Friday, July 9, 2010

ஜெயமோகனின் அனல் காற்று.



பாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதையிது. ஏதோ காரணத்தால் இது திரைவடிவம் பெறவில்லை. இதற்கு கதை வசனம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என ஜெ.மோ நினைத்ததன் விளைவு இப்படியொரு அருமையான கதை. பாலுமகேந்திரா படமென்றாலே ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதைதான். ரெட்டைவால் குருவி, மறுபடியும், வண்ண, வண்ண பூக்கள் இப்படி.. அதே வரிசையில் அனல்காற்றும் ஆகியிருக்க வேண்டியது.. படமாக்கப்பட்டிருந்தால் நிச்சயம் பட்டையைக் கிளப்பியிருக்கும். அவ்வளவு அருமையான கதை. குறிப்பாய் ஜெயமோகனின் நடிகர்களுக்கு எழுதையிருக்கும் வசனங்கள்.


அனல்காற்று அவரது வலைமனையில் தொடராய் வந்துகொண்டிருக்கும்போதே ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன்..

// உங்களது அனல்காற்று மீண்டும் ஒரு அழகான உணர்ச்சிக்காவியம்.

மனித மனங்களின் போராட்டங்களும், சிக்கல்களும், உறவுகளுடனான வரைமுறை குறித்த கோடுகள் தாண்டப்பட்டுள்ளது உங்களது தொடரில். சொன்னால் நம்புவதற்கு கஷ்டமாயிருக்கும். இங்கு கத்தரில் பதினோரு மணிவாக்கில் உங்கள் அனல்காற்று தொடரை படித்த பின்பே நானும், என் மனைவியும் உறங்கசெல்வோம். அத்தனை அருமையாக இருந்தது.//

இன்று புத்தக வடிவில் படிக்கும்போதும் அதே உணர்ச்சியை பெற முடிகிறது.

அருன் என்பவனின் ஃபிளாஷ்பேக்கில் தொடங்குகிறது, கதை.

மொத்தக் கதையும் சந்திரா - அருண் - அருணின் அம்மா - சுசி இவர்களை மட்டுமே சுற்றி வருகிறது. மற்றவர்களெல்லாம் அப்படியே வந்து கதையில் வந்து போகிறார்கள் அல்லது கதை மாந்தர்களின் குணாதிசயங்களைக் காட்ட இதர உதிரி கதாபாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

அருண் - சந்திரா - சுசி இந்த மூவருக்குள்ளும் நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்களும், அருணை தன் கைப்பிடியில் வைத்திருக்கும் சந்திராவும்,

சந்திராவிடமிருந்து பிரிந்து தன்னை மட்டுமே மனைவியாய் ஏற்றுக்கொள்ளும்படிக் கெஞ்சும் அருணைக்காதலிக்கும் சுசியும்

கணவனால் கைவிடப்பட்ட நேரத்தில் மகன் அருணுக்காக மட்டுமே தனது வாழ்க்கையைக்கடத்திய அருணின் அம்மா ஜி.எஸ் ஸும்...

தனது மகனிடம் ச்ந்திரா கள்ள உறவு வைத்திருப்பதை அறிந்தும் அதை நம்ப விரும்பாத ஜி.எஸ்ஸுக்கும், சந்திராவுக்குமான மனப்போராட்டங்களும்....

எத்தனை பேர் தனது வாழ்க்கையில் இப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் மாட்டியிருப்பார்கள், அல்லது நமக்குத்தெரிந்தவர்கள் யாராவது இப்படிச் சிக்கி சீரழிந்திருப்பதைப் பார்த்திருந்தால் இந்தக் கதை நம்மை மிக நெருக்கமாய்த் தொடக்கூடும்.

ஆந்திராவில் ஒரிசா எல்லையை ஒட்டி ஸ்டெர்லிங் கம்பினிக்காக வேலை செய்து கொண்டிருந்தபோது (இப்போது ஊத்திமூடப்பட்டு விட்டது) இதுபோன்ற சூழ்நிலையில் இருந்த ஒரு நண்பன் எனக்கிருந்தான். ஸ்ரீநிவாஸ் எனப்பெயர். வீட்டில் கல்யாணத்திற்காக அவனை கடப்பாறையால் அவனது பெற்றோர்கள் நெம்பிக் கொண்டிருக்க, இங்கு இவன் தனி வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தான். குழந்தையும், கணவனும் இருக்கும் ஒரு உணவகம் நடத்தும் பெண்ணிடம். ஊருக்குச் செல்வதுகூட அவனது காதலியைக் கேட்காமல் செய்யமாட்டான். அவ்வளவுதூரம் அதில் மூழ்கி இருந்தான். இந்தக் கதையில் வருவதுபோல மேகமெல்லாம் விலகி நிர்மலமான வானமாக அவனது வாழ்க்கை அமைந்திருக்கும் என இப்போது நான் எண்ணிக்கொள்கிறேன். அதை நேரடியாகப் பார்த்ததுமுதல் அங்கு சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டேன். அவனும் குற்ற உணர்ச்சியினால் என்னிடமிருந்து விலகிவிட்டான்.

கதையின் ஆரம்பம் முதல், இறுதிவரை வரும் கொஞ்சம் கூட குறையாத டெம்போ இந்த புத்தகத்தை மிகச்சிறிய புத்தகத்தைப் படித்ததைப் போன்ற உணர்வளிக்கிறது. அவ்வளவு வேகமாகப் படித்துவிடுவோம். மேலும் மிக, மிகக் கூர்மையான வசனங்கள், உரையாடல்கள், மூவருக்குள்ளும் நடக்கும் கண்ணாமூச்சிகள், எல்லாம் நமக்குத் தெரிந்தவர்களுக்கு நடந்திருந்து, அதைக் கதை வடிவில் படித்தால் எப்படி இருக்குமோ அப்படி உணர வைக்கிறது.

எப்படி இப்படி ஒரு கதைக் கருவை ஜெயமோகன் தேர்ந்தெடுத்தார் என்பது ஒரு ஆச்சரியம். தத்துவமும், நாட்டை குறித்த சிந்தனையும், இந்திய ஞான மரபும், இலக்கியமுமாக தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது இந்தக் கதையை எழுதினார் என்பதும், இத்தனை தீவிரமாக எழுதினார் என்பதும் ஆச்சரியமே. அவரது பலமே இதுதான் என நினைக்கிறேன். ஆகக் கடினமான தத்துவங்களை எழுதிக்கொண்டே நகைச்சுவைக் கட்டுரையையும் அதே வாரத்தில், இல்லையெனில் அதே நாளில் எழுதும் திறன் இவருக்கு மட்டுமே இருக்கும் என நினைக்கிறேன். மற்றவர்களுக்கெல்லாம் சாமி உள்ளேவந்து எழுதினால்தான் தத்துவமோ, அல்லது நாலுபேர் பரவாயில்லைனு சொல்ற மாதிரி கட்டுரைகள் மற்றும் பத்திகளை எழுத முடியும்போது, இவருக்கு இப்படி ஒரு திறன் இருப்பது அவருக்குக் கிடைத்த வரமே.

கதை முழுக்க அருன் - சந்திரா வரும் கட்டங்களும், பேசும் வசனங்களும், சூழ்நிலையும் நமக்கு ஒரு இனம் புரியாத கிளுகிளுப்பையும், உண்டாக்குகிறன. ஒருவேளை மனதளவில் நான் இன்னும் சின்னப்பையந்தானோ என்னவோ?

சந்திரா - வளர்ந்த மகன் இருக்கும்போது தன்னிடம் படிக்கும் மாணவனிடம் கொண்டிருக்கும் கள்ள உறவு, படிக்கும்போது சற்று அதீதமாய்த் தோன்றினாலும், இன்றைய செய்தித்தாள்களை தினமும் படிப்போருக்கு இந்த உறவுநிலை மிகச் சாதாரனமாய்த் தோன்றும்.

அருணின் தகப்பனாரின் கள்ள உறவு அதனால் உருவாகும் இன்னொரு குடும்பம். நமது தொலைக்காட்சி சீரியல்களுக்கு இந்தக் கதை கிடைத்தால் ஒரு மூன்று ஆண்டுகள் ஓடும் தொடர் எடுத்து விடுவார்கள்.

அனல்காற்று மூலம் உறவுகளின் அதிகபட்ச எல்லையை தொட்டு வந்திருக்கிறார் ஜெயமோகன்.

நல்ல வசனங்களுக்காககவும், ஜெயமோகன் கதை முழுக்க பொதுவாகவும் பெண்கள் குறித்தும்,சொல்லிச் செல்லும் தற்குறிப்பேற்றத்திற்காகவும், மிக வேகமான கதையோட்டத்திற்காகவும் இந்த நாவலை அவசியம் படிக்க சிபாரிசு செய்வேன். படித்து முடித்த பின்பு கிடைக்கப்போகும் ”எல்லாம் சுபம்” என்ற ஆசுவாசத்திற்காகவும் இதனைப் படிக்கலாம்.

1 comment:

கத்தார் சீனு said...

நல்லா எழுதி இருக்கீங்க ஜெயக்குமார்.
நான் ஏற்கனவே படித்து விட்டேன்...எனக்கும் ரொம்ப பிடித்து இருந்தது...
உறவுகளின் சிக்கலை அற்புதமாய் சொல்லி இருப்பார் ஜெயமோகன்.
இதை பாலுமகேந்திரா எடுத்து இருந்தால் ரொம்ப நல்ல படமாக வந்திருக்கும்.....