Sunday, October 25, 2015

வள்ளி அக்கா

2010ல் மார்ச் மாதம் குவைத்துக்கு மாற்றலானது, வீடு தேடும் படலத்தில் ஒரு அபார்ட்மெண்டில் வீடு இருப்பதாக கேள்விப்பட்டு சென்றேன். நான் குடிவரப்போகும் வீட்டில் ஆள் இருந்ததால் இன்னொரு வீட்டை சாம்பிள் காட்ட அழைத்துச் சென்றார் ஹாரிஸ் என்று அழைக்கப்படும் அபார்ட்மெண்ட் வாட்ச்மேன். 

வீட்டில் நுழைந்ததுமே அது ஒரு தெலுங்கு குடும்பம் என்பது தெரிந்ததால் சரளமாக தெலுங்கில் பேச ஆரம்பித்த 5வது நிமிடத்தில் மிக நல்ல நண்பராகிவிட்டார். என்னை வள்ளி அக்கா எனக்கூப்பிடுங்கள் என அறிமுகம் செய்துகொண்டார். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க, உங்களுக்கு ஹெல்ப் செய்ய நாங்க இருக்கோம் என்று உற்சாகமூட்டும் வார்த்தைகளைக் கேட்டபின்னர் வேறு வீடு பார்க்க தோன்றவில்லை. உடனே அட்வான்ஸ் கொடுத்துவிட்டு ஊருக்கு ஃபோன் செய்து சொன்னேன், பக்கத்துலையே நல்ல ஃப்ரண்ட் உனக்கு கிடைப்பாங்க. நல்லா பேசுறாங்க, நல்ல மாதிரியா இருக்காங்க. அபார்ட்மெண்டுல நிறைய இந்தியர்கள் இருக்காங்க என வீட்டுக்காரம்மாவுக்கு அப்டேட் கொடுத்துவிட்டு சில நாட்களிலேயே ஆன் அரைவல் விசாவில் வீட்டுக்காரம்மாவையும் அழைத்து வந்துவிட்டேன். 

வந்த அன்று காலை விமானம், வீட்டுக்கு வந்து சேர காலை 11 மணி. உள்ளே நுழைந்து சாமான்களை அடுக்கி வைத்துக்கொண்டிருக்கும்போதே புயலென நுழைந்தார், எதிர்வீட்டு வள்ளி அக்கா. எல்லாம் சரியா இருக்கா என அவரே ஒரு மேற்பார்வை செய்துவிட்டு உங்களிடம் கத்தி, மிக்ஸி இல்லை, காய்கறி வெட்ட பலகை இல்லை என அவரே சொல்லிவிட்டு விடுவிடுவென அவர் வீட்டில் இருந்து எல்லாம் கொண்டுவந்து கொடுத்துவிட்டு என்ன வேண்டுமென்றாலும் என்னிடம் கேளுங்கள் எனச் சொல்லிவிட்டு சென்றார். 

அடுத்த 10வது நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டரையும் கொண்டு வந்து கொடுத்தார். எனக்கு முதலிலேயே அவரைப்பற்றி தெரிந்திருந்ததால் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. வீட்டுக்காரம்மாவுக்கு இப்படில்லாமா உலகத்துல ஆட்கள் இருப்பாங்க என்ற ஆச்சரியம் தாங்க முடியவில்லை. 

ஆரம்ப தயக்கம் எல்லாம் போன சில நாட்களிலேயே மிக நெருங்கிய நண்பராகிவிட்டார். இரு குழந்தைகள் அவர்களுக்கு. அவர்களும் உடனே நெருங்கி விட்டனர். மாலை ஊர் சுற்றல், ஷாப்பிங் எல்லாம் அவர்களுடன், அவர்கள் வீட்டில் என்ன செய்தாலும் ஒரு பங்கு வந்து சேரும் அளவு நெருக்கமானது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளில் இருமுறை வீடு மாற்றினேன். 

எப்போதும் எங்கள் நட்பும் ஒருவருக்கொருவர் வீட்டிற்கு வந்து செல்லுதலும் நிற்காமல் பார்த்துக்கொண்டோம். வியாழன் இரவுகளில் டீவியில் இரு குடும்பங்களும் சேர்ந்து படம் பார்த்தலும் அதில் உண்டு. பின்னர் எங்கள் கம்பெனி குவைத்தை மூடும் முடிவை எடுத்ததில் வீட்டுக்காரம்மாவுக்கு மிக வருத்தம். இப்படி ஒரு நட்பை பிரிந்து செல்கிறோமே என. 

கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இன்றும் தொலைபேசுதலிலும், மெயில்களிலும், நான் குவைத் சென்று பார்த்துவிட்டு வருவதிலும் நட்பு தொடர்கிறது. உண்மையில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி பிறருக்கு உதவுதலை அந்த குடும்பம் யாருக்கும் போதிக்காமல் செய்து காட்டிகொண்டிருந்தது. ஏழைக்குழந்தைகளுக்கு கல்விக்கு பணம் கொடுத்தல், குழந்தைகளை நம் பாரம்பரியம் விடாமல் இரவு படுக்கச் செல்லும்முன் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிவிட்டு தூங்கச் செல்லுதல், பாட்டு கற்பித்தல் என ஒரு மாதிரிக்குடும்பமாக இருந்து கொண்டிருக்கின்றனர். 

எங்கள் பிரியத்துக்குரிய வள்ளி அக்காவின் ( Kanaka Valli ) பிறந்தநாள் (25, அக்டோபர்) இன்று. எல்லா நலன்களும் கிட்டுவதாக என வாழ்த்துகிறேன். அவர்களுக்கு நான் எழுதியதில் எதுவும் புரியப்போவதில்லை. அவர்களுக்கு தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரியும். எந்தவித எதிர்பார்ப்புமின்றி உதவும் ஒருவரை நான் சந்தித்ததையும் இன்னும் நட்பில் இருப்பதையும் என் நண்பர்களான உங்களுக்குச் சொல்லவே இந்த பதிவு.