Thursday, July 16, 2009

கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்



இந்திய குடியுரிமை இன்றியே இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர் யார் தெரியுமா?? (1987)

ஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும், இஸ்லாத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத்தந்த மகத்தான இந்த இஸ்லாமியர் யார் தெரியுமா??

பிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நிற்போம் என இந்திய இஸ்லாமியர்கள் முடிவெடுத்தபோது அவர்களின் முடிவுகளுக்கெதிராய் ஆங்கிலேயரை அகிம்சை வழியில் எதிர்த்தவர் யார் தெரியுமா??

1985ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, அன்பே உருவான ராமகிருஷ்ன பரமஹம்சரின் வடிவத்தை ஒத்த கான் அப்துல் கஃபார்கான் தான்.

ஒருங்கினைந்த இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் காவல்காரராக செயல்பட்டதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.


இளமைக் காலம் :-

1890ம் ஆண்டு ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார். உள்ளூர் முல்லாக்களின் எதிர்ப்புகளையும் மீறி இவரது தந்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த எட்வர்டு மிஷன் பள்ளியில் படித்து வந்தார். நன்றாகப் படித்த கஃபார் கான் அவரது ஆசிரியர் ரெவெரெண்ட் விக்ரம் என்பவரால் ஈர்க்கப்பட்டு சமூக முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு குறித்து அறிந்து கொண்டார்.

பள்ளி இறுதி ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் உயர்ந்த பதவியான தி.கைட்ஸ் என்ற பஷ்தூன் வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்ச பட்டம் வழங்கப்பட்டது. அந்தப் பட்டத்திற்குப் பின்னரும் இரண்டாம் தர குடிமகனாகவே தான் நடத்தப்படுவதை அறிந்ததும் அந்த கைட்ஸ் பட்டத்தை திருப்பி அளித்து விட்டார்.

அவரது அண்ணன் ஏற்கன்வே லண்டனில் படிக்க சென்றிருந்ததால் மேற்படிப்புக்கு லண்டன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாயின் அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒருபுறம், மற்றும் சமயத்திற்கு எதிரானதாக முல்லாக்கள் கருதியதாலும் தகப்பனாரின் நிலபுலன்களை பார்த்துக்கொள்ளத் தலைப்பட்டார். ஆனாலும் தனது சமூகத்திற்காக என்ன செய்வது என்பது பற்றியே அவரது மனம் நினைத்துக் கொண்டிருந்தது.

பாட்சா கான் ஆதல்..

தன்னால் தொடர முடியாத படிப்பை பிறர் தொடர உதவினார். பிரிட்டிஷார் புதியதாகப் பிரித்த வடமேற்கு மாகாணத்தில் அவர் வாழ்ந்த பஷ்தூனும் அமைந்து விட்டது. இது ரஷ்யாவுக்கும் பிரிட்டிஷ்ராஜ்ஜியத்திற்கும் அரசியல் ரீதியாக மிகமுக்கியமான இடமாக அமைந்து விட்டது, ஒருபக்கம் பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறை, மறுபக்கம் முல்லாக்களின் அடக்குமுறை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கஃபார்கான் தனது இருபதாவது வயதில் முதல் பள்ளியை உத்மன்சாய் என்ற இடத்தில் தொடங்குகிறார். அது உடனடி வெற்றியைத் தர அவரைப்போலவே சிந்திப்பவர்கள் அனைவரும் அவருடன் இனைந்தனர். 1915 முதல் 1918 வரை பஷ்தூன் இனமக்கள் வாழும் 500 மாவட்டங்களுக்கும் பயணம் செய்ததும், அவரது நட்புறவு செய்தியும் அவரை பாட்ஷாகான் என அழைக்கப்பட வைத்தது.

திருமணமும் குழந்தைகளும்

முதலில் ஒரு திருமணம், இரு குழந்தைகள். மனைவி இன்புளுயென்சாவில் மரணமடைய இரண்டாம் திருமணம் இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகளும், மகனும் பிறந்தனர். இரண்டாம் மனைவியும் வீட்டில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து இறக்கிறார். முதல் மனைவிக்கு பிறந்த அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.

குதாய்கித்மத்கர்:-

காலப்போக்கில் கஃபார்கானின் எண்ணம், செயல் எல்லாம் ஒருங்கினைந்த, மதச்சார்பற்ற, சுதந்திர இந்தியாவாகியது. அதற்கு அவர் காந்தியக் கொள்கையான சத்யாக்கிரகத்தைத் தேர்ந்தெடுத்தார். தனது கனவை அடைய அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு குதாய்கித்மத்கர் ( கடவுளின் சேவகர்கள்) எனப் பெயரிட்டார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பஷ்தூன் இனமக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் திரட்டினார். அவர்களிடம் கஃபார்கான் பேசும்போது..

“ நான் உங்களுக்கு போலிசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப்போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது”

இந்த இயக்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தது, பிரிட்டிஷாருக்கு எதிராக அஹிம்சையினாலும், ஒத்துழையாமையாலும். வடமேற்கு மாகாணத்தில் அது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் அரசியல் பிரிவை கஃபார்கானின் தம்பி டாக்டர்.கான் அப்துல் ஜாஃபர்கான் நடத்தி வந்தார். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீகைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா அவரது அரசை கலைக்கும் வரை முதல்வராக இருந்தார்.


இந்திய தேசியக் காங்கிரஸ் உடனான காஃபார்கானின் உறவு:-

தேசப்பிதாவும், அஹிம்சைக் கொள்கையின் முன்னோடியுமான காந்தியடிகளுடன் இதயபூர்வமான, எந்த உள்நோக்கங்களும் அற்ற ஒரு பக்திப்பூர்வமான உறவைப் பேனினார், கஃபார்கான். அவரது ”கடவுளின் சேவகர்கள்” படையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டது. இந்திய தேசிய காங்கிரசில் அவரை தலைவர் பதவியை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினர். நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கூறி அந்தப் பதவியையே மறுத்தவர்.



ஏப்ரல் 23, 1930 ஆண்டு காந்தியடிகள் அறிவித்த உப்புசத்தியாக்கிரகத்தை பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் தொடங்கினார். அதை எதிர்கொள்ள பிரிட்டிஷார் ஆயுதம் ஏதுமின்றி சத்தியாக்கிரஹ முறையில் போராட வந்த கஃபார்கானினால் வழிநடத்தப்பட்ட தொண்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொண்டர்களும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட்டதுபோலவே எந்த எதிர்ப்பும் காட்டாமல் துப்பாகிக் குண்டுக்கு பலியாயினர். இறந்தவர்களை ஓரமாக கிடத்தி விட்டு அணியணியாக வந்து ராணுவத்தின் குண்டுகளுக்கு கிட்டத்தட்ட 200 பேர்கள் இரையாயினர். ஒரு கட்டத்தில் ராணுவத்தினரே சுடமறுத்த நிலை உண்டானது. அவ்வாறு சுடமறுத்த வீரர்கள் கடுமையாக பின்னர் தண்டிக்கப்பட்டனர்.

கஃபார்கான் சத்தியாக்கிரஹம் மற்றும் பெண் விடுதலையின் முன்னோடியாக திகழ்ந்தார். வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தில் இவரது தனித்துவமான சிந்தனைகளுக்காகவும், தைரியத்திற்க்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டார்.

அவர் இறக்கும்வரை அஹிம்சையின் மீதான நம்பிக்கையை இழக்காமலும், அஹிம்சையும், இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியும் என முழுமூச்சுடன் நம்பியதும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். காந்தியடிகளுடன் நெருக்கமானவராக அறியப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளை பிரிக்கப்படாதிருந்த எல்லையில் செயல்படுத்தியதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.

தேசப்பிரிவினை:-

தேசப்பிரிவினையை முழுதும் எதிர்த்த கஃபார்கான் எப்படியாவது பிரிவினையைத்தடுத்துவிட முனைந்தார். அவருக்குக் கிடைத்தது முஸ்லிகளின் எதிரி என்ற பட்டம். அதன் காரணமாக 1946ல் சக பஷ்தூன் மக்களாலேயே தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 1947ல் பிரிவினைக்கு முன்பு பிரிட்டிஷார் எடுத்த வாக்கெடுப்பில் லஞ்சம் கொடுத்தும், பலரை கலந்துகொள்ள விடாமலும் செய்து பெருவரியான மக்கள் பாக்கிஸ்தானுடன் இணைவதையே விரும்புவதுபோல முடிவுகளை உண்டாக்கினர் பிரிட்டிஷார். தனியானதொரு பஷ்தூனிஸ்தான் என்ற தனிநாடு பிரிவதற்கு வாய்ப்புத் தராமல் இந்தியாவுடனா, பாகிஸ்தனுடனா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கும்படி செய்தனர், பிரிட்டிஷார். இதன் காரணமாய் கஃபார்கான் இந்த ஒட்டெடுப்பை புறக்கணிக்கும்படி சொல்லவேண்டியதாயிற்று. பிரிவினையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அடைபட்டுப் போனதால் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்போது கான் அப்துல் கஃபார்கான் காந்தியடிகளையும், இந்திய தேசிய காங்கிரஸில் இருந்தவர்களையும் பார்த்து கடைசியாக சொன்னது :

” எங்களை ( பஷ்தூன்களையும், கடவுளின் சேவகர்கள் அமைப்பினரையும்) கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்”

என ஆறவொண்ணா மன வருத்ததுடன் சொன்னார். காந்தியடிகளின் உண்மைச் சீடராக இறுதிவரை அஹிம்சையில் நம்பிக்கை இழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தானின் தோற்றத்திற்குப் பின் கஃபார்கானின் நிலை:-

முகமது அலி ஜின்னாவினால் பலப்பல காரணங்களுக்காய் இவர் வீட்டுக் காவலிலும், சிறையிலும், அடைக்கப்பட்டார். 1948முதல் 1954 வரை எந்தவிதக் குற்றமும் சாட்டப்படமல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் மனம் வருந்திச் சொன்னது.

“ பிரிட்டிஷ் ஆட்சியிலும் சிறை செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்களுடன் மோதலிலும் இருந்தோம். ஆனால் அவர்களது சிறையில் எனக்கு நடந்த கொடுமைகள் தாங்க முடிவதாகவும், அவர்கள் குறைந்த பட்ச நாகரீகத்துடனும் நடந்துகொண்டர்கள். ஆனால் எனக்கு நமது இஸ்லாமிய நாட்டுச் சிறையில் நடந்த கொடுமைகளையும், அவமதிப்புகளையும் வெளியில் சொல்லக் கூட விரும்பவில்லை என்றார்.”

1962ல் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அந்த ஆண்டுக்கான சிறைக்கைதியாய்” தேர்ந்தெடுத்தது. இவரது நிலையே உலகம் முழுதும் சிறையில் வாடும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனசாட்சிப்படி நடந்துகொண்டோரின் நிலை” எனக் கூறியது. 1964ல் இவரது சிகிச்சைக்காக இங்கிலந்து சென்றார். அங்கிருந்து மேல் மருத்துவம் செய்வதற்காக அமெரிக்கா செல்ல வேண்டியதிருந்தது. இவரது பாகிஸ்தானிய தொடர்பினால் அமெரிக்கா இவருக்கு விசா வழங்க மறுத்தது. இறுதியில் 1988ல் பெஷாவரில் வீட்டுக்காவலில் இருக்கும்போது மரனமடைந்தார். அவரது ஆசைப்படி அவரது நல்லடக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்தில் செய்யப்பட்டது. அவரை கவுரவிக்கும் முகமாக ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளித்தது இந்தியா. தனது வாழ்நாளில் 52 ஆண்டுகளை சிறையிலும், வீட்டுக்காவலிலுமே கழித்தார். இஸ்லாமிய நாடு பிரிக்கக்கூடது என சொன்னதற்காக அவரைபற்றிய எந்தக்குறிப்பும் பள்ளிப்பாடங்களில் வராமல் பார்த்துக்கொண்டது இஸ்லாமிய அடிப்படைவாத பாகிஸ்தானிய அரசாங்கம்.

காந்தியக் கொள்கையான அஹிம்சையையும், நாடுபிரிவினைக்கு தள்ளப்படக்கூடாது என்பதற்காக தனது வாழ்க்கையையே பணயம் வைத்த கான் அப்துல் கஃபார்கானின் வாழ்க்கை உண்மையும் சத்தியமும் என்றும் தோற்பதில்லை என்பதை என்றும் நிலைநாட்டிக்கொண்டே இருக்கும். மதத்தின் பெயரால் நாட்டைப் பிரிவினை செய்தாக வேண்டும் என முழங்கிய பிரிவினைவாதி ஜிண்னாவின் பிடிவாதத்தால் உருவான பாகிஸ்தான் இன்று மதவெறியர்களின் பிடியில் சிக்கி சீரழிவதைப் பார்க்கிறோம். எல்லைக்காந்தியை ஒத்த சிந்தனையாளர்கள் இருந்திருந்து, எல்லைகாந்தியின் முயற்சியும் வென்றிருந்தால் பிரிவினையே இல்லாமல் கஃபார்கானும் ,காந்தியும் கனவுகண்ட ஒரு சமதர்ம சமுதாயம் இணைந்த இந்தியாவில் உருவாகிவிட்டிருக்கும்.

அவரைப்பற்றிய சிறு விவரனப் படம் இங்கே..



நன்றி: விக்கிபீடியா.

Sunday, July 12, 2009

வெளிநாட்டிற்கு வருகிறீர்களா??

வெளிநாட்டிற்கு குறிப்பாய் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக வரும் நண்பர்களுக்காக எனது பதிவு இது....

திரைகடல் ஓடியும் திரவியம் தேட முடிவெடுத்ததே மிகப் பெரிய சாதனைதான்.. வேலைக்கு வந்து இறங்கும் முன்னர் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என நான் நினைப்பதை இங்கு பதிந்திருக்கிறேன். நான் குறிவைத்து எழுதுவது நடுத்தர மக்களைப் பற்றியும் கடைநிலை மக்களைப் பற்றியும் மட்டுமே...

கம்பெனியைப் பற்றி..

வேலைசெய்யப்போகும் கம்பெனி பற்றிய முழு விபரங்களையும் அவர்களது வலைப்பக்கத்தில் தேட முயலுங்கள். அதைவிட நம்பகமானது நண்பர்களின் நண்பர்கள் அல்லது நமது நண்பர்கள் யாராவது அங்கு வேலை செய்வார்கள்.. அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது மிகவும் நல்லது..

முக்கியமாய் தெரிந்து கொள்ள வேண்டியது..

01. சொல்லும் சம்பளத்தில் எதுஎதெல்லாம் சேர்த்து இந்தத் தொகை அல்லது சொல்லப்பட்டது சம்பளம் மட்டுமா? இதர படிகள் எல்லாம் தனியானதா??

02. ஒண்டிக்கட்டை எனில் சாப்பாடுக்கு அவர்களே ஏற்பாடு செய்து விடுவார்களா?? இல்லை நமக்கு அலவன்ஸ் என்ற ஒரு தொகை கொடுத்து விட்டு அதில் நாமே சமைத்தோ அல்லது வெளியிலோ சாப்பிட்டுக் கொள்ள வேண்டுமா???

03. தங்குமிடம் எப்போதும் இலவசம்தான்.. ஆனால் அது ஒன்டிக்கட்டையாய் (Bachelor) இருக்கும்போது..

ஃபேமிலி ஸ்டேட்டஸ் (Family Status) தருகிறோம் என்று நேர்முகத் தேர்வில் சொல்லும் கம்பெனிகளிடம் உஷாராய் இருங்கள். கம்பெனியே குவார்டர்ஸ் தரும் அளவு பெரிய கம்பெனிகள் எனில் மிகவும் நல்லது. இல்லையெனில் அந்தந்த நாட்டின் நிலாரத்தைப் பொறுத்து வீட்டு வாடகை கேட்கலாம்.. உதாரனமாக கத்தாரில் சம்பளம் ஆறாயிரமும் வீட்டு வாடகை மூவாயிரமும் தருகிறேன் என்று உங்கள் கம்பெனி சொன்னால் இந்தியாவில் இருக்கும் நமது வீட்டைப் போல இருக்கும் ஒரு வீட்டில்தான் தங்கப் போகிறோம் என்பதை உங்கள் மனைவிக்கு சொல்லியே அழைத்து வாருங்கள். குளிர்பதனம் மட்டும் கூட இருக்கும் நம் வீட்டைக் காட்டிலும்..அவ்வளவே..

04. சாதாரனமாக குடித்தனம் செய்ய ஆயிரத்தி ஐநூறு முதல் இரண்டாயிரம் கத்தாரி ரியால்கள் தேவைப்படும். இதை நீங்கள் சம்பளத்திலிருந்துதான் கொடுப்பீர்கள்.

விசாக்கள்.(Visas)

இரண்டு விதமான விசாக்கள் வேலைக்கு வருபவர்களுக்கு தருகிறார்கள்.

விசிட் விசா அல்லது பிசினஸ் விசா:- ( Visit or Business Visa)

ஒரு முறை வந்தால் ஒரு மாதம் வரை தங்கிக் கொள்ளும் வகையிலும் அதன் பின்னர் இரண்டு மாதங்கள் வரையிலும் தங்கல் நீட்டிப்பு செய்துகொள்ளவும் முடியும். பொதுவாக இந்த விசாக்களில் வருபவர்கள் வேலை செய்து வருவாய் ஈட்டக்கூடாது.. யாரும் கண்டுகொள்வதில்லையாதலால் பலர் இந்த விசாவில் வந்து வேலையும் செய்து கொண்டு புதிய நிரந்தர வேலைகளைத் தேடுகின்றனர்.

ரெசிடெண்ட் விசா அல்லது வொர்க்கர் விசா:- ( Employment)

இதில் ஒருவர் குறைந்த பட்சம் இரண்டாண்டு காலம் வேலை செய்வதற்கு உறுதி அளிக்கும். குடியிருக்கும் காலம் ( Duration of Residence) இரண்டாண்டுகள் எனறு விசாவிலும் போட்டிருக்கும். அப்படிப் போடவில்லையெனில் அது ரெசிடெண்ட் அல்லது வொர்க் விசா அல்ல..மேலும் உங்களுக்கு என்ன பிரிவில் விசா எடுக்கிறார்களோ அதே மரியாதைதான் அரசு அலுவலகங்களில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்கில் பட்டம் பெற்றிருப்பீர்கள். இஞ்சினியர் வேலைக்குத்தான் உங்களை எடுத்திருப்பார்கள். ஆனால் அவர்களிடம் எஞ்சினியர் விசா இல்லாத காரனத்தால் இருக்கும் விசாக்களில் ஒன்றை ( ஃபோர்மென், மெக்கானிக் இப்படி சில) உங்களுக்கு கொடுத்து விடுவார்கள். அதற்குண்டான மரியாதைதான் அரசு அலுவலகங்களில் கிடைக்கும்.

வேலைக்கான விசாவில் உங்கள் பதவி பற்றி தெளிவாக இல்லையெனில் என்ன ஆகும் என்பதை விளக்கும் கற்பனைக் கதை இது...

துபாய் மிருகக் காட்சி சாலைக்கு ஒரு சிங்கம் வந்தது.. எல்லாம் குளிர்பதனம் செய்யப்பட்ட சுத்தமான கூண்டு, சிங்கத்திற்கு மிக்க மகிழ்ச்சி...முதல் நாள் அதற்கு இரண்டு வாழைப்பழம் மட்டும் கொடுத்தர்கள். சிங்கம் நினைத்துக் கொண்டது.. இடம் புதுசில்லையா..சாப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா பழக்கப்படுத்துறாங்க.. இன்னும் ரெண்டு மூனு நாளில் இறைச்சியைப் போடுவார்கள் என நினைத்துக் கொண்டது. ஒரு வாரம் ஆன பின்பும் இரண்டு வாழைப்பழம் மட்டும் போட்டவுடன் காட்டுராஜாவுக்கு கோபம் வந்து நான் யார் தெரியுமா?? சிங்கம்.. எனக்கு எதற்கு வாழைப்பழ்ம் போடுகிறீர்கள் என கர்ஜித்தது.. உடனே மிருகக்காட்சி சாலை பனியாள் சொன்னார் ”இருக்கலாம்..ஆனால் நீ வந்திருப்பது குரங்கு விசாவில்” எனவே இதுதான் உனக்குக் கிடைக்கும் என்றாராம்.

விசாவில் கவனிக்க வேண்டியவை:-

01. உங்களது ஆங்கிலப் பெயர் ( பாஸ்போர்ட்டில் உள்ளபடி)

02. உங்களது பாஸ்போர்ட் எண்.

03. உங்களது பிறந்த தேதி

04. உங்களது பாஸ்போர்ட் காலாவதியாகும் நாள், ஆண்டு

05. உங்களை வேலைக்கு எடுத்துள்ள பதவி அல்லது அதை ஒட்டிய பதவி..

இந்த முதல் நான்கு தகவல்களும் பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டபடி விசாவில் இருக்க வேண்டும். இதில் எந்த தவறு இருப்பினும் நீங்கள் செல்லும் நாட்டின் குடியமர்த்துதல் துறையோ, அல்லது விமானக் கம்பெனிகளோ உங்களை அனுமதிக்க மறுக்ககும். எனவே இதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

முதலில் விசிட் விசாவிலும் அங்கு போன பின்பு ரெசிடெண்ட் விசாவும் மாற்றித் தருகிறோம் என்று சொல்லும் ஏஜெண்டுகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். இப்படி மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு ஐம்பது சதவீதம் மட்டுமே.

உங்களிடம் இருக்கும் விசா அசல்தானா என்பதை அந்தந்த நாட்டின் அரசு வலைப்பக்கத்தில் சோதித்துக் கொள்ளலாம்

ஏஜெண்டிடமோ அல்லது நீங்கள் வேலை பார்க்கப் போகும் கம்பெனியிடமோ உங்களது அசல் சான்றிதழ்களை எப்போதும் தராதீர்கள். அப்படி கண்டிப்பாய் வாங்கி வைத்துக் கொள்ளும் கம்பெனிகளிடம் அசல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டதற்கு அத்தாட்சி கேளுங்கள். அத்தாட்சி இல்லாமல் நீங்கள் இந்திய தூதரகத்திலோ, அல்லது போலிஸ் ஸ்டேஷனிலோ சென்று கம்பெனிக்கு எதிராக புகார்கூட கொடுக்க முடியாது. உங்கள் பாதுகாப்பில் இருக்கும்போது தொலைந்ததுபோல கருதப்பட்டு ஏகப்பட்ட கெடுபிடிகளுக்குப் பின்னர் கிடைக்கவில்லை என்ற சான்றிதழ் தரப்படும்.

உங்களது வேலைக்கான் ஒப்பந்தத்தை ( Employment Agreement) இந்திய தூதரகத்திலும், அந்தந்த நாட்டின் தொழிலாளர் நலத்துறையிலும் அட்டெஸ்டேஷன் செய்து தரும்படிக் கேளுங்கள். இது கட்டாயமும் கூட.. பெரும்பாலானவர்கள் இதைச் செய்வதில்லை. இதைச் செய்யாமல் வாய்மொழி உறுதிமொழிகளோ, அல்லது உங்கள் ஏஜெண்ட் தரும் எழுத்து உத்திரவாதமோ இந்த நாட்டில் செல்லாது.

உங்கள் விசா சம்பந்தமான செலவுகள், இந்த நாட்டில் வந்த பின்பு ஏற்படும் அரசாங்கச் செலவுகள் அனைத்தும் கம்பெனியையே சாரும். உங்களிடம் அவர்கள் வசூல் செய்ய விட்டுவிடாதீர்கள்.

இந்தியத் தூதரகம்:-

இந்தியத் தூதரகம் எங்கிருக்கிறது என்ற தகவலையும் அதன் தொலைபேசி என்களையும் எப்போதும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் வந்தவுடன் அங்கு சென்று உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஆத்திர, அவசரத்திற்கு உதவும்.

வெளிநாட்டில் நடந்துகொள்ள வேண்டியவைகளில் முக்கியமானது..

நம்மூரில் ஒரு பழமொழி உண்டு.. பகலில் பக்கம் பார்த்துப் பேசு.. ராத்திரி அதுவும் பேசாதே என்று. நம்ம ஊருக்கே இப்படி என்றால் வெளிநாட்டில் வந்த பின்பு நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை விட்டுவிட்டு உள்ளூர் அரசியல், மற்றும் அரசர், அவர்களது வேலை செய்யும் முறை, மதசம்பந்தப்பட்ட வழிபாட்டு முறைகள் இதிலெல்லாம் தலையிடாமலும், கருத்து சொல்லாமலும் இருக்க வேண்டும்.


போலிஸ்:-

லஞ்சம் வாங்காத போலிசுகள்தான் இங்கு...எனவே என்ன பிரச்சினை என்றாலும் நீங்கள் இங்கு செல்லலாம்.. கம்பெனி உங்களுக்கு அநியாயம் செய்து விட்டது என நினைக்கும் பட்சத்தில்.. கம்பெனிக்கு உள்ளேயே என்றால் மேலதிகாரிக்கு தகவல் சொல்லி விட்டு பின்னர் போலிஸ் ஸ்டேஷன் செல்லலாம்..

லேபர் டிபார்ட்மெண்ட்:-

உங்களது வேலைக்கான ஒப்பந்தத்தில் எழுதப்பட்டு கம்பெனி உங்களுக்குத் தராமல் இருக்கும் எந்த விஷயத்திற்கும் இங்கு அனுகலாம்.. உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் வெற்றி உங்களுக்கே.

இது தவிர வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டமிடுங்கள் .. தகவல் தெரிவிக்கிறேன்.

ஆல் தி பெஸ்ட்...

Friday, July 10, 2009

கத்தார் ஆஸ்பையர் பூங்கா படங்கள்

போனவாரம் கத்தாரில் இருக்கும் ஆஸ்பையர் பூங்கா சென்றிருந்தோம்.. ஆசியா விளையாட்டுப்போட்டிகளுக்காக கட்டப்பட்ட இந்த பூங்காவில் நடைபாதை, புல்வெளிகள், நீர்நிலைகள் விளையாட்டு மைதானம் எல்லாம் வைத்து பலவித பயண்பாடுகளை மனதில் வைத்துக் கட்டப்பட்டது.. அதன் படங்கள் கீழே...



நீர்நிலையில் மிதக்கும் வாத்துக்கள்...



பூங்காவிற்குள் இருக்கும் டீக்கடை...



செயற்கை ஏரி...



பூங்கா ஒரு பறவைப்பார்வை...




நீர் வளைவு.. ( ஆர்ச்)