Friday, August 15, 2008

இந்திய சுதந்திர தினம்.

கத்தாரில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள்.


சுதந்திர தினம் இந்திய தூதரகத்தின்கீழ் வரும் இந்தியன் கல்சுரல் செண்டரில் நடைபெற்றது. கத்தாருக்கான இந்தியதூதர் டாக்டர் ஜார்ஜ் ஜோசப் மூவர்னக்கொடியை ஏற்றிவைத்தார்.






அதன் பின்னர் இந்திய பிரதமரின் உரையை தூதுவர் படித்த பின்னர் பள்ளிக்குழந்தைகளின் கூட்டுப்பாடல் (இந்தியில்) நடைபெற்றது. அதன் பின்னர் வழக்கம்போல கேக் வெட்டும் வைபவம் நடைபெற்றது.






இந்திய தூதரகத்தின் புதிய வலைப்பக்கம் இந்தியதூதரால் திறந்துவைக்கப்பட அதன் செயல்பாடுகள் மற்றும் விவரனங்கள் குறித்து உரை நிகழ்த்தப்பட்டது.

அதன் பின்னர் இனிய சிற்றுண்டியுடன் இந்திய தூதரகத்தின் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. இதன் பின்னர் தோஹாவில் உள்ள இந்திய பள்ளிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சிகளும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

எல்லாதரப்பு மக்களும் கலந்துகொண்டது நல்ல விஷயம். காலை 7.30 மணிக்கு அதுவும் வெள்ளிக்கிழமை வருவதென்பது ஆச்சரியம்தான்.

கத்தாரிலிருந்து வெளிவரும் கல்ஃப் டைம்ஸ் இந்திய சுதந்திரதின சிறப்பு மலரை வெளியிட்டிருந்தது.



















வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.

ஜெயக்குமார்

Friday, August 1, 2008

ரஜினியின் வள்ளி பாகம் 2 - குசேலன்







படம் ஆரம்பிக்கும்போதே ரஜினியின் செருப்புக்கால் ஆசிர்வாதம் இல்லாத படமாக இருக்கிறதே தேறுமா என்ற சந்தேகம் இருந்தது.. அதை நிரூபித்தது முழுப்படமும்...

இன்று குசேலன் பார்க்கப்போகிறோம் என்று அளவுக்கதிகமான சந்தோஷத்துடன் சென்ற ரஜினி ரசிகர்களை ஏமாற்றி அனுப்பிவிட்டார் பீ.வாசு.


ஆரம்பத்தில் அழகான கிராமமும், மீனாவும், பசுபதியும் நன்றாய்த்தான் ஆரம்பித்தது. அதன் பின்னர் அந்த கிராமத்தைவிட்டு படம் நகரவேயில்லை. மீனா மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாய் பிரமோஷன் பெற்றிருக்கிறார். ஆனால் அதே மீனா. பசுபதியை அதிகபட்சமாக நடிக்க சொல்லி இருப்பார்கள் போல.. மனுஷன் படம் முழுக்க இப்போ அல்லது அப்போ என அழுகைக்காக தயாராய் இருக்கிறார். பசுபதியின் குழந்தையாய் வரும் பெண் " எப்படிப்பா எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருக்க??" என்று ஒரு கேள்வி வேறு. அழகான கிராமத்து ஏரிக்கரையில் டால்பின் துள்ளி விளையாடுவதெல்லாம் ஓவர். வடிவேலு வழக்கம்போல் வெடிவேலு. ரஜினியை வடிவேலு சந்திக்கும் இடம் அருமை. "நீதான் பாக்குற நீதான் பாக்குற" என வடிவேலு சந்தோஷத்தின் உச்சியில் தன்னைத்தானே கூறிக்கொள்வது இன்னும் கொஞ்ச நாள் மனதில் இருக்கும்.

பணக்கார ரஜினியை ஏழை பசுபதி சந்திப்பது என்ற ஆலஇலையின் பின்புறம் எழுதக்கூடிய கதையை மூன்று மனிநேரமாக இழுத்தடித்து அதில் பாசம், வறுமை, குடும்பம், நட்பு, நகைச்சுவை, கவர்ச்சி எல்லாம் கலந்துகட்டி ஒரு கூட்டாஞ்சோறு ஆக்கி இருக்கிறார்கள். அதிலும் பசுபதியை வைத்து ஊரார் பாடும் பாட்டில் கவர்ச்சி என்ற பேரில் ஒரு கேவலமான நடனம்.

இப்போது வரும் ரஜினி படங்களில் ரஜினியை விட கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்.

சிவாஜியில் ஷ்ரேயாவை தோலுரித்தார்கள்.. குசேலனுக்கு நயன்தாரா.. வடிவேலுவுக்கு அவர் அளிக்கும் தர்ம தரிசனமும், அருவியில் குளிக்கும் பாடலும் அவரது அளவுகள் பற்றிய சந்தேகமிருப்பவர்களுக்கு ஒரு சிறந்த கையேடு.

கடைசி முப்பது நிமிடங்களில் வரும் ரஜினி கலங்க வைக்கிறார். ஆனால் அதற்காக மூன்று மணி நேர தண்டனையை தாங்க தயாராய் இருப்பவர்கள் மட்டுமே பார்க்கலாம்.. ஏகப்பட்ட செட்டிங்குகள், அனாவசியமான சந்திரமுகி ரீமிக்ஸ், ஒரு பாட்டு இதெல்லாம் வைத்தாலே எல்லோரும் பார்ப்பார்கள் என பீ.வாசு நம்பலாம்.. ரஜினி நம்பலாமா???

இது ரஜினி படமும் அல்ல.. நூறு சதவீதம் பசுபதி படமும் அல்ல.. பீ.வாசுவின் அக்மார்க் மசாலா படம். சந்திரமுகி என்ற ஒரு வெற்றியை தந்ததற்காக பீ.வாசுவை அருகில் வைத்திருக்கும் ரஜினி யோசிக்க வேண்டிய நேரம் இது.

மிக மிக சுமாரான திரைப்படத்தை திரை கொள்ளாத அளவுக்கு நடிகர்களைக் கொண்டு நிரப்பி இருக்கிறார்கள். ரஜினி வாழ்வளித்தோர் பட்டியலாக அது இருக்கலாம்.

புது இசையமைப்பாளர் பற்றி ரஜினி படப்பிடிப்பு நேரத்தில் உதிர்த்தது சரியே.. (யாருங்க இந்த சின்னப்பையன்??) எந்த பாட்டுமே மனதில் நிற்கவில்லை.. பின்னனி இசையும் சுமார் ரகம்.

ரஜினியும் பசுபதியும் எப்படி நண்பர்களானார்கள் என்ற கொசுவத்தி இல்லாமலிருந்தது ஒரு ஆறுதல்.

இந்த படத்தைப் பார்க்கும்போது ரோபோ பற்றிய பயம் அதிகரிக்கிறது.

படம் முழுக்க ரஜினி நுழைந்ததிலிருந்து இறுதிவரை அவரை ஆள் மாற்றி ஆள் சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், நேர்த்திக்கடன் மாதிரி...





கலியான வீட்டிற்கு வருவதுபோல் வந்த கூட்டம் (தோஹாவில்) படம் முடிந்து துக்க வீட்டிலிருந்து செல்வதுபோல சென்றனர். இன்று இரவு இரண்டு காட்சிகளுக்கும் இரவு 8 மணிக்கே அரங்கு நிறைந்துவிட்டது. நாளைமுதல் எப்படியோ..






பாவம் பசுபதி.. அடுத்து ஒரு நல்ல படத்தில் நடித்து பாவத்தை போக்கிக்கொள்ளவேண்டும்..

ரஜினி சார்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...

Wednesday, July 23, 2008

தம்மின் மெலியாரை நோக்கி தமதுடைமை



















மேலே உள்ள படத்தில் உள்ள வல்லூறு அந்த குழந்தை சாவதற்காக காத்திருக்கிறது. இப்புகைப் படத்தை எடுத்தவர் மூன்றே மாதத்தில் மன அழுத்தத்தில் இறந்துபோனதாக தெரிகிறது.



தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க
- தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
எற்றே யிவர்க்குநா மென்று


குமரகுருபரரின் இந்த வாக்கை அடிக்கடி நமக்கு மெய்ப்பிக்க வேண்டி இந்த ஆப்பிரிக்க நாடுகள் இருக்கின்றனவோ என நினைக்கத்தோன்றுகிறது. நம்மில் எத்தனை பேர் எத்தனை தடவை வீட்டிலோ அல்லது போன இடங்களிலோ "இதெல்லாம் மனுஷன் சாப்பிடுவானா" எனக்கூறி இருக்கிறோம்?? ஆனால் உலகில் எத்தனையோ இடங்களில் ஒருவேளை உணவாவது கிடைக்காதா என ஏங்குவோர் பலர்.

இங்கு இணைத்துள்ள படங்களைப்பார்க்கும்போது கடவுளால் அதிகம் நேசிக்கப்படுவது நாம்தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

கத்தாரில் கூட ஸ்பான்சர்களால் கைவிடப்பட்ட எத்தனையோ நேபாளிகளையும், பங்களாதேஷிகளையும் பேப்பர் பொறுக்க காணும்போது மனதில் மண்டும் சோகம். எனது நிஜமான எண்ணங்கள், உணர்ச்சிகள் இவை. பெப்சி டப்பாக்களும், பாலிதின் கவர்களும் பொருக்கி அதில் கிடைக்கும் காசும், மற்றும் எங்கெல்லாம் வேலைகிடைக்குமோ அங்கெல்லாம் வேலைசெய்தும் தனது உணவுக்கு உயிரைகொடுத்து வேலைசெய்வோர் பலர். இவர்களை நம்பி ஊரில் இருக்கும் குடும்பங்கள் என்ன ஆகும்?? எப்படி சாப்பிடுவார்கள்???

எப்போது வேலைக்கு வெளியே வந்தேனோ அப்போதே சாப்பாடைகுறை சொல்வதை நிறுத்திக்கொண்டேன். என்ன கிடைக்கிறதோ அதையே உண்ணவும் கடைசி பருக்கை வரை சாப்பிடவும் பழகிக்கொண்டேன். பிடிக்காத காய்கறிகளை வாங்குவதை நிறுத்தி பிடிக்கும் பொருட்களை வாங்கி முழுதும் பயன்படுத்தும் மனநிலைக்கு எப்போதோ மாறியாகிவிட்டது. வீணாய் செலவழித்த பணத்தை நல்ல வழியில் சேமிக்கப் பழகி இருக்கிறேன்.

இன்று உலகம் இருக்கும் சூழ்நிலையில் நமக்கு நாமே சாப்பாட்டையும், தண்ணீரையும் வீணாக்கமாட்டேன் என்ற உறுதிமொழி எடுக்கவேண்டும். ஒவ்வொருமுறை அனாவசியமாய் குழாயைத்திறந்து வைத்துக்கொண்டு பல்துலக்கும்போதும், முகச்சவரம் செய்யும்போதும் யாருக்கோ கிடைக்கவேண்டிய தண்ணீரை நாம் வீணாக்குகிறோம் என்ற எண்ணம் மனதில் தைக்க வேண்டும். பள்ளியில் படிக்கும்போது கேட்ட செய்தி இது. காந்தியடிகள் கங்கைக்கரையில் பல்துலக்கும்போதுகூட தேவையான அளவு மட்டுமே தண்ணீர் எடுத்து பல்துலக்கினாராம். கூட இருந்தவர்கள் எப்படியும் கடலுக்குத்தானே சென்று சேர்கிறது அதை சற்று தாராளமாய் பயன்படுத்தினால் என்ன எனக் கேட்டபோது பிறருக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரை நான் எடுத்துக்கொள்வது எப்படி முறையாகும் எனச்சொன்னாராம். காந்தியடிகள் சொன்ன "தேவைக்குமேல் வைத்திருப்பவன் திருடன்" என்ற கூற்றும் இன்றைக்கு உண்மையாய் கண்கூடாய் காணும் நிலையில் இருக்கிறோம்.

குறைந்தபட்சம் சிந்திக்கும் கூட்டம் என நினைக்கும் நாம் இதைப்பின்பற்றலாமே!!!!

அன்புடன்,

ஜெயக்குமார்

Sunday, July 13, 2008

75 ரூவாயும் கல்விச்சுற்றுலாவும்..

வாழ்க்கையில் முதன்முதலாக போன சுற்றுலா நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் உறவினர்களுடன் சென்ற ஒரு மாத தென்னிந்திய சுற்றுலா.. அதில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் அனைத்து குடும்பங்களும் சந்தித்து அங்கிருந்து புறப்படுவதாக ஏற்பாடு. முதன்முதலாக ரயிலில் ஏறியதும் அன்றுதான். ரயில், ஓடும் தண்டவாளத்திலிருந்து பிரிந்து பின் சேர்வதும் கைகாட்டிகளும், வண்டியோடும் திசைக்கு எதிராக ஓடும் வயல் வரப்புகளும், வீடுகளும் அப்படியே ஒரு புதுவித அனுபவத்தைத் தந்தது. எல்லாக் குடும்பங்களும் ஒரே கம்பார்ட்மெண்ட், ஒரே பேருந்து, ஒரே தங்குமிடம் என அருமையாய் எங்கள் பயணத்தைக் தொடர்ந்தோம்.

மேற்கூறிய சுற்றுலாவிற்குப் பின்னர் ஒம்போதாப்பு படிக்கும்போது எங்களது கா.நி.மே.நி. பள்ளியில் அழைத்துச்சென்ற கல்விச் சுற்றுலா-மறக்கமுடியாத ஒரு ஜாலி டூர்
வாழ்க்கையில் முதன்முதலாய் அம்மா அப்பாவுடன் இல்லாமல் தனியாக இருந்த மூன்று நாட்கள் அவை.

கல்விச்சுற்றுலாவுக்கு எங்கள் பள்ளியில் கூட்டம் சேர்ப்பதற்குள் ஆசிரியர்களுக்கு தாவு தீர்ந்துவிடும். எங்கள் ஊரே ஒரு கிராமம். அந்த ஊரில் உள்ள எங்கள் பள்ளியில் படிக்க எங்கள் ஊரைவிட வரப்பட்டிக்காடு கிராமங்களில் இருந்து வரும் ஏழைமாணவர்கள் படிக்கும் பள்ளி அது. வருடம் பதினைந்து ரூபாய் கட்டணம். அதையே மூன்று தவணைகளில் கட்டும் ஆட்களும் உண்டு. (1983) அதுபோல சூழ்நிலையில் இருக்கின்ற ஐந்நூறு மாணவர்களில் ஒரு ஐம்பது மாணவர்களை சேர்ப்பது எவ்வளவு பெரிய இமாலய சாதனை?? பயணக்கட்டணம் ரூபாய் எழுபத்தைந்து. மூன்று நாட்கள் பயணம். முதல் நாள் கட்டுச்சோறு. மற்ற இரண்டு நாட்களும் எங்கள் அய்யாக்களே சாப்பாடு வாங்கித்தந்து விடுவார்கள் அந்தப் பேருந்து கட்டணத்திலேயே. இந்த கட்டணத்தில் ரெண்டு நாள் சாப்பாடும் போட்டு வண்டிவாடகையும் குடுத்து கூப்டுட்டு போக ஆம்னி பஸ்ஸா கிடைக்கும்.?எங்களுக்கென்றே ஜெயவிலாஸ் கம்பெனியிலிருந்து ஒரு இத்துப்போன பஸ் கருப்பு பெயிண்டும் மஞ்சள் பார்டரும் போட்டு வரும். அதுதான் எங்கள் பயண ஊர்தி. எங்கள் சயின்ஸ் வாத்தியார்தான் இந்த கல்விச்சுற்றுலா ஒருங்கிணைப்பாளர். அப்படியே ஒவ்வொரு மரத்தடிக்கு கீழேயும் ஒரு நாள் மீட்டிங் நடக்கும். அப்பத்தான எல்லா இடத்தையும் கவர் பண்ண மாதிரி இருக்கும். எங்க பள்ளிக்கூடத்துல இருக்குற மரங்கள எண்ணி மாளாது. பணம் முதல்லேயே குடுத்தவைங்க முன்னாடியும், குடுக்காதவங்க பின்னாடியும் உக்காந்து எங்க எங்கெல்லாம் போகப் போறோம் அங்க என்னென்ன விசேஷம் எல்லாம் விவரமா அய்யா எடுத்துச்சொல்வார். இன்னைக்கு இருக்குற கைடுக எல்லாம் எங்க அழகர்சாமி அய்யாகிட்ட பிச்சை வாங்கனும். இங்கிருந்து நேரா கெளம்பி திருச்சி உச்சிப்புள்ளையாருக்கு ஒரு கும்புடப்போட்டுட்டு, அப்படியே ஸ்ரீரங்கம் போறோம். காவிரி போற அழகை அப்படியே பாத்துக்கிட்டே இருக்கலாம்டா. அப்புறம் அங்கையே மத்தியான சாப்பாடு. அங்கிருந்து நேரா கெளம்பி மெட்ராஸுக்குப் போறோம். அங்க ஜெயவிலாஸ் கெஸ்ட் ஹவுசுல தங்கல். மறுநா காலையில அப்படியே ம்யூசியம். அங்க நம்ம ராமனய்யா பின்னாலையே போகனும்டா. நாங்களும் கண்ணு வச்சிருப்போம். இருந்தாலும் சொல்றேண்டா. அப்புறமா மெரினா பீச். உலகத்துலையே பெரிய செயற்கை கடற்கரை. அங்க இருந்துட்டு சாமான் வாங்குறவங்கெல்லாம் வாங்கிக்கிறீங்க.. அப்படினு ஒவ்வொரு இடமா சொல்லிக்கிட்டே வருவார். இந்த சுற்றுலாவுல கலந்துக்கல நம்மோட வாழ்க்கையே போச்சு அப்படிங்கிற எண்ணம் வர்ரமாதிரி சொல்லுவாரு. ஒவ்வொரு மீட்டிங் முடிஞ்ச மறுநாள் ரெண்டுபேராவது பேர் குடுத்துருவாய்ங்க. அவிங்க அப்பா அம்மாவ அடிப்பாய்ங்களோ இல்ல இவைங்களையே அடிச்சிகிருவாய்ங்களோ தெரியாது. பணத்தை தேத்திருவாய்ங்க. இல்லைன்னா அப்பாவ விட்டு பையன் டூருக்கு கண்டிப்பா வாரான்னு அய்யாகிட்ட சொல்ல வச்சி பஸ்ஸுல சீட்டு போட்ருவாய்ங்க.பணம் பின்னாடி குடுத்துக்கலாம் . இப்படியே ஒரு மாசம் நடக்கும் அதுக்கப்புறம் புறப்படுற அன்னைக்கு மொதநா ராத்திரியே பள்ளிக்கூடத்துல வந்து படுத்துக்கிரனும். சிலசமயம் டேய் பஸ் இன்னிக்கு வர்லையாம்டா நாளைக்குத்தானாம்டா என எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்கள் கதைகட்டி விடுவார்கள். காலையில அஞ்சு மணிக்கு பஸ் வரும். அவ்வளவுதான். கூட்டமா ஓடி மொதல்ல அவன் அவன் பிரண்டுகளோட இடம் பிடிச்சி உக்காந்துகிருவாய்ங்க.
ஆனா அய்யாவுங்க வந்த உடனேயே சின்னப்பயகெல்லாம் முன்னாடி வாங்கடான்னு அய்யா பக்கத்துலையே உக்கார வச்சிருவாங்க. கொஞ்சம் வளந்த பசங்க செய்யிற கொஞ்ச நஞ்ச சேட்டையும் செய்ய முடியாம அப்படியே இருக்க வேண்டியதுதான்.
ஒவ்வொரு ஊரா கூட்டிட்டுபோயி எங்களுக்கு எங்க ஓசியில தங்க இடம் தருவாங்களோ அங்கன தான் தங்குவோம். அங்கயும் காலங்காத்தால் கூட்டுப்பிரார்த்தனை எல்லாம் இருக்கும். எங்க பள்ளிக்கூட பெருமைய காமிக்க. எங்க பள்ளிக்கூட பேமஸே கூட்டு பிரார்த்தனைதான். எங்க பள்ளிக்கூடத்துக்கு யார் வந்தாலும் அவைங்கள ஒரே அமுக்கு அமுக்கனும்னா கூட்டுப்பிரார்த்தனைதான். எங்க பள்ளிக்கூடத்துல உள்ள நிறைய கட்டிடங்கள் பல தொழிலதிபர்கள் கட்டிகொடுத்தது. பொள்ளாச்சி மகாலிங்கமாகட்டும், மறைந்த காஞ்சிப்பெரியவர் ஆகட்டும், முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆகட்டும், ஜெயவிலாஸ் மொதலாளி ஆகட்டும் மொதல்ல கூட்டுப்பிரார்த்தனைதான். அப்புறம்தான் பேச்செல்லாம். 'ஓம் தத் சத்' அப்படின்னு இந்து மதப் பிரார்த்தனையில் தொடங்கி, 'அவ்வூது பில்லாஹி மின ஷைத்தான்" என எங்கள் அப்பாஸ் அலி அய்யாவோ அல்லது அக்பர் அலி அய்யாவோ சொன்ன பின்பு 'பரமண்டலத்திலிருக்கும் எங்கள் பிதாவை' அழைத்து எங்கள் பிரார்த்தனை முடியும். நான் படித்த 13 ஆண்டுகளும் ( அட குட்டிஒண்ணாப்பையும் சேத்துங்க) மாறாதிருந்த வரிசை இது.

மெட்ராஸ்ல மியுசியத்துல, டாய்லட்டுக்குள்ள போன ஒருத்தன் ஒரு மணிநேரமா காணோம். ராமனய்யவும், அழகர்சாமி அய்யாவும் ரெண்டு வாட்டி மூணுவாட்டி தலைய எண்ணி பேரக்கூப்டுப்பாத்தாச்சு ஒரு ஆளு மட்டும் குறையுறான். அப்புறமா ஆடி அசைஞ்சு வர்றாரு நம்ம ஆளு. ராமனய்யா கேட்டது இன்னும் நெனவு இருக்கு. எண்டா வெளிக்கிப்போனயா இல்ல கொடல புடுங்கி சுத்தம் பன்னயாடானு. பண்ணயாடானுஅப்புறம் மகாபலிபுரத்துல ஒருத்தன் அப்புறம் இன்னொரு இடத்துல ஒருத்தன்னு ஒவ்வொருத்தனையா தேடி ஊருக்கு கொண்டு வந்து சேக்குரதுக்குள்ள அய்யாக்களுக்கு நாக்குத்தள்ளிரும். எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு செஞ்சாங்க ?? நம்ம பசங்களுக்கு நாலு இடம் சுத்திப்பாத்தாதான வெளிய என்ன நடக்குதுன்னு தெரியும் அதுக்காகத்தான் இவ்வளவு சிரமமும் எடுத்து செஞ்சாங்க. இப்பெல்லாம் அப்படி கல்விச்சுற்றுலா எல்லாம் கூப்டுட்டு போறாங்களான்னு தெரியல.
மூணு நாள் பயணம்முடிஞ்சஉடனேயே ஒரு பயணக்கட்டுரை எழுதி முடிச்சா அந்த நிகழ்ச்சி நிறைவு பெறும்.
எனக்கு இந்த சந்தோஷம் பள்ளிக்கோடத்துல ஒருவாட்டி கிடைச்சுது. அதுக்கப்புறம் காலேஜுல போன கல்விச் சுற்றுலாவத்தான் சுற்றுலான்னு சொல்ல முடியும். சும்மா படமெடுத்து ஆடுனாய்ங்க எங்காளுக எல்லாம். படிக்கிற காலத்துலயே காந்திகிராம பல்கலைகழகத்துல படிச்சவைங்களே அப்படித்தான் இருந்தாய்ங்க. சிகரெட் என்ன, சரக்கு என்ன சும்மா ஊட்டியில ராத்திரி குளுருல ஆட்டமா போட்டாய்ங்க. அதுல ஒருத்தனுக்கொருத்தன் கைலிய பிடிச்சு இழுக்க, பிடிக்காத வாத்தியார சவுண்டு விட அப்படின்னு ஒரே அமர்க்களமா போச்சு. ,மெட்ராஸ்ல வந்த பின்னாடி ஒரே சமத்துவமா எங்க வாத்தியாரும், பயகளும் சேந்து தண்ணி அடிச்சு ஒரே பாசமழை. திரும்பி வந்து இண்டேர்னல ஆப்பு அடிச்சாங்க அது தனிக்கதை. அதுலையும் சின்னத்தம்பின்னு ஒருத்தன் சிரிக்கிற சிரிப்புக்கு ஊரே திரும்பி பாக்கும். கலக்கலா போயிட்டு வந்தோம். போன இடத்துல போன ரெண்டு வண்டியில ஒரு வண்டி ஆக்சிடென்ட் ஆயி எல்லோரையும் ஒரே பஸ்சுல போட்டு அடைச்சி யுனிவேர்சிடியில கொண்டுவந்து தள்ளுனாங்க. முழுசா அனுபவுக்க முடியாட்டியும் இருந்தவரைக்கும் அனுபவிச்ச அமர்க்களமான டூர் அது. நமக்குத்தான் வேடிக்கை பாக்குற பாக்கியத்தோட முடிஞ்சுபோச்சு. சேட்டையில எல்லாம் கலந்துக்குற அளவுக்கு தைரியமும் , வசதியும் இல்ல அப்ப.
இப்ப சுத்துறதுதேன் பொழைப்பா இருக்கு. ஆனா அங்க அனுபவிச்சசந்தோஷம் இனிமே கிடைக்குமா என்ன??

Sunday, July 6, 2008

தோஹா - கத்தாரின் அழகான இடங்கள். Part 1

தோஹாவில் கடற்கரை மட்டுமே செலவு இன்றி பொழுதுபோக்கும் இடம். மாற்ற இடங்களில் எல்லாம் ( ஷாப்பிங் மால்கள், கிளப்புகள் வகையறா) பணம் இருப்பின் மட்டுமே இருக்க முடியும்.

ஒரு மாலை நேரத்தில் கடற்கரையில் இருந்து கடலில் உள்ள ஒரு சிறு திட்டை படம் எடுத்தேன். நன்றாக இருப்பதாக நான் நினைத்ததால் உங்கள் பார்வைக்கு..

 



கடற்கரையை ஒட்டிய நடைபாதையும், கடற்கரையும்.


 


தொலைவில் தெரிவது இஸ்லாமிய பொருட்காட்சிகள் நடக்கும் இடம். தற்போது விரிவாக்கம் நடைபெறுகிறது.

 


பொழுதுபோக்குப் படகு. ஒரு ஆளுக்கு பதினைந்து ரியால்களும் மொத்தமாக வாடகைக்கு எடுக்க அறுபது முதல் எழுபது ரியால்கள் வரையும் வாங்குகிறார்கள். முப்பது நிமிட பயணத்திற்கு. செப்டம்பர் மற்றும் அக்டோபரில் இதில் சென்று வந்தால் அருமையாக இருக்கும்.


 


அடுத்த பகுதி போட்டோக்கள் விரைவில்..

Friday, June 20, 2008

பாரு பாரு தோஹா பாரு..

பாரு பாரு தோஹா பாரு..

எனக்கும் எழுதறதுக்கு வேற விஷயம் இல்லாததனால நான் இப்போதைக்கு இருக்குற தோஹாவைப் பத்தியும் அதில் பாக்க வேண்டிய இடங்களைப் பத்தியும் உங்களுக்கு சொல்லலாமுன்னு இந்த பதிவு.


முதல்ல கார்னிச் எனப்படும் கடலில் விளையாட முடியாத கடற்கரை:-

பெரும்பான்மையான மக்களின் மாலை நேர பொழுதுபோக்கு இந்த கடற்கரையில் அப்படியே வாக்கிங் போவதுதான். கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் எந்த விதமான தொந்தரவும் இன்றி மெதுவாய் நடக்கலாம். காவல்துறையின் தலைமையகமான மினிஸ்ட்ரி ஆஃப் இன்டீரியரிலிருந்து அப்படியே ஆசிய விளையாட்டுப் போட்டி சின்னம் வரை காலாற நடந்து போகலாம். அதன் படம் கீழே.









ஷாப்பிங் மால்கள் :-

இங்கு அதிகம் அறியப்பட்ட மால்களாக இருப்பவை கேர்ரபோர், லூலூ ஹைபர் மார்கெட், சிடி சென்டர், டாஸ்மான் சென்டர் என பல வகையான மால்கள். இது தவிர இந்திய குடும்பங்கள் விரும்பிச் செல்லும் ஃபெமிலி புட் சென்டர் மற்றும் இந்தியன் சூப்பர் மார்கெட் ஆகியன உள்ளது. இந்தியாவில் கிடைக்கும் அனைத்து சாமான்களும் இங்கு கிடைக்கும், வடகம் வத்தல் முதல் வாழை இலை வரையும் அனைத்தும் கிடைக்கும். கருகப்பிலை இலவசமாய் தருவது ஃபெமிலி புட் சென்டர் மற்றும் இந்தியன் சூப்பர் மார்கெட் ஆகியன. லூலூவிலும் எல்லாம் கிடைக்கும் ரெடிமேட் இட்லி மாவுவரை. அரிசி தஞ்சாவூர் பொன்னி, இந்திய, பாகிஸ்தானிய பாசுமதி அரிசிகள் பங்களாதேஷ் மற்றும் இந்திய காய்கறிகள், பிலிப்பின, மற்றும் ஆஸ்திரேலிய பழங்கள் எல்லாம் கிடைக்கும். கத்தாருக்கு வர விரும்புபவர்கள் உணவுக்காக யோசிக்க வேண்டாம் தைரியமாய் வரலாம்.

உணவகங்கள் :-




இது போன்ற கடைகள் தவிர திருநெல்வேலியின் ஆரியாஸ், சென்னையின் ஹோட்டல் வசந்தம், ஷாலிமார், மற்றும் எளியவர்களுக்கான ஹோட்டல் போனன்சா போன்ற ஹோட்டல்களும் உண்டு. நம்மூர் இட்டிலி, தோசை முதற்கொண்டு எல்லாம் கிடைக்கும். இங்கு வருகின்ற அனைத்து ஆட்களும் தவறாமல் சொல்வது நம்மூர் விலைதான் இங்கேயும் உள்ளது என. இரண்டு இட்டிலி நாற்பது ரூபாய்கள். பில்டர் காபி நாற்பது ரூபாய்கள், நம்மூர் மதிப்பில். மற்றபடி சைனீஸ் உணவு வகையில் ஆரம்பித்து, லெபனான் உணவுகள், சூடானிய உணவுகள், நேபாள உணவுகள் என உணவில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையும் கிடைக்கும். பர்ஸ் மட்டும சீக்கிரம் ஆவியாகிவிடும்.

போனன்சா ஹோட்டலில் பத்து ரியால்கள் இருந்தால் நான்கு இட்டிலி, ஒரு தோசை ஒரு காப்பியும் சாப்பிட்டு விடலாம். சிவகங்கையை சேர்ந்த ஒருவர் நடத்துகிறார். நம்மூர் மக்களின் கூட்டம் எப்போதும் இருக்கும். எத்தனை முறை கேட்டாலும் சாம்பாரும் சட்னியும் கிடைக்கும். கிட்டத்தட்ட மதுரையிலும். சிவகங்கையிலும் சாப்பிடுவது போன்ற உணர்வுதான் இருக்கும். அண்ணே, அப்படின்னு கூப்டா போதும் மூணு சட்னி, ஒரு சாம்பார் எல்லாத்தையும் இடம் இருக்குற வரைக்கும் ஊத்திட்டு போயிருவார். எனக்குப் பிடித்த ஓட்டல்களில் போனன்சவும் ஒன்று அதன் சுவைக்காகவும், நம்ம ஊர்க்காரர் ஓட்டல் என்பதாலும், இன்னும் குறிப்பாய் அதன் விலைக்காகவும்.


நமது மக்களின் பொழுதுபோக்குகள்:-

வேலை செய்துவிட்டு வந்து தொலைகாட்சி பார்த்தல். அது தவிர வெள்ளிக்கிழமைகளில் தோகாவில் எங்காவது சந்தித்தல். தோஹாவில் சந்தித்தல் என்பது எல்லாராலும் முடியாத காரியம். அவரவர்கள் வேலை செய்யும் கம்பெனி அனைவரையும் சாமான்கள் வாங்கவும் மற்றபடி வெளியுலகைப் பார்க்கவும் வாரம் ஒரு நாள் கம்பெனி வண்டியிலேயே வேலையாட்களை அழைத்துச்சென்று பின்னர் திருப்பி அழைத்துவருவார்கள். அப்போதுதான் உள்ளூர்க்காரன், சொந்தபந்தம், தெரிஞ்சவன் இப்படி பலபேர் சந்திக்கும் களமாகவும், ஊருக்கு பணம் அனுப்புவதற்கு ஒரு வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். கீழே உள்ள படம் பணம் அனுப்புவதற்காக நிற்கும் கூட்டம்.





வெள்ளிக்கிழைமை மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை இருந்துவிட்டு அடுத்தவார பணிகளுக்கு தயாராக திரும்பவேண்டும். பல கம்பெனிகள் வாகன வசதிகள் கூட செய்து தராது.

கொஞ்சம் நல்ல வேளையில் வந்தவர்கள் கடற்கரையிலும், ஷாப்பிங் மால்களிலும் பொழுதைக் களிப்பர். இது தவிர நிறைய இரவு உணவு விடுதிகளும், கிளப்புகளும், உண்டு. இந்தியன் கிளப் கூட உண்டு கத்தாரில்.

சினிமாக்கள்







தோஹா சினிமா, மற்றும் கல்ப் சினிமா என இரண்டு தியேட்டர்களில் தமிழ், தெலுகு மற்றும் மலையாள படங்களும் வரும். இது தவிர மால் சினிமாவில் அவ்வப்போது தமிழ் படங்கள் வரும். சிடி சினிமா போன்ற பல தியேட்டர்கள் உள்ளன. தமிழ் சினிமாக்கள் அனைத்தும் 25 கத்தாரி ரியால்கள் பால்கனியில் அமர்ந்து பார்க்க. முதல் வகுப்பு கட்டணமாக ௨0 கத்தாரி ரியால்களும் அதற்க்கு கீழே 15 கத்தாரி ரியல்களும் கட்டணம். நம்மூர் திண்டுக்கல், மதுரை தியேட்டர்கள் போலத்தான் இருக்கும். மற்ற மால் சினிமா சிடி சினிமாக்கள் அனைத்தும் நம்மூர் சினி, மினி பிரியா போல இருக்கும். இது தவிர திருட்டு வி சி டிக்கள் வெள்ளமென கிடைக்கும். ஒரு படம் ௧0 ரியாலிலிருந்து ௧௫ ரியால்கள் வரை விற்கப்படும் குத்து மதிப்பான கணக்கு என்னவெனில் ஒரு சி.டி ஐந்து ரூபாய், அதான் கணக்கு. என்ன படம் வேண்டுமானாலும் கிடைக்கும் குசேலரு தவிர..


..தொடரும்...

Wednesday, June 18, 2008

வாகனக் காப்பீடு - இந்தியாவிலும், கத்தாரிலும். ஒரு ஒப்பீடு

சமீபத்தில் ஊருக்குப் பேசியபோது எனது அக்கா சொன்னது அவரோட வண்டி(அக்காவின் கணவர் ) ஆக்சிடென்ட் ஆயிருச்சிடா அப்படின்னாங்க. அப்படின்னா உடனேயே காப்பீடு செய்துள்ள கம்பெனிக்கு தகவல் சொல்லி இழப்பீடுக்கு மனு போடச் சொல்லுங்க அப்படின்னேன். ஏனெனில் மொத்த செலவு பதினையாயிரம் ரூபாய்கள். இருந்தும் அவர்கள் இழப்பீடு வாங்க விரும்பவில்லை.

இந்தியாவில் இழப்பீடு பணம் கையில் கிடைப்பதற்குள் நமது வாகனம் ஓடுவதற்கு லாயக்கில்லாமல் போனாலும் போய்விடும் அளவுக்கு தாமதம் செய்கிறார்கள். எனவே கைக்காசை போட்டு செலவு செய்துவிட்டு வண்டி ஓட்டத்தில் இருந்தால் குறைந்தபட்சம் வண்டிக்கான வங்கி கடனையாவது அடைக்க முடியுமே என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். பிறகு எதற்கு காப்பீடு செய்தீர்கள் என்றால் இல்லையெனில் வாகனம் பதிவு செய்யப்படமாட்டாது என்பதற்காக.

நான் வேலை செய்யும் கத்தார் நாட்டில் விபத்து நேர்ந்தால் கீழ்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

விபத்து நடந்த உடன் போலிசுக்கு தெரியப்படுத்துதல் அவசியம். சிறிய விபத்தோ பெரிய விபத்தோ.

பின்னர் தவறு யாருடையது என்பது தெளிவாகத்தெரிந்தால் போலிசுக்கு தகவல் சொல்லிவிட்டு நாங்களே போலிஸ் ஸ்டேஷன் வருகிறோம் எனச்சொல்லிவிட்டு அங்கு சென்று போலிஸ் பேப்பர் எனப்படும் விபத்து பற்றிய குறிப்பும் இழப்பீடு பெறுவதற்காக ஒரு குறிப்பு இழப்பீட்டு கம்பெனிக்கும் வழங்கப்படும். பெரிய விபத்துகளுக்கும், யாருடைய தவறு என தீர்மானிக்க முடியாமல் இருக்கும் பட்சத்தில் போலிஸ் வரும்வரை காத்திருக்க வேண்டும். உங்கள் அதிர்ஷ்டம் மற்றும் விபத்து நடந்த இடத்தைப் பொறுத்து ஒரு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் போலிஸ் வரும். அதன் பின்னர் அவர் யார்மீது தவறு என விபத்து நடந்த விதத்தை வைத்து முடிவு செய்து தீர்ப்பு சொல்வார். அதுதான் தீர்ப்பு.அதன் பின்னர் இழப்பீடு கம்பெனிக்கும் வாகனம் சரி செய்யும் பணிமனைக்கும் போலிஸ் பேப்பர் கொடுப்பார்கள். இதைக் கொண்டு போய் இழப்பீடு கம்பெனியில் கொடுத்தால் அவர்கள் குறிப்பிட்ட தொகையை வசூலித்துக் கொண்டு வாகனத்தை சரிசெய்ய ஒரு சீட்டு கொடுப்பார்கள் அதைக் கொண்டு போய் உங்கள் வாகனம் எந்த கம்பெனி தயாரிப்போ அங்கு செய்து சீர் செய்து கொள்ளலாம். இது வாகனம் வாங்கியதிலிருந்து முதல் ஆண்டுக்கு மட்டும். அதன் பின்னர் இரண்டாம் ஆண்டிலிருந்து இழப்பீடு கம்பெனி குறிப்பிடும் பல பணிமனைகளில் உங்களுக்கு அருகில் இருக்கும் அல்லது நீங்கள் நம்பும் பணிமனையில் கொடுத்து சரிசெய்து கொள்ளலாம். விபத்து நடந்ததிலிருந்து வாகனம் சரியாகி உங்கள் கைக்கு கிடைக்க அதிகபட்சம் 15 நாட்கள் முதல் இருபது நாட்கள் ஆகலாம்.

பத்தாயிரம் கத்தாரி ரியால்களுக்குள் இருப்பின் உடனடியாக இழப்பீடு கிடைக்கும். அதற்கு அதிகமான தொகைக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதன் கேஸ் எண் தரப்படும். அதன் பின்னர் இழப்பீடு கிடைக்கும்.

இதிலும் அதிகபட்சம் பத்து முதல் பதினைந்து நாட்களுக்குள் போலிஸ் பேப்பரும் கோர்ட் என்னும் கிடைத்துவிடும். எனவே விபத்து நடப்பதால் யாரும் கவலைப்படுவதில்லை. நம்மூர் மதிப்பில் ஐயாயிரம் ரூபாயை இழப்பீடு கம்பெனிக்கு கொடுத்துவிட்டால் ஒன்னேகால் லட்ச ரூபாய் வரை இழப்பீடு பணம் கிடைக்கும்.

இவ்வளவு எளிதாக வாகன காப்பீடு செய்யப்படும்போது நமது நாட்டில் மட்டும் ஏன் இத்தனை சிக்கல்கள் எனத்தெரியவில்லை.

இது தவிர இங்கு போக்குவரத்தும் மிகத்தீவிரமாக கண்காணிக்கப் படுகின்றன. இருப்பினும் சாலை விபத்துக்கள் மிக அதிகம். ஒவ்வொரு சாலை போக்குவரத்து விதிமுறை மீறலும் கடுமையாக தண்டிக்கப் படுகிறது. இருப்பினும் இத்தனை விபத்துகள்.

சாலைகளில் சர்வசாதரணமாக பயன் படுத்தவே முடியாத அளவு சேதமடைந்த வண்டிகள் கிடக்கும். முனிசிபாலிட்டி ஆட்கள் வந்து எடுத்துப் போடும்வரை அங்கேயே கிடக்கும். எந்த ஒரு விபத்து நடந்தாலும் அதிகபட்சம் ஒரு மணிநேரத்தில் அந்த இடத்தில் விபத்து நடந்த சுவடே இன்றி சுத்தம் செய்து சாலை போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும்.

எல்லா இடங்களிலும் ரேடார் மூலம் வாகன வேகத்தை கண்காணிக்கிறார்கள். நூற்றி இருபது கிலோமீட்டர் தான் அதிக பட்ச வேகம். அதற்கு மேல் வேகமாய் செல்லும் பட்சத்தில் ராடார் உங்களை காட்டிகொடுத்துவிடும். உங்கள் வண்டி எண்ணின் பெயரில் முன்னூறு ரூபாய் பற்று வைக்கப்படும். அடுத்த முறை வாகன பதிவை புதுப்பிக்குமபோது அந்த பணத்தைத் தரவேண்டும். இதுதவிர தவறான இடத்தில் வாகனத்தை நிறுத்தினால் இருநூறு ரியால்களும், பொதுமக்களுக்கு இடையூறு செய்வதுபோல வாகனத்தி நிறுத்தினால் அறுநூறு ரியால்களும் கட்டவேண்டும். எல்லா போக்குவரத்து காவலரும் ஒரு புத்தகத்தோடேயே திரிவார். எங்காவது போக்குவரத்து விதிமுறை மீறல்களைக் கண்டால உடனே பைன் எழுதி வண்டியின் ஓட்டுனர் அருகில் இருக்கும் கண்ணாடியில் ஒட்டிவிட்டுச் செல்வார்.

நமது நாட்டிலும் விதிமுறைகள் கடுமையாக்கப் பட்டு அதனை செயல்படுத்துவதன் மூலமே விபத்துக்களைத் தடுக்கவும், உயிர் இழப்புகளை தவிர்க்கவும் முடியும். காப்பீடு நிறுவனங்கள் விதிகளை எளிமையாக்கி அனைவருக்கும் காப்பீடு உரிய நேரத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதன் பின்னர் காப்பீடு செய்ய மக்கள் வருவார்கள், நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்யாமலேயே..

ஜெயக்குமார்

Monday, June 16, 2008

தசாவதாரம் என்னும் கமல் மட்டுமே கலந்து கொண்ட மாறுவேட போட்டி


தசாவதாரம் என்னும் கமல் மட்டுமே கலந்து கொண்ட மாறுவேட போட்டி.

ஒரு மோசமான திரைப்படத்தைக் கூட எப்படி விற்பனை செய்வது பற்றி கமலிடம் தெரிந்துகொள்ள நிறைய உள்ளது. ஜக்கிசானை வைத்து ஒலிபேழை வெளியீடு என்ன.. மல்லிகா ஷெராவத்தின் கவர்ச்சி அணிவகுப்பு என்ன, எண்பத்தைந்து வயதுள்ள முதியவருக்கு படத்தைப் போட்டுக்காட்டி அவரைக் கட்டிபிடித்து பாராட்டிய செய்திகளை வெளியிடுவதென்ன என இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பை இமாலய உயரத்திற்கு ஏற்றிவிட்டு ஒரு சொத்தைப் படத்தை தந்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் கமல்.

வித்தியாசமான கோணங்களை அமைத்ததற்காக ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு. சுனாமி காட்சிகள், விஷ்னுசிலையை கடலில் வீசும் காட்சி தவிர மற்ற அனைத்தும் சராசரி வகையே.

பத்து வேடங்களில் கமல் நடித்தாலும் (??) உண்மையில் கவர்வது பூவராகவனும், தெலுங்கு மாட்லாடும் உளவு அதிகாரியும் மட்டுமே. மற்ற அனைவரும் வருந்தி உள்நுழைக்கப் பட்டது அப்பட்டமாக தெரிகிறது. எப்படியாவது பத்து வேடங்களில் திரையில் வந்துவிட வேண்டும் என நினைத்த கமல் கொஞ்சம் மக்கள் பார்ப்பதுபோல இருக்க வேண்டும் எனவும் சிந்தித்திருக்கலாம்.

இனி அடுத்த படத்திற்கும் எதாவது ஒரு கேனத்தனமான தயாரிப்பாளர் கிடைத்தால் லைட்பாயிலிருந்து இயக்கம், வெளியீடு மற்றும் தியேட்டரில் பார்த்தல் வரை கமலே செய்யுமாறு பணமும் நேரமும் செலவழித்த ஒரு அப்பாவி ரசிகன் வேண்டுகோள் விடுக்கிறான். செய்யுங்கள் உலக நாயகனே என உசுப்பேத்தப்பட்டுள்ள கமலஹாசன்.

ஜெயக்குமார்

Sunday, April 13, 2008

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.




வலையுலகினர் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... எல்லா நலன்களும் அனைவருக்கும் கிட்ட பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்..

அன்புடன்,

ஜெயக்குமார்

Saturday, April 12, 2008

கன்னியாகுமரி, ஜெயமோகன் எனது எண்ணங்கள்.


கன்னியாகுமரி, ஜெயமோகன் எனது எண்ணங்கள்.

ஒரு நெடுங்கதையாக எழுதப்பட்ட ஒரு திரைப்பட இயக்குனரின் வாழ்க்கை வரலாறு எனக்கொள்ளலாம், இக்கதையை.

கன்னியாகுமரியை கதைக்களனாக மட்டுமின்றி இயக்குனரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு இடமாக குறிப்பிட்டு இந்த கதையை பின்னி இருக்கிறார் ஜெயமோகன்.

தோல்வியடைந்த ஒரு திரை இயக்குனரின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களும் அவரை சுற்றி நிகழும் நிகழ்வுகளையும் உள்ளது உள்ளபடி கொண்டு சென்றதில் கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டதைபோல இருக்கிறது....

பொதுவாக ஆண்களுக்கு முதிர்ச்சியான மனநிலை கொண்ட பெண்களைப் பார்த்ததும் ஏற்படும் பயமும் அவர்கள் பால் ஏற்படும் இனம் புரியாத பயமும் அவர்களை தவிர்க்க முடியாமல் நேசிக்கவும் செய்யாமல் செய்துவிடுகிறது. கதையில் வரும் இயக்குனர் ரவிக்கும் அவனது தோழிக்கும் (??) நிகழும் விவாதங்களும் சண்டைகளும் யார் வெல்வது என்ற போட்டியில் இருக்கும் இரண்டு பேர்களைக் குறிக்கிறது.

ரவியின் தோழியாய் வருபவள் எரிக்கா யங் படிக்கிறாள்.. (பிரவீனா )அறிவுஜீவித்தனமாக உரையாடுகிறாள் .. படுக்கையில் ரவிக்கு சுகம் கொடுக்கும் அதே நேரத்தில் அவன் அவளை வெல்ல முடியாது என்பதையும் தனது உடல் மொழியின் மூலம் அவனுக்குத் தெரிவிக்கிறாள். இதனால் விழையும் இருவருக்குமான மனப்போரட்டங்களும் ... ஒருவரை ஒருவர் வெல்வதற்கான் முயற்சி என ரவி கருதுவதும்..

ரவியின் வாழ்க்கையில் வரும் முன்று பெண்களையும் அவன் வெல்லத்துடிப்பதும் மூவரும் அவனை வென்றுவிட்டதான ஒரு மாயையில் சிக்குண்டு அவன் தன்னை தோற்றுவிட்டவனாக கருதுவதுடன் கதை முடிகிறது.


அதில் வரும் விமலா என்ற பாத்திரத்திடனுடனான அவனது அனுபவங்களும் (முன்னாள் காதலி) கன்னியாகுமரிக்கு ரவியுடன் அவள் வருவதும் அங்கு அவள் அவன் கண்முன்னாலேயே முரடர்களால் வன்புணர்ச்சி செய்யப்படுவதும், தன்னுடன் இருந்தபோது அவள் வன்புணர்வு செய்யப்பட்டவள் இன்று அதையெல்லாம் அவள் மறந்துவிட்டு வாழ்க்கையை இயல்பாய் கழிப்பதும் அவனுக்குள் இருக்கும் மிருகத்தை துண்டிவிட்டு அவளை அவமானப்படுத்துவதற்காக அவளை வன்புணர்ச்சி செய்தவனையே அவளை சந்திக்குமாறு செய்து விமலாவை கேவலப்படுத்த நினைக்கும்போது வன்புணர்வு செய்தவன் தவறுகளை நினைத்து மன்னிப்புக் கேட்கும் தொனியில் இருப்பதும் அவள் அவனுடைய பெண்குழந்தைகளின் வாழ்வுக்கு முடிந்த அளவு உதவி செய்வதாகவும் உறுதிமொழி கொடுக்கும்போது மீண்டும் அவன் தோற்கடிக்கப் படுகிறான்.
இந்த கதையில் தோற்கடிக்கப் பட்டவன் எவ்வளவு துரம் கீழிறங்கி மற்றவர்களை அவமானப் படுத்துவதன் மூலம் தான் உயர்ந்தவன் என தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொள்ள முனைவான் என்பதை ரவியின் செயல்கள் நமக்கு உணர்த்துகின்றன.

பிரவீனாவுக்கும் ரவிக்குமான உரையாடல்கள், பிரவீனா, ரவி, மற்றும் விமலாவும் சந்திக்கும் இடம், விமலா தான் வன்புணர்வு செய்யப்பட்டபோது ஏற்பட்ட எண்ணங்கள் அதன் பின்னர் ரவி தன்னை கைவிட்டதும் அந்த சூழ்நிலையை கையாண்ட விதத்தை சொல்லுமிடம் எல்லாம் அருமை.

வழக்கம் போல் நவீனத்துவ எழுத்துக்களில் காணப்படும் அனைத்து வசவுகளும் படிக்கக் கிடைக்கின்றன இக்கதையில்..

ஜெயக்குமார்

Thursday, March 20, 2008

வைக்கம் முகம்மது பஷீரின் - ஜென்ம தினம் பற்றிய எனது எண்ணங்கள்.



வைக்கம் முகம்மது பஷீரின் ஜென்ம தினம் என்ற கதையை காலச்சுவடில் தற்செயலாக படித்தேன். இப்படி ஒரு யதார்த்தமான கதைகளை இன்றுவரை படித்ததில்லை நான்.

ஒரு மனிதனின் ஒரு நாள் உணவுக்கான போராட்டம் மட்டுமே கதை. ஆனால் அதில் கதாநாயகனுக்கு ஏற்படும் யாசகம் கேட்க ஏற்படும் கவுரவசிக்கல்கள், வயிறும் ஏற்படுத்தும் உணவுக்கான உந்துதல்கள் , கடைசியில் என்ன ஆனாலும் சரி என பக்கத்து அறை நண்பன் சமைத்ததை எடுத்து உண்டுவிட்டு பசி அடங்கியதும் அதனால் ஏற்படப்போகும் மானக்கேட்டிற்காக அஞ்சி நடுங்குவதும் பின்னர் அந்த விஷயம் சாதாரணமாக முடிந்து ( நான் வெளிய சாப்டுட்டு வந்துட்டேன் என பக்கத்து அறை நண்பன் சொல்லுமிடம்) , படிப்போர்க்கு "அப்பா.. மானக்கேட்டிலிருந்து தப்பிச்சுகிட்டார்" என்ற ஒரு எண்ணமும், நிம்மதியும் வருமாறு அருமையாக கதையை கொண்டுசென்றுள்ளார் முகம்மது பஷீர்.

கதை எழுதுவதற்கு கதைக்கருவை எங்கும் தேடி அலையவில்லை அவர். தனது வாழ்க்கையையே கதையாக்கியதால் கதையின் ஓட்டம் முடிவுவரை கொஞ்சமும் தொய்வில்லாமல் செல்கிறது. புனைவில்லை, அலாங்கராங்கலில்லை வெகு யதார்த்தமாய் கதை நம்முள் படிகிறது..

வாசிப்பனுபவம் என்ற பதத்திற்கான அர்த்தத்தை மேகருன்னிசா என்ற கதைக்குப்பின்னர் இந்த கதைதான் முழுதும் கொடுத்தது எனக்கு.

எளிய நடை, படிப்பவருக்கு தன்னைச்சுற்றி நடக்கும் வாழ்க்கையை கதையில் பார்ப்பதால் கதையில் முழுதும் தன்னை செலுத்திவிடமுடிகிறது.

அவரைப்பற்றி காலச்சுவடில் சுகுமாரன் எழுதிய கட்டுரையில் அவரது வாழ்க்கைக்கதையும், உலகத்தின் மீதும், எளிய மக்களின்மீதும் கொண்டிருந்த அன்பையும், அவர்களையும் தன்னையும் கதை மாந்தர்களாகக் கொண்டு அவரது எல்லாக்கதைகளும் எழுதியதாகக்குறிப்பிடுகிறார். (அங்கிருந்துதான் வைக்கம் முகம்மது பஷீரின் கதைகளை படிக்க ஆரம்பித்தேன் - அவரது கதைகளுக்கு இணைப்பு கொடுத்திருந்தனர்)

நான் படித்த இரண்டாவது கதை பஷீர் எழுதியதில் தேன் மாம்பழம். நான் படித்த முதல் கதையைப்போலவே எளிமையான கரு. சீரான நடையில் கதை சொல்லல் எல்லாம் இருந்து பஷீரை தேடி படிக்கவேண்டும் என்ற ஆவலை உருவாக்கிவிட்டார்..

நான் வாழ்கின்ற காலத்திலேயே வாழ்ந்த ஒரு நல்ல எழுத்தாளரை அவரது மறைவு மறைவுக்குப் பின் படிக்கிறேன். உலகில் இருக்கின்ற அனைத்துப்புத்தகங்களையும் படித்துவிட முடிகிறதா என்ன??

இன்னும் வாழ்க்கைப்பாதையில் எத்தனை ஆச்சரியங்கள் எழுத்து ரூபத்தில் காத்திருக்கிறதோ யாருக்குத்தெரியும்...????

நீங்களும் முதல் முறையாய் வைக்கம் முகம்மதுவை படிப்பபராய் இருந்தால் நான் ஆரம்பித்த இந்த கதையிலிருந்தே தொடங்குங்கள்.

ஜெயக்குமார்.

Sunday, March 2, 2008

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்...


நம்மூர்ல இருக்குற ஆட்களுக்கு இங்க ( மத்திய கிழக்கு நாடுகள்ள) அப்படியே பெட்ரோலும், டீசலும் வீட்டுல பின்னாடி இருக்குற குழாயில பிடிச்சிக்கிற மாதிரியும் நம்மூர்ல அப்பிடியே ஒவ்வொரு நாளும் விலை ஏறிக்கிட்டே இருக்குன்னு கவலைப் படுறதும் அதுக்கு அமேரிக்காக்காரன் மேலயும், ஓபெக் (OPEC - Organization of Petroleum Exporting Countries) போட்டுட்டு விலை எப்ப குறையும்னு மோட்டுவளையப் பாத்துக்கிட்டே புதுக்கார் அல்லது பைக் வாங்குறதப் பத்தி யோசிக்கிறதுதான் நம்ம பொழப்பு.

விஷயம் என்னன்னா, உலகத்துல எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகள்ல முதல் பத்து இடத்துல இருக்குற கத்தார்லயும் டீசலுக்கு தட்டுப்பாடு வந்துச்சுன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா..????



ஆனா அதுதான் உண்மை. இவங்ககிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு நிறைய இருக்கு. ஆனா சுத்திகரிக்கிற வசதி கம்மியாயிருக்கு, எப்படின்னா, போனவருஷம் செப்டெம்பர் கணக்குப்படியே இந்த நாட்டுல ஐஞ்சு லட்சம் வண்டிக இருக்கு. ( மொத்த மக்கள் தொகை 9 லட்சம் வெளிநாட்டுக்காரங்களையும் சேத்து) இத்தன வண்டிக்கும் சேத்து ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்தான் இருக்கு. அது கத்தார் பெட்ரோலியம் என்ற அரசுக்குச் சொந்தமான கம்பெனிதான் நடத்துது.

திடீர்னு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியினாலயும், புதிய புதிய கட்டுமான வேலைகள் வந்ததுனாலயும் வாகனங்களின் பெருக்கத்துனால டீசல் தட்டுப்பாடு வந்துருச்சி. அதுலயும் கட்டுமான வேலைகளுக்குப் பொதுவா கனரக வாகனங்கள்தான் தேவைப்படுறதுனாலயும், அவைகள் டீசலில் இயங்குறதுனாலயும் அவங்களால திடீர்னு இவ்வளவு எண்ணெய்த்தேவைகளை சமாளிக்க முடியாம திணறிக்கிட்டிருக்காங்க. ஆனா முன்னெச்செரிக்கையா இன்னொரு சுத்திகரிப்பு நிலையம் ஒன்னும் கட்டிக்கிட்டிருக்காங்க. அது முடிஞ்சிருச்சுன்னா எல்லாப்பிரச்சினையும் தீந்துரும்னு நம்புறாங்க. நாமளும் நம்பவேண்டியதுதான். காருக்கு பெட்ரோல் தட்டுப்பாடு வராதவரைக்கும் நாம இந்த செய்திய பதிவுல போட்டுட்டு ஜாலியா இருக்கவேண்டியதுதான்..




ஓபெக் நாடுகள்:- (13 நாடுகள்) அல்ஜீரியா, அங்கோலா, ஈக்குவடார், இந்தோனேசியா, இரான், இராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் வெனிசூலா.


உலகத்தோட மொத்த உற்பத்தியில நாற்பது சதவீதத்த இந்த நாடுகள்தான் தருது.அதாவது ஒருநாளைக்கு எம்பத்தாறு மில்லியன் பேரலாம். ( ஒரு மில்லியன்னா தெரியும்ல.. பத்து லட்சம்)

இந்த பெருந்தலைகள்தான் இப்ப பெட்ரோலிய பொருட்களோட விலைய எப்படி நிர்னயிக்கிறதுன்னு தெரியாம் முழிக்குது. எதனால? எல்லாம் டாலரோட வீழ்ச்சியினாலதான்..பெட்ரொலிய பொருட்களோட விலைகள் எங்குபோய் முடியும்னு தெரியாம ஒபெக்கே இருக்குன்னா நம்ம யோசிச்சு என்ன ஆகப்போகுது??

இந்த கூட்டத்துல ( OPEC) கனடாவும் பிரேசிலும் கூடிய சீக்கிரமே சேரும்போல தெரியுது. நம்ம இந்தியா இந்த கூட்டத்துல சேர்ர நாள் என்னைக்கோ??

Wednesday, February 27, 2008

எழுத்தாளர் சுஜாதா - மறைவு அஞ்சலி.


இனிய கதைகளும், கட்டுரைகளும், தொடர்களும், எழுதி சிறுகதை மற்றும் தொடர்களில் தனி இடத்தைப் பிடித்தவரும், அறிவியல் கட்டுரைகளை பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதி அனைவரது இடத்திலும் நீங்கா இடம் பெற்ற எழுத்தாளர் சுஜாதா காலமானார். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்..

இப்போது தினமும் படிக்கும் சுஜதாவின் புத்தகம் ஓரிரு எண்ணங்கள். பின்பக்க அட்டைப்படத்தில் உள்ள சுஜாதாவோடு தினமும் மானசீகமாய் பேசுவேன். எப்படிசார் இப்படி நகைச்சுவை இழையோட எல்லா விஷயத்தையும் எழுத முடிகிறதென.?? நல்ல ஆசான்.. நல்ல மானசீக நன்பர் பெரும்பான்மையோருக்கு, என்னைப் புத்தகம் படிக்க வைத்த எழுத்தாளர்.. அவரது ஓரிரு எண்ணங்களில் வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்துக்கள் ( நடன பெண்களுக்கு - வயது அல்லது இடுப்பு 40க்குமேல் ஆடாமல் இருக்க)

தமிழ் இனையப் பல்கலைகழகம் செய்யவேண்டியது பற்றி..

அவர் எழுதிய காகித சங்கிலிகளை சினிமாக்காரர்கள் செய்த குளருபடிகள் பற்றி..

இன்னும் எத்தனை எத்தனையோ கட்டுரைகளையும், அறிவியல் தொடர்களையும், (சுஜாதாவைக் கேளுங்கள்) ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகமும், போன்றவைகளை எழுதி நிறைய பேர்களை கதை மற்றும் கவிதைகள் மீது ஆர்வம் ஏற்படுத்திய இன்னும் குறிப்பாய் அனைவரையும் எழுதத்தூண்டிய சுஜாதா இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவரது ஏகலைவன்கள் உலகம் முழுதும் பரவியுள்ளனர். அவர்களுக்கும் நமது ஆறுதல்கள் உரித்தாகுக.

அவர் முழுஅன்புடன் வணங்கிய அந்த ஸ்ரீரங்கன் அவரை தன்னுடன் அழைத்துக்கொள்வானாக..

இது அவரை முழுதும் படித்த ஒருவனால் எழுதப்பட்ட ஒரு நிறைவான அஞ்சலி அல்ல.. சுஜாதா எழுதியதில் கொஞ்சம் படித்ததிலேயே அவர்பால் ஈர்க்கப்பட்ட அவரது வாசகனின் வருத்தங்களை தெரிவிக்கும் ஒரு முயற்சி..

ஜெயக்குமார்

Tuesday, February 26, 2008

த சைக்கிளிஸ்ட். (ஜெயக்குமார்)

சைக்கிள் ஓட்ரதுக்கு முன்னமே எப்பவாவது அப்பாகிட்டயோ அண்ணன்கிட்டயோ அடிவாங்கி இருக்கீங்களா?? நா வாங்கி இருக்கேன் என்னோட தம்பி உபயத்துல--எங்கப்பா சைக்கிள எடுத்ததுக்காக..

எல்லாப் பயகளும் வாடகை சைக்கிள் வாங்கி ஓட்டி ஊருக்குள்ளா படம் போட்டுக்கிட்டிருக்க நா மட்டும் தனியா கொப்பு தவறவிட்ட கொரங்கு மாதிரி ஆய்ட்டேன். உடனடியா சைக்கிள் கத்துக்கிட்டு நாமளும் கூட்டத்துல சேந்துரனும்னு நிதி திரட்ட ஆரம்பிச்சு, வீட்டுக்கு வந்த மாமா அத்தைக கிட்ட அஞ்சு காசு--பத்துகாசா சேத்து அரைமணி நேரம் ஒரு மணி நேரம்னு சைக்கிள கையில பிடிச்சுகிட்டே ஊர சுத்தி வர ஆரம்பிச்சேன். 'எப்படிண்ணே வண்டில ஏர்ரது' அப்படின்னு எந்த அண்ணன் கிட்ட கேட்டாலும், 'இந்தா இப்படித்தாண்டா' அப்படின்னு என்னோட வண்டிய எடுத்துட்டு ஓசி ரவுண்டு போக ஆரம்பிச்சுட்டாய்ங்க..

பலநாள் முயற்சியில வண்டிய வேகமா தள்ளிக்கிட்டே போய் பெடல்மேல நின்னுக்கிட்டே கொஞ்சதூரம் போக பழகிட்டேன். அப்பயே, 'சைக்கிள்ள நாம பல சாதனைகள் பண்ணவேண்டியிருக்கு; எப்ப கொரங்கு பெடல் போடுறதுன்னு அவசரமா முக்கோணத்துல காலவிட்டதுல, அடுத்த பக்கம் கால விடவே முடியாம நேர போயி எதுத்தாப்ல இருந்த மரத்துல கொஞ்சம் கூட பிசிரே இல்லாம மோதிட்டேன். அந்த வகையில் எங்கப்பாவுக்கு ஆன செலவு, சைக்கிளுக்கு அஞ்சு ரூபாயும்; எனக்கு வைத்தியம் பாத்த வகையில கிட்டத்தட்ட பதினைஞ்சு ரூபாயும். இதுக்கு ஒருமாசதம் முன்னதான் ரோட்ல இருந்த பள்ளத்துல கால விட்டு 7 தையல் போட்டு அப்பதான் ஒழுங்க நடக்க ஆரம்பிச்சிருந்தேன்..

அதுக்குள்ள முழுப்பரிச்சை லீவு வேற வந்துருச்சி. எங்க அத்த வீடு திருநெல்வேலியில. அப்ப அவங்க சேர்மாதேவியில இருந்தாங்க. எங்க அத்தைவழி சொந்தம், மாமா வழி சொந்தமெல்லாம் முழுப்பரிச்சை லீவுக்கு போறது அங்கதான். காலையில எந்திரிச்சதும் அப்படியே தாமிரபரணியில ஒரு முங்கப்போட்டுட்டு வர்ர வழியில் பிள்ளையாருக்கு ஒரு கும்புடப்போட்டுட்டு அப்படியே வீட்டுக்கு வந்தா, போடுறது கையில வந்து விழுகுறதுக்குள்ள வயித்துக்குள்ள போயிரும். நதியில குளிச்சதும், அங்க இருந்து வீட்டுக்கு நடந்து வந்ததுக்கும் அந்த பசி எடுக்கும்.

சாயந்திரம் ஆச்சுன்னா மாமா உபயத்துல வாடகை சைக்கிள் கிடைக்கும் ஓட்ரதுக்கு. என்னோட அத்தை பசங்க மாமா பசங்கெல்லாம் சீக்கிரம் கத்துக்கிட்டாய்ங்க.. எனக்கு 10 நாள் ஆனபொறகுதான் கவுட்டுக்குள்ள விட்டு ஓட்டப் பழகினேன்.

அதுக்குள்ள எங்க அண்ணங்கல்லாம் வண்டி சீட்டுல உக்காந்து ஓட்டிக்கிட்டிருக்கும்போது நம்ம இன்னும் கவுட்டுக்குள்ள விட்டு ஓட்ரதுலையே இருக்கோமேன்னு எனக்கும் மேல உக்காந்து ஓட்ட சொல்லித்தாங்கன்னு ஆரம்பிக்க அவங்க கொரங்குப் பெடல்ல இருந்து எப்படி கால தூக்கி மேல போடுரதுன்னு சொல்லித்தராம என்னைய அப்படியே சைக்கிள் சீட் மேல உக்காரவச்சு ஓட்டச்சொல்லிக்குடுத்தாங்க,. எங்கண்ணன் எம்மேல இருந்த கோவத்தையெல்லாம் தீத்துகிறதுக்கு ஒரு வாய்ப்பா எனக்கு சீட்ல உக்காந்து ஓட்டச்சொல்லிகொடுத்தத பயன்படுத்திக்கிடாரு. இப்படி வளைஞ்சா அடி, ஹேண்டில்பார் வளைஞ்சா அடி, இடுப்பு வளைஞ்சா அடின்னு எந்தப்பக்கம் திரும்புனாலும் அடி மேல அடியா வச்சு சொல்லிக்குடுத்துக்கிட்டிருக்கும்போது ஒருநா எனக்கேதெரியாம நானே சைக்கிள யாரும் பிடிக்காம ஓட்டிகிட்டிருக்கேன். நானும் எங்கண்ணன் பின்னாடி வர்ராருன்னு நெனச்சுக்கிட்டே வண்டிய ஓட்டிகிட்டிருக்கேன். என்னடா அண்ணன் சத்தத்தையே கானோமேன்னு வண்டிய வளைச்சு திருப்பி வந்தா எங்கண்ணன் அவரோட பிரண்டுகூட பேசிக்கிடிருக்காரு.. அப்புறம் ரொம்ப கெஞ்சுனதுக்கபுரம் வண்டியில இருந்து எறக்கி விட்டாரு. இனி அண்ணன் இல்லாமயே வண்டிய ஓட்டிரவேண்டியதுதான்னு நெனச்சப்ப நம்ம ஆட்கள் பக்கத்துவீட்டுப் பண்ணையார் வீட்ல ஒரு கல்லு கிடக்கும். அதுமேல ஏறி நின்னு ஏறிக்கிட்டு திரும்பி இங்கையே வந்து இறங்கிக்க அப்படின்னு ஒரு அபாரமான ஐடியா குடுத்தாய்ங்க.. நானும் அதே டெக்னிக்க வச்சு ஒரு நாலுநாள் ஓட்டிக்கிட்டிருந்தேன். பண்னணயாருக்கு எம்மெல என்ன கோவமோ, இல்ல சைக்கிளுக்கு எம்மேல என்ன கோவமோ கல்லத் தூக்கிட்டுப் போய்ட்டாய்ங்க. நாலு ரவுண்டு சுத்துனதுக்கபுறமும் வண்டியில இருந்து இறங்க தைரியம் வர்ல. சரி எப்படியும் இறங்கித்தான ஆகணும்னு ஒரு பக்கமா காலத் தூக்குன உடனே வண்டி அப்படியே இடதுகைப்பக்கமா சாஞ்சு விழுகப்போன நேரத்துல படக்குன்னு கால எடுத்து பெடல் வழியா கீழே இறங்கிட்டேன். நமக்கு சைக்கிள் தெரிஞ்சிருச்சின்னு அன்னைக்கு முழுக்க அதே மாதிரி எப்படி இறங்குனேனோ அப்படியே மேல ஏறவும் கத்துக்கிட்டேன். சைக்கிள் கத்துக்குறவும் லீவு முடியவும் சரியா இருந்துச்சு. அப்படியே ஊருக்குள்ள என்னைக்கும் இல்லாத பெருமிதமா இறங்குனேன்..கம்பம் டு நாகர்கோவில் திருவள்ளுவர் பஸ்ஸுல. அதுக்கப்புறம் வண்டிகூடவே கொஞ்சதூரம் ஓடி அப்படியே தவ்வி ஏறவும், ஒத்தக்கால்ல வண்டிஓட்டவும், இன்னும் பல விதமான டெக்னிக்குல வண்டி ஓட்டியாச்சு.

அன்னையில இருந்து இன்னைக்கி வரைக்கும் சைக்கிள் ஓட்ட எப்ப வாய்ப்பு கிடைச்சாலும் விடுறதே இல்ல. படிச்சிட்டு வேலைக்கு அலைஞ்சப்போ மதுரையில பினாயில்ல ஆரம்பிச்சு, கேம்லின் பேனா, ஆயுர்வேத மருந்து, சித்த மருந்து எல்லா கம்பெனிக்கும் ரெப்பா இருந்தப்போ இந்த சைக்கிள்ளதான் நம்ம பொளப்பு ஓடிச்சு. இன்னைக்கும் வலதுகாலுல ஸ்போக்ஸ் கம்பி காலுக்குள்ள நுழைஞ்ச தடம் இருக்கு.. சைக்கிள் ஓட்டி விழுப்புண் வாங்காதவன் எதுத்த வீட்டு அக்காவுக்கு டபுள்ஸ் பழகுறதுக்கு கூட உக்காந்து கால உள்ளவிட்டதுல வாங்குனேன். இன்னைக்கும் சைக்கிள் ஓட்ட வாய்ப்பு கிடைச்சா விடுறதே இல்ல.. நா வேலைபாக்குற நாட்டுல (கத்தார்) சைக்கிள் ஓட்டுனா அன்றே கடைசிநாளாக இருக்க வாய்ப்பு இருப்பதால் அந்த ரிஸ்க் எடுப்பதில்லை..

Monday, February 25, 2008

கலியாணப் பாடல்கள் - ஒலிநாடா- பம்பாய் சகோதரிகள்.


சமீபத்தில் பம்பாய் சகோதரிகள் பாடிய கலியாணப் பாடல்களை கேட்க நேர்ந்தது.

எனக்கும் கலியாணம் நடந்தது. ஆனால் இந்தப் பாடல்கள் இல்லாமலேயே நடந்து முடிந்தது. கலியாணம் ஆனபிறகு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் இதைக் கேட்டபோது நமது கலியாணத்திலும் பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

பாடல்களை கலியாணத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக பாடி இருப்பது திருமணங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வுகளும் அந்தக் காலத்தில் எப்படி அனுபவித்து திருமணங்களை நடத்தி இருப்பர் என நினைக்கும்போது இன்று நடக்கும் திருமணங்களின் நிலையை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அந்தக்காலத்தில் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை நடந்த திருமணங்கள் பின்னர் ஐந்து நாட்களாக குறைந்து பின்னர் மூன்று நாட்களாகி தற்போது ஒருநாள் திருமணங்களாகி வருகிறது. போகிற போக்கைப் பார்த்தால் எனக்கு கலியாணம் ஆகிவிட்டது அப்படியே இருந்த இடத்திலே ஆசிர்வாதம் செய்யுங்கள் பரிசுப் பொருட்களை மட்டும் அனுப்பிவைத்துவிடுங்கள் என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என தோன்றுகிறது..

அந்தக் காலத்தில் திருமணங்கள் தொலைவில் இருக்கும் சொந்தங்கள் சந்திக்கும் இடமாகவும் பின்னர் உறவுகளுக்கேற்றபடி 10 நாட்கள் முதல் ஒரு மாதம்வரை தங்கி இருந்து திருமணத்தை நடத்திக் கொடுத்த காலங்களாக இருந்தது. இன்று அவரவருக்கு இருக்கும் பணபலத்தை நிரூபிக்கும் இடமாக திருமணங்கள் மாறியுள்ளன.

நான் பார்த்த 5 நாள் திருமணம் எங்கள் வீட்டில் வைத்து நடைபெற்ற எனது தூரத்து உறவினர் ஒருவரின் திருமணம். திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே வந்திருந்து நல்லபடியாய் நடத்திக்கொடுக்கும்படி கேட்டுக் கொண்ட திருமணப் பத்திரிக்கையை அப்படியே மனதில் கொண்டு எங்கள் வீட்டில் 10 நாட்களுக்கு முன்னதாகவே கூட்டம் ஆரம்பித்துவிட்டது. இதில் எங்கள் அனைவருக்கும் ஒரே சந்தோஷம். முதலில் வீடு முழுக்க ஆட்கள். பின்னர் நாங்கள் பள்ளிக்கூடத்திற்கு போனோமா இல்லையா என பார்ப்பதற்கு யாரும் இல்லாத தைரியத்தில் பள்ளியில் "அய்யா எங்க வீட்ல கலியாணம்" என 5 நாட்களுக்கு முன்னரே பள்ளிக்கு நாங்களே விடுமுறை விட்டுக் கொண்டது என ஒரே அமர்க்களமாய் இருந்தோம். திருமணம் முடிந்தபின்பு பள்ளிக் கூடத்தில் என்னமோ புது வகுப்புக்குள் போவதுபோல இருந்தது. நாங்கள் படிக்கும்போது ஒரே வாத்தியார் தமிழ் முதல் புவியியல் வரை எடுப்பார். எனவே 5 நாட்களில் ஒவ்வோரு பாடத்திலும் இரண்டு, மூன்று பாடங்கள் போய்விட்டது. படிக்கிற புள்ளைக்குத்தான அந்தக் கவலையெல்லாம்.. நானெல்லாம் உப்புக்குச் சப்பாணிமாதிரி பள்ளிக்குப் போய்வந்தேன். எனவே பாடங்கள் போனதெல்லாம் பெரிய விஷயமாய் தெரியவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம்…

பெண்னை அழைத்து வருவதில் ஆரம்பித்து, திருமணம் நடத்தி, பூப்பந்து விளையாடி, மணமகனை கிண்டல் செய்து, மணமகளையும் கிண்டல் செய்து, சாந்திமுகூர்த்தம் செய்து, தாம்பூலம் கொடுத்து பின்னர் கணவன் மனைவியான பின்பு அவர்களுக்குள் எற்படும் ஊடலையும் பாடலாக்கி அருமையான இசை விருந்தளித்துள்ளார்கள் என்று சொன்னால் அது மிகை இல்லை.

திருமணப்பாடல்களில் நாயகனாக மதுரையம்பதியையும், நாயகியாக மீணாட்சியையும் கொண்டு அவர்களது திருமண பாடல்களாக இதை எழுதி இருக்கிறார்கள்.

எல்.கிருஷ்னனின் இனிய இசையில் தமிழில் பாடல்களனைத்தும் கேட்பதற்கு இனிமையாய் உள்ளன.

திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவுவகைகள் பற்றி ஒரு பாடலில் (போஜனம் செய்ய வாருங்கள் என்ற பாடல்) சைவ உணவு வகைப் பட்டியலை அதில் கேட்கலாம்.

சாம்பார் வகைகள்
ரசம் வகைகள்
இனிப்பு வகைகள்
வடைவகைகள்
பழங்கள்
சித்ராண்ணங்கள்
அரிசி சாதமும், நெய்யும் சேர்த்து சாப்பிட வாருங்கள் என பாடி இருக்கிறார்.

மாப்பிள்ளை சமர்த்தரடி… என்ற பாடலில் மாப்பிள்ளை எதில் சமர்த்தராம்??? காபி குடிப்பதில்.. அதுவும் காது கடுக்கனை விற்று.. நகையெல்லாம் எடுத்துப்போய் போன விலைக்கு விற்று மட்டை மட்டையாய் பொடி போடுவதிலாம்…

பூப் பந்தாடினார் பரமசுந்தரன் பாண்டியன் பெண்ணோடு.. என்ற பாடலைக் கேட்கும் போது எனக்கு "வசந்தவல்லி பந்து விளையாடிய" காட்சிதான் ஞாபகத்திற்கு வந்தது.

நல்ல தமிழிசை.. நல்ல குரல்வளம் கொண்ட பாடகிகள், அருமையான பக்க வாத்தியங்கள் கொண்டு எல்.கிருஷ்ணன் கொடுத்துள்ள இந்த இசைத்தொகுப்பை வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் கேளுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


நன்பர் ஒருவர் கொடுத்த கலியாணப் பாடல் லின்க்
Marriage Songs,
Vani Recording Co.(P) Ltd,
Post Box: 2063, Chennai – 600 020

Thursday, January 24, 2008

அரபு நாடுகளில் வேலை செய்வது பற்றிய நகைச்சுவையான உண்மைகள்.

எனக்கு இது மெயில் ஃபார்வர்டில் வந்தது.. நன்றாக இருந்ததாலும், நம்ம கதையாக இருந்ததாலும் உங்கள் பார்வைக்கு.

Real life in GULF



*Local calls are free.


ஆமாம்..உள்ளூர் அழைப்புகள் இலவசம்தான்..ஆனால் கம்பிவழி தொடர்புகள் மட்டுமே.. செல்லிடப்பேசிக்கு பணம் உண்டு.

* Petrol is cheaper than water, Payment for drainage too.

பெட்ரோலின் இன்றைய விலை லிட்டருக்கு நம்மூர் மதிப்பில் ஏழு ரூபாய்கள். ஆனால் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை நம்மூர் மதிப்பில் பனிரெண்டு ரூபாய்கள்.

* Any building construction finishes in 3 months

உண்மை. இது துபாய்க்கும் மற்ற அரபு நாடுகளுக்கும் பொருந்தும். கத்தாருக்கு அல்ல. ஆடி அசைஞ்சு ஒரு ரோட்டைப் போட்டு முடிக்க ஒரு வருஷம் ஆகும். ஆனா ஓமான்ல காலையில வேலைய ஆரம்பிச்சு ராத்திரிக்குள்ள மேம்பாலம் கட்டிருவாய்ங்க.. எல்லாம் முன்னாலையே செஞ்சு வச்சு அப்படியே கொண்டுவந்து வச்சிருவாய்ங்க..

* Unqualified get more salary than Qualified

ஏனெனில் எந்த விசாவில் வருகிறிர்கள், என்ன வேலை செய்கிறிர்கள் என்பதை பொருத்து.

* Show-off matters more than real quality & performance

இதுவும் உண்மை.

* Laborers are paid less than what they can earn back in their own country

இதுதான் உச்ச பட்ச கொடுமை. குறைந்தபட்சம் எழுபதினாயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை ஏஜெண்டுக்கு கொடுத்துவிட்டு இந்திய மதிப்பில் ஐயாயிரம் ரூபாயிலிருந்து பத்தாயிரம் ரூபாய்க்குள் சம்பளம் பெருபவரே இங்கு அதிகம்.

இதில் அவர்களது உணவு செலவையும் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களும் இருக்கிறார்கள்.

அது போக மிஞ்சும் பனத்தில வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவார்களா அல்லது சேமிக்க முடியுமா?? "ஒழுங்கா ஊர்ல கடை கன்னிய வச்சு பொழச்சிருக்கலாம் சார் ஏஜெண்டுக்கு குடுத்த காசுல" என்று புலம்புபவர்கள் அதிகம் இங்கு..

* Companies can kick out their employees without any reason

இது எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை. ஓமானில் குறைந்தது 3 முறை வார்னிங் கடிதம் கொடுத்திருக்க வேண்டும் நான்காவது முறைதான் அவரை வெளித்தள்ள முடியும். இப்போது ஓமானில் தொழிற்சங்கம் கூட வந்துவிட்டது.

கத்தாரில் விசாவை கேன்ஸல் செய்துவிட்டு விமான டிக்கெட்டையும் வாங்கிய பின்னர்தான் சம்பந்தப் பட்ட தொழிலாளிக்குச் சொல்வார்கள். ஒம்போது மனிக்கு ஃப்ளைட் துனிமனியெல்லாம் எடுத்துக்க.. டாக்ஸி பிடிச்சு ஏர்போர்ட் போயிரு.. சம்பளம் மத்ததெல்லாம் அட்மின் கையில் இருக்கு வாங்கிக்க.. ஆல் தெ பெஸ்ட் என்று சொல்லும் கம்பெனிகளும் இங்குண்டு. எல்லோரையும் சொல்வதில்லை..

ரொம்ப அதிகம் சட்டம் பேசினால்..
கூட்டம் சேத்துக்கிட்டு வேலைய ஒழுங்கா பன்னாம இருந்தா..
ரூம்ல தன்னியபோட்டு ரவுசுபன்னா..
கம்பெனி சாமான போடுத்தள்ளினா..
இந்தூர்ல வந்துட்டு அவங்கள பத்தியும், அந்த நாட்டைப் பத்தியும் குறை சொன்னா..

இன்னும் சட்டவிரோத காரியங்கள் செஞ்சா..

* Wastas (recommendation) are more powerful than money

இந்த "வாஸ்தா" ஒன்றுமட்டும் இருந்தால் தொண்ணுறூ வயது கிழவனுக்கும் விசா வாங்கிவிட முடியும். வாஸ்தா இல்லையெனில் எல்லா தகுதியும் இருந்தும் உங்கள் விசா நிராகரிக்கப் படலாம்.

எங்கு போனாலும் இந்த "தெரிஞ்சவங்க" மூலமா வேலை சாதிக்கிறது ரொம்ப அநியாயத்துக்கு நடக்குது.

* Cleaners have more Wasta than officers

நம்மூர்ல மட்டும் இல்லையா என்ன?? ஏன்னா ஆரம்பத்துலையே பஞ்சப் பாட்டுப்பாடி இந்த பையனுக்கு எந்த உதவின்னாலும் செஞ்சிரனும் அப்படின்னு ஒரு எண்ணம வர்ர வரைக்கும் இருந்துட்டு, அப்புறம் எங்க சொந்தக் காரங்கப் பையன் இருக்கான் அவன் ஊர்ல வேலையில்லாம இருக்கான் அப்டின்னு சொல்லி ரெண்டு மூனு விசாவ வாங்கிருவார் நம்ம ஆள். ஆபிஸர்கள் எல்லாம் பெரிய அய்யா என்ன சொல்றாரோ அப்படியே கேட்டுட்டு நடக்க வேண்டியதுதான்.

எனக்குத்தெரிந்த அரபி நனபர் ஒருவர் சொன்ன கதை இது..

வீட்டுவேலைக்கு ஸ்ரீலங்காவிலிருந்து ஒரு பென்னை கொண்டுவந்திருகிறார் அவர். வந்த ஆறு மாதத்தில் நம்ம அரபி மற்றும் அவர் மனைவியின் பாராட்டுதல் எல்லாம் பெற்று நல்ல பெயர் வாங்கி இருக்கிறார்.

ஒருநாள் வேலைக்கார அம்மனி சோகமாய் இருந்துருக்கிறார். என்ன ஏது என்று விஸாரித்ததில் அவர் விட்டைஇலங்கைப் படையினர் குண்டுவீசி அழித்துவிட்டதாகவும் அவர்கள் குடும்பம் வீடில்லாமல் கோயிலில் தங்குவதாகவும் குறிப்பிட்டதில் அரபி மிக்க தாராள மனதுடன் ஆயிரம் ஓமானி ரியால்கள் கடனாக கொடுத்துள்ளார் (ஒன்றரை லட்சம் ஸ்ரீலன்ங்கா ரூபாய்கள்) . அதன் பின்னர் ஒவ்வொறு முறை சம்பளம் வாங்கும் போதும் எங்க வீட்ல அந்தப் பிரச்சினை, இந்தப்பிரச்சினை என்று கூறி முழுச்சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு கடனை திருப்பி தராமல் இழத்தடித்துவிட்டு பின்னர் ஊருக்குப் போனவர் திரும்ப வரவேயில்லை..
அவனவன் சம்பளமே தரமல் இழுத்தடித்து ஊருக்குப் போகும்போது பாதி சம்பளம் குடுத்து திருப்பி வந்தால் மீதிப் பனம் என ஊருக்கு அனுப்பும் போது எனக்கு வந்த கதியைப் பார்த்தீர்களா என்றார்... இதெல்லாம் வாஸ்தாவால வந்த பிரச்சினை என்றார்..

* Watchman has more Rights than the Building Owner

இது நடக்குதான்னு அவ்வளவா எனக்கு தெரியல. கடவுள் புண்ணியத்துல ஒரு மல்லு கூட ஒரே காம்பவுண்டுல ஒன்னரை வருஷமா ஓட்டிகிட்டிருக்கேன்.

* Office boy & Drivers have more influence on Boss than Manager.......

அவரோட எல்லா வேலையயியும் இவங்களே செஞ்சு வச்சிர்ராங்க. இந்த ஓபிஸ் பாய் மற்றும் டிரைவர் எல்லாம் யாருன்னு நெனைக்கிறீங்க.. எல்லாம் நம்ம மல்லுங்க தான்..

* Gulf climate changes so fast, in one hour u can see raining, dust storm, hot / humid / chilling weather

அப்படியெல்லாம் தெரியலப்பா.. நானும் மஸ்கட், துபாய், கத்தாருன்னு போயிருக்கேன்.. குளுரு காலத்துல நல்லா குளிரும்.. வெயில் காலத்துல எப்படா வெயில் காலம் முடியும் அப்படின்னு நெனைக்கிற அளவு வெயில் அடிக்கும்.. மழை வந்தா மட்டும் கொஞ்சம் சௌகரியம்.. அப்பப்ப வேலை இல்லாம ஊர்க் கதை பேசிட்டு இருக்கலாம்.. பக்கத்துல அங்க இங்க வேலை செய்யுர ஆளுக கிட்ட அங்க மழை பெய்யுதா?/ இங்க இப்பதான் தூறுது அப்படின்னு ஜல்லியடிக்கலாம்.. வேலை செய்யாம..

* Gulf is located in desert, still u find greenery everywhere

இதுக்கு சரியான உதாரனம் மஸ்கட், மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் யாவும்.. என்னமோ பெங்களுரு பார்க்குக்கு போன மாதிரி பச்சைப் பசேல்ன்னு புல் தரையும் ரோட்டோரமா சீசன் பூவுமா அட்டகாசமா இருக்கும்..

* If u can't earn money in the Gulf, u can earn anywhere in the world

யூ கேன்னாட் அப்படின்னு இருக்கனும்.. அது ஓரளவுக்கு உண்மை.

* In Gulf, time goes very fast, Friday to Friday comes u never know, its so fast

இதெல்லாம் வெலை செய்யுறவங்களுக்கு.. எங்கள மாதிரி கம்பெனி நேரத்துல ப்ளாக் எழுதுற ஆளுகளுக்கு இல்ல...

* Every bachelor has a dream of getting married and buying a house in India

கிட்டத்தட்ட எல்லோரோட ஆசையும் இதுவாத்தான் இருக்கு.. எனகு மொத ஆச நடந்துருச்சு.. ரெண்டாவது இனிமேதான் நடக்கனும்..

* U love your parents, friends, relatives 100 times more than when you were together

பொதுவாக உண்மை. ஆனால் ஐந்து வருடங்கள், ஏழு வருடங்கள் என ஊருக்குப் போகாமல் இங்கேயே காலம் கழிப்பவரும் உண்டு.. என்னென்னெமோ காரனங்கள். தூரத்தில் இருக்கும்போது அவர்களது அருகாமையில் கிடைத்த மகிழ்ச்சி, சொந்தங்களுடன் மனக்கசப்போடிருந்தாலும் நாள், கிழமைகளில் ஒன்றாய்க்கூடிய மகிழ்ச்சித்தருனங்கள் கிடைக்காததால் வரும் பாசம் இது..

* Being at home is more painful than being at work

இது ஷிஃப்ட் முறையில வேலைசெய்யுறபேச்சுலருக்கு.. எனக்கு வெள்ளிக் கிழமையும் வேலை...

இந்திப் படங்களை அராபியர்கள் விரும்பிப்பார்ப்பார்கள்;-

இந்த இந்திப் படங்களின் மேல் அராபியருக்கு உள்ள மோகம் சொல்லி மாளாது. எங்கள் கம்பெனியின் " மண்டூப்" (பி.ஆர்.ஓ) மொபைல் முழுக்க இந்தி பாடல்களும் இந்தி பட நடிகைகளின் படங்களும் தான் வைத்திருப்பார்..

* Gulf girls sing Hindi songs but don't understand anything

இருக்கும்.

* Dance Bars and Pubs more than that in Bangalore

துபாய் மற்றும் மஸ்கட்டில் பார்த்திருக்கிறேன். மற்ற இடங்களில் தெரியவில்லை எப்படி என.. மஸ்கட்டில் இந்த டான்ஸ் பார்களை ஒழிக்காத பட்சத்தில் நமது மக்கள் சம்பாதிக்கும் பனத்தில் பெரும்பகுதியை இதிலேயே விட்டு விடுவார்கள். மாலை ஏழு மனியிலிருந்துஅதிகாலை மூண்று மனி வரை இந்த பார்கள் செயல் படும்.

நடுவில் மேடை அமைத்து அதில் மூன்று அல்லது நான்கு பெண்கள் இந்தி மற்றும் கஜல் பாடல்களுக்கு அவர்களுக்கு தெரிந்த மாதிரி ஆடிக்கொண்டிருப்பார்கள். சுற்றிலும் இருக்கைகள் அமைக்கப் பட்டு மது சப்ளை நடக்கும்.

அந்த பெண்களுக்கு மாலை அனிவித்தல் அனுமதிக்கப் படும். அதை விற்பதற்கென்று பாரில் இருந்து ஒருவர் ஒவ்வொறு இருக்கையாக சென்று கேட்பார். ஒரு மாலை ஒரு ஓமானி ரியால்.. ( ஒரு ஓமனி ரியால் இந்திய மதிப்பில் நூற்றுப் பதினைந்து ரூபாய்கள்) ஒருவர் குறைந்த பட்சம் மூன்றிலிருந்து ஐந்து மாலைகள் வரை இடுவார்.. எனக்குத்தெரிந்து எங்கள் கம்பெனியில் வேலை செய்யும் ஒருவர் ஒரே இரவில் முப்பத்தைந்து ரியாலுக்கு மாலைகள் வாங்கி போட்டார்.. இது ஒரு விதமான கிறுக்குத்தனமான விளையாட்டு.. ஆனால் போதையில் யாராவது தூண்டிவிட்டால் அந்த மாதத்தின் சம்பளத்தில் பாதியை அங்கேயே விட்டு விடுவார்கள், இப்படி மாலைபோட்டே..

* A ladies hair saloon every 5 meters

:( உண்மையும் கூட.

* Food/Grocery delivery to the car

இது அராபிய முதலாளி / அடிமை மனோபாவத்தின் வெளிப் பாடு. இந்தியர்கள் இதுபோல கேட்டால் உள்ளே வாப்பா.. கூட்டமா இருக்கு என்பார்கள்..

* A Starbucks every 10 meters * Hard Rock Cafe with no alcohol

ஆமாம்.. எப்படித்தான் விற்பனை ஆகிறதோ..

* In one single flat sharing with 5 families
ஃப்ளாட் என்பதெல்லாம் அதிகம்.. நம்மூரில் பெரிய பங்களா போன்ற வீட்டை வாங்கி ஐந்து ஆறு குடும்பங்கள் வசிக்கும். ஒவ்வொருவருக்கும் மூவாயிரம் வரை வாடகை ஆகும்.

தனியாக ஒரு இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு வாடகைக்கு எடுக்க ஐயாயிரம் ரூபாய் ஆகும் இன்றைய நிலையில். எனவேதான் இதுபோன்ற ஏற்பாடு..

* In one single room sharing with 5 bachelors.

இதுவும் கம்பெனி தரும் அறையாக இருக்கும்.. அல்லது கம்பெனி தரும் வாடகையில் கொஞ்சம் மிச்சம் பிடிப்பதற்காக இப்படி தங்கிக் கொள்வார்கள்.

* A Shopping Mall located every 2 km

இப்போதெல்லாம் ஒரு கிலோ மீட்டரிலேயே வந்து விட்டது..

* Highway lanes differentiated for slow & fast drivers

நல்ல ஏற்பாடு.. எங்களுக்கும் இந்த உள்ளூர்காரர்களிடமிருந்து தப்பிக்க வசதி.

* Getting a license is more difficult than buying a car

அப்படி இருந்தும் தினமும் ஐம்பது விபத்துகளும் குறைந்தது ஒரு உயிரிளப்பும்.. இன்னும் லைசென்ஸ் மட்டும் எளிதாக கிடைத்துவிட்டால் அவ்வளவுதான்.. ஜனத்தொகை பாதியாகி விடும். ( எனக்கு லைசென்ஸ் ஆறு முறை தேர்வுக்குப் போன பின்பு கிடைத்தது. ஐந்து ஆண்டு காலத்தில் ஆறு விபத்துக்களில் சிக்கியது எனது அனுபவம்.. அதில் ஐந்து பிறர் மூலம் கிடைத்த பரிசுகள்.)

* Smashed cars are more than bugs

பின்னே இருக்காதா... எங்க ஆபிஸ் வாசல்லையே ரெண்டு வச்சிருக்கோம்..

* Parking charge: 2 Dirham for 1 hour - 5 Dirham for 2 hours & so on

இப்படி பனம் கட்டி நிப்பாட்டுற இடத்துலையே இடம் கிடைக்காது சில நேரத்துல.. பார்க்கிங் இல்லாத இடத்துல வண்டிய நிறுத்துனீங்கன்னா நம்மூர் காசுல மூவாயிரம் பழுத்துறும்.

* No Queues for women

ஆமாம்..

* Medical is very poor

இங்க வந்து ஒன்னா தற்கொலை செஞ்சிக்கனும்.. இல்லைன்னா இந்த ஊர் ஆஸ்பத்திரியில ஆப்பரேஷன் செஞ்சுக்கனும்..

* Everybody is looking for their annual vacation.
பின்ன எத்தன நாளைக்குத்தான் மத்தவைங்க ஊருக்குப் போறதையே பாக்குறது??

* U can find healthy food in everywhere.

இந்த விஷயத்தில் அவசியம் பாராட்ட வேண்டும்.. கொஞ்சம் அசுத்தமாக இருந்தால் அடுத்த நிமிஷம் உங்கள் கடைக்குப் பூட்டு..

TRAFFIC SIGNAL IN GULF: * GREEN: Signal to go for Indians,Americans & Europeans * YELLOW: Signal to go for Egyptians and Pakistanis, * RED : Signal to go for Kuwaitis, Saudis , Palestinians & Lebanese

:( ஆமாம்.. நான்கு வழிச்சாலையில் போகும்போது யூ டர்ன் அடிக்கிறத பாக்கனும் நீங்க.. அப்படியே இடதுகை ஓரமா ஓட்டிக்கிட்டே போயி எதுத்தாப்ல வண்டி வர்லைன்னதும் அப்படியே நடுவுல இருக்குற மெரிடியன்ல வண்டிய ஏத்தி அந்தப் பக்கம் போயிருவாரு நம்ம கத்தாரி.. ( அவர் வண்டியில மல மேல கூட ஏறலாம்.. அவ்வளவு பலம்.. அவ்வளவு மொரடு) நம்மூராளு அடுத்த ரவுண்டானா வரைக்கும் போயி திரும்பி வருவார்..
Last but not least. There is no PEACEFUL LIFE

இது ஒன்னு மட்டும் நிச்சயம்..

எத்தன நல்ல விஷயங்கள் ( காசு, பனம், எங்க போகனும்னாலும் கார்.. மற்றும் கம்பெனி பேட்ரோல், ஊர்ல வெளிநாட்டுல இருக்காண்டான்னு ஒரு கெத்து, வருஷத்துக்கொருமுறை விமானப் பயணம், எல்லாம் இருந்தாலும்..

01. உங்க நன்பனுக்கு கல்யானம் அப்படின்னா போக முடியாது..ஆண்டு விடுமுறை வ்ந்தா தப்பிச்சீஈங்க.. இல்லைன்னா இல்ல..

02. எந்த சொந்தக்காரங்க செத்தாலும் ஒரு போன்கால்தான் பன்ன முடியும்..

03. எவ்வளவு சந்தோசமா வச்சிருந்தாலும் ஊட்டுக்காரம்மாக்களோட அழுகைய நிறுத்த முடியாது. ( மனைவிகளை ஊரீல் வைத்துவிட்டு வந்துள்ள நமது சகோதரர்களுக்கு)

04. புள்ளைகளோட படிப்பு பத்தி ஒன்னுமே செய்ய முடியாது..

05. குழந்த பெறந்த பின்னாடி இங்க வந்து அது ரெண்டு வருஷத்துல பெரிய புள்ளையா ஆனப் புறம் போய் பாக்குற அப்பனோட நிலைமை எந்த தகப்பனுக்கும் வரக் கூடாது. ஆனா இந்தப் பக்கம் வேலைபாக்குற பெரும்பான்மை இந்தியர்களின் நிலை இதுதான்..