கு பலியாயினர். இறந்தவர்களை ஓரமாக கிடத்தி விட்டு அணியணியாக வந்து ராணுவத்தின் குண்டுகளுக்கு கிட்டத்தட்ட 200 பேர்கள் இரையாயினர். ஒரு கட்டத்தில் ராணுவத்தினரே சுடமறுத்த நிலை உண்டானது. அவ்வாறு சுடமறுத்த வீரர்கள் கடுமையாக பின்னர் தண்டிக்கப்பட்டனர்.

கஃபார்கான் சத்தியாக்கிரஹம் மற்றும் பெண் விடுதலையின் முன்னோடியாக திகழ்ந்தார். வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தில் இவரது தனித்துவமான சிந்தனைகளுக்காகவும், தைரியத்திற்க்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டார்.

அவர் இறக்கும்வரை அஹிம்சையின் மீதான நம்பிக்கையை இழக்காமலும், அஹிம்சையும், இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியும் என முழுமூச்சுடன் நம்பியதும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். காந்தியடிகளுடன் நெருக்கமானவராக அறியப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளை பிரிக்கப்படாதிருந்த எல்லையில் செயல்படுத்தியதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.

தேசப்பிரிவினை:-

தேசப்பிரிவினையை முழுதும் எதிர்த்த கஃபார்கான் எப்படியாவது பிரிவினையைத்தடுத்துவிட முனைந்தார். அவருக்குக் கிடைத்தது முஸ்லிகளின் எதிரி என்ற பட்டம். அதன் காரணமாக 1946ல் சக பஷ்தூன் மக்களாலேயே தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 1947ல் பிரிவினைக்கு முன்பு பிரிட்டிஷார் எடுத்த வாக்கெடுப்பில் லஞ்சம் கொடுத்தும், பலரை கலந்துகொள்ள விடாமலும் செய்து பெருவரியான மக்கள் பாக்கிஸ்தானுடன் இணைவதையே விரும்புவதுபோல முடிவுகளை உண்டாக்கினர் பிரிட்டிஷார். தனியானதொரு பஷ்தூனிஸ்தான் என்ற தனிநாடு பிரிவதற்கு வாய்ப்புத் தராமல் இந்தியாவுடனா, பாகிஸ்தனுடனா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கும்படி செய்தனர், பிரிட்டிஷார். இதன் காரணமாய் கஃபார்கான் இந்த ஒட்டெடுப்பை புறக்கணிக்கும்படி சொல்லவேண்டியதாயிற்று. பிரிவினையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அடைபட்டுப் போனதால் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்போது கான் அப்துல் கஃபார்கான் காந்தியடிகளையும், இந்திய தேசிய காங்கிரஸில் இருந்தவர்களையும் பார்த்து கடைசியாக சொன்னது :

” எங்களை ( பஷ்தூன்களையும், கடவுளின் சேவகர்கள் அமைப்பினரையும்) கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்”

என ஆறவொண்ணா மன வருத்ததுடன் சொன்னார். காந்தியடிகளின் உண்மைச் சீடராக இறுதிவரை அஹிம்சையில் நம்பிக்கை இழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தானின் தோற்றத்திற்குப் பின் கஃபார்கானின் நிலை:-

முகமது அலி ஜின்னாவினால் பலப்பல காரணங்களுக்காய் இவர் வீட்டுக் காவலிலும், சிறையிலும், அடைக்கப்பட்டார். 1948முதல் 1954 வரை எந்தவிதக் குற்றமும் சாட்டப்படமல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் மனம் வருந்திச் சொன்னது.

“ பிரிட்டிஷ் ஆட்சியிலும் சிறை செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்களுடன் மோதலிலும் இருந்தோம். ஆனால் அவர்களது சிறையில் எனக்கு நடந்த கொடுமைகள் தாங்க முடிவதாகவும், அவர்கள் குறைந்த பட்ச நாகரீகத்துடனும் நடந்துகொண்டர்கள். ஆனால் எனக்கு நமது இஸ்லாமிய நாட்டுச் சிறையில் நடந்த கொடுமைகளையும், அவமதிப்புகளையும் வெளியில் சொல்லக் கூட விரும்பவில்லை என்றார்.”

1962ல் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அந்த ஆண்டுக்கான சிறைக்கைதியாய்” தேர்ந்தெடுத்தது. இவரது நிலையே உலகம் முழுதும் சிறையில் வாடும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனசாட்சிப்படி நடந்துகொண்டோரின் நிலை” எனக் கூறியது. 1964ல் இவரது சிகிச்சைக்காக இங்கிலந்து சென்றார். அங்கிருந்து மேல் மருத்துவம் செய்வதற்காக அமெரிக்கா செல்ல வேண்டியதிருந்தது. இவரது பாகிஸ்தானிய தொடர்பினால் அமெரிக்கா இவருக்கு விசா வழங்க மறுத்தது. இறுதியில் 1988ல் பெஷாவரில் வீட்டுக்காவலில் இருக்கும்போது மரனமடைந்தார். அவரது ஆசைப்படி அவரது நல்லடக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்தில் செய்யப்பட்டது. அவரை கவுரவிக்கும் முகமாக ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளித்தது இந்தியா. தனது வாழ்நாளில் 52 ஆண்டுகளை சிறையிலும், வீட்டுக்காவலிலுமே கழித்தார். இஸ்லாமிய நாடு பிரிக்கக்கூடது என சொன்னதற்காக அவரைபற்றிய எந்தக்குறிப்பும் பள்ளிப்பாடங்களில் வராமல் பார்த்துக்கொண்டது இஸ்லாமிய அடிப்படைவாத பாகிஸ்தானிய அரசாங்கம்.

காந்தியக் கொள்கையான அஹிம்சையையும், நாடுபிரிவினைக்கு தள்ளப்படக்கூடாது என்பதற்காக தனது வாழ்க்கையையே பணயம் வைத்த கான் அப்துல் கஃபார்கானின் வாழ்க்கை உண்மையும் சத்தியமும் என்றும் தோற்பதில்லை என்பதை என்றும் நிலைநாட்டிக்கொண்டே இருக்கும். மதத்தின் பெயரால் நாட்டைப் பிரிவினை செய்தாக வேண்டும் என முழங்கிய பிரிவினைவாதி ஜிண்னாவின் பிடிவாதத்தால் உருவான பாகிஸ்தான் இன்று மதவெறியர்களின் பிடியில் சிக்கி சீரழிவதைப் பார்க்கிறோம். எல்லைக்காந்தியை ஒத்த சிந்தனையாளர்கள் இருந்திருந்து, எல்லைகாந்தியின் முயற்சியும் வென்றிருந்தால் பிரிவினையே இல்லாமல் கஃபார்கானும் ,காந்தியும் கனவுகண்ட ஒரு சமதர்ம சமுதாயம் இணைந்த இந்தியாவில் உருவாகிவிட்டிருக்கும்.

அவரைப்பற்றிய சிறு விவரனப் படம் இங்கே..



நன்றி: விக்கிபீடியா.

Sunday, July 12, 2009

வெளிநாட்டிற்கு வருகிறீர்களா??

வெளிநாட்டிற்கு குறிப்பாய் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக வரும் நண்பர்களுக்காக எனது பதிவு இது....

திரைகடல் ஓடியும் திரவியம் தேட முடிவெடுத்ததே மிகப் பெரிய சாதனைதான்.. வேலைக்கு வந்து இறங்கும் முன்னர் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என நான் நினைப்பதை இங்கு பதிந்திருக்கிறேன். நான் குறிவைத்து எழுதுவது நடுத்தர மக்களைப் பற்றியும் கடைநிலை மக்களைப் பற்றியும் மட்டுமே...

கம்பெனியைப் பற்றி..

வேலைசெய்யப்போகும் கம்பெனி பற்றிய முழு விபரங்களையும் அவர்களது வலைப்பக்கத்தில் தேட முயலுங்கள். அதைவிட நம்பகமானது நண்பர்களின் நண்பர்கள் அல்லது நமது நண்பர்கள் யாராவது அங்கு வேலை செய்வார்கள்.. அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது மிகவும் நல்லது..

முக்கியமாய் தெரிந்து கொள்ள வேண்டியது..

01. சொல்லும் சம்பளத்தில் எதுஎதெல்லாம் சேர்த்து இந்தத் தொகை அல்லது சொல்லப்பட்டது சம்பளம் மட்டுமா? இதர படிகள் எல்லாம் தனியானதா??

02. ஒண்டிக்கட்டை எனில் சாப்பாடுக்கு அவர்களே ஏற்பாடு செய்து விடுவார்களா?? இல்லை நமக்கு அலவன்ஸ் என்ற ஒரு தொகை கொடுத்து விட்டு அதில் நாமே சமைத்தோ அல்லது வெளியிலோ சாப்பிட்டுக் கொள்ள வேண்டுமா???

03. தங்குமிடம் எப்போதும் இலவசம்தான்.. ஆனால் அது ஒன்டிக்கட்டையாய் (Bachelor) இருக்கும்போது..

ஃபேமிலி ஸ்டேட்டஸ் (Family Status) தருகிறோம் என்று நேர்முகத் தேர்வில் சொல்லும் கம்பெனிகளிடம் உஷாராய் இருங்கள். கம்பெனியே குவார்டர்ஸ் தரும் அளவு பெரிய கம்பெனிகள் எனில் மிகவும் நல்லது. இல்லையெனில் அந்தந்த நாட்டின் நிலாரத்தைப் பொறுத்து வீட்டு வாடகை கேட்கலாம்.. உதாரனமாக கத்தாரில் சம்பளம் ஆறாயிரமும் வீட்டு வாடகை மூவாயிரமும் தருகிறேன் என்று உங்கள் கம்பெனி சொன்னால் இந்தியாவில் இருக்கும் நமது வீட்டைப் போல இருக்கும் ஒரு வீட்டில்தான் தங்கப் போகிறோம் என்பதை உங்கள் மனைவிக்கு சொல்லியே அழைத்து வாருங்கள். குளிர்பதனம் மட்டும் கூட இருக்கும் நம் வீட்டைக் காட்டிலும்..அவ்வளவே..

04. சாதாரனமாக குடித்தனம் செய்ய ஆயிரத்தி ஐநூறு முதல் இரண்டாயிரம் கத்தாரி ரியால்கள் தேவைப்படும். இதை நீங்கள் சம்பளத்திலிருந்துதான் கொடுப்பீர்கள்.

விசாக்கள்.(Visas)

இரண்டு விதமான விசாக்கள் வேலைக்கு வருபவர்களுக்கு தருகிறார்கள்.

விசிட் விசா அல்லது பிசினஸ் விசா:- ( Visit or Business Visa)

ஒரு முறை வந்தால் ஒரு மாதம் வரை தங்கிக் கொள்ளும் வகையிலும் அதன் பின்னர் இரண்டு மாதங்கள் வரையிலும் தங்கல் நீட்டிப்பு செய்துகொள்ளவும் முடியும். பொதுவாக இந்த விசாக்களில் வருபவர்கள் வேலை செய்து வருவாய் ஈட்டக்கூடாது.. யாரும் கண்டுகொள்வதில்லையாதலால் பலர் இந்த விசாவில் வந்து வேலையும் செய்து கொண்டு புதிய நிரந்தர வேலைகளைத் தேடுகின்றனர்.

ரெசிடெண்ட் விசா அல்லது வொர்க்கர் விசா:- ( Employment)

இதில் ஒருவர் குறைந்த பட்சம் இரண்டாண்டு காலம் வேலை செய்வதற்கு உறுதி அளிக்கும். குடியிருக்கும் காலம் ( Duration of Residence) இரண்டாண்டுகள் எனறு விசாவிலும் போட்டிருக்கும். அப்படிப் போடவில்லையெனில் அது ரெசிடெண்ட் அல்லது வொர்க் விசா அல்ல..மேலும் உங்களுக்கு என்ன பிரிவில் விசா எடுக்கிறார்களோ அதே மரியாதைதான் அரசு அலுவலகங்களில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்கில் பட்டம் பெற்றிருப்பீர்கள். இஞ்சினியர் வேலைக்குத்தான் உங்களை எடுத்திருப்பார்கள். ஆனால் அவர்களிடம் எஞ்சினியர் விசா இல்லாத காரனத்தால் இருக்கும் விசாக்களில் ஒன்றை ( ஃபோர்மென், மெக்கானிக் இப்படி சில) உங்களுக்கு கொடுத்து விடுவார்கள். அதற்குண்டான மரியாதைதான் அரசு அலுவலகங்களில் கிடைக்கும்.

வேலைக்கான விசாவில் உங்கள் பதவி பற்றி தெளிவாக இல்லையெனில் என்ன ஆகும் என்பதை விளக்கும் கற்பனைக் கதை இது...

துபாய் மிருகக் காட்சி சாலைக்கு ஒரு சிங்கம் வந்தது.. எல்லாம் குளிர்பதனம் செய்யப்பட்ட சுத்தமான கூண்டு, சிங்கத்திற்கு மிக்க மகிழ்ச்சி...முதல் நாள் அதற்கு இரண்டு வாழைப்பழம் மட்டும் கொடுத்தர்கள். சிங்கம் நினைத்துக் கொண்டது.. இடம் புதுசில்லையா..சாப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா பழக்கப்படுத்துறாங்க.. இன்னும் ரெண்டு மூனு நாளில் இறைச்சியைப் போடுவார்கள் என நினைத்துக் கொண்டது. ஒரு வாரம் ஆன பின்பும் இரண்டு வாழைப்பழம் மட்டும் போட்டவுடன் காட்டுராஜாவுக்கு கோபம் வந்து நான் யார் தெரியுமா?? சிங்கம்.. எனக்கு எதற்கு வாழைப்பழ்ம் போடுகிறீர்கள் என கர்ஜித்தது.. உடனே மிருகக்காட்சி சாலை பனியாள் சொன்னார் ”இருக்கலாம்..ஆனால் நீ வந்திருப்பது குரங்கு விசாவில்” எனவே இதுதான் உனக்குக் கிடைக்கும் என்றாராம்.

விசாவில் கவனிக்க வேண்டியவை:-

01. உங்களது ஆங்கிலப் பெயர் ( பாஸ்போர்ட்டில் உள்ளபடி)

02. உங்களது பாஸ்போர்ட் எண்.

03. உங்களது பிறந்த தேதி

04. உங்களது பாஸ்போர்ட் காலாவதியாகும் நாள், ஆண்டு

05. உங்களை வேலைக்கு எடுத்துள்ள பதவி அல்லது அதை ஒட்டிய பதவி..

இந்த முதல் நான்கு தகவல்களும் பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டபடி விசாவில் இருக்க வேண்டும். இதில் எந்த தவறு இருப்பினும் நீங்கள் செல்லும் நாட்டின் குடியமர்த்துதல் துறையோ, அல்லது விமானக் கம்பெனிகளோ உங்களை அனுமதிக்க மறுக்ககும். எனவே இதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

முதலில் விசிட் விசாவிலும் அங்கு போன பின்பு ரெசிடெண்ட் விசாவும் மாற்றித் தருகிறோம் என்று சொல்லும் ஏஜெண்டுகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். இப்படி மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு ஐம்பது சதவீதம் மட்டுமே.

உங்களிடம் இருக்கும் விசா அசல்தானா என்பதை அந்தந்த நாட்டின் அரசு வலைப்பக்கத்தில் சோதித்துக் கொள்ளலாம்

ஏஜெண்டிடமோ அல்லது நீங்கள் வேலை பார்க்கப் போகும் கம்பெனியிடமோ உங்களது அசல் சான்றிதழ்களை எப்போதும் தராதீர்கள். அப்படி கண்டிப்பாய் வாங்கி வைத்துக் கொள்ளும் கம்பெனிகளிடம் அசல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டதற்கு அத்தாட்சி கேளுங்கள். அத்தாட்சி இல்லாமல் நீங்கள் இந்திய தூதரகத்திலோ, அல்லது போலிஸ் ஸ்டேஷனிலோ சென்று கம்பெனிக்கு எதிராக புகார்கூட கொடுக்க முடியாது. உங்கள் பாதுகாப்பில் இருக்கும்போது தொலைந்ததுபோல கருதப்பட்டு ஏகப்பட்ட கெடுபிடிகளுக்குப் பின்னர் கிடைக்கவில்லை என்ற சான்றிதழ் தரப்படும்.

உங்களது வேலைக்கான் ஒப்பந்தத்தை ( Employment Agreement) இந்திய தூதரகத்திலும், அந்தந்த நாட்டின் தொழிலாளர் நலத்துறையிலும் அட்டெஸ்டேஷன் செய்து தரும்படிக் கேளுங்கள். இது கட்டாயமும் கூட.. பெரும்பாலானவர்கள் இதைச் செய்வதில்லை. இதைச் செய்யாமல் வாய்மொழி உறுதிமொழிகளோ, அல்லது உங்கள் ஏஜெண்ட் தரும் எழுத்து உத்திரவாதமோ இந்த நாட்டில் செல்லாது.

உங்கள் விசா சம்பந்தமான செலவுகள், இந்த நாட்டில் வந்த பின்பு ஏற்படும் அரசாங்கச் செலவுகள் அனைத்தும் கம்பெனியையே சாரும். உங்களிடம் அவர்கள் வசூல் செய்ய விட்டுவிடாதீர்கள்.

இந்தியத் தூதரகம்:-

இந்தியத் தூதரகம் எங்கிருக்கிறது என்ற தகவலையும் அதன் தொலைபேசி என்களையும் எப்போதும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் வந்தவுடன் அங்கு சென்று உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஆத்திர, அவசரத்திற்கு உதவும்.

வெளிநாட்டில் நடந்துகொள்ள வேண்டியவைகளில் முக்கியமானது..

நம்மூரில் ஒரு பழமொழி உண்டு.. பகலில் பக்கம் பார்த்துப் பேசு.. ராத்திரி அதுவும் பேசாதே என்று. நம்ம ஊருக்கே இப்படி என்றால் வெளிநாட்டில் வந்த பின்பு நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை விட்டுவிட்டு உள்ளூர் அரசியல், மற்றும் அரசர், அவர்களது வேலை செய்யும் முறை, மதசம்பந்தப்பட்ட வழிபாட்டு முறைகள் இதிலெல்லாம் தலையிடாமலும், கருத்து சொல்லாமலும் இருக்க வேண்டும்.


போலிஸ்:-

லஞ்சம் வாங்காத போலிசுகள்தான் இங்கு...எனவே என்ன பிரச்சினை என்றாலும் நீங்கள் இங்கு செல்லலாம்.. கம்பெனி உங்களுக்கு அநியாயம் செய்து விட்டது என நினைக்கும் பட்சத்தில்.. கம்பெனிக்கு உள்ளேயே என்றால் மேலதிகாரிக்கு தகவல் சொல்லி விட்டு பின்னர் போலிஸ் ஸ்டேஷன் செல்லலாம்..

லேபர் டிபார்ட்மெண்ட்:-

உங்களது வேலைக்கான ஒப்பந்தத்தில் எழுதப்பட்டு கம்பெனி உங்களுக்குத் தராமல் இருக்கும் எந்த விஷயத்திற்கும் இங்கு அனுகலாம்.. உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் வெற்றி உங்களுக்கே.

இது தவிர வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டமிடுங்கள் .. தகவல் தெரிவிக்கிறேன்.

ஆல் தி பெஸ்ட்...

Friday, July 10, 2009

கத்தார் ஆஸ்பையர் பூங்கா படங்கள்

போனவாரம் கத்தாரில் இருக்கும் ஆஸ்பையர் பூங்கா சென்றிருந்தோம்.. ஆசியா விளையாட்டுப்போட்டிகளுக்காக கட்டப்பட்ட இந்த பூங்காவில் நடைபாதை, புல்வெளிகள், நீர்நிலைகள் விளையாட்டு மைதானம் எல்லாம் வைத்து பலவித பயண்பாடுகளை மனதில் வைத்துக் கட்டப்பட்டது.. அதன் படங்கள் கீழே...



நீர்நிலையில் மிதக்கும் வாத்துக்கள்...



பூங்காவிற்குள் இருக்கும் டீக்கடை...



செயற்கை ஏரி...



பூங்கா ஒரு பறவைப்பார்வை...




நீர் வளைவு.. ( ஆர்ச்)

Saturday, May 9, 2009

துறைமுகம் - புகைப்படங்கள்.

எனது பனி நிமித்தமாக துறைமுகத்திற்க்கு அடிக்கடி செல்வதுண்டு. அவ்வப்போது எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

எத்தனையோ பேர் தனது கடல் அனுபவங்களைப்பற்றியும், கடலில் வேலைசெய்வது மகிழ்ச்சியாய் இருக்கிறது எனவும், அதைவிடக் கொடுமை உண்டா என எழுதியவர்களும் உண்டு.

கடற்கரையிலும், நின்றுகொண்டிருக்கும் கப்பலிலும் கிடைத்த எனது அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.

பொதுவாக நான் பார்த்தவரையில் நான்கு விதமான கப்பல்களை பார்த்திருக்கிறேன்.

கச்சா எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல்கள்.

பெரிய பெரிய கப்பல்கள்..( பாய்லர்கள், பீம்கள், இன்னும் பெரிய பெரிய சரக்குகளை ஏற்றிவருபவை)

ரோ ரோ என அழைக்கப்டும் கார்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட சரக்கை மட்டும் ஏற்றிச்செல்லும் கப்பல்கள்.

மூன்றாவது சப்ளை போட் எனப்படும் சிறிய போட்டுகள்.இவைகளைப் பற்றிய எனது அனுபவங்கள் இங்கு.


இந்த சிறிய போட்டில்தன் எண்ணெய் துரப்பனப் பனிக்குச் செல்லும் ஊழியர்கள் செல்வதும் வருவதும். அவர்களது உணவு, வேலைக்குத் தேவைப்படும் சாமான்கள் அனைத்தும் இவைமூலமே அனுப்பப்படுகின்றன. அங்கு உண்டாகும் கழிவுகளும் இதன் மூலமே கரைக்கு சுத்திகரிப்புக்கு அனுப்பபடும்.

அதிக பட்சம் 10 மனிநேரம் பயணம் செய்தால் வரும் தூரத்தில் உள்ள இடங்களுக்கு இவைகள் செல்கின்றன. சில நேரங்களில் வானிலை காரனமாக படகில் ஏறிய பின்பு மூன்று நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரையிலும் ஆங்கரேஜ் எனப்படும் நங்கூரமிடப்படும் அளவு ஆளமுள்ள இடத்திலேயே நிற்கும். கண்ணுக்கு அருகில் தரை தெரிய இவர்கள் கரையைப் பார்த்தபடியே இருக்க வேண்டும். முதல் முதலாய் பயணம் செய்பவர்களுக்கு ஏற்படும் பிரசினை வாந்தி.. தொடர்ச்சியாக வாந்தி எடுத்துக்கொண்டே இருந்து படகுக்காரர்களே அவரை ஹெலிகாப்டரில் மாற்றி அனுப்பி வைத்து விடும் அளவு கஷ்டப்படுவர்கள். ஒரு சிலர் படகு மேலே சென்று கீழே விழுந்தாலும் அசராத ஆட்கள்.

அங்கு கிடைக்கும் உணவுகளும் படகுக்குப் படகு வித்தியாசப்படும்.

இந்திய குக் இருந்தால் குறைந்தபட்சம் தாலும், சப்பாத்தியும் உறுதியாக கிடைக்கும். இந்தோனேஷிய, ஹாங்காங் படகுகளில் பயணம் செய்ய நேர்ந்தால் நண்டு, இறால் போன்றவையும் ரொட்டியும் கிடைக்கும். முழுசாக இரண்டுகிலோ எடையில் உள்ள முழு பொறித்த நண்டைப் பார்த்திருக்கிறேன் உணவு மேஜையில்.

படகுப் பயணத்தில் பாதுகாப்பே முதன்மை. எனவே எல்லோருக்குமான லைஃப் வெஸ்ட், படகுக்கு ஏதேனும் நேர்ந்தால் தப்பிக்க சிறு சிறு படகுகள் ( டைட்டானிக்கில் பார்த்திருப்பீர்களே அதுபோல) என இருக்கும்.

நான் பார்த்த கப்பல்கள் எல்லாம் மூன்றடுக்கு அல்லது இரண்டு அடுக்குகளில் இருக்கின்றன. ஒவ்வொருவரும் படுக்க இடம், டாய்லெட், குளியல் அறை. துணீ துவைக்க இடம் எல்லாம் தனித்தனியாய் இருக்கின்றன. உல்லாசப்படகுகளில் கான்பிப்பதுபோலில்லாமல் நம்மூர் கல்லூரிகளின் டார்மிட்டரியை விட கொஞ்சம் நன்றாய் இருக்கும் அவ்வளவே..

தங்குமிடம் தவிர முற்றம்போல இடமும் காலியாக இருக்கும். சாமான்கள் எடுத்துச்ச் செல்ல. 20 அடி, நாற்பது அடி கண்டெய்னர்கள், பைப்புகள், கடலில் எண்ணெய் துரப்பனப் பனிக்குத் தேவையான எல்லா சாமான்களும் எடுத்துச்செல்ல வசதியாக இருக்கும்.

கப்பலில் கேப்டனின் அறை ஒன்றுதான் அதிக பட்ச சுத்தமாய் இருக்கும். மேல் தளம் அவருடையது. கப்பலில் ஏற்றப்படும் ஒவ்வொறு சாமானும் அவரது கையொப்பம் பெற்றபின்பே ஏற்றப்படும். இறக்கும்போதும் அவரது கையொப்பம் அவசியம்.

ஒருமுறை கடலில் வேலைக்குச் சென்றுவிட்டால் உங்களை மாற்ற ஆள் வரும் வரையில் நீங்கள் அங்கிருந்து கிளம்ப முடியாது. பெரிய பெரிய கம்பெனிகள் எல்லாம் ஆட்களை தயாராய் லீவெல்லாம் கொடுத்து சரியாக வைத்திருப்பார்கள். ஆனல் சிறிய சிறிய கம்பெனிகளான சமையல் செய்பவர்கள், சாரம் கட்டித்தருபவர்கள் (Scaffolding) இன்னும் எத்தனையோ கம்பெனிகள் அவரவர் சக்திக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு சுழற்சி முறை விடுமுறை கொடுப்பர். சில துரதிருஷ்டசாலிகளுக்கு ஆறு மாதம் வரை தரையைப் பார்க்கும் அதிர்ஷ்டம் வாய்ப்பதில்லை.

இரவில் படகில் இருந்தபடி கடலைப் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம். படகைச் சுற்றி சுற்றி கூட்டம் கூட்டமாய் டியூப்லைட் போலிருக்கும் மீன்கள் வரும் பெயர் தெரியாது. கிட்டத்தட்ட ஒன்றரை அடி நீளத்தில் இருக்கும். மீன் பிடிப்பது குற்றமென்றாலும் எல்லாப் படகுக்காரர்களும் மீன் பிடிப்பார்கள்.




துறைமுகத்தில் சில சமயம் அதிகக் கப்பல்கள் வருவதால் நிற்க இடம் கிடைக்காததால் இப்படி இரண்டு படகுகளுக்கு ஒரு பெர்த் வீதமும் கொடுப்பார்கள். சில சமயம் மூன்று படகுகளையும் இனைப்பார்கள். ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு தாண்டிச்செல்ல வைத்திருக்கும் கட்டையைத்தான் பார்க்கிறீர்கள்.இரண்டு படகுகள் இனைந்திருக்கின்றன.



கேப்டனின் அறை வாசலில் இருந்து எடுத்த படம்.




கேப்டனின் அறை.

கடலுக்குள் வேலை எப்படி செய்கிறார்கள் என்பதைப் பற்றிய நேரடி அனுபவம் இல்லாததால் இந்தக் கட்டுரையை இத்துடன் முடிக்கிறேன்.. நன்றி. வணக்கம்.. ( யாராச்சும் சோடா குடுங்கப்பு)

<

Monday, April 6, 2009

எதிர்பாரா சந்திப்புகள்

எதிர்பாரா சந்திப்புகள்..

திண்டுக்கல்லில் வேலை அஸ்தமனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் என்னென்ன கம்பெனிகள் உண்டோ அத்தனைக்கும் விண்ணப்பம் அனுப்பிக் காத்துக்கொண்டிருந்தபோது வாராது வந்த மாமணீயாய் வெளிநாட்டில் வேலைக்கான ஒரு நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்தது.

அதன் பின்னர் நேர்முகத்தில் தேர்வாகி பின்னர் ஓமானிலுள்ள மஸ்கட்டில் வேலைக்காக புறப்பட்டேன்.

அங்கு நடக்கும் ஆரம்பகால சடங்குகளுக்குப் பின்னர் எனக்கான குழுவும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. (தோட்டக்கலை மேற்பார்வையாளர்)

அதாவது நானும் எனது குழுவில் 15 தோட்டத்தொழிலாளர்களுமாக அமைந்தோம்..

எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தபோது ஒரு ஆள், சார், நீங்க வெள்ளரி கம்பெனி மேனேஜர்தான என்றார்.. ஆமா எப்படி கண்டுபுடிச்சீங்க அல்லது எப்படித்தெரியும் என்றேன்..

சார் நான் உங்க கூட சண்டை போட்டிருக்கேன் என்று அன்பாக அறிமுகம் செய்து கொண்டார்.

ஒரு சிறிய அறிமுகம்..

வெளிநாட்டுக்கு போவதற்கு முன்னர் நான் வெள்ளரிக்காயை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது கிராமங்களில் சென்று விவசாயிகளுக்கு எப்படிப் பயிர் செய்வது, என்னென்ன மருந்து எப்போது அடிக்கவேண்டும் இன்னபிற தகவலைத்தருவதுதான் எனது பணி. அதில் கிட்டத்தட்ட 100 விவசாயிகளுக்கு மேலேயே இருப்பார்கள். யாரைப்பார்த்தோம், யாரைப் பார்க்கவில்லை என ஞாபகம் வைத்துக் கொள்வது கடினம். அதில்தான் இந்த நபரும் ஒருவர். அவரது வெள்ளரிக்காய்களை தரத்தினடிப்படியில் நிராகரிக்க வேண்டியதாயிருந்தது. அதெப்படி செய்யலாம் என சண்டை.. அதைத்தான் அவர் குறிப்பிட்டு அறிமுகம் செய்து கொண்டார்..

வெரி ஸ்மால் வேர்ல்டுங்க.. என கமலஹாசன் சதிலீலாவதியில் சொல்வதுபோல எங்கோ பிறந்து திண்டுக்கல் நத்தத்திற்கு அருகில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை வேலை நிமித்தமாய் சந்தித்தது இரண்டாண்டுகளுக்கு முன்னர்...

அதே ஆளை வெளிநாட்டில் மீண்டும் சந்திப்பது என்பது வெரி ஸ்மால் வேர்ல்டுங்க என்பதை மீண்டும் கேட்டதுபோல உனர்ந்தேன்..

அவருக்கு நத்தத்தில் வெள்ளரிக்காயை நிராகரித்தத்தில் அவருக்கு ஏற்பட்ட இழப்பு 20 ரூபாய்கள் இருக்கலாம்..ஆனால் என்னிடம் வேலைக்கு சேர்ந்ததால் அவருக்கு ஓவர்டைம் மூலம் பலநூறுமடங்கு திருப்பிக் கொடுத்து விட்டேன் என நினைக்கிறேன்..

இதேபோல எத்தனையோ ரயில் ஸ்நேகங்களும், வெளிநாட்டில் வேலை செய்யும்போது ஏற்படும் நட்புகளும், என நட்பு வட்டாரங்கள் விரிவதும் கால ஓட்டத்தில் அவரவர் வாழவேண்டிய அவசரத்தில் நட்புகள் நினைவில் இல்லாமல் போவதும் சாதாரனமானது எனினும், இதுபோன்ற நிகழ்வுகள் அன்றைய தினத்தை சிறப்பானதாக மாற்றி விடுகிறது..

கொடுக்காமல் விட்ட கடன்காரனை மீண்டும் சந்திக்கும் நாட்கள் அவ்வளவு சிறப்பாக அமையாது என்றாலும்....

Saturday, April 4, 2009

சில புகைப்படங்கள்.

மனதை அள்ளிய புகைப்படங்கள் எனத் தலைப்பிட்டேன்.. பின்னர் என் மனதை அள்ளிய புகைப்படங்கள் எனப் பெயரிட்டு என் என்பதை அடைப்புக்குறிக்குள் இட்டேன்.. அப்படியும் மனம் ஒப்புக்கொள்ளாததால் வெறும் “சில புகைப்படங்கள்” எனப் பெயரிட்டுவிட்டேன்.


பாவனாவின் புகைப்படம் தவிர இதர படங்கள் எனது கைப்பேசியில் எடுத்தது.. எனவே தரம் சற்று முன்,பின்தான் இருக்கும்..

 


மனதை அள்ளும் சிரிப்பில் பாவனா..


 


ஃபெராரி ஒன்று கானக்கிடைத்தது..

 



 
Posted by Picasa


ஒரு மழை நாளின் தோஹாவின் கடற்கரை..

Saturday, March 28, 2009

அபியும் நானும்



தமிழ் சினிமா உலகில் மக்கள் ரசனையைப் பற்றிய மிக மோசமான அபிப்பிராயம் உள்ளது. அவர்களுக்கு குத்து டான்சுதான் பிடிக்கும், அதுவும் கும்தாஜ், மும்தாஜ் மற்றும் நமிதா கோஷ்டிகள் ஆடினால்தான் பிடிக்கும் என்பது மாதிரியும், கதாநாயகன் என்பவன் ஒரே குத்தில் 50 பேரை அடித்து வீழ்த்தும் பலமுள்ளவன் போலவும், ஆனால் சிறு விமர்சனத்தைக் கூட தாங்க முடியாமல்.. ஏய்.. பேசிக்கிடிருக்கோம்ல.. சைலன்ஸ் அப்படினு சவுண்டு விட்டுக்கொண்டு திரியும் இந்த நேரத்தில்தான் “ராதாமோகனின்” அபியும், நானும் மக்களின் ரசனையை உயர்வாக மதித்து அவர்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. ’மொழி’ படமும் ராதா மோகன் இயக்கியதுதான்..

’நமது குழந்தைகள் நம் வழியாக வந்தவர்களேயன்றி நமக்கானவர்கள் அல்லர்’ என்ற கலீல் கிப்ரானின் கவிதை வரிகள்தான் கதை .

தனது மகள் மீது அளவு கடந்த அன்பு செலுத்தும் ஒரு தகப்பன் மகள் தன்னிஷ்டப்படி காதலித்து திருமனம் செய்து கொண்டு போனபின்பு திருப்தியுடன் பூங்காவில் சந்திக்கும் ஒருவரிடம் ( பிரித்விராஜ்) தனது (பிரகாஷ்ராஜ்) வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் விவரிக்கும் வகையில் சொல்வதுதான் படம்.

வாழ்க்கையின் சந்தோஷமான தருனங்களை ஒவ்வொன்றாக பிரகாஷ்ராஜ் சொல்ல அது அப்படியே பிளாஷ்பேக்காக விரிகிறது. படம் முழுக்க கதை சொல்லும் பானியிலேயே எடுக்கப்பட்டு அந்த உத்தியில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.

பிளஸ்கள்:-

முதலில் படத்தில் எதிர்மறை கருத்தென ஒன்றும் இல்லாததற்கே ஒரு பாராட்டு.

அநாவசியமான சண்டை, ஹீரோயிசம் எதுவும் இல்லாமல் தெளிந்த நீரோடைபோல படம் செல்வது.

குளுமையான இடங்களில் மட்டுமே படம் செல்கிறது. படத்தில் வெயிலைப் பார்த்ததாக ஞாபகமில்லை. அவ்வளவு குளிர்ச்சி, பசுமை படம் முழுக்க.

தெளிவான கதை உத்தி.முதலில் ஆசுவாசமாகச் சொல்லி பின்னர் வேகவேகமாய் ஓடாமல் ஒவ்வொரு காட்சியையும், அழகாக செதுக்கி இருக்கிறார் இயக்குனர்.

மைனஸ்கள்

என்னைப் பொருத்தவரை இந்தப் படத்துக்கு பாடல்களே தேவை இல்லை. இந்தப் படத்தில் பாடல்கள் மிக செயற்கையாகப் படுகிறது. பஞ்சாபி இசை தவிர பிற பாடல்கள் செயற்கையாகத் தெரிகிறது.

பிரகாஷ் ராஜின் அலட்டல்கள் சில சமயம் எல்லைமீறும்போது.. குறிப்பாய் அவர் பிரதமரிடமிருந்து அழைப்பு என்றவுடன் ”எஸ் சார், ஓக்கே சார், தாங்க்யூ சார்” என சவுண்டு விடுவது வழக்கமான பிரகாஷ்ராஜ்.

மற்றபடி மிக அருமையான குடுமபத்துடன் கானத் தகுதியுள்ள திரைப்படம் அபியும் நானும்.

படத்திலிருந்து சில நல்ல காட்சிகள்.

பஞ்சாபி மக்களின் வாழ்க்கையே கொண்டாட்டமானது. அவர்களுக்கு இசையும் நடனமும் உயிர்.. துள்ளலான இசையை வாழ்க்கையில் கொண்டவர்கள் அவர்கள். சுத்தமான இதயமும், பொய் சொல்லாத குணமும், தேசத்தை நேசிக்கும் குணமும், பிறரை ஆதரித்து வாழும் கொள்கையும், சுயகௌரவத்தை தங்களது வாழ்க்கையாகவும் கொண்டவர்கள்.. ( இது நமது பிரதமருக்குப் பொருந்தாது)

திரிஷா ஜோகி என்ற சர்தாருடன் கோவை விமான நிலையத்தில் வந்திறங்க ஜோகியைப் பார்த்ததும் பிரகாஷ்ராஜ் காட்டும் உடல் மொழி அருமை..

அடுத்தடுத்து வீட்டில் வீட்டில் வடநாட்டு உணவுகளாகப் பரிமாறப்பட அவர் காட்டும் முகபாவங்கள், ஜோகியின் சொந்தமக வரும் ஒருவர் பிரகாஷ்ராஜை கட்டிப்பிடித்து அவரகளது பானியில் வாழ்த்துச் சொல்வதும், பிரகாஷ்ராஜ் அல்லல்படுவதும், இரண்டு சிறுவர்கள் பிரகாஷ்ராஜைப் படுத்தும் பாடும் என நல்ல நகைச்சுவைக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.

இவர் யாரும்மா என பிரகாஷ் ராஜ் மகளிடம் கேட்க எங்க ஸ்கூல் வாசல்ல பெக்கரா இருக்காரு என சின்ன வயது திரிஷா சொல்ல என்னமோ பேங்க்குல மேனேஜர் மாதிரி சொல்றம்மா..என பிரகாஷ் ராஜ் சொல்லும் இடம்..

எல் கேஜி அட்மிஷனுக்கு பிரகாஷ்ராஜ் விழுந்து விழுந்து படிப்பதும் கடைசியில் கேப்பிடேஷன் பீஸ் வாங்கிக்கொண்டு குழந்தையை சேர்த்துக்கொண்டு விட “ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சிருக்கேன்மா.. ரெண்டு மூனு கேள்வியாவது கேளுங்க” என கெஞ்சுவதும், படாய்படுத்தி படிக்க வைத்த மனைவியை அவர் பார்க்கும் பார்வையும் ..


பிச்சைக்காரர்களை வீட்டிற்குள் சேர்த்துக்கொள்வதுபோல படம் எடுப்பது இப்போதுதான் என நினைக்கிறேன். அது உறுத்தாமலும் அவர்களைக் கேவலமாகக் காட்டாமலும் அழகாக எடுத்திருக்கிறார் அந்தப் பகுதியை. அவனுக்கு ஜோகியின் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் காதல் வர அவர்களுக்கு திருமணமும் நடக்கும். நல்ல முதிர்ச்சியான மற்றும் பெருந்தன்மையான மனம் இயக்குனருக்கு.

நன்பனாக வரும் தலைவாசல் விஜய் அவருக்கான பாத்திரத்தைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். நம்பிக்கையூட்டும் வசனங்கள் மூலம் குழந்தைகளை தத்தெடுப்பது பற்றிய பிரக்ஞையை உருவாக்குகிறார்.

நல்ல திரைக்கதையுடன், அருமையான பாத்திரங்கள் மூலம் நம்மைக் கட்டிப்போடுகிறார்கள் அபியும், நானுமாகிய ராதாமோகன்.

அபியாக திரிஷாவும், நானுமாக பிரகாஷ் ராஜும், அபியின் அம்மாவாக ஐஷ்வர்யாவும், பிரகாஷ்ராஜின் நன்பனாக தலைவாசல் விஜயும் நடித்துள்ளார்கள்.

Wednesday, March 11, 2009

பிச்சை எடுக்காமல் உழைத்து உண்ணும் முதியவர்.





வேலை கிடைக்கவில்லை என நம்மூர் மக்கள் ரோட்டைத் தேய்க்கும் இந்நாளில் இத்தனை வயதான பின்னும் கைவண்டி இழுக்கும் பெரியவர் ..

இயற்கை எரிவாயுவினால் வளம் கொழித்துக்கிடக்கும் கத்தாரில்தான் இந்தக் கைவண்டி இழுப்பவர் இருக்கிறார்.

வண்டியை இப்படியும் ஓட்டலாம்



கத்தாரில் நடந்த ஒரு சாலை விபத்து.. எனது செல்லிடப்பேசியில் எடுத்தது..

Tuesday, February 24, 2009

எனது எண்ணங்கள்.

எனது எண்ணங்கள்.

சட்டத்துறைக்கும், காவல்துறைக்குமான தற்போது நடக்கும் மோதல் போக்கு விபரீதமானது. சட்டத்தை பாதுகாக்கும் வக்கீல்கள்தான் அதிக பட்ச வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

நம் நாட்டில் பொறுப்பின்மைக்கு தண்டனையே கிடையாதா.. குழ்ந்தைகளை ஆழ்துளைக் கிணறுகளில் தவறவிடவா பெற்றோர்கள் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். ??? பிள்ளையை இழந்த பெற்றோர்களின் சோகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு சிரவணனின் பிதுர் பக்தி நாடகமும், தசரதனின் வாழ்க்கையும். இதைக் கேட்காமல் வளர்ந்த யாராவது இருக்க முடியுமா?? இருப்பினும் இது போன்ற சோகங்கள் தொடரத்தான் செய்கின்றன..

அந்நியன் படத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த குழ்ந்தையின் தகப்பன் கோர்ட்டில் சொல்லும் வாதங்கள் அபத்தமாகப் பட்டது.. கோர்ட்டில் இருக்கும் நீதிபதியே இத்தனை பேரையும் எப்படி தண்டிக்க முடியும் எனக் கேட்பார். அப்படியெனில் பேருக்கு எவரையாவது பலிகடாவாக்கி பிரச்சினையை முடித்தால் போதும் என்ற மன நிலையில் தான் நாமும், நமது நீதித் துறையும் இருக்கின்றோமா, அல்லது அப்படி வளர்க்கப்படுகிறோமா??

அல்லா ரக்கா ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்துக்கள். ஆனால் ஸ்லாம் டாக் மில்லியநேரை விட சிறப்பான இசைக்கோவைகளை இவர் கொடுத்திருக்கிறார். ஆங்கிலப்படமாக இருந்தால்தான் ஆஸ்கார் கிடைக்கும் என்பதாலும், இந்தியாவை இழிவு படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கே ஆஸ்கார் கிடைக்கும் என்பது தெளிவாக தெரிந்து விட்டமையால் இனி இதுபோன்ற படங்களை அதிகம் எதிர்பார்க்கலாம். நம்ம உலகநாயகனுக்கும் ஒரு பிடி கிடைத்தது போல இருக்கும்..

இனி வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டு என்ற உலக முக்கியமான கூத்துக்கள் நடைபெறும். இந்திய கம்யூனிஸ்டுகள் முதல் பட்டியலை வெளியிட்டு விட்டார்கள்.. இனி யாருடன் கூட்டு சேர்ந்தால் பிழைக்கலாம் என்ற கணக்கைப் போட்டு கூட்டணி அமையும். நேர்மையாவது, கத்தரிக்காயாவது.. பிளடி இடியட்ஸ். குடுத்த காசுக்கு நாய் மாதிரி வந்து ஒட்டுப்போடுவானுங்க பரதேசிங்க.. (இப்படித்தான் காசு கொடுக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும் நினைத்துக்கொள்வான்) நாமும் நமது கடமையைச் செய்யாமல் திண்ணையில் அமர்ந்துகொண்டு யார் யார் எங்கெங்கு சொத்து சேர்த்துள்ளார்கள் என செய்திகள் படித்து அதிகம் சொத்து சேர்த்தவனுக்கு ஓட்டுப்போடுவோம்..

இணையத்தில் எழுதும்போது சற்றுப் பொறுப்பாக எழுத வேண்டும். இல்லையென்றால் சட்டம் தான் கடமையை செய்யும் என உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவித்திருக்கிறார். இதுவரை எழுதியதற்கு என்ன கணக்கு என அவர் சொல்லவில்லை. யாராவது அந்த எழுத்தை எடுத்துக்காட்டி கேசுபோட்டால் எடுப்பார்கள் போல..


காஷ்மீரில் என்ன நடந்தாலும் அது சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற மாயை உண்டாக்கப்பட்டு அது திறம்பட செயல்படுத்தப்படுகிறது. இன்று யாசின் மாலிக்கின் சொந்தக்காரர் சந்தேகத்துக்கிடமான வகையில் இறந்து கிடந்ததால் உடனடியாக போராட்டம்.. நம்ம வீட்டுப்பிள்ளைகள் குழாயில் விழுந்து இறந்தாலும், குண்டு வெடித்து இறந்தாலும் கேக்க நாதியில்லை. ஸ்ரீநகரில் இந்திய ராணுவத்திற்கு எதிராக கொலைவழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. இத்தனை நேர்மையாய் அரசு நடந்தாலும்

கான்பூர் ஐ.ஐ டி. மாணவர்கள் சாடலைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். தீப்பூச்சி என்ற பொருள்படும் ஜுக்னு என்ற இந்த செயற்கை கோளை இயற்கை அழிவுகளின் தகவல்களை சேகரிக்கவும், வெள்ளம் மற்றும் வறட்சியை கண்காணிக்கவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்தியா என்னதான் கஷ்டத்தில் இருந்தாலும் இந்தியர்கள் எங்கும், எப்போதும் சொடைபோவதில்லை. வேலையிலாகட்டும், நிர்வாகத்திலாகட்டும், ஊழலில் ஆகட்டும். எப்போதும் எங்கும் பெஸ்ட் ..

அப்பப்ப இப்படி என்னத்தையாவது எழுதி வைக்கிறேன்.

ஜெயக்குமார்

தாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு.

தாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு.

போடு தாம்பாளம். போடு புழுக்க.. & கட்டு கயிறு, வெட்டு வெட்டருவா, சுடு விளக்கு..

ஒரு ஊர்ல ஒரு கஷ்டப்பட்ட குடும்பம் இருந்துச்சி. அம்மா, அப்பா காட்டு வேலைக்குப் போனாலும் சரியாக்கூட சாப்பிட முடியாத அளவு வறுமை. அவங்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன்கிட்ட அவங்கம்மா தம்பி இட்லி சுட்டுத்தரேன் அதைக் கொண்டுபோயி வித்துக் கசாக்கிட்டு வாடான்னாங்க.. அவனும் இட்லிய எடுத்துகிட்டு ஊர்ல இருக்குற குளத்தங்கரைக்கு வியாபாரத்துக்கு போனான். அங்க போயி ரொம்ப நேரம் ஆகியும் வியாபாரமே ஆகல. அதனால அவனோட அம்மா சுட்டுத் தந்த ஏழு இட்லியில ஒன்னத் திங்கட்டுமா, ரெண்டைத் திங்கட்டுமா, மூனத் திங்கட்டுமா, நாலத்திங்கட்டுமா, அஞ்சத் திங்கட்டுமா , ஆரத்திங்கட்டுமா, ஏழையும் தின்னுபுட்டா ராத்திரிக்கு என்ன செய்யுறதுன்னு சத்தமா சொல்லிகிட்டே யோசிச்சிருக்கான்..

அந்த கொளத்துல இருக்குற சப்த கன்னியர்களும், இவன் பெரிய ராட்சசனா இருப்பான் போல இருக்குதே அப்படின்னுட்டு அவனுக்கு காணிக்கையா ஒரு தாம்பாளத்த குடுத்தாங்க. அவன்கிட்ட கொடுத்து இத போடு தாம்பாளம்னு சொன்னா ருசி ருசியா சாப்பாடு போடும்னு சொல்லி அனுப்பி இருக்காங்க.

அத எடுத்துகிட்டு பக்கத்துல இருந்த பாட்டி வீட்டுக்குப் போயி குடுத்து வச்சிட்டு குளிக்க போனான். போறப்ப மறக்காம பாட்டி, பாட்டி இத போடு தாம்பாளம்னு மட்டும் சொல்லிராத அப்படின்னு சொல்லிட்டுப் போனான. கெளவி இவன் இவ்வளவு தூரம் அழுத்திச் சொல்றானே இதுல என்னமோ இருக்கு அப்படின்னு தெரிஞ்சிகிட்டு அவன் போனப்புறம் போடு தாம்பாளம் அப்படின்னு சொல்லிச்சு. அம்புட்டுத்தான்.. சாப்பாடு வகையென்ன, சாம்பார் வகையென்ன, காய்கறி வகையென்ன, இப்படி சாப்பாடு அயிட்டமா வந்து குமிஞ்சிருச்சி. பாட்டி சாமர்த்தியமா அதை மறைச்சு வச்சிட்டு அதே மாதிரி இருக்குற இன்னொரு தாம்பாளத்த குளிச்சிட்டு வந்த நம்ம பயகிட்ட குடுத்துருச்சி. நம்ம பயலும் வீட்டுக்குப் போயி அம்மாகிட்ட நடந்தத சொல்லிட்டு போடு தாம்பாளம்னு சொல்லி இருக்கான். அதுதான் வெறும் தாம்பாளம் ஆச்சே. பேசாம இருந்திருக்கு.


மறுநாள் அதே மாதிரி அவனோட அம்மா இட்லி செஞ்சு குடுக்க அதே மாதிரி இவனும் ஒன்னத் திங்கட்டுமா அப்படின்னு ஆரம்பிக்க அதே போல சப்த கன்னியரும் வர இன்னிக்கு ஒரு ஆட்டுக்குட்டிய தர்றோம், அதுகிட்ட போயி போடு புழுக்க .. அப்படின்னு சொன்னா தங்கமும், வைடூரியமும் போடும் அப்படின்னாங்க.. நம்மாளு மறுபடியும் பாட்டி வீட்டுக்கு போயி வழக்கம்போல பாட்டி போடு புழுக்க அப்படின்னு சொல்லிராதன்னு சொல்லிட்டு குளிக்கப் போனான். பாட்டியும் போடு புழுக்கன்னு சொல்ல தங்கமும் வைரமுமா கொட்டுச்சு.. கெளவி அத மறைச்சு வச்சிட்டு சாதா ஆடு ஒன்ன குடுத்து விட்டுட்டா.. வீட்டுக்குப் போயி போடு புழுக்கன்னா அது புழுக்கையத்தன் போடுது.

மறுநாளும் அவனோட அம்மா இதேபோல இட்லி சுட்டுத் தர அதைக் கொண்டுபோய் விக்க மத்யானம் இதே மாதிரி ஒன்னத் திங்கட்டுமான்னு சொல்ல கன்னிமார்கள் வந்து இவனுக்கு மொதல்ல குடுத்த ரெண்ட வச்சிருந்தாலே இவனோட தலைமுறைக்கும் காணுமே .. இவன வேற யாரோ ஏமாத்துராங்கன்னு தெரிஞ்சிகிட்டு அன்னைக்கு ஒரு கயிறு, வெட்டருவா, ஒரு விளக்கு மூனும் குடுத்துவிட்டாங்க. கட்டு கயிறுன்னு சொல்லணும், வெட்டு வெட்டருவா ன்னு சொல்லணும் , சுடுவிளக்குன்னு சொல்லணும் அப்படின்னாங்க. நம்மாளு வழக்கம்போல கெளவி வீட்டுக்குப் போயி மறக்காம என்ன சொல்லக் கூடாது அப்படிங்கிறதையும் சொல்லிட்டு குளிக்கப் போனாரு. போய்ட்டு திரும்பி வந்து பாட்டி, பாட்டின்னு கத்துராப்ல.. கெளவிய ஆளையே காணோம்.. ஒரு மூலையில இருந்து உம்.உம்.உமுனு சத்தம் மட்டும் வருது.. அங்க பாத்தா கெளவி ஒரு பந்து மாதிரி சுருண்டு கிடக்கு..

நம்மாளு கெளவிய கயித்துக் கட்டுலருந்து அவுத்து விட கெளவி உண்மைய சொல்லி எல்லாத்தையும் திருப்பிக் குடுத்துருச்சி.

நம்மாளும் வீட்டுக்குப் போயி போடு தாம்பாளம்னு சொல்ல இதுவரைக்கும் இப்படி ஒரு சாப்பாடு சாப்டதில்லைன்னு சொல்றமாதிரி சாப்பாடு வருது..

அப்புறம் போடு புழுக்கைன்னு ஆட்டப் பாத்து சொன்னா அது தங்கமும், வைரமும், வைடூரியமுமா போடுது..

கட்டு கயிறு மேட்டர் என்னன்னு நம்ம ஆளுக்கு தெரியும். அதனால அத செஞ்சு பாக்கல..

அந்நேரம் பாத்து அவங்க நாட்டப் பாத்து எதிரி ராஜா படையெடுக்க.. உள்ளூர் ராஜாவுக்கு உதறல் எடுத்துருச்சி.. எதிரி நாட்டு ராசா எவ்வளவு பலசாலின்னும் தெரியும்.. அதனால வீட்டுக்கு ஒரு ஆளு போருக்குத் தயாராகணும் அப்படின்னு முரசு அறைஞ்சு சொல்லச் சொன்னாரு. இதக் கேள்விப்பட்ட நம்ம ஆளு போயி ராஜாவைப் பாக்க அனுமதி வாங்கி அவர்கிட்டப் போயி ராஜா நான் ஒரே ஆளு போதும், எதிரி நாட்டுப் படையவே கொளுத்திருவேன்னு சொல்ல நீ மட்டும் அப்படி செஞ்சுட்ட எம் பொன்னையே உனக்கு கட்டி வைக்கிறேன்னு வாக்கு குடுத்தார்..

நேரா போர்களத்துக்கு போய் நம்ம ஆளு நிக்கிறார் அவனோட நாட்டு படைகள் நிக்க வேண்டிய இடத்துல.. எதிரி நாட்டு ஆளுங்க என்னடான்னா ஆனைபடை, குதிரைப் படை, காலாட் படைன்னு ஒரு பெரிய சேனை திரட்டி நிக்கிறாங்க.

போர் ஆரம்பம் அப்படின்னு எக்காளம் எடுத்து ஊதுன உடனேயே நம்ம ஆளு கட்டு கயிறு அப்படின்னு சொல்லி கயிற தூக்கிப் போட்டான.. அம்புட்டுத்தான். .. ஆன, குதுர, ஆளு எல்லாத்தையும் ஒரே சுருட்டா வாரி சுருட்டி ஒரு பந்து மாதிரி ஆக்கிருச்சி.

அடுத்து விட்டான் " வெட்டு வெட்டருவா " அப்படின்னு சொல்லி.. அம்புட்டுதேன், சும்மா காய்கறி வெட்டுற மாதிரி ஆளுக தலைய சீவிருச்சி அருவா.

அப்புறம் விட்டான் சுடு விளக்கேன்னு ஒரு சத்தம்..வெட்டிப் போட்ட எல்லாத்தையும் மொத்தமா எரிச்சி சாம்பலாக்கிருச்சி.

அவனோட ராஜாவுக்கு சந்தோஷம் தாளல.. இனிமே நீதாம்ப்பா இந்த நாட்டுக்கு ராஜா. உனக்கு என்னோட பொன்னையும் கட்டிவைக்கிறேன்னு சொல்லி கட்டி வச்சாரு.

அந்த கலியாணத்துக்கு எங்க தாத்தா, பாட்டி எல்லாம் போயிருந்தாங்கன்னு சொல்லக் கேள்வி.

தாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு முற்றிற்று.

தாத்தா அப்பாவுக்கு சொன்ன கதைகள் - ஒன்று

தாத்தா அப்பாவுக்கு சொன்ன கதைகள் - ஒன்று

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.. முட்டா ராஜான்னு சொன்னாதான் சரியா வரும்.. அவனோட நாட்ல பகல்ல எல்லோரும் தூங்கனும்.. ராத்திரியில வேல செய்யணும்.. இந்த விதிமுறைய யார் மீறினாலும் கழுவிலேத்தி கொல்லும் தண்டனை தந்தாரு ராசா..

இப்படி போய்க்கிட்டிருந்தப்ப அந்த நாட்டுக்கு மூனுபேரு ராஜாவைப் பாத்து தங்களோட திறமைகள காமிச்சு வேலை வாங்குறதுக்காக வந்தாங்க.. நல்ல புத்திசாலி ஆளுகளும் கூட. ஊர்ல இருந்தவங்க இவங்ககிட்ட வந்து இந்த ராஜா பண்ற அநியாயத்தையும் அவங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்காதான்னு ஏங்கிக் கிட்டிருப்பதையும் சொன்னாங்க. சரி, முட்டாப்பய போல.. இவன ஒழிச்சிற வேண்டியதுதான்னு மூணு பேரும் தீர்மானம் செஞ்சாங்க.

புதுசா ஊருக்கு வந்த இவங்க வழக்கம்போல காலையில எந்திரிச்சி சமையல் செய்ய ஆரம்பிச்சாங்க .. உடனே ராசாவோட ஆட்கள் வந்து உங்களுக்கு இந்த ஊர் சட்டம் தெரியாதா?? எப்படி நீங்க காலை நேரத்துல சமையல் செய்யலாம்னு கேக்க அப்படித்தான் செய்வோம் அப்படின்னு சொன்னாங்க வந்த மூணு பேரும். காவலாளிக ராஜாகிட்ட கூப்டுட்டுப் போக, ராஜா இந்த நாட்டு சட்டம் தெரியாம செஞ்சிட்டோம்னு சொல்லுங்க விட்டுடுறேன் அப்படின்னார். உடனே அவங்க மூணு பேரும் இல்ல ராசா தெரிஞ்சேதான் செஞ்சோம் அப்படின்னாங்க.

மகாராஜா எங்களுக்கு சீக்கிரம் சொர்கத்துக்குப் போகனும்னு ஆசை அதனால இப்படி செஞ்சோம் அப்படின்னாங்க. உடனே ராஜா இந்த மூணு பேரையும் கழுவில ஏத்துங்க அப்படின்னு உத்தரவு போட்டாரு.

மூணு பேரும் சந்தோசத்துல துள்ளிக் குதிச்சாங்க.. அதுல ஒரு ஆளு முன்ன வந்து மஹாராஜா என்னைத்தான் மொதல்ல கழுவுல போடணும் அப்படின்னு விண்ணப்பம் வச்சார். அடுத்தாளு வந்து இல்ல மஹாராஜா என்னையத்தான் போடனும்னு கேக்க.. மூனாமத்து ஆளு வந்து என்னையத்தான் போடனும்னு கேக்க ராஜா கொழம்பிப் போயி ஏம்ப்பா கழுவுல சாகுறதுக்கு முந்துறீங்கன்னு கேக்க, வந்திருந்தவங்க மஹாராஜா இன்னைக்கு யாரெல்லாம் கழுவுல ஏறி சாகுராங்களோ அவங்கல்லாம் நேரா சொர்கத்துக்கே போயிருவாங்க அப்படின்னு சொன்னங்க. இந்த ராசாவோட கொடும பொருக்கமாட்டாம இருந்த மந்திரி மார்களும் ஆமா ராசா நீங்கதான் சொர்கத்துக்கு செல்ல தகுதியான ஆளுன்னு ஏத்திவிட மனுஷன் சந்தோசமா உசுர விட தயாராயிட்டாரு. உடனே ராஜா அந்த மூணு பேருக்கும் கழுவுல ஏத்துற தண்டனைய ரத்து செஞ்சுட்டு என்னையத்தான் மொதல்ல போடணும்.. நான்தான் மொதல்ல சொர்கத்துக்கு போவேன்னு சொல்ல மக்களே எல்லா ஏற்பாடும் செஞ்சு ஊரே பாக்க ராசாவ கழுவில ஏத்துனாங்க.


ஊரே சந்தோசத்துல துள்ளிக் குதிச்சது.. அந்த மூணு பேரையும் இனிமே நீங்கதான் எங்க ராஜா அப்படின்னு ஊர்க்காரங்களும், பழைய ராஜாவோட மந்திரிகளும் சொல்ல அவங்களும் அத ஏத்துக்கிட்டு ராசாவ இருந்து நாட்ட நல்லபடியா ஆண்டாங்க.

தாத்தா அப்பாவுக்கு சொன்ன முதல் கதை முற்றிற்று .

Monday, January 26, 2009

இந்திய குடியரசு தினம் - கத்தார்

இந்திய குடியரசு தினம் - கத்தார்.




குடியரசு தினம் வழக்கமான் உற்சாகத்துடன் இன்று கத்தாரின் இந்தியன் கல்சுரல் சென்டரில் நடைபெற்றது.

இந்திய தூதுவர் பஹ்ரைன் சென்றுவிட்டதால் சார்ஜ் டி அபெர்ஸ் திரு. சஞ்சீவ் கோக்லி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

பள்ளிக்குழந்தைகள் மற்றும் கலந்து கொண்ட அனைவரும் தேசியகீதம் பாடினர். அதன் பின்னர் அசோகா அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் திரு. சஞ்சீவ் கோக்லி குடியரசுத்தலைவர் உரையை வாசித்தார். அதன் பின்னர் டெல்லி பப்ளிக் ஸ்கூல் குழந்தைகள் தேச பக்திப்பாடல்களை இந்தியில் பாட பின்னர் குடியரசு தின கேக்கை வெட்ட கூட்டம் இனிதே முடிவடைந்தது.

சுவையான சிற்றுண்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

சில புகைப்படங்கள் கீழே










ஜெயக்குமார்

Sunday, January 25, 2009

நிழல் வெளிக் கதைகள் - ஜெயமோகன்


நிழல் வெளிக் கதைகள் - ஜெயமோகன்

சின்ன வயதில் என்னை அதிக பயத்துக்குள்ளாக்கிய பேய்க்கதை இது. வசனம், இயக்கம், எல்லாம் எனது அண்ணன்.

எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கிராமம் காரைக்கேணி. அந்த ஊருக்கு எப்போதும் சைக்கிளிலும், நடையிலுமாக ஆள்நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் பாதையில் எங்குமே விளக்குகள் இருக்காது. ஒருநாள் எங்களுக்குத் தெரிந்த முத்தையா அண்ணாச்சி இரவு காரைக்கேணியிலிருந்து கல்லுப்பட்டிக்கு வரும் வழியில் யாரோ பின்னால் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து கொண்டதுபோல இருந்ததாம்.. ஏய் யாருப்பா அது, யாருப்பா அதுன்னு முத்தையா அண்ணாச்சி கத்திக்கிட்டே வேக வேகமா அழுத்திகிட்டு கல்லுப்பட்டி எல்லை வரைக்கும் வந்துருக்காரு. அப்புறமா கொஞ்சம் வெளிச்சம் உள்ள் இடம் வந்த உடனே திரும்பிப் பாத்தா யாரையும் கானல.. ஆனா, ஒரு மொரட்டு ஆள வச்சு மிதிச்சிகிட்டு வந்த மாதிரி இருந்திருக்கு அவருக்கு... அப்புறம்தான் தெரிஞ்சிச்சி அங்க பேய் நடமாட்டம் இருக்குமாம்...அதுக்கப்புறம் ராத்திரி ரொம்ப நேரம் ஆச்சிருச்சின்னா எங்க வீட்லையே இல்லன்னா வேற எங்கையாச்சும் படுத்துட்டு கோழிகூப்ட ஊருக்குப் போவாரு. இத முத்தையா அண்ணாச்சியும் எங்கிட்ட சொல்லி இருக்காரு..

அதுக்கப்புறம் இதே மாதிரி இன்னோரு கதையக் கேட்டேன்.. இப்பையும் எங்கண்ணந்தான் இந்தக் கதையச் சொன்னாரு..

யாரோ ஒரு ஆளு ராத்திரி பதினோருமனிவாக்குல சைக்கிள்ள போய்க்கிட்டே இருந்திருக்காரு.. அப்ப அண்ணே பின்னாடி ஏறிக்கிரட்டுமா அப்படின்னு கேக்க இவரும் சரிப்பான்னுட்டாரு.. அப்புறம் பின்னாடி இருந்த ஆளு அண்ணே கடல சாப்பிடுறீங்களான்னு கேட்டு சைக்கிள் ஓட்றவருக்கு குடுத்துருக்காரு. கையில பாத்தா எல்லாமே மனுசப்பல்லு.. அய்யோன்னு கத்திக்கிட்டே திரும்பிப் பாத்திருக்காரு.. சைக்கிள் பின்னாடி யாருமே இல்ல.. கையிலையும் மனுசப்பல்லைக் காணோம்.

இது தவிர,

எங்க வீட்டுக்கு எதுத்த வீட்டு சந்துல லச்சுமின்னு ஒரு பேய் சுத்திகிட்டு இருக்கு ராத்திரி அது போற வழியில படுத்தா அப்படியே தூக்கி வீசிரும்,

கெனத்துக்குள்ள ஒரு சின்னப்புள்ள தினமும் இறங்கிப் போகுது.. அது பக்கத்துல இருக்குற புளிய மரத்துல இருந்துதான் வருது...

இதுமாதிரி எங்க ஊர்ல கேக்காத பேய்க்கதையே இல்ல.. அவ்வளவு கேட்ருக்கேன்.


ஜெயமோகனின் பன்முக ஆளுமை மற்றும் எழுத்தில் அவரது வீச்சு குறித்த விரிவான அலசல் திரு.வெங்கட் சாமிநாதன் முதல் நேற்றைய வலைப்பதிவர்கள் வரை அலசப்பட்டு விட்டது. புதிதாய் சொல்ல ஏதுமில்லை, நமது காலகட்டத்தில் வாழ்கின்ற ஒரு இலக்கிய மற்றும் பன்முக ஆளுமை என்பதைத்தவிர. அவரது சமீபத்திய கதைகளான , மத்தகம், ஊமைச் செந்நாய், அனல்காற்று தொடர், மற்றும் பல கதைகளும், கட்டுரைகளும் அவரது வலை வாசிப்பாளர்களுக்காகவே எழுதியவை. அழகான நடையுடன், வாசிப்பவருக்கு ஒரு நெருக்கமான உணர்வை அளிப்பவை அவரது கட்டுரைகளும், கதைகளும், நாவல்களும். அவர் எழுதி வாசிக்காமல் விட்டவை பல.. உண்மையில் அவரது எழுத்து வேகத்துக்கு வாசிப்பாளனால் ஈடு கொடுக்க முடியாது என்பது அவரது வலைப்பதிவை வாசிப்பவர்களுக்கு புரிந்திருக்கும். அவ்வளவு விஷயங்கள் நமக்குச் சொல்ல வைத்திருக்கிறார் ஜெயமோகன், கதைகளாகவும், கட்டுரைகளாகவும்.

அந்த வகையில் இந்த நிழல் வெளிக்கதைகளும் இன்னொரு வகையான இனிமையான வாசிப்பனுபவத்தைத் தரும் கதைகளின் தொகுப்பு.

பேய்க்கதை அரசன் பி.டி சாமி என்றொரு ஆசாமி இருந்தார். அவருக்குப்பின்னர் பேய்க்கதைகளை படிக்கும் பழக்கத்திற்கு ஒரு கும்பிடு போட்டு வைத்திருந்தேன். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கி தற்போது படித்து முடித்த நிழல்வெளி கதைகள் பற்றி எனது எண்ணங்கள்..

இயக்குனர் லோகிததாசுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த புத்தகம் ஒரு அருமையான பேய்க் கதைகளின் தொகுப்பு.

இமையோன் என்ற கதையில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சாபமிடப்பட்ட அரசகுலப் பெண்ணின் தீராத மோகம் தான் கரு. வாழ்க்கையில் தீராத ஆசைகள் கொண்ட ஒரு ஆன்மா தனது ஆசைகள் அடங்கும் வரை ஆவியாய் அலையும் என்ற நமது புராதன நம்பிக்கைதான் கதைக் களன். அதைப் பலவித சூழ்நிலைகளுடனும், உள்ளூரில் புழங்கும் செவி வழிக்கதையிலும் புகுத்தி சிறந்ததொரு தொகுப்பைக் கொடுத்திருக்கிறார் ஜெயமோகன்.

வர்ணனைகளும், சூழலும், கதை மாந்தர்களும், எல்லாம் நிஜமாகவே இருப்பது போன்ற தோற்றமும், கதை சொல்லும் விதத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ள எளிமை படிப்பதை நம்பும்படியாக்குகிறது. அதாவது பேய் இருக்கிறது என நம்புவோருக்கு..

தன்னிடம் போகம் கொள்ளுவதாக நினைக்கும் ஒருவரும்.. இறக்கும் தருவாயில் அந்த கதையை அவர் இன்னொருவனிடம் சொல்ல அவனுக்கும் அதேபோல அனுபவம் ஏற்படுவதும் அதை சக மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாது என நினைக்கும் அளவு அவர்கள் அந்த ஆவியிடம் வைத்திருக்கும் நம்பிக்கையும் உறவும்.. நல்ல விதமாய் சொல்லப்பட்டுள்ளன.
ஒருமுறை ஒருவனைப்பிடித்த பேய் அவனை அனுபவிக்க தொடர்ந்து வரும் என்பது போன்ற நம்பிக்கைக்கு லாரி ஓட்டுனராக வரும் ஒருவனது கதையிலும் அந்த ஆவியின் நம்பிக்கையால் இருவரது சாவுக்கு அவன் காரணமாய் அமைவதும் நடக்கின்றன.

இமையோன்
பாதைகள்
அறைகள்
தம்பி
யட்சி
ஏழுநிலைப் பந்தல்
இரண்டாவது பெண்
குரல்
ஐந்தாவது நபர்
ரூபி

என மொத்தம் பத்துக் கதைகளைக் கொண்ட தொகுப்பு இந்தப்புத்தகம். கிராமங்களில் சாயந்திரம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ரெண்டு,மூனு குடும்பங்கள் சேர்ந்துகொண்டு ஊர்க்கதை பேசும்போது கேள்விப்பட்ட செவி வழிச்செய்திகளை கதைகளாக்கும் உத்தி இது என நினைக்கிறேன். காதால் கேட்ட விஷயங்களை கதையாக மாற்றியமைக்கும் உத்தியில் வெற்றியும் பெற்றுள்ளார் ஜெயமோகன்.


விரிவான வர்ணனைகளும், நிஜ அனுபவங்களுக்கு நெருக்கமாக வாசகர்களை இட்டுச் செல்லும் இந்தக் கதைத் தொகுப்பு ஒரு நல்ல வாசிப்பனுபத்தைக் கொடுக்கும். அவசியம் படியுங்கள்..

ஜெயக்குமார்

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.....

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.





இந்தியா என்றொரு நாடுண்டு ..அதில் ஏலம் கிராம்பு பெறுவதுண்டு.. பொன்னும் பொருளும் மிகவுண்டு .. அதன் போக்கறியாதார் பலருண்டு. எனப்பாடினான் வருமுன் குறிசொல்லிப்பாடிய வரகவி பாரதி.

இன்று இந்தியா அவன் கனவு கண்ட சுதந்திரமும் அடைந்து, குடியரசாக மலர்ந்து ஜனநாயகம் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் அவன் கனவு கண்ட வலிமையான இந்தியாகவும் ஆகி வருகிறது. இந்த கட்டுக்கோப்பைக் குலைத்து நாட்டைத்துண்டாட நினைக்கும் அந்நிய சக்திகளுக்கும் அதற்கு துணைபோகும் சக்திகளுக்கும் பாரதியின் பாடலே பதில்..

நல்லற நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரிவாள எங்கள்தாய் - அவர்
அல்லவர் ஆயின் அவரை விழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடுவாள்.

ஐயா!

பேயவள் காண் எங்கள்தாய் - பெரும்
பித்துடையாள் எங்கள்தாய்
காயழல் ஏந்திய கையன் தன்னைக்
காதலிப்பாள் எங்கள்தாய்....

இது ஏதோ கவியின் கனவு இல்லை. 'நடைபெறும் காண்பீர் உலகீர், இது நான் சொல்லும் வார்த்தை என்றெண்ணிடல் வேண்டா! தடையற்ற தெய்வத்தின் வார்த்தை! இது சாதனை செய்க பராசக்தி!'

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!

ஜெயக்குமார்.

போட்டோ உதவி.. Friend Cuttack

Thursday, January 15, 2009

மேட் இன் கத்தார் - பொருட்காட்சி




கத்தாரிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான பொருட்காட்சி தோஹா கண்காட்சி திடலில் நடைபெற்றது. அதில் கத்தாரின் இளவரசர் கலந்து கொண்டு பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். அதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக ..

ஜெயக்குமார்

Thursday, January 8, 2009

கத்தார் - சில புகைப்படங்கள்



மணற்குன்றுகளில் விளையாடும் மணல் பைக்குகள் மற்றும் ஃபொர் வீல் டிரைவ் வாகனங்கள்.




மாலை நேரச்சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான்.




சுத்தமான கடற்கரை.



கடலலைகள் செய்த மாயம்.



இயற்கை வரைந்த கோலம்.

Sunday, January 4, 2009

பாரதிராஜாவின் பொம்மலாட்டம்




பொம்மலாட்டம்.

ஒரு பக்கா தமிழ் சினிமா இயக்குனரை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி திரையுலகில் நடக்கும் அபத்தங்களையும், என்னென்ன கேணத்தனங்கள் சாத்தியம் என்பதையும் சில வித்தியாசமான முடிச்சுகளுடன் இந்த திரைப்படத்தை செய்திருக்கிறார் பாரதிராஜா.
என இனிய தமிழ் மக்களே என்ற இருகை கூப்பிய பாரதிராஜாவாக இல்லாமல் சாதாரணமாக அறிமுகம் செய்துகொள்கிறார்.

நானா படேகரின் முதல் தமிழ் படம் என நினைக்கிறேன் இது. ஒரு முன்னணி இயக்குனர் எப்படி இருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது இவரது நடிப்பால்.

கதை.. முழுதும் சொன்னால் சுவாரசியம் போய்விடும்.. எனவே ஒரு சிறுகுறிப்பு மட்டும்..
முன்னணி இயக்குனரான ரானா ( நானா படேகர்) ஒரு perfectionist. அவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடிக்க மறுக்கும் நடிகையை தூக்கிவிட்டு புதிய நாயகியை தேடுகிறார். அதன்பின்பு திஷ்னா என்ற ( ருக்மிணி) நடிகையை வைத்து படத்தை தொடர்கிறார் ரானா. அந்த படம் முடிவதற்குள் மர்மமான முறையில் இருவர் கொல்லப்படுகின்றனர். மிக கறாரான பேர்வழியான ரானா இந்தக் கொலைகளை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலிசுக்கு வர விசாரணையில் உண்மை வெளிவருகிறது. நம்ம அர்ஜுன் தான் போலிஸ் ஆபிசர் ( விக்ரம் வர்மா) கவிதை எழுதும் பெண்மணியும், ராணாவின் மனைவியாக ரஞ்சிதாவும் உண்டு.

நானா படேகர் :-

இந்திய சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் நானா படேகருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்தப்படத்தில் ஒரு இயக்குனராக நடித்திருக்கிறார். வாழ்வதெல்லாம் நம்ம ஊர் நடிகர்கள் செய்யட்டும். கிரேனில் அமரும் விதம், கட்டளைகள் பிறப்பிக்கும் விதம், அவர் வெளிப்படுத்தும் உடல் மொழி என அட்டகாசமாக படத்தில் வருகிறார். அதே ஐந்து நாள் தாடி, ஜீன்ஸ், ஒரு அலட்சியமான பார்வை என கலக்குகிறார்.


ராணாவுக்கு பெண்கள் விஷயத்தில் மோகம் என்பதைப்போன்ற தோற்றத்தை பார்ப்பவர்களுக்கு உருவாக்க ரஞ்சிதா சினிமா ஷூட்டிங் நடக்கும் இடத்தில் போடும் சண்டை, அது முடிந்த பின்பு அவர் நாயகியிடம் நடந்து கொள்ளும் விதம், நாயகியிடம் அத்துமீற நினைப்பவர்களிடம் அவர் காட்டும் கடுமை ஆகியன.


படத்தை தொய்வில்லாமல் கொண்டுசெல்லவும் ரானா மீது சந்தேகம் வர காரணமாகவும் இந்த நிகழ்ச்சிகள் உதவுகிறது. மற்றபடி பீப்பாயாக இருக்கிறார் ரஞ்சிதா..

ரானா ஒரு perfectionist எனக்காட்ட அவர் வீட்டில் நடந்துகொள்வது, படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் காட்டும் தேவையற்ற கடுமை, எல்லாம் சற்றே நாடகத்தன்மையுடன் இருக்கிறது. இது இயக்குனரின் பலவீனம்.

மற்றபடி விவேக் மதுரை என்னும் பேரில் வந்து சொறிந்துவிட்டுப் போகிறார். திரைப்பட தயாரிப்பாளரின் நிலையும், அவரது மகன்கள் நடந்துகொள்ளும் விதமும், இயக்குனர் மணிவண்ணன் நடித்துள்ள பகுதியும் இயல்பாய் படத்துடன் ஒன்ற வைக்கிறது.

த்ரிஷ்னாவாக வரும் ருக்மிணி மிக நன்றாக செய்திருக்கிறார். அவரது பாத்திரப்படைப்புக்கு அவர் அதிகபட்ச உழைப்பைக்கொடுத்து அனாயாசமாக சமாளித்திருக்கிறார்.

காஷ்மீர் தீவிரவாதிகளுடன் மோதும் அர்ஜுன் இந்த படத்தில் சி.பி.ஐ ஆபிசராக அழாகாக பொருந்தி நடித்திருக்கிறார்.

பழைய பாரதிராஜா இன்னும் மறைந்துவிடவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் வெற்றிப்படமாக அமையவாய்ப்புக்கள் மிகக்குறைவு. நிச்சயமாக பழைய பாரதிராஜாவாக வலம்வர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பாரதிராஜாவின் நல்லபடங்களின் வரிசையில் பொம்மலாட்டமும் சேரும்.


ஜெயக்குமார்