Friday, December 24, 2010

இலக்கைத் தவறவிட்ட மன்மதன் அம்பு


ரஜினியின் எந்திரனுக்குப் பிறகு சுமாரான எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் மன்மதன் அம்பு. படத்தின் மூன்று முக்கிய பாத்திரங்களின் பெயர்சுருக்கமே படத்தின் தலைப்பு.

கதை என்ன? தான் சந்தேகப்படும் காதலியை உளவு பார்க்க அனுப்பும் உளவாளியே சூழ்நிலை காரணமாக உளவு பார்க்க வந்தவரையே காதலிப்பதுதான் கதை.

மாதவன் ( மதன்) அம்புஜாக்‌ஷி என்ற அம்பு என்ற நிஷா ( த்ரிஷா) மற்றும் மேஜர் மன்னார் என்ற மேஜர் ( கமல்) இவர்கள் மூவரைச் சுற்றித்தான் கதை என்றாலும் சங்கீதாவும் மிக முக்கியப் பங்குவகிக்கிறார். கமலின் படங்களில்பிரபலமானவர்களைவிட நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆட்களைத் தேர்வு செய்கிறார் என்பதை உறுதியாக நம்பலாம். சதி லீலாவதியில் கோவை சரளாவுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

இதிலும் சங்கீதாவுக்கு த்ரிஷாவுக்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார். அவரும் கொடுத்த பாத்திரத்தை அநாயாசமாகச் செய்திருக்கிறார். இரு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் ஒரு டைவோர்ஸி அடுத்த திருமணத்திற்கு ரெடியாக இருப்பது மற்றும் த்ரிஷாவுக்கு அவர்கூறும் அறிவுரைகள் மற்றும் தனது கருத்துக்களாகச் சொல்வதெல்லாம் கமல் பட கதாபாத்திரங்களுக்கே சாத்தியம்.

கமல் வழக்கம்போல கலக்கல். வயதுக்கு ஏற்ற வேடம். ரிடையர்டு மேஜர் பணத்தேவைக்காக உளவு பார்க்கிறார். மாதவனிடம் உண்மையைச் சொல்கிறார். உளவு பார்க்கப் போய் சுவாரசியமாக எதுவுமே கண்டுபிடிக்கவில்லையாதலால் அவருக்குச் சேரவேண்டிய பணத்தைத் தரமறுக்கிறார் மாதவன். பணம் அவசியம் தேவையென்பதாலும், அதற்காகத்தான் இந்த உளவு வேலைக்கே ஒத்துக்கொண்டிருப்பதாலும் வேறு வழியின்றி வேறு ஒருவனுடன் த்ரிஷா சுற்றுவதாக கதை செய்து சொல்கிறார், புற்றுநோயால் அவதிப்படும் தனது நண்பனும், பார்ட்னருமான ரமேஷ் அரவிந்தைக் காப்பாற்ற வேண்டிய பணத்துக்காக.

வசனங்கள் எல்லாம் பளீர் ரகம் என்றாலும் எத்தனைபேர் ஒன்றி ரசிப்பார்கள் எனத் தெரியவில்லை. அவ்வளவு ஆங்கிலக் கலப்பு. சுத்தத்தமிழுக்கு ஆதரவாக சில காட்சிகள் வைத்திருக்கும் கமல் வசனங்களில் இவ்வளவு ஆங்கிலக் கலப்பை எப்படி அனுமதித்தாரோ?வசனமும் கமல்தான்.

பாடல்கள் எல்லாம் ஆஹா ஓஹோ எனப் புகழப்பட, படத்தில் அவைகள் வருவதும், போவதும் இம்சையாய் இருக்கிறது. ரிவர்ஸில் வரும் ஒரு பாடல் மட்டும் ஓக்கே. படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் எந்தப்பாடலும் மனதில் நிற்கவில்லை.

படம் முழுக்க ரிச்சாக எடுக்கப்பட்டது தெரிகிறது. கதை நடக்கும் இடங்களும், பாத்திரங்களும் பணக்காரர்களாகவே இருக்கின்றனர். மாதவன் தொழிலதிபர், டைவர்ஸ் மூலம் பெரும்பணம் ஜீவனாம்சமாக கிடைத்த சங்கீதா, நடிகையாக த்ரிஷா, படப் ப்ரொட்யூசராக வரும் குரூப், முன்னாள் மேஜராக வரும் கமல், எல்லோரும் பணக்காரத்துடனே வருகின்றனர். விதிவிலக்கு புற்றுநோயால் அவதிப்படும் ரமேஷ் அர்விந்தும், அவர் மனைவியாக வரும் ஊர்வசியும் மட்டுமே.

படத்தை ரிச்சாக காண்பிப்பதற்காகவே த்ரிஷா விடுமுறையை சொகுசுக் கப்பலில் கழிப்பதாக கதையை அமைத்து விட்டதால் கதையை வெளிநாடுகளிலும், உல்லாசக்கப்பலிலும் நகர்த்த வாய்ப்பு. எனவே எல்லா லொகேஷன்களும், கப்பலும் கொள்ளை அழகு. ஒருமுறையாவது போய்வர ஆவலைத் தூண்டுகின்றன.

ஒளிப்பதிவு கலக்கல். மிக சிறந்த ஒளிபரப்பு. நீலக்கடலும், கப்பலிலிருந்து வெளியே காட்டும் காட்சிகளும், ரிவர்ஸில் எடுக்கப்பட்ட பாடலின் ஒளிப்பதிவும், சூப்பர். ஓ பக்கங்கள் ஞானியின் மகனாம்.

தயாரிப்பாளருக்காக தான் எழுதிய வக்கிரப்பாடலை நீக்குவதாக கமல் சொன்ன பாடல் வெளிநாடுகளில் இடம் பெறுகிறது. பதிவர் லோஷன் இலங்கையில் இந்தப்பாடல் இருந்ததாகச் சொன்னார். இந்தப்பாடல் மூலம் தனது மன வக்கிரத்தை வெளிக்காட்டியதுடன் இந்துக்கள் மனதை காயப்படுத்தியது தவிர வேறு என்ன சாதித்தார் எனத் தெரியவில்லை. கமலின் சொந்த வாழ்க்கையின் தோல்வியை இப்படி தீர்த்துக்கொள்கிறாரோ எனத்தோன்றுகிறது. அல்லது உன்னைப்போல் ஒருவனில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டியதற்காக, இந்துக்களை இழிவு செய்வதன் மூலம் சரிக்கட்டுகிறரோ என எண்ணத் தோன்றுகிறது. அதேபோல காவியைப் பற்றியும் ஒரு நக்கல்.


த்ரிஷா பல இடங்களில் கவர்ச்சி காட்டுகிறார். நிச்சயம் டீன் ஏஜ் திரிஷாவெல்லாம் மலையேறியாகிவிட்டது. இப்போது முதிர்ச்சியான அழகான த்ரிஷா. அதற்குத் தக்காற்போல் டாட்டூவும் வில்லங்கமான இடங்களில் போட்டுக்கொண்டிருக்கிறார். உடைகள் கவுதமியாம். அருமையான உடைகள் . படத்தின் ரிச்னெஸ்க்கு உடைகளும் ஒரு காரணம். இசை பற்றி எனக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதுமில்லை.

முதல் பாதியின் தொய்வு படுத்துகிறது. கப்பல் காட்சிகளும், நல்ல வசனங்களும் படத்தை நகர்த்துகின்றன. இரண்டாம் பாதி கலக்கல். சரவெடி நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. கதை, திரைக்கதை, வசனம் - கமலஹாசன் என இருந்தாலும் நிறைய இடங்களில் கிரேஸி எட்டிப்பார்க்கிறர். வசனத்தை மட்டுமாவது கிரேஸியிடம் ஒப்படைத்திருக்கலாம். நகைச்சுவைப் பகுதியை இன்னும் சிறப்பாய் செய்திருப்பார். இயக்கம் கே.எஸ்.ரவிக்குமார் என்பதால் படம் தப்பித்தது எனச் சொல்லலாம். இல்லையெனில் கமலுக்கு இன்னொரு தோல்விப்படமாக இது அமைந்திருக்கும்.

பார்த்த சில மணி நேரத்திலேயே மாதவன் மீது சங்கீதாவுக்கு காதல் வருவதெல்லாம் கமலுக்கும், கமல் படத்தில் மக்களுக்கு மட்டுமே சாத்தியம். அதுவும் தனது தோழியை சந்தேகப்பட்டு உளவு பார்க்க ஆள் அனுப்பியவன் எனத்தெரிந்த பின்னரும்..

உஷா உதுப் தனக்கான பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார். சந்தேகப்படும் காதலனாக மாதவன் கலக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். உடல் மொழி, குரல் ஏற்ற இறக்கங்கள், அம்மா கோண்டாக இருந்துகொண்டு தனது முடிவுகளை எடுப்பது, தண்ணியடித்துக்கொண்டு உளறுவது என எல்லா இடத்திலும் கலக்குகிறார்.

ஒரு சிறிய விபத்து படத்தின் திருப்புமுனையாக அமைவது படத்தில் ”அட” சொல்லவைக்கும் இடம். கமல் த்ரிஷா கெமிஸ்ட்ரி, மேத்ஸ் எல்லாம் அருமையாக அமைகிறது இன்னும் கொஞ்சம் அவர்களை காதலிக்க விட்டிருக்கலாம்.

லாப, நஷ்டத்தைப் பற்றி நமக்கு கவலை இல்லை என்பதால், ஒருமுறை பார்க்கலாம் என சிபாரிசு செய்யலாம். அவ்வளவே. மன்மதன் அம்பு - இலக்கை தைக்கவில்லை.

படங்கள் நன்றி சுலேகா டாட் காம்

Wednesday, December 22, 2010

நாஞ்சில் நாடனின் ”தலைகீழ் விகிதங்கள்”


நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் புத்தகம் குறித்த எனது விமர்சனம் தமிழ் ஹிந்துவில் வெளியாகி உள்ளது. படிக்க இங்கே சொடுக்குங்கள்.

Monday, December 20, 2010

நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகாதமி விருது


மனதிற்கு மிகப்பிடித்த எழுத்தாளர் ஓர் உயரிய விருதை வாங்கும்போது நாமே அவ்விருதைப் பெற்றதுபோல உணர்வோம்.

இன்று எனக்கு அப்படிப்பட்ட ஒரு நாள். நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்களையும், மிதவையையும் படித்து விட்டு சே, எப்படி எழுதுறார்யா என மனதில் மகிழ்ச்சியுடன் இருக்கும் இப்போதைய நாட்களில், அவருக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்த செய்தி அளவிலா மகிழ்ச்சியைத் தருகிறது.

திரு.நாஞ்சில் நாடன், உங்களை நேரில் சந்திக்கும்போது தலைகீழ் விகிதங்களுக்காகவே கட்டிப்பிடித்து வாழ்த்துச் சொல்ல எண்ணியிருக்கிறேன். சாகித்திய அகாதமி விருதுக்காக இறுகக் கைப்பிடித்து ஒரு வாழ்த்து உங்களுக்கு.

உண்மையை எழுதுபவனுக்கு சுமை ஏதுமில்லை. அதனால், இந்த விருதின் மூலம் பொறுப்புகள் கூடும் என கவலை கொள்ளத் தேவையில்லை. ஏகாந்தமாக உங்களின் வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டிருங்கள். அதுதான் இலக்கியம் என இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

Tuesday, December 14, 2010

சீனா - விலகும் திரை

தமிழ் ஹிந்து தளத்தில் வெளியான சீனா - விலகும் திரை, புத்தக விமர்சனத்தைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

Friday, October 15, 2010

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும்,சித்ராவையும் நேரில் கண்டேன்..


கத்தாரில் வாழும் இந்தியர்களுக்காக உதவும் இந்தியன் கம்யூனிட்டி பெனவேலண்ட் ஃபோரம் (ICBF)என்ற அமைப்பு அதன் நிதி ஆதாரத்தைப் பெருக்கிக்கொள்ள ஒரு இசை நிகழ்ச்சி நடத்தியது. பத்மஸ்ரீ.எஸ்.பி.பாலசுப்ரமணியம், பத்மஸ்ரீ.கே.எஸ்.சித்ரா, பிஜு நாராயணன் கலந்துகொண்ட அலி இண்டர்நேஷனல் ரிதம் 2010 என்ற இசை நிகழ்ச்சிதான் அது.

நிகழ்ச்சி இரவு ஏழு மணிக்கு துவங்க வேண்டியது. சரியாக 7.15 மணிக்குத் துவங்கி பாலு மைக்கைப் பிடித்து ஒருவன் ஒருவன் முதலாளி ( முத்து) என நிகழ்ச்சியை ஆரம்பிக்க, அதன் பின்னர் இசைமழை என்றால் என்ன என்பதை நேரில் கண்டேன்.. எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பிரம்மாண்டம் எப்படி இசை ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறது என நேரில் பார்த்த நாள் அது. ரசிகர்களுடன் உரையாடுவதாகட்டும், பாடல்களைப் பற்றிய அவரது கருத்துக்களைச் சொல்வதாகட்டும் அவரது கணீர்குரலால் எல்லோரையும் மயக்கிக் கொண்டிருந்தார். சங்கரபரணம் திரைப்படத்தில் சங்கராஆஆஆஆஆஆஆஆஆஆ என அவர் எழுப்பிய ப்ரீலூடுக்கும், முழுப்பாடலுக்கும் அரங்கமே மயங்கிக் கிடந்தது. தேரே மேரெ பீச்சுமே என்ற ஹிந்திப்பாடலிலும், வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலும் அட்டகாசம். மிக எளிமையான உடையில் வந்திருந்தார். பேங்கில் வேலை செய்பவர் போல ஒரு சபாரி உடை.

சித்ரா - அதே சின்னக்குயில் சித்ரா, அதே முகம் முழுக்க சிரிப்பாய், பாடல்களை அனாயாசமாய் பாடி கைதட்டல்களை அள்ளிக்கொண்டிருந்தார். கண்ணாளனே (பம்பாய்) பாடலை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளிலும் ஒரு பத்தியைப் பாடி கலக்கினார்.

பிஜு நாராயணன் என்ற மலையாளப் பாடகரும் வந்திருந்தார்.. மலையாளப் பாடல்களை அவரும், சித்ராவுடன் இணைந்தும் பாடினார். கங்கே.. எனத்தொடங்கும் ஒரு பாடலைப் பாடினார். உடலெல்லாம் சிலிர்க்க.. அப்படி ஒரு ஆலாபனை.. கிடத்தட்ட 30 செகண்டுகள் வரை மூச்சைப் பிடித்து அவர் சொன்ன கங்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ தான் அவர் பாடிய பாடல்களில் மிகச் சிறப்பு.

ஆர்க்கெஸ்ட்ரா குழுவினராக ஜெண்டில்மேன் இசைக்குழு என்ற சென்னையைச் சேர்ந்த குழுவினர் வந்ந்திருந்தார்கள். தமிழ், மலையாளப் பாடல்களுக்கு சிறப்பாய் இசையமைத்தனர். எஸ்.பி.பி பாடிய பாடல்களுக்கு அவரே இசைஇயக்கமும் செய்து கொண்டார்.

சுவையான நிகழ்வுகள்

எஸ்.பி பாலசுப்ரமணியம் பொத்தி வச்ச மல்லிக மொட்டு பாடலில் ’இது சாயங்காலமா மடி சாயுங்காலமா’ என்ற வரியில் கைகடிகாரத்தை சித்ரா சேச்சிக்கு காட்டிக் கொண்டிருந்தார். சேச்சி கொஞ்சங்கூட அசராமல் கருமே கண்ணாக பாடிக்கொண்டிருந்தார்.

மண்ணில் இந்த காதலன்றி பாடலில் ரசிகர்கள் மூச்சு விடாம பாடுங்க என சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தனர் .. இதைக் கவனித்த எஸ்.பி "பாடலைன்னா ?" என்று கேட்டுவிட்டு இதை மூச்சு விடாம பாட முடியாது அப்படின்னு ஆயிரம் மேடையில சொல்லிட்டேன். இப்பவும் சொல்றேன். அது ஒரு மியுசிகள் கிம்மிக்ஸ் அவ்வளவே என்றார். ’எப்படி இருந்தாலும் நான் பாடி முடிஞ்சதும் நீங்க கைய தட்டுவீங்கன்னு தெரியும்’ என்றார். அதுபோலவே ரசிகர்களும் கரகோஷம் செய்தனர்.

அதேபோல தான் இசையை முறைப்படி கற்றவனல்ல என்றும் திரைத்துறையில் நுழைந்தபிறகு இசையையே உயிராக பாவித்து பாடிவருவதாகவும், எந்த ஒரு பாடலையும் முழுமையாக தெரிந்துகொண்ட பிறகே அப்பாடலை மேடையில் பாடுவதாகவும் குறிப்பிட்டார். இதுவரை ஏறக்குறைய 36000 பாடல்களை பாடியிருக்கலாம் என்றும் கூறினார்.

நிகழ்ச்சி தொகுபாளர் அடுத்து எந்திரன் படத்திலிருந்து ஒரு பாடல் என அறிவிக்க, தவறுதலாக சித்ரா மேடையில் நுழைந்து விட்டார்.. நிலைமையை அழகாக சமாளித்த தொகுப்பாளர் சித்ராவின் உற்சாகத்துக்கு ஒரு கரகோஷம் எழுப்புங்கள் எனக்கேட்க மக்களும் ஆரவாரம் செய்தனர். பின்னர் சித்ரா ஒரு மலையாள பாடலை பாடியபின்பு எந்திரன் பாடப்பட்டது.

எந்திரனில் வரும் அரிமா, அரிமா பாடலை இசைக்குழுவின் நடத்துனரே கொடுமையாகப் பாடினார். மக்கள் மிகப் பெருந்தன்மையுடன் அந்தக் கொடுமைக்கும் கை தட்டினர்..

இறுதியாக பாடகர் ஷாகுல் ஹமீதுக்கும்,ஸ்வர்னலதாவுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக அவர்கள் பாடிய சில பாடல்களை கோரஸ் பாட வந்த ஒரு பெண் அருமையாகப் பாடினார்.

தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அரங்கில் இருந்த மக்கள் தேசிய கீதத்துக்கு கொடுத்த மரியாதை மனநிறைவை அளித்தது..

அடுத்த ஆண்டும் நிகழ்ச்சிக்கு கண்டிப்பாய்ச் செல்ல வேண்டும்.

Tuesday, October 12, 2010

மத்திய கிழக்கில் வாழ்பவரா நீங்கள்?

மத்திய கிழக்கில் வாழ்பவரா நீங்கள்? தூதரகத்தால் கைவிடப்பட்டு, நீங்கள் அநாதையாய் செத்தால் இந்திய தூதரகமே உங்களை பெட்டியில் வைத்து அனுப்பும். குரூர நகைச்சுவைபோலத் தெரிந்தாலும் அதுதான் உண்மை என நிரூபித்திருக்கிறது ஓமான் - மஸ்கட்டிலுள்ள இந்தியத் தூதரகம்.


மத்திய கிழக்கில் வேலை செய்பவர்களுக்கு பிரச்சினையான நேரத்தில் இருக்கும் ஒரே துணை இந்தியத்தூதரகம் மட்டுமே.. ஆனால் அதுவே கைவிட்டுவிட்டால் நடுரோட்டில் இறக்க வேண்டும். அப்படி ஒரு நிலை ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது மஸ்கட் விமான நிலையத்தில்...

படிக்காத, இரு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் வீட்டுவேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவிட்டு , திரும்பி ஊருக்கு போக வந்திருக்கிறார். கத்தார் ஏர்வேஸ் விமானம் என்பதால் தோஹாவில் இறங்கி வேறு விமானம் மாற்றிக்கொள்ள வேண்டும். தோஹாவில் கடவுச் சீட்டை தொலைத்து விட்டார். எனவே இந்தியாவிற்கு செல்லும் விமானத்தில் ஏற்றாமல் மீண்டும் மஸ்கட்டிலேயே இறக்கி விட்டுவிட்டது விமானக் கம்பெனி. ஓமானிலிருந்து வெளியேறும்போதே விசாவை கேன்சல் செய்துவிட்டதால் மீண்டும் ஓமானுக்குள் நுழைய முடியாதநிலை. இதனால் விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையை விமானக் கம்பெனியும், மஸ்கட் விமான நிலைய அதிகாரிகளும் இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.

தொடர்ந்து தகவல் கொடுத்தும், தூதரகத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக யாருமே வந்து பார்க்கவில்லை. அந்தப் பெண்ணிற்கு உணவு, படுக்கை போன்றவற்றை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மனிதாபிமான அடிப்படையில் கொடுத்து உதவியிருக்கிறது. தூதரகத்திலிருந்தும் வேறு எந்த வகையிலும் உதவி கிடைக்காத சோகத்தில் பரிதாபத்திற்குரிய அந்தப் பெண் மன அழுத்தத்தின் உச்சியில் புத்தி பேதலித்து இறந்திருக்கிறார்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகநாடு, தெற்காசியாவில் வல்லரசு என்ற பதவிக்கு போட்டியிடும் இந்தியா தனது குடிமக்களை இப்படியா இறக்க விடுவது? இது நமது நாட்டிற்கு எவ்வளவு பெரிய அவமானம்? நம்மைவிடச் சிறிய நாடான நேபாளம் கூட தனது மக்களை இப்படி அல்லாட விடுவதில்லை.

எனது கேள்வியெல்லாம் தனது நாட்டு பிரஜை தன்னால் சமாளிக்க முடியாத, தூதரகத்தின் உதவியால் மட்டுமே வெளியேற முடியும் என்ற நிலையில் இருக்கும்போது அவருக்கு உதவமுடியாத அளவு என்ன மிக முக்கியமான சாதனையைச் செய்துகொண்டிருந்தனர் என்பதுதான், அதுவும் ஐந்து நாட்களாக...

அரசாங்க அதிகாரிகள் எவ்வளவு தூரம் மனசாட்சியின்றி பேசக்கூடியவர்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம், அந்தப் பெண் இறந்த பின்னர் அறிக்கை விட்ட இந்தியத் தூதுவர் “அந்தப் பெண்ணின் சவப்பெட்டியை இந்தியாவுக்கு அனுப்பும் செலவை தூதரகமே ஏற்றுக்கொள்ளும்’’ என்று சொன்னதுதான்..

தனது பொறுப்பில் இருக்கும் தூதரகத்தின் அஜாக்கிரதையாலும், பொறுப்பின்மையாலும் ஒரு உயிர் போக காரனமாயிருந்தது தெரிந்தும், ஏதோ மிகப்பெரிய உதவியைச் செய்வதுபோல தொனிக்கும் இப்படிப்பட்ட அறிக்கையை விட எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்? மனித உயிருக்கு எந்தவித மரியாதையும் செய்யாத அல்லது எந்த மரியாதையும் காட்டவிரும்பாத ஒருவரால் மட்டுமே இப்படிப் பேச முடியும்.

இரு நாட்களுக்கு முன்னர்தான் எனது நண்பரிடம் இதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். நேற்று அகரமுதல வலைத்தளத்தில் வற்றாயிருப்பு சுந்தரின் இந்தப் பதிவைப் பார்த்ததும் எனது எண்ணத்தையும் பதிகிறேன்.

பொதுவாகவே தூதரகங்களில் மனிதாபிமானம் எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள், பணபலம், வசதி வாய்ப்புகள் உள்ளோர், உதவி செய்தால் ஆதாயம் கிடைக்கும் என்போர், பதவியில் இருப்போர் இவர்களுக்கெல்லாம் செலவழித்தது போக மீதமுள்ளது மட்டுமே சாதாரன இந்தியனுக்குக் கிடைக்கும்..

துரதிருஷ்டவசமாக சாதாரண இந்தியர்களின் எண்ணிக்கைதான் மத்திய கிழக்கில் அதிகம்..

இந்தியத் தூதரகங்களின் இப்படிப்பட்ட ”பொறுப்பான” செயல்பாடுகளை பார்க்கும்போது மத்திய கிழக்கு நாட்டில் வாழும் நமது பாதுகாப்பை நினைத்து பயம் மேலிடுகிறது.

இந்த பரிதாப நிகழ்விற்கு தொடர்புடைய சுட்டிகள்

தட்ஸ்தமிழில் வந்த செய்தி இது

டைம்ஸ் ஆஃப் ஓமனில் வந்த செய்தி

டைம்ஸ் ஆஃப் ஓமனில் வந்த செய்தி இரண்டு

டைம்ஸ் ஆஃப் ஓமனில் வந்த செய்தி மூன்று

Wednesday, October 6, 2010

எனக்கு வீணை வாசிக்கிற பொண்ணு பாத்த சரித்திரம் ( வரலாறு முக்கியம் அமைச்சரே..)

கத்தார்ல வேலை செஞ்சுகிட்டு வருஷத்துக்கொருவாட்டி ஊருக்குப் போய்ட்டிருந்தேன். எனக்கும் பொண்ணு பாத்து கல்யாணம் செஞ்சு வச்சிரனும்னு எங்க அண்ணனும், அண்ணியும் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சிட்டிருந்தாங்க.. மேட்ரிமோனியல் வெப்சைட்டுல எல்லாம் ”அண்ணன் அழைக்கிறார்” ரேஞ்சுலையும், சாதாரனமாயும் பல போஸுல படம் போட்டுப் பாத்தேன். பொண்ணுகளோ அல்லது அவங்க அப்பாக்களோ சீந்துற மாதிரியே தெரியலை. ஊர்ல இருந்தாலாவது நாலு கல்யாணத்துக்கு கூப்டாலும், கூப்டாட்டாலும் போய் தலையக் காட்டிட்டு வந்தா நாம இருக்குறது நாலுபேருக்காவது தெரியும். அதுக்கும் வழியில்லாம் வெளிநாட்டுல உக்காந்தாச்சு.

கல்யாணத்தப் பத்தி யோசிச்சு என்ன ஆகப்போகுதுங்குற பக்குவத்துக்கு வந்து ரொம்ப நாள் ஆயிருந்தது. அப்படி இருக்குறப்ப ஒரு நா எங்கண்ணன் திடீர்னு ஒருநாள் சாயந்திரம் போன் செஞ்சு ஒடனே மெயில் பாருன்னார். நான் அண்ணே நான் வெளிய இருக்கேன், கம்ப்யூட்டர் பக்கத்துல போறதுக்கே இன்னும் அரைமணி நேரம் ஆகும்ணே அப்படின்னு சொன்ன ஒடனெ சரி, காலையில சொல்லுன்னுட்டார்.

காலையில பாத்தா எங்கண்ணன் எனக்கு ஒரு பொண்ணு பாத்து அவங்களோட போட்டோவையும் அனுப்பியிருந்தார். ஃபிளாஷ் அடிச்சா கீழ விழுந்திரும்கிற மாதிரி ஒரு நோஞ்சான். அதுக்கு பொடவை கட்டி விட்டு இருக்குற நகையையெல்லாம் போட்டு விட்டு ஒரு போட்டோ.

ஆரம்பத்துலையே நம்ம கண்டிஷன் என்னான்னா, டிகிரி படிச்ச பொண்ணா இருக்கனும்.. நான் டிப்ளொமாதான்.. இருந்தாலும் அப்படி ஒரு கண்டிஷன போட்டு வச்சேன். உன்னோட கண்டிஷனையே அவங்களும் போட்டா அபப்டினு எங்கண்ணன் ரொம்பநாள் சொல்லிட்டிருந்தார்.

அண்ணன் என்னோட போன எதிர்பார்த்து ஓய்ஞ்சு போய் காலையில் பத்துமணிக்கு ஃபோன் செஞ்சு என்ன புடிச்சிருக்குல அப்படினு ஒப்புக்குக் கேட்டுட்டு மே 12 கல்யாணம்டா அப்படின்னுட்டார்..அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு மே 10 கல்யாணம் அப்டின்னார். அப்புறம் ஒரு மணிநேரம் கழிச்சு மே 12ம் தேதினு சொன்னார். அண்ணே யாருன்னே பொண்ணு, யார் போய் பாத்தாங்க? எப்படி இப்படின்னே. என்னோட, அப்பா, அத்தை பையன் அக்கா இப்படி ஒரு 5 பேர் கொண்ட குழு பாத்து முடிவு செஞ்சுட்டு வந்துட்டாங்க. அவங்களுகெல்லாம் பிடிச்சிருக்கு அப்டின்னுட்டார். அண்ணிக்கு தூரத்துச் சொந்தம் வேற அப்படின்னார். கடவுள் மேல பாரத்தப் போட்டுட்டு நீங்க என்ன செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும் அண்ணே னு சொல்லி சரின்னுட்டேன்.

பொண்ணப் பத்தி எங்க அண்ணி சொன்னதுதான் ஹை லைட்

பொண்ணு பி.சி.ஏ படிச்சிருக்கு ( கத்தாரில் என் வீட்டுக்காரம்மாவுக்கு வேலை தேடும்போது என் வீட்டுக்காரம்மா சொன்ன பதில்களை தனிப்பதிவாக போடவேண்டும்)

நல்லா வீணை வாசிப்பா ( மனசுக்குள்ள கிரீடத்தோட மயில்மேல் உக்காந்து இருக்குர ராஜா ரவிவர்மா வரைஞ்ச சரஸ்வதி ஞாபகம்தான் வந்துச்சி.. அடடா கலைவாணியே மணைவியாவா அப்படினு அப்டியே மனசுக்குள்ள ஒரு சந்தோஷம்.. ஆனா நமக்கு அப்படி வாய்க்கிறதுக்கு வாய்ப்பே இல்லையேன்னும் ஒரு குரல் சொல்லிகிட்டே இருந்துச்சி.)

ஒரு வழியா பொண்ணோட நம்பரெல்லாம் கிடைச்சி தொடர்ந்து பேச ஆரம்பிச்சு ஸ்வீட் நத்திங்க்ஸ் எல்லாம் ரியாலா கரைஞ்சு போய்ட்டிருந்தது. நீ நல்லா வீணை வாசிப்பியாமே அப்டினு தெரியாம கேட்டு வச்சேன். இண்டர்நேஷனல் லைன ஆன்ல வச்சிகிட்டு உறையைப் பிரிச்சு சுதி சேத்து ஒரு பாட்டு பாடுனாங்க. முடிஞ்ச உடனே எப்படினு கேட்டாங்க.. சுருதி சேத்ததுக்கெல்லாம் பாராட்டு கேக்குது பாரு இந்தப் பொண்ணுனு மனசுல நெனச்சிகிட்டு, பாட்டை வாசிச்சு காமிம்மா என தொலைபேசியில் சீட்டு எழுதி கொடுக்க..எனது வருங்கால மணைவி அந்த நிமிடமே மணைவி ஸ்தானத்துக்கு வந்தார். இப்ப வாசிச்சது என்னவாம் என எகிற, அட, வாசிச்சியா, நான் கூட சுதி சேக்குறையோனு நெனச்சிட்டேன் என உளரி வைக்க, அப்புறம் எனக்குப் புரிவதுபோல ஜனகனமன வீணையில் வாசித்தார். ஒருவழியாய் நம்மூர் காசு கிட்டத்தட்ட 250 ரூபாய் செல்வில் ஜனகனமன கேட்ட பாக்கியசாலி ஆனேன்.

அப்புறம் அந்த மே வந்தே விட்டது. திருமணமும் சிறப்பாய் நடந்து முடிய, அன்று அவர்கள் வீட்டுக்கு வரவேண்டிய முறை. தொலைபேசியில் மட்டுமே கேட்டிருந்த வீணையின் நாதத்தை நேரில் கேட்கும் நாளும் வந்தது. என்னென்னமோ வாசித்துக் காண்பித்தார் அம்மணி. ஆனால் யாருக்கு ஏதும் புரியவில்லை. எனது பெரியப்பா மட்டும் சுவாரஸ்யமாய் தலையாட்டிக்கொண்டிருந்தார். கடைசியில் பெரியப்பா எப்டி இருக்குனு கேட்டதுக்கு, அப்படியே சரஸ்வதி மாதிரி இருக்காடா உன்னோட பொண்டாட்டி என ஆசிர்வதித்தார். அதெல்லாம் சரிப்பா, பாட்டு எபப்டி இருந்துச்சி எனக் கேட்க, அவரோ நான் மெஷின மண்டபத்துலையே வச்சுட்டு வந்துட்டேன், அதனால சரியாக் கேக்கல, நல்லாதான வாசிச்சிருப்பா என ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.

ஒருவழியாய் எல்லோருக்கும் கிட்டத்தட்ட அனுமானிக்கும்படியாக ஜனகனமன வாசித்து வீணையை மூடிவைத்ததுதான்.. திருமணத்திற்குப் பின்னர் அதை கத்தார் கொண்டுவந்துவிடவேண்டும் என ஒரு பில்டப்.. நானும் என்ன செலவானாலும் கொண்டுவந்து விடுவோம் என ஓக்கே சொல்லிவிட்டேன். இதை எதிர்பார்க்காத வீட்டுக்காரம்மா அடுத்தவாட்டி போய்ட்டு வரும் போது ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வருவோம் என்றார். ஒருவருடம் வாசிக்கவில்லயெனில் பழக்கம் விட்டுப்போய்விடாதோ என நான் சிரிக்காமல் கேட்க, அதெல்லாம் ஞாபகம் இருக்கும் என சீரியசாய் பதில் சொன்னார். அடுத்த முறையும் வந்தது. அதற்குள் அம்மணியின் தோழி இன்னொரு வீணை காயத்ரியாகும் முயற்சியில் இருப்பது தெரியவர பெருந்தன்மையாயும், அப்பாடா தப்பித்தோம் என அவருக்கு அன்பளித்து விட்டார் அம்மணி.

இப்போதுவரை எனது நண்பர்கள் அனைவருக்கும் என் வீட்டுக்காரம்மா ஒரு வீணை காயத்ரிபோலவும், நான் அவருக்கு வீணை வாங்கித்தராமல் அவரது கலையை சீரழித்தது போலவும் ஒரு வெளியே சொல்லாத வதந்தி நிலவுகிறது.

இதைக்கேட்டால் எனது மணைவியே விழுந்து விழுந்து சிரிப்பார் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

--

Thursday, September 30, 2010

ராமஜென்மபூமி தீர்ப்பு குறித்துபரம பூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ.மோகன் பாகவத் அவர்களின் அறிக்கை

அலகாபாத் உயர்நீதி மன்றம் அயோத்தி ஸ்ரீ ராமஜன்ம பூமி சம்பந்தப்பட்ட தாவாவில் வழங்கிய தீர்ப்பு பற்றி பரம பூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ.மோகன் பாகவத் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.
ஸ்ரீராமஜன்ம பூமிக்காக எழுந்த நியாயமான வாதங்களை முன் வைத்து அலகாபாத் நீதி மன்றம் 2010 செப்டம்பர் 30௦ அன்று அளித்துள்ள தீர்ப்பானது மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமன் மீதும் அவரின் ஜன்ம பூமியான அயோத்யாவின் மீதும் பாரத மக்கள் அனைவரும் வைத்துள்ள உயர்ந்த பக்த்திக்கும் உரிய மரியாதைக்கும் கிடைத்துள்ள அங்கீகாரமாகும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், இந்த நியாயமான போராட்டத்திற்காக ஒத்துழைத்தவர்கள் பங்கேற்றவர்கள் ஸ்ரீராமஜன்ம பூமி அறப் போராட்டத்தில் தலைமை ஏற்று போராட்டம் நடத்திய சாதுக்கள், இப்போராட்டத்தில் பங்கேற்ற பொது மக்கள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீராமஜன்ம பூமி அறப் போராட்டங்களில் பங்கு கொண்டு உயிர் நீத்த தியாகிகள், கரசேவகர்கள் என அனைவருக்கும் மிகப் புனிதமான ஸ்ரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறோம்.
ஆலயம் அமைக்க வேண்டும் என்பது இந்த தேசத்தின் தன்மானத்தின், பக்தியின், சுதந்திர வேட்கையின் கௌரவமான அடையாளங்களாகும். பாரத நாட்டில் சனாதன தர்மத்திற்கும் சமநோக்கு சிந்தனைக்கும் எல்லோரிடத்திலும் உள்ளார்ந்த அன்பு, பொறுமை, பண்பாட்டிற்கும் உரிய மகத்துவமான உதாரணம்தான் ஸ்ரீராமன். ஆலயம் நிர்மானிக்கப்பட வேண்டும் என்பது எதோ ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை விரோதிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் எழுந்தது அல்ல. ஆகவே ஸ்ரீராமஜன்ம பூமியில் மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமனுக்கு ஆலயம் எழுப்ப நீதிமன்றம் நிர்ணயம் செய்து காட்டிய வழியானது சமுதாயத்தின் எந்தப் பிரிவினருக்கும் வெற்றி தோல்வியை ஏற்படுத்தியது என்ற எண்ணம் ஏற்படலாகாது.
நமது மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை கட்டுக்கோப்புடன் அமையுடன் நீதியை நியாயத்தை மதிக்கும் விதமாக தேவையற்ற உணர்ச்சிகளை அடக்கி அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். தேசப்பண் பாட்டிற்கு உரிய பொறுமையுடனும் சமநோக்கு சிந்தனையுடனும் பழைய நிகழ்வுகளை மறந்து ஒரு புனிதமான லட்சிய உணர்வின் அடிப்படையிலும் மொழி, கலாசாரம் மற்றும் இயற்கை அமைப்பில் இருக்கின்ற பல வேற்றுமைகளை மறந்து சமுதாய ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்து இனபேதமில்லாத சமுகம் உருவாக்க ஒரு சந்தர்ப்பம் இன்று நமக்கு வாய்த்துள்ளது.
ஆகவே இத்தருணத்தில் இந்த தேசத்தில் வாழும் முஸ்லிம்களும் மற்றும் அனைத்து சமுதாயத்தினருக்கும் இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் பல ஆண்டுகளாக நம்மிடையே ஏற்பட்டிருக்கிற கசப்புணர்வுகளை மறந்து நீதிமன்றம் காட்டிய நியாயமான பாதையை ஏற்றுக்கொண்டு ஸ்ரீராமஜன்ம பூமியில் மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமனுக்கு அழகான அற்புதமான ஆலயம் எழுப்பிட நியாயத்தின் அடிப்படையிலும் செயலாக்கத்தின் அடிப்படையிலும் நாம் அனைவரும் ஒன்று திரண்டு செயல்படுவோம்.

எமர்ஜென்ஸி - ஜே.பி.யின் ஜெயில் வாசம்

தமிழ் ஹிந்துவில் வெளியான எமர்ஜென்ஸி - ஜே.பி.யின் ஜெயில் வாசம் புத்தக விமர்சனத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

நன்றி.

Thursday, September 9, 2010

மலர்மன்னனின் தி.மு.க உருவானது ஏன்?


அறிஞர் என திராவிட கட்சித் தலைவர்களாலும், தொண்டர்களாலும் அழைக்கப்படுபவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான சி.என்.அண்ணாத்துரையைப் பற்றி அவரது தீவிர விசுவாசிகளில்ஒருவரான மலர்மன்னன் எழுதியிருக்கும் புத்தகம் தி.மு.க உருவானது ஏன்?

திராவிடக் கட்சிகளின் தாய்க் கட்சியாக திராவிடர் கழகத்தைச் சொல்வார்கள்.. அதிலிருந்து பிரிந்தது தி.மு.க,

தி.மு.கவிலிருந்து பிறந்தது அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க.

மற்ற இதர பிரிவுகளுக்குக் காரணமான முதல் பிரிவான தி.க விலிருந்து, தி.மு.க உருவானதற்கான காரணங்களைச் சொல்லி அதன் வரலாற்றை பதிவு செய்கிறார்.

மிக முக்கிய காரணங்களாக மலர்மன்னன் சொல்வது

01. பரம வைரியான ராஜாஜியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு கட்சியின் நிதியை தனது நிதியாக்கிக் கொண்டது, அதாவது சாவியை அண்ணாத்துரையிடம் கொடுப்பதாக மேடையில் சொல்லிவிட்டு, பெட்டியை தனதாக்கிக் கொண்டது.

02. இதுவரை ஊருக்குச் செய்துவந்த உபதேசத்துக்கு மாறாக தனது முதிய வயதில் ஈ.வே.ராமசாமி பொருந்தாத் திருமணம் செய்துகொண்டது.

03. கருஞ்சட்டை அணிய வற்புறுத்தியதும், முரட்டுப் பிடிவாதத்துடன், யாரையும் அனுசரித்துப் போகாத்தனத்துடன் இருந்ததும்...

04. அண்ணாத்துரை தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக ஈ.வே.ரா குற்றம் சாட்டியதும்..

தமிழகத்தின் முக்கிய பிராந்தியக் கட்சியான தி.மு.க, வைப் பற்றி 70களில் எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு கருணாநிதி கட்சி என்ற அளவில்தான் தெரியும்.

இன்றும் தி.மு.க என்றதும் நம் நினைவுக்கு வருவது கருணாநிதிதான்.

ஆனால் அவரைப் பறிய சிறுகுறிப்புகூட இல்லாத அவரது கட்சியைப் பற்றிய புத்தகம் இது.

ஏன் இப்படி? ஏனெனில் தி.மு.க உருவானபோது கருணாநிதி என்பவர் தலைவர்கள் பட்டியலில் எந்த இடத்திலும் இல்லை என்பதே உண்மை.

ஆனால் அதை உருவாக்கியதில் ஈடுபட்ட அனைவரையும் பின்தள்ளி இன்று தி.மு.க என்றாலே கருணாநிதிதான் என்ற அளவிற்கு கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கருணாநிதியின் சாதனை.

நான் சிறுவனாய் இருந்த காலகட்டத்தில் வழக்கமாக தி.மு.கவின் பிரச்சாரக்கூட்டங்களில் ஈ.வே.ராமசாமி, அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோர் கொண்ட படங்கள் இருக்கும். இன்று கருணாநிதி தவிர்த்த இரு இடங்களையும் இதர போட்டோக்கள் அலங்கரிக்கின்றன.

பள்ளியில் படிக்கும் காலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் உருவாகியிருந்தது. எனது இளமைக்காலம் எப்போதும் தி.மு.கவைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களையே கேட்டு வளர்ந்திருக்கிறேன். எங்கள் தெருவின் பொதுக்கழிப்பிடச் சுவற்றில் பல ஆண்டுகள் இருந்த வாசகம் இன்றும் மனதைவிட்டு அகலாதிருக்கிறது.

கருணாநிதி ஆட்சிக்கு வந்தால்

வாணம் வறண்டு விடும்
ஊழல் பெருகிவிடும்
மக்காச்சோளம் கிடைக்கும்
கப்பக் கிழங்கு கிடைக்கும்
அரிசியை பொருட்காட்சிகளில் காணலாம்.

இவன்
மாணவர் அமைப்பு.

எப்படிபட்ட வெறுப்பு இருந்திருந்தால் இப்படி எழுதி வைத்திருப்பார்கள். அதற்குத் தக்காற்போலவே கருணாநிதியின் ஆட்சிக்காலம் இருந்திருக்கிறது. காலம் சென்ற எனது பாட்டிக்கு உயிரோடு இருந்தவரை கருணாநிதியின் ஆட்சிக் காலம் குறித்த கசப்பான ஞாபகங்களே இருந்தன.

இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி எப்படி இருக்கிறது? அதை உண்மையில் யாருக்காக செயல்படுகிறது என்பதெல்லாம் ஊரறிந்த உண்மைகள்.

அப்படிப்பட்ட தி.மு.க ஏன் உருவானது? என்பதைப் பற்றிய புத்தகம் இது. ஈ.வே.ரா.வின் கட்டுப்பாட்டிலிருந்த பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகம் என்ற அமைப்பிலிருந்து எப்படி அண்ணா வெளியேற்றப்பட்டார்? அல்லது வெளியேறும்படியாக என்ன நடந்தது என்பதை மலர்மன்னன் விவரிக்கிறார்.

இதைப் படிக்கப் படிக்க சரித்திரம் திரும்புவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். அன்றைக்கு அண்ணா என்ற அண்ணாத்துரை ஏன் திராவிடர் கழகத்திலிருந்து வெளிவந்தாரோ, அதன் காரணங்களின் ஒன்றினால்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது என்பதையும் உணர்ந்து கொள்லலாம்.

இரும்புப் பெட்டியை தான் வைத்துக் கொண்டு சாவியை மட்டும் அண்ணாத்துரையிடம் கொடுத்தார் ஈ.வே.ரா. ... தி.மு.க பிறந்தது.

எம்.ஜி.ஆர் கட்சியின் கணக்குக் கேட்டதால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அது இன்னொரு திராவிடக் கட்சிக்கு அடிகோலியது.

தன்னை கொலைசெய்யப் பார்க்கிறார் அண்ணாதுரை என்றார் ஈ.வே.ரா

தன்னை கொலை செய்யப்பார்க்கிறார் வை.கோ என்றார் கருணாநிதி.

தனது பேத்தி வயதில் ஒருத்தியை திருமணம் என்ற பெயரில் ஒன்றை செய்தார் ஈ.வே.ரா

மணைவி, துணைவி மற்றும் வேறு ஒன்று என மூவரைத் திருமணம் செய்தவர் கருணாநிதி.

இப்படியாக திராவிடக் கட்சியும், தலைவர்களும் ”கொள்கை”களுடன் வலம்வந்தனர், வருகின்றனர்.

அண்னாவைப் பற்றிய சிறிதளவுகூட எதிர்மறை எண்ணமே இல்லாத, அப்படி ஒரு பகுதியை இருப்பதைப் பற்றி கிஞ்சித்தும் பேச விரும்பாத அண்ணாவின் பக்தரால் எழுதப்பட்டிருக்கிறது இப்புத்தகம் என்பதை நாம் புத்தகத்தின் எல்லாப் பகுதியிலும் காண முடிகிறது. எங்கெங்கு காணினும் அண்ணாத்துரை குறித்த புகழாரங்கள் மட்டுமே.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்துகொண்டே சமூகத்தின் ஒரு பிரிவு சாதியினரை கீழ்த்தரமாக விமர்சிக்கும் கருணாநிதி, அந்தக் குணத்தை அவரது அண்ணாவிடமிருந்துதான் கற்றிருக்கிறார். அதைப் போன்ற மோசமான ஒரு இன அழிப்பிற்குத் துனைபோகக் கூடிய அளவிலான வெறுப்பை அண்ணாத்துரை அவரது ஆசிரியரான ஈ.வே.ராவிடமிருந்தும் கற்றிருக்கிறார்கள்.

ஈ.வே.ரா பார்ப்பானை ஒழிக்க வேண்டுமென்றார். பாம்பையும், பார்ப்பனையும் கண்டால் பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி என்ற அன்பு உபதேசத்தை தனது சீடர்களுக்கு நல்கினார்.

அவரது அன்பின் நீட்சியான அண்ணாவும் அதே பிராமன சமுதாயத்தை வேரோடும், வேரடி மன்னோடும் அழிக்க விரும்பியதை, யூதர்களோடு ஒப்பிட்டு பார்ப்பனர்களை நீக்க விரும்பியதையெல்லாம் மலர்மன்னன் எங்கேயும் சொல்ல விரும்பவில்லை.

அண்ணாவின் வழித்தோன்றலான கருணாநிதி முதலமைச்சர் என்ற மிகப்பெரும் பதவியில் இருந்துகொண்டு அவரது எல்லா பிரச்சினைகளுக்கும் பார்ப்பனர்கள்தான் காரனம் என சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி எழுப்பபடும் கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளிக்க முடியாது என்பதால்தான் இப்படி ஜாதியைக் குறித்துப் பேசி தனது பிரச்சினைகளை சமாளிக்கிறர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகிப் போனது.

ஈ.வே.ராவைப் பற்றி நல்லவிதமாக இந்தப் புத்தகத்தில் ஒன்றும் கிடையாது. அவரைப் பற்றி சொல்லியிருப்பதெல்லாம்

அவரது கண்டிப்பு,

பிறரது திறமையை மதிக்காத குணம் அல்லது அபூர்வமாக மட்டுமே பாராட்டும் குணம்,

கஞ்சத்தனம்,

திராவிடர்க் கழகம் என்ற அந்தக்காலத்தின் தேவையெனக் கருதப்பட்டு, பல இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தையே பனயம் வைத்து செயல்பட்ட இயக்கத்தை தனது சொத்துபோல பாவித்தது .

பணக்காரர்களின் ஊதுகுழலாக செயல்பட்டது.

பொருந்தாத் திருமணம் பற்றி ஊருக்கெல்லாம் உபதேசம் செய்துவிட்டு தானும் அதே தவறைச் செய்தது.

பரம வைரி என எவரை இதுவரை அழைத்து வந்தாரோ அவரை சுயநலத்திற்காக சென்று சந்தித்தது.

தனது சொத்துக்களுக்கு வாரிசாக தனது கழகத்திலிருந்த ஒருவரையும் நம்பாத குணம்.

என அவரைப் பற்றிய எதிர்மறை பிம்பங்கள் நிறைய..

அண்ணாவைப் பற்றிய நற்சான்றுகள் மிக அதிகம்.

அவரது ஆளுமை,

கூட்டத்தை வசீகரிக்கும் திறன்,

எத்தனை அவமானங்கள் பட்டாலும் தலைவனை விட்டு அகலாமல் இருந்தது

ஜனநாயக முறைப்படியே தனது கட்சி முடிவுகளை எடுத்தது,

பெரியாரின் இரட்டை வேஷங்கள் குறித்து காண நேரும்போது அவரைப்போன்று அண்ணாவும் தனது குணத்தை மாற்றிக்கொள்ளாமலிருந்தது.

என இப்படிப் பல..

மலர்மன்னன் கூற்றுப்படி, இனி பொறுப்பதில்லை என முடிவு செய்தபின்னரே அண்ணா புதிய கட்சியைத் தோறுவிக்கிறார் என்பதற்கான ஆதாரங்களை நிறையத் தருகிறார்.

அண்ணாவை கிட்டத்தட்ட தவறுகளே செய்யாத மனிதனாக காட்ட முயன்றிருக்கிறார் மலர்மன்னன். அண்ணாவைப் பற்றிய வாழ்க்கைக் கதை எழுதும்போது அவரது இதர குணங்களையும் பட்டியலிடுவாராயிருக்கும்.

கம்பரசம்எழுதி தான் யார் என எல்லோருக்கும் உரத்துச் சொன்னவர் அண்ணா.

அவரது சகாக்களாலேயே அவர் ”எதில் அறிஞர்” என ஏளனம் செய்யப்பட்டவர்.


அப்படிப்பட்ட அண்ணாவால் உருவாக்கப்பட்ட தி.மு.க தோன்றியது குறித்து ஏதுமறியாதவர்க்கு நிச்சயம் இந்த நூல் ஒரு வழிகாட்டி.

ஆனால் உன்னத நோக்கங்களுடன் எல்லோரையும் அரவனைத்துச் செல்லவேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட இந்த திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு சமுதாயத்தின் ஒரு பிரிவினரை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டே எளிதில் வன்முறைய உருவாக்கும் அளவு பேசி அவர்களை அழித்துவிடக் கூடிய அளவு தரம் தாழ்ந்து பேசுவதும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் முழக்கத்தினை இன்று சிறுபான்மையினர் தேவனே தேவன் மற்றதெல்லாம் ஒழிக்கப்படவேண்டியவைகள் என்ற மாற்றத்தையும் அடைந்திருக்கிறது.

கட்சியை, இயக்கத்தை தனது சொத்துபோல பாவித்த பெரியாரிடமிருந்து பிரிந்து உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் இன்று மீண்டும் ஒரு குடும்பத்தின் கட்சியாகிப் போனது காலத்தின் கோலமே.

கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடான இப்புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்குங்கள்

Tuesday, September 7, 2010

புத்தகம் படித்தல் என்ற அரும்பழக்கம்

நம்மில் எத்தனை பேருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என அவரவர்கள் கேட்டுக்கொண்டாலே தெரியும். நான் ஒரு புத்தகப் புழு. டாய்லெட்டில் அமர்ந்திருக்கும்போதுகூட எனக்கு படிக்க ஏதாவது வேண்டும். இன்றைக்கு இப்படி இருக்கும் நான், புத்தகம் படிக்க ஆரம்பித்ததே ஒரு கதை.

எனது நண்பர் டாக்டர் பிரகாஷ் பள்ளியில் படிக்கும் காலத்தில் எப்போதும் புத்தகமும், கையுமாய் இருப்பார். 10ம் வகுப்பு படிக்கும்போதே வெளிநாட்டுக்கு போவது எப்படி என்ற புத்தகத்தை வாங்கியவர். ஆனால் இரவல்வாங்கிப் படித்த நான் முதலில் வெளிநாடு வந்தேன். அதன் பின்னர் அவர் பல வெளிநாடு சுற்றுலாக்கள் சென்று வந்தார்.

என்னைவிட ஓராண்டு சிறிய அவரை எப்போதும் “ஏண்டா இப்படி புத்தகம் படிச்சு வீணாப்போற” என ரோட்டைத் தேய்ப்பதையே பொழுதுபோக்காய் கொண்ட நான் கிண்டல் செய்வதுண்டு. அவர் கோபப் படாமல் அண்ணே, படிச்சிப்பாருங்கண்ணே என எனக்கு புத்தகம் என்ற உலகினுள் கைபிடித்து அழைத்துச் சென்றார். வாசிக்க ஆரம்பித்த உடனேயே தீப்பிடித்ததுபோல படிக்க ஆரம்பித்து விட்டேன். யாரோ ஒருவர் வந்து இவ்வுலகை காண்பிப்பதற்காக காத்திருந்ததுபோல..

எங்களூரின் வாசக சாலையில் இருக்கும் பெருவாரியான புத்தகங்களை சில மாதங்களிலேயே வாசித்து விட்டேன். நூலகரோடு இருந்த நல்ல நட்பு எந்த புதிய புத்தகம் வந்தாலும் எனக்கும், பிரகாஷுக்கும் கிடைப்பதுபோல பார்த்துக்கொள்வார். சுற்றுக்குச் சென்றிருந்தால் வந்த உடன் அப்புத்தகத்தை எங்களுக்காக அவரது மேஜையிலேயே எடுத்துவைத்திருந்து கொடுப்பார். அவ்வளவுதூரம் எங்கள் மீது அன்பு அவருக்கு. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. தனியாளாக கஷ்டப்படும் அவருக்கு புத்தகங்கள் அடுக்கிக் கொடுப்பது. ஆடிட்டிங் சமயத்தில் புத்தகங்களுக்கு வரிசை எண் இட்டு கொடுப்பது என எல்லாம் செய்வோம்.

கொஞ்சம் வளர்ந்து பெரியவர்களானதும் அதாகப்பட்டது 12ம் வகுப்பு பரீட்சையைத் தொடும் நேரத்தில் மதுரையின் டவுன் ஹால் ரோடு மற்றும் சர்வோதைய இலக்கியப் பண்ணை ( மேல வெளி வீதி) நடைபாதை புத்தகக்கடைகளில் புத்தகம் தேடப்பழகியிருந்தோம். எனக்கும் எனது நண்பனுக்கும் நட்பு ஆரம்பித்த காலத்திலிருந்தே இப்படிப்பட்ட கடைகளில் புத்தகம் வாங்குவது மிகப் பிடித்தமான விஷயம். அவனது அம்மா புத்தகம் வாங்க எனக் கேட்டலும் காசு தரக்கூடியவர். எங்கள் வீட்டின் உறுப்பினர்களை மனதில் கொண்டால் புத்தகம் வாங்குதல் அதுவும் காசுகுடுத்து புத்தகம் வாங்குவது என்பது மிகப்பெரிய ஆடம்பரம். எனவே இவரது புத்தகங்கள்தான் எனக்கும்.

இதுதவிர அதிருஷ்டவசமாய் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வரும் நேரத்தில் கிடைக்கும் காசுகளையும் சேமித்து இப்படி பழைய புத்தகக் கடைகளில் அப்போது அதிகம் வாசித்த பாலகுமாரன் புத்தகங்கள் வாங்குவோம்.

பின்னர் பல்கலையில் சேர்ந்த உடனே காந்திகிராமப் பல்கலையின் கல்லூரி வாசக சாலையின் உறுப்பினரானோம். அது எங்களுக்கு கிடைக்காத ஒரு அரிய பொக்கிஷத்திற்கு சொந்தக்காரர்கள்போல எங்களை உணர வைத்தது. ஓராண்டு அக்கல்லூரியில் படித்த காலத்தில் ( பின்னர் காலநடை மருத்துவம் படிக்க நாமக்கல் புறப்பட்டு விட்டார் டாக்டர் பிரகாஷ்) எங்களின் மாலை நேர பொழுதுபோக்கே பல்கலையின் வாசகசாலையை புரட்டி எடுப்பதும், அப்போது வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்து திண்டுக்கல் - மதுரை அகல ரயில்பாதையில் சில கிலோமீட்டர்கள் நடந்து வருவதும்தான். மாலையில் வைகை எக்ஸ்பிரஸ் எங்கள் காலடியின் கீழே ஓடுவதைப் பார்ப்பது ஒரு தனிசுகம். அகலரயில்பாதை மீட்டர்கேஜிலிருந்து கிட்டத்தட்ட 3 மீட்டர் உயரத்திலிருந்தது.

கல்லூரிப் பாடங்களை எல்லாம் ஊறுகாய் போல படிக்க ஆரம்பித்திருந்தோம். எப்போது பார்த்தாலும் லைப்ரரி வாசம், ஓஷோவும், பாலகுமாரனும் கிறுக்குப் பிடிக்க வைத்தார்கள். சொல்லி வைத்தாற்போல எங்களின் இன்னொரு நண்பன் கண்ணனும் பாலகுமாரனின் வெறியன். அவனும் ஏகப்பட்ட புத்தகங்கள் கொண்டுவருவான்.

பல்கலைக்கழக லைபரரியில் விவசாய மாணவர்களை புத்தகம் தொட விடமாட்டார்கள் என்ற நிலை இருந்தது. எங்கள் அண்ணன்மாரும் லைப்ரரியில் இருந்து படிக்க எடுத்துச் செல்லும் புத்தகங்களின் சில பக்கங்களை படிப்பதற்காக கிழித்து வைத்துக் கொள்ளும் நல்ல குணங்களைப் பெற்றிருந்ததும் எங்களுக்கு இருந்த இத்தடைக்குக் காரணம். அப்புறம் நூலகர் மனதை மாற்றி, சண்டையும் இட்டு நாங்கள் உண்மையான வாசகர்கள்தான் என நிரூபித்த பின்னரே நூலகத்தின் எல்லாப் பகுதிகளும் எங்களுக்காக திறந்தது. பிரிட்டானிக்க என்சைக்ளொபீடியாவெல்லாம் கண்ணால் பார்த்தது அங்கேதான். கிட்டத்தட்ட 20 வால்யூம்கள். அங்கே படித்த இரு ஆண்டுகளில் 10 வால்யூம்களை முழுதாய் வாசித்திருப்பேன் என நினைக்கிறேன். அதன் பின்னர் எனது வாசிக்கும் ஆர்வம் வெறித்தனமாய் வளர்ந்ததே தவிர கொஞ்சமும் குறையவில்லை. வெளிமாநிலத்தில் வேலைக்குச் என்றபோதும் தமிழ் புத்தகம் விற்கும் கடைகளை கண்டுபிடிப்பதே எனது முதல் வேலையாகக் கொள்வேன். எனது ஒரு பிறந்த நாளுக்கு எனது அண்ணியிடமிருந்து பரிசாக ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தைக் கேட்டு வாங்கினேன். நிறைய எழுத்துப் பிழைகளுடன் கூடிய முதல் பதிப்பு. 250 ரூபாய்கள். எனது அண்ணிக்கு இதில் என்ன இருக்கிறது என நினைத்தாலும், எனக்காக வாங்கிக் கொடுத்தார். இவ்வளவு அதிக பட்ச விலையில் புத்தகம் வாங்கியது அப்போதுதான். இப்போதெல்லாம் ஆண்டிற்கு 4000 முதல் 5000 வரை புத்தகங்களுக்கு செலவழிக்கிறேன். எனது மனைவியும் புத்தகப்பிரியை அதனால் சண்டை ஏதுமின்றியும், முனுமுனுப்பின்றியும் புத்தகம் வாங்க முடிகிறது. இங்கேயே கிட்டத்தட்ட 200 புஸ்தகங்கள் வரை வைத்திருக்கிறேன்.

இப்படியாக வளர்ந்தது எனது படிக்கும் ஆர்வம். இப்போது கிட்டத்தட்ட எழுத்து வடிவில் என்ன இருந்தாலும் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். வெளிநாடு சென்ற பின்னர் நடைமுறைச் சிக்கல்களால் இப்படி தேடித்தேடி புத்தகம் வாங்குவது எல்லாம் குறைந்துபோய் வாய்ப்புக் கிடைக்கும்போது மட்டுமே வாங்கமுடிகிறது.

திருமணத்திற்குப் பிறகு எனது மனைவியுடன் ஒரு முன் மதிய நேரத்தில் மதுரை மீனாட்சி கோவிலுக்கு சென்றுவிட்டு வரும்போது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அலசி ஒரு 5 புத்தகங்கள் வாங்கியதும் பின்னர் 2009ம் ஆண்டு விடுமுறையில் சர்வோதய இலக்கியப் பண்ணையில் நிறைய நேரம் செலவழித்து புத்தகம் வாங்கியதும் இனிமையான அனுபவங்கள்.

புத்தகம் படித்தல் என்ற அருமையான பழக்கத்தை அறிமுகம் செய்து எனது வாழ்க்கையை மடைமாற்றிவிட்டதில் எனது நண்பன் பிரகாஷுக்கு மிக முக்கிய பங்குண்டு. இந்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு ஒரு நன்றி.

Sunday, September 5, 2010

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.

அதனால்தான் மகாகவி பாரதியார்கூட

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்

என்றார்.

எனது பள்ளி வாழ்க்கை மிக மிக இனிமையாக அமைந்த ஒன்று. குட்டி ஒண்ணாப்பில் (அரை கிளாஸ்) ஆரம்பித்து பனிரெண்டாம் வகுப்புவரை ஒரே பள்ளியில் படித்தேன். இன்றும் எனது பள்ளி ஆசிரியர்களை ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போதும் சந்திக்கிறேன்.

குறிப்பாய் 12ம் வகுப்பில் எனக்கு பாடம் எடுத்த சாந்தி அக்கா, பழனிச்சாமி அய்யா ஆகியோர் என மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றவர்கள்.

எனது பள்ளி வாழ்க்கை குறித்த எனது அனுபவங்களை முன்னரே எழுதியிருக்கிறேன்

காந்திநிகேதனில் மற்றும் காந்திகிராமத்தில் எனது வாழ்க்கை

காந்திநிகேதனில் மற்றும் காந்திகிராமத்தில் எனது வாழ்க்கை.. பகுதி இரண்டு


இது தவிர காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் எனக்கு பாடம் எடுத்த அனைத்து ஆசிரியர்களையும் அன்புடன் நினைத்துக் கொள்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரியில் எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் அனைவருமே சொல்லிவைத்ததுபோல் என்மீது மிக அன்பாய் இருந்தனர். பள்ளியோ, கல்லூரியோ ஒருபோதும் சுமையாக உணர்ந்ததில்லை நான். அந்த வகையில் எல்லா ஆசிரியர்களுக்கும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாம்.

எழுத்தறிவித்தவன் என்ற வகையில் எனது அன்பு நண்பன் டாக்டர் ஆர்.பிரகாஷையும் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவனால்தான் சராசரியைவிட மோசமான மாணவனாய் இருந்த என்னை ஒரு உருப்படியான ஆளாக்க முடிந்தது. உனது நண்பனைப் பற்றிச் சொல் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்பது எனது விஷயத்தில் மிக உண்மை.

பள்ளி, கல்லூரி வாழ்க்கையை நேசிப்பவராய் இருந்து சொல்லிக் கொடுத்த ஆசிரியரை நன்றியுடன் நினைப்பவராய் இருந்தால் உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

Saturday, September 4, 2010

நான் வெளிநாட்டு வேலைக்கு தேர்வான கதை.

2002ல் திண்டுக்கல்லில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எங்கள் ஊரில் ரோட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தேன். வழக்கமாக வேலையில்லாதவர்கள் செய்யும் டீக்கடை வாசமும், தினத்தந்தி பேப்பருமாய் செட்டில் ஆகியிருந்த காலம் அது. ஒருநாள் தினத்தந்தியில் மஸ்கட்டில் தோட்டக்கலை மேற்பார்வையாளருக்கு ஆட்கள் தேவைனு ஒரு விளம்பரம். அன்னிக்கு காலையில் ரொம்ப ஃப்ரீயா இருந்தேன், என்னோட பிரண்டு சரவணக்குமார் கடையில் ஒரு வெள்ளை பேப்பர் வாங்கி கைலையே எழுதின ஒரு சி.வி ரெடி செஞ்சு 2 ரூபா ஸ்டாம்ப் ஒட்டி அவங்க சொன்ன அட்ரஸுக்கு அனுப்பி வச்சுட்டேன். விளம்பரம் பாத்ததிலிருந்து ஒருமணி நேரத்துல எழுதி போஸ்ட் செஞ்சாச்சு. ஏன்னா 1996ல இருந்து பாஸ்போர்ட் எங்கிட்ட இருக்கு. ஒருவாட்டிகூட வெளிநாடு போக வாய்ப்பு கிடைக்கலை. கழுத இந்த வேலை கெடைச்சுப்போச்சுன்னா??

நமக்குக் கெடைக்காதுன்னு நல்லாத் தெரியும். இருந்தாலும் கழுதைய போட்டுத்தான் வைப்பமேன்னு போட்டு வச்சது. அட்லீஸ்ட் இண்டர்வியூவுக்கு கூப்டாய்ங்கன்னா, அப்படியே தாம்பரத்துல அக்கா வீட்டுல ஒரு நாலுநாள் இருந்துட்டு அப்படியே அக்காகிட்ட கொஞ்சம் கைச்செலவுக்கு காசையும் தேத்திட்டு வந்துறலாம்கிறது மாஸ்டர் பிளான்.

மறுநாள் டீக்கடையில் உக்காந்திருக்கேன், சரவணன் வந்து எங்கப்பா என்னைய தேடிக்கிட்டிருக்கார்னு சொன்னான். சாப்பிடுற நேரம் தவிர மத்த நேரத்துல தேடமாட்டாரேனு வீடுக்குப் போனா, டேய் ரெண்டுவாட்டி மெட்ராஸுல இருந்து ஃபோன் வந்துச்சிரா அப்படின்னார் எங்கப்பா.. நமக்கு எவண்டா மெட்ராஸ்ல இருந்து போன் செய்யப்போறான்னு என்னமாச்சும் சொன்னாங்களாப்பானு கேட்டா இல்லடா திருப்பி அரைமணி நேரத்துல கூப்பிடுறேன்னு சொல்லியிருக்காய்ங்க அப்படின்னார். சொல்லிவச்ச்ச மாதிரி கரெக்டா கூப்டாய்ங்க..

நீங்க ஜெயக்குமார்தான.. ஆமா சார், கார்டன் சூப்பர்வைசர் வேலைக்கு அப்ளிகெஷன் போட்டிருந்தீங்கள்ல, ஆமா சார். உடனே கிளம்பி நாளைக்கு நடக்குற இண்டர்வியூவுக்கு வந்துருங்க அப்படிண்னுட்டாய்ங்க.. நானும் கெத்தா அதெல்லாம் சும்மா ஊர் சுத்துற மாதிரின்னா நான் வரலை. செலெக்ட் ஆகுறதுக்கு ஒரு 50 சதவீதமாச்சும் வாய்ப்பிருக்கனும்னேன். அந்த ஆளும் சார் இதுவரைக்கும் வந்ததுலையே நீங்க தான் சார் டிப்ளோமா, நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் சார்னான்.. சரி கழுதைய போய்ட்டுத்தான் வருவமேன்னுட்டு அப்பாட்ட ஒரு 500 ரூபாயத் தேத்திகிட்டு சென்னைக்கு வந்தாச்சு.

ஏதோ ஒரு ஹோட்டல்லதான் இண்டர்வியூ. காலையில 9 மணிக்கே போயாச்சு. அங்க பாத்தா உக்கார இடம் இல்லை. கிட்டத்தட்ட ஒரு 500 பேர் இருக்காய்ங்க..

என்னைய கூப்டவன அந்தக் கூட்டத்திலையும் தேடிக்கண்டுபிடிச்சி என்னையா இது திருவிழாக்கூட்டம் மாதிரி உக்காந்திருக்காய்ங்க அப்படின்னா, சார், கோச்சுக்காதீங்க, இது கிளீனர்களுக்கும், தோட்டவேலை செய்றவங்களுக்கும் இண்டர்வியூ, உங்களுக்கு சாயந்திரம் நாலு மணிக்கு அப்படிண்ட்டான். என்ன செய்யுறது வந்தாச்சு அட்டெண்ட் பன்னிட்டே போய்ருவோம்னு சாயந்திரம் வரைக்கும் இருந்து 4 மணிக்கு இண்டர்வியூவுக்குப் போனேன். ஒரு 9 பேர் இருந்தாய்ங்க. அதுல ஒருத்தன் பி.எஸ்.ஸி அக்ரி. சரி நமக்கு இன்னிக்கு இல்லைனு முடிவே செஞ்சுட்டேன். அதுபோக எட்டுபேருல மத்தவைங்க எல்லாம் +2க்கு அப்புறம் தோட்டக்காரனுங்களா 10 வருஷத்துக்கு மேல வெளிநாட்டுல வேலை செஞ்சு சூப்பர்வைசர் ஆகுறதுக்காக காத்திருக்குற ஆளுங்க..நானு இப்பதான் இந்த வேலைகிடைச்சாத்தான் வெளிநாட்டையே பாக்கப்போற ஆளு.

சரி, நம்மள கூப்டு கழுத்தறுத்தவன சும்மா விடக்கூடாதுன்னு கருவிகிட்டே இருந்தேன். 6 வது ஆளாவோ, ஏழாவது ஆளாவோ கூப்டாய்ங்க. மொத்தம் ரெண்டு பேரு. பொதுவா மத்திய கிழக்கு வேலைன்னா ஒரு அரபியாச்சும் வந்து சும்மா உக்காந்திருப்பாரு, இங்க அப்படி யாருமே இல்லை. சரி, இன்னிக்கு இவனுங்கள போட்டு நொங்கெடுத்துற வேண்டியதுதான்னு பிளான் செஞ்சு மாலை வணக்கம் சொல்லி உக்காந்தேன். சர்டிபிகேட் எல்லாம் பாத்தாங்க.. அப்புறம் வீட்டைப் பத்தி சொல்லுனு இங்கிலீசுல கேட்டாய்ங்க.. சொன்னேன். அப்புறம் புல் எப்படிப் போடுவ அப்படின்னாங்க.. என்னய்யா கேள்வி கேக்குறனு ஒரு எரிச்சலோட கேட்டேன். இல்லை ஒரு காலி இடத்துல எப்படி லான் போடுவன்னு கேட்டாய்ங்க, சொன்னேன். அப்புறம் புல்லுக்கு என்னென்ன வியாதிகள் வரும்னாய்ங்க சொன்னேன்.. அடுத்து எந்தெந்த பூ எந்தெந்த பருவ காலத்துல பூக்கும்னாய்ங்க.. உங்களப்பாத்தா வேலை தர்ற மாதிரித் தெரியலை.. எனக்கு ராத்திரிக்கு பஸ் இருக்கு, ஊரப்பாத்துப் போகனும், சட்டு, புட்டுனு இண்டர்வியூவ முடிங்கய்யான்னேன்.. உடனே ஒருத்தர் ஆப்ரேஷன் மேனேஜராம்.. அவர், தம்பி நீ செலக்ட் ஆய்ட்ட , உன்னோட இங்கிலீஷையும், ஹிந்தியையும்தான் செக் பன்னிகிட்டிருக்கோம்னார். எனக்கு இவனுக சொல்றதுல நம்பிக்கை இல்லாததுனால கொஞ்சம் மப்பா, உங்க ரெண்டு பேரவிட நான் நல்லாப் பேசுவேனு சொன்னதும், சரி, கெளம்பிக்க. ஒரு வாரத்துல அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ஏஜெண்டுக்கு வரும்னுட்டாய்ங்க..

அப்பத்தான் கொஞ்சூண்டு நம்பிக்கை வந்துச்சு.. இதுலையும் ஒரு இக்கன்னா வச்சித்தான் விட்டாய்ங்க. ஒரு லச்ச ரூபா கட்டுனாதான் வேலைன்னு. நான் கேட்ட சம்பளத்துல பாதிதான் குடுத்தாய்ங்க. ( எனக்கு தன்நம்பிக்கை ஜாஸ்தி) எதுக்குடா தரனும், என்னோட படிப்பையும், பேச்சையும் வச்சித்தானடா குடுத்தீங்க அப்படினு சண்டை போடவும், டபால்னு எங்க கமிஷன் வேண்டாம் ஏஜெண்டுக்கு மட்டும் 65 ஆயிரம் கட்டிருன்னாய்ங்க. நாலு மாசம் வெட்டியா திரிஞ்சதா நெனச்சுக்க வேண்டியதுதான்னு சரிய்யான்னு சொல்லி வச்சேன். அப்புறம் என்னோட கண்டிசன்களான அப்பாயிண்ட்மெண்ட் லெட்டெர் ஓமான் கம்பெனியோட லெட்டெர் ஹெட்ல என்னோட வீட்டு விலாசத்துக்கு வரனும். அதுக்கப்புறம்தான் நான் பணம் தருவேன் அப்டின்னு சொன்னதுக்கு ஒத்துக்கிட்டாய்ங்க. எனக்கு நல்ல நேரம் எங்க சொந்தக்காரர் ஒருத்தர் மஸ்கட்டுல இருந்தார். அவர்ட்ட அப்பாயிண்ட்மெண்ட் லெட்டெரை அனுப்பி வச்சி இப்படி ஒரு கம்பெனி இருக்கா, சம்பளம் எல்லாம் ஒழுங்கா தர்ராய்ங்களா அப்டினு எல்லாம் கேட்டு கன்ஃபார்ம் செஞ்ச பின்னாடிதான் வண்டி ஏறுனேன்..

எல்லாம் சரியாயி, விசா, டிக்கெட் எல்லாம் வந்தாச்சி, ஒருவேளை கம்பெணி ஏமாத்திட்டா அப்டின்னு ஒரு 12000 ரூபாய்க்கு ஓமானி ரியாலா மாத்தி கையில வச்சிகிட்டேன்.. திரும்பி வர்ரதுக்கு வேனும்ல..காலையில 6 மணிக்கு கல்ஃப் ஏர் பிளைட். மொதநா ராத்திரி 11 மணிக்கே ஏர்போர்ட்டுக்குபோயாச்சு. எங்க அண்ணன், அக்கா வீட்டுக்காரர், நானு. எல்லோரும் வரிசையில் போற மாதிரி நானும் வரிசையில் போனேன். உள்ள விடுறதுக்கு முன்னால ஒரு போலிஸ் செக் செய்வார், டிக்கெட், பாஸ்போர்ட் எல்லாம். அவரு டிக்கெட்ட பாத்துட்டு என்னைய ஒரு ஏளனப் பார்வை பாத்தாரு பாருங்க.. எத்தன வருஷம் ஆனாலும் மறக்காது.. யோவ் ஆறு மணி ஃப்ளைட்டுக்கு இப்பவே வந்து என்னய்யா சாதிக்கப்போற.. போய்ட்டு நாலு மணிக்கு வான்னுட்டார். வேற வழியில்லாம ஏர்போர்ட்லையே அடுத்த அஞ்சு மணி நேரத்தை டீ குடிச்சே ஒழிச்சோம்.

காலையில உள்ளூர் நேரம் எட்டு மணிக்கு மஸ்கட் ஏர்போர்ட்டுல இறங்கியாச்சி. ஒரிஜினல் விசாவை கவுண்டர்ல இருந்து வாங்கிட்டு வந்து இம்மிக்ரேஷன் ஆபிசர்ட்ட தரனும். அதைச் செஞ்சதே பெரிய சாதனை செஞ்ச மாதிரி இருந்துச்சி. அப்புறம் மஸ்கட் ஏர்போர்ட்டுக்கு வெளிய வந்தேன். என்னைய கூப்டுட்டுப் போக யாராச்சும் வந்திருப்பாய்ங்கன்னு ஒவ்வொருத்தனையா பாத்துகிட்டு, ஒவ்வொரு பிளக்கார்டையா பாத்துகிட்டு வாரேன் ஒருத்தனுமே இல்லை.. லேசா வயித்தக் கலக்கிச்சி. சரி, போட்டுத்தள்ளிட்டாய்ங்க அப்படினு மனசுல ஒரு பயம்.. திடீர்னு ஒருத்தர் வந்தார், ஹலோ ஜெயக்குமார்தான நீங்க அப்படின்னு தமிழ்ல கேட்டார், ஆமா சார்னேன், அப்படியே பின்னாடியே வாங்கன்னு விறு விறுன்னு நடக்க ஆரம்பிச்சார். நானும் என்னோட பெரிய பொட்டிய தூக்கிகிட்டே கிட்டத்தட்ட ஓடுனேன். கடைசியில ஏர்போர்ட்டோட கடைசிப் பகுதிக்கு வந்தாச்சு, அதாவது டிபார்ச்சர் கவுண்டர் கிட்ட உள்ள பகுதிக்கு வந்தாச்சு. சடக்குனு ஒரு ரூமுக்குள்ள நுழைஞ்சாரு, நானும் பின்னாடியே போனேன். பிளைட்ல என்னையா சாப்ட அப்படின்னார். நான் ஒன்னும் சாப்பிடலை அப்படின்னேன். சரி, தோசையும் சாம்பாரும் இருக்கு சாப்பிடுங்க அப்படின்னார். எனக்கு இவங்க யாரு, எதுக்கு நம்மள இங்க கூப்டு வந்திருக்காய்ங்க, எப்படி நம்மள பேரச் சொல்லி கூப்டுட்டு வந்தாய்ங்க அப்படினு ஒரே குழப்பத்துல இருந்தேன். அவர்ட்ட சார், நான் என்னோட கம்பெனி ஆளுக வந்து கூப்டுட்டுப் போவாங்கன்னு சொன்னாங்க, அதனால அங்க நிக்கிறேன்னேன். அவரு ஒரு சிரிப்பு சிரிச்சு நம்மாளுக மொதவாட்டி வரும்போது என்னல்லாம் தப்பு செய்வாய்ங்களோ அதெல்லாம் கரெக்டா செய்யுறைய்யா நீயி அப்படின்னார்.

என்ன சார்னா, என்னோட சட்டையப் பாரு.. என்ன எழுதியிருக்குனு அப்படின்னார், நான் வேலைக்கு வந்திருக்குற கம்பெனியோட ஆளுதான் அவரு. நான் வேலைக்கு வந்ந்திருக்குற கம்பெனிதான் ரன்வேயில ஆரம்பிச்சு, வெளியில் கார்பார்க் வரைக்கும் கிளினிங்கும், கார்டனிங்கும் செய்யுது. கொஞ்சம் பதட்டப்படாம இருந்திருந்தாலே இதையெல்லாம் கவனிச்சிருக்கலாம். அதுக்கப்புறம் என்னைய வரவேற்ற நண்பர் சைமன் என்னுடைய உயிர் நண்பன் ஆனார். அந்தக் கம்பெனியை விட்டு கிட்டத்தட்ட 7வருஷம் ஆயிருச்சி. இப்பவும் அவர்ட்ட பேச்சுவார்த்தை இருக்கு.

அன்னிக்கு வெளிநாட்டுக்குப் போனவன் அதுக்கப்புறம் திரும்பிப் பாக்கலைனு வைங்க..எதுக்கு இந்தக் கதைன்னா, எங்கையாச்சும் வாய்ப்பு இருந்துச்சுன்னா கல்ல எறிஞ்சிறனும், நமக்கு எங்க கிடைக்கப்போகுது அப்படினு விட்டுடக் கூடாது. அதான் நான் தினத்தந்தி பேப்பரப் பாத்து அப்ளிகேஷன் போட்டது மூலமா கத்துக்கிட்டது. அந்த முதல் அடியிலிருந்துதான் எனது இன்றைய நிலை எட்டப்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போது ஒரு ஆச்சரியம் கலந்த பரவசம் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை

Wednesday, September 1, 2010

ஓமானில் கார்

செந்திலின் பக்கங்களில் இந்த பதிவைப் பார்த்த உடன் நம்ம கதையையும் கொஞ்சம் எடுத்து விடலாமே எனத் தோன்றியதால் இந்தப் பதிவு.

துபாய், மஸ்கட் பக்கம் வேலைக்குப் போறவங்கள்ள கிட்டத்தட்ட எல்லோருக்கும் விருப்பப்பட்டா லைசென்ஸ் வாங்கிக்கிற மாதிரி வாய்ப்பு இருக்கும். எனக்கு சென்னையில வேலைக்கு எடுக்கும்போதே 3 மாசத்துல லைசென்ஸ் வாங்கிடனும் அப்படிங்கிற கண்டிஷனோடதான் வேலைக்கு எடுத்தாய்ங்க..

இதென்ன பிரமாதம், இப்பதான் நம்மூர் லைசென்ஸ் வாங்கியிருக்கேன்.. அதே டெக்னிக்கை இடது புறமா செஞ்சா முடிஞ்சிச்சினு நெனச்சிகிட்டே விமானத்தில் ஏறும்போது விதி என்னையப் பாத்து சிரிச்சது எனக்குத் தெரியலை.

மஸ்கட்ல போய் இறங்குன அன்னிக்கே பேதிக்கு மருந்து குடுத்துட்டாய்ங்க.. ஏர்போர்ட்ல இருந்து நான் வேலை செய்யுற கம்பெனியோட கேம்ப்புக்கு போறதுக்கு ஒரு 40 கிலோமீட்டர் இருக்கும். வண்டிய எடுக்கும்போதே பைக்க எடுக்குற மாதிரி ஒரு சுண்டு சுண்டி எடுத்துட்டு அப்புறம் எங்கையும் ஸ்பீடைக் குறைக்காம அப்படியே வண்டி 140 கிலோமீட்டர் வேகம் வரைக்கும் போகும், அப்பப்ப 120கு வந்துட்டு திருப்பி 140 கி.மீலையே போய்க்கிட்டிருந்துச்சி. சரி, இன்னிக்கு கதைய முடிச்சுட்டாய்ங்கனுதான் நெனச்சேன். ஒரு 30 நிமிஷத்துல கேம்ப்புல இறக்கி விட்டபின்னாலதான் உசுரே வந்துச்சி.

வேலைக்குச் சேந்த மறுநாள்லையே எங்க டிவிஷன் மேனேஜர், தம்பி, ட்ரைவிங் லைசென்ஸ் வாங்குறதுக்கு உண்டான பெர்மிஷன மொதல்ல எழுதிரு, அப்ரூவல் வர்ரதுக்கு 15 நாள் ஆகும் அப்படின்னு சொல்லி எழுத வச்சாரு. ஒரு வாரத்துக்குள்ளையே ஐ.டி கார்டு வந்துருச்சி. அப்புறம் பெர்மிஷனும் வந்தாச்சி. மேனேஜர், சீக்கிரம் லைசென்ஸ எடுத்துரு. இல்லைன்னா ரொம்ப கஷ்டம் அப்படின்னாரு.

ரொம்ப கஷ்டம் அப்படிங்கிறதுக்கு என்ன அர்த்தம்னா எனக்கு இப்ப வண்டியும் ட்ரைவரும் குடுத்துருக்காய்ங்க, அதை 3 மாசம் வரைக்கும்தான் தருவாங்க. அதுக்கப்புறம் லைசென்ஸ் எடுக்குறவரைக்கும் டாக்ஸியிலதான் போகனும். மஸ்கட் ஊரெல்லாம் சுத்துர தோட்டக்கலை சூப்பர்வைசர் நானு. அங்க அடிக்கிற வெயிலுக்கு 10 நிமிஷம் வெளிய நின்னா என்னப்பா குளிச்சிட்டு தொவட்டாம வந்துட்டியான்னு கேக்குற அளவு வேர்க்கும். கம்பெனி யுனிஃபார்ம் வேற முழுக்கை சட்டை, கழுத்துல டை. அங்க எப்பவோ இருந்த ஒரு இந்திய எக்ஸ் சர்வீஸ்மேன் எல்லாத்தையும் புரொஃபஷனல் ஆக்குறேன்னு ஆரம்பிச்சு வச்ச ட்ரெஸ்கோட் அது. நான் கொஞ்சமா சவுண்டு விடவும் எங்கூட சேந்துகிட்டு மத்தவைங்களும் சேந்து சவுண்டு விட்டு வெளிய வேலை செய்யுற எங்களமாதிரி சூப்பர்வைசர்களுக்கு அரைக்கை சட்டையும்,. டை கட்டவேண்டியதில்லைன்னும் பெர்மிஷன் வாங்குனோம்.

எதுக்கு இந்த பூர்வாங்கக் கதைன்னா லைச்சென்ஸ் எவ்வளவு முக்கியம்கிறதும், எடுக்குறது என்ன பெரிய பிரம்ம வித்தையான்னு நெனச்சதுக்கு கிடைச்ச அனுபவத்தை சொல்றதுக்கும். ஒரு சுபமுகூர்த்த நன்நாளில் எனக்கு ஒரு பலூச்சி - பாக்கிஸ்தானி வாத்தியார் கிடைச்சார். அவர்ட்ட ”இங்க பாருங்க, இப்பதான் எங்கூர்ல லைசென்ஸ் வாங்கிட்டு நேரா இங்க வாரேன்”னதும், அப்படியா, அப்படின்னுட்டு வண்டிய குடுத்து பார்க்கிங்கு உள்ளையே ஒரு ரவுண்டு எடுக்கச் சொன்னார். ரெண்டு வாட்டி ஆஃப் செஞ்சு ஒருவழியா வண்டி ஒட்டி, நிறுத்துனதும், ஒரு பெருமைப் பார்வை பாத்தேன். அவர் உடனே எவ்வளவு சீக்கிரம் உங்க ஊர் ட்ரைவிங்க மறக்குரையோ அவ்வளவு சீக்கிரம் உனக்கு லைசென்ஸ் கிடைக்கும்னார்.

காலையில 5 முதல் ஆறு மணிவரை எனக்கு ட்ரைவிங் கிளாஸ். என்னோட கேம்ப் வாசல்ல வந்து பிக்கப் செய்வார் ட்ரெயினர். 4.55க்கு கேட்டுல நான் இருக்கனும். 5 மணிக்கு கேட்டுல வந்துட்டு நான் இல்லைன்னா, இல்ல ஓடி வர்றத பாத்ததுக்கப்புறமும், வண்டிய கெளப்பிட்டு போய்ட்டே இருப்பார். அவ்வளவு ஸ்ட்ரிக்டு. நாந்தாண்டா லேட்டா வரனும், நீ இல்லைடா அப்படிம்பார். பணம் கட்டிப் படிக்கிற உனக்கே அக்கறை இல்லைனா எனக்கு என்ன ஆச்சு அப்படிம்பார்.

அதி தீவிர கோச் அவர். அடிக்க மட்டும் மாட்டார். அவ்வளவு கண்டிப்பு. ஓமான்ல ட்ரைவிங் டெஸ்ட்ல மொதல்ல பார்க்கிங் போடுறது ஒரு டெஸ்ட். வண்டிய ரிவர்ஸ்ல பார்க்கிங் போடனும், வலதுபக்கம் இருந்து ஒருவாட்டி, இடது பக்கம் இருந்து ஒருவாட்டி. ரெண்டு பக்கமும் ட்ரம்ஸ் இருக்கும் அதைத் தொடாம போடனும். தொட்டா அவுட். பெயில். நம்மாளுக இடிக்கவே மாட்டான்னு நெனைக்கும்போதே எப்படியோ வந்து கரெக்டா இடிப்பாங்க.

அப்புறம் செயற்கையா உருவாக்கப்பட்ட ஒரு மலைப்பாதைமேல போய்ட்டு கீழ வரனும். மேல ஏறும்போது அங்க ஒரு சிக்னல் இருக்கும். அங்க சிவப்பு வந்து ஒரு நிமிஷம் கழிச்சு பச்சை வரும். உங்க வண்டி ஒரு அடி கீழ இறங்குனாலும் நீங்க பெயில். நம்மாளுக சில பேரு மேல போன வேகத்துலையே கீழ வருவாங்க.. பதட்டத்துல

இந்த ரெண்டு கண்டத்தையும் தாண்டிட்டீங்கன்னா, அடுத்தது ரோடு. இங்கனதான் எல்லாப் பயகளும் சீ, இதெல்லாம் ஒரு பொழப்பா அப்படிங்கிற மனநிலைக்கு வர்ற இடம்.

நாளைக்கு டெஸ்ட் அப்படினு ட்ரெயினர் சொன்ன உடனேயே மனசுக்குள்ள நம்ம கற்பனையிலேயே பலரவுண்டு வந்திருப்போம், இதுவரைக்கும் வண்டி ஓட்டுன இடங்கள்ல. டெஸ்ட் அன்னிக்கு உங்க கூட ஒரு ஓமான் போலிஸ் பக்கத்துல இருப்பார், உங்க ட்ரெயினர் பின்னாடி சீட்ல. சலாம் அலைக்கும் எல்லாம் முடிஞ்ச பின்னால, போலிஸ்காரர் உங்கள வண்டி எடுங்கனு சொல்வாரு. எடுத்துட்டீங்கன்னா பெயிலு :-) ஏன்னா பாஸஞ்சர் பெல்ட் போட்ருக்காரான்னு பாக்க வேண்டியது ட்ரைவரோட வேலை. சீட் பெல்ட் ப்ளீஸ்னு போலிஸ்ட்ட சொல்லனும். போலிஸுக்கு தெரியாததானு நாமளே நெனச்சிகிட்ட பெயில்தான்.. அதுவும் பார்க்கிங்க விட்டு வெளிய வர்றதுக்கு முன்னாடியே பெயிலு.

அடுத்து வண்டி ஒரு ஜெர்க் ஆகி ஆஃப் ஆகும் பதட்டத்துல.. பெயில்

வண்டி போய்ட்டிருக்கும்போது கை சும்மா இல்லாம ரியர்வியூ மிரர்ல கைய வைப்பீங்க, பெயில். ஏன்னா, வண்டி கெளம்புறதுக்கு முன்னாடியே சீட், ரிவர்வியூ மிரர், செண்டர் மிரர் எல்லாத்தையும் சரி செய்யனும்.

போலிஸ் வலது பக்கம் திரும்பு அப்படிம்பார்.. அங்க நோ எண்ட்ரி இருக்கும். போலிஸே சொல்லிட்டாருனு வண்டிய திருப்புனா பெயில். அறிவில்ல, நோ எண்ட்ரியில போறியேன்னு ஒரு சவுண்டு வேற விழும்,. பத்தாக்கொறைக்கு ட்ரெயினருக்கு என்னய்யா உங்க ஆளுன்னு ஒரு இழுப்பு இழுப்பார். ட்ரெயினரின் வீட்டு வளர்ப்பைப் பொறுத்து உங்களுக்கு கீழே இறங்கிய பின்பு கிடைக்கும் வசவுகள் மாறும்.

முதல் முறை பெயிலாகும்போது நமக்கு ஆறுதல் சொல்ல பலர் இருப்பார்கள்.. என்னய்யா இதுக்குப்போயி கலங்குற,.. அடுத்ததுல பாஸ் செஞ்சிருவ பாருன்னு சொல்வாங்க..

ரெண்டாவது தடவை பெயிலாகும்போது சரி, விடுங்க அடுத்ததுல பாருங்க அப்படிம்பாங்க..

மூணாவது தடவை பெயிலான பின்னாடி உங்களுக்கு 10, 15 நண்பர்கள் கிடைச்சிருப்பாங்க,

மஸ்கட்டுல எங்கெங்கல்லாம் டெஸ்ட் நடக்குதுனு ஒரு ஐடியா கிடைச்சுரும்.

எங்க போனா சீக்கிரம் பாஸாகலாம் அப்படிங்கிற மாதிரி நிறையபேரு ஐடியா சொல்ல ஆரம்பிப்பாங்க.

நாலாவது தடவை பெயிலாகும்போது ஓமான் போலிஸ் பாரபட்சம் காட்டுறது மாதிரி தெரியும்.

ஐந்தாவது முறை நமக்கெல்லாம் எப்ப லைசென்ஸ் கிடைச்சு என்னிக்கு வண்டி ஓட்டுறதுனு ஒரு எண்ணம் வந்துரும்.

ஆறாவது முறை, ஏழாவது முறையெல்லாம் கடவுள் மேல பாரத்த போட்டு வண்டிய ஓட்ட ஆரம்பிச்சிருவீங்க.

இப்படி அடிக்கடி டெஸ்ட்டுக்கு ஓட்டி, ஓட்டி உங்களுக்கும் வண்டிய எப்படி ஓட்டுறதுன்னு ஐடியா கிடச்சிருக்கும். போலிஸ் பயமும் போயிருக்கும். நெறைய பேருக்கு போலிஸ் ஃபிரண்டே இருப்பாங்கன்னா பாத்துக்கங்க. அவ்வளவுதடவ அங்க வந்திருப்பாரு.. .. கே ஃபாலக் ஜெகொமார் (எப்படி இருக்கீங்க ஜெயக்குமார் என்பதன் அரபுத் திரிபு) அப்படின்னு அன்பா கேட்டுட்டு கரெக்டா பெயில் போடுவார். அப்புறம் ஒரு டெஸ்ட்டுல இவைங்க எங்க பாஸ் போடப் போறாய்ங்க அப்படினு வண்டி ஓட்டிட்டு டெஸ்ட் முடிஞ்சு இறங்குனு சொல்லும்போது உங்க ட்ரைவிங் புஸ்தகத்த போலிஸ் கையில குடுப்பார்.. அப்படின்னா..நான்..நான்.. பாஸ் ஆய்ட்டேனா அப்படினு ஒரு சந்தோஷம் வரும் பாருங்க.. அதெல்லாம் லைசென்ஸ் வாங்குனவனுக்குத்தான் தெரியும்.

நம்மாளு ஒருத்தர் உ.பிக் காரர். 48வது தடவையா டெஸ்டுக்குப்போயி பாஸானாரு. ஓமான் நாட்டுல எங்கெங்க ட்ரைவிங் டெஸ்ட் நடக்கும், எங்க போனா சுளுவா இருக்கும், எந்த ஊர் போலிஸ் நல்லவங்க, எந்த ஊர்ல நாஷ்டா நல்லா இருக்கும் இப்படி ஓமான் நாட்டையே சுத்தி சுத்தி வந்த அனுபவத்துல ஏகப்பட்ட தகவல்கள் சேகரிச்சாரு. ஒவ்வொரு வாட்டி பெயிலாகும்போதும் இந்த ஊர் போலிஸ்காரங்க சரியில்லைனு அடுத்த ஊர் போயிருவாரு. ஓமானில் எங்கு வேண்டுமானாலும் டெஸ்ட் கொடுக்கலாம். தமிழ்நாட்டுல ட்ரெயினிங் எடுத்துட்டு காஷ்மீர்ல டெஸ்ட் தர்றதுமாதிரி.

பொதுவா லஞ்சம் வாங்க மாட்டாங்க. வாஸ்தா எனப்படும் ரெகமெண்டேஷன்ல சிலருக்கு லைசென்ஸ் கிடைக்கும். ஆனால் அப்படி லைசென்ஸ் வாங்குவது சாவை வாங்குவதற்குச் சமம். இவ்வளவு கடுமையாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, கொஞ்சம்கூட ஈவிரக்கமின்றி தேர்வுகள் நடத்தி அதில் பாசாகும் ஆட்களே விபத்தில் விழும்போது, இப்படி ரெகமெண்டேஷனில் லைசென்ஸ் வாங்குவோர் தானும் சிக்கலில் மாட்டி பிறரையும் விபத்தில் மாட்டிவிடுவார்கள்.

அப்புறம் லைசென்ஸ் வாங்குன பின்னாடி அப்படியே காத்துல ஒரு வாரம் மெதப்பீங்க.. எல்லோரும் வாழ்த்துச் சொல்வாங்க. கம்பெனி ரொம்ப தாராளமா டபுள் கேபின் பிக்கப் குடுக்கும். பெட்ரோல் எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். ஒரு வருடம் அனுபவித்த பின்னர் ட்ரைவிங் போரடித்து எப்படா பக்கத்துல உக்காந்துட்டு போவோம்னு ரொம்பப் பேருக்கு ஆயிரும். ஆனா எனக்கு மட்டும் இன்னிக்கு வரைக்கும் ட்ரைவிங்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச பொழுதுபோக்கு. நானும் கிட்டத்தட்ட 3.5 லட்சம் கிலோமீட்டர் ஓட்டிட்டேன் ஓமான், கத்தார், துபாய்னு. இன்னும் எனக்கு ரொம்பப் பிடிச்சது இடது கைய ஜன்னல்ல வச்சிகிட்டு, ஒத்தக்கையில் வண்டிய ஓட்டிக்கிட்டே, இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே நீளமான பயனங்கள் போவது..

அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய கனடாவில் கார் அவசியம் படியுங்கள். மனுஷன் கலக்கியிருப்பார்.

Monday, August 30, 2010

அந்தம் தொடர் மற்றும் அகர முதல வலைப்பதிவு குறித்த எனது எண்ணங்கள்.

வற்றாயிருப்பு சுந்தர்..

அகர முதல என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர்.

தற்போது காணாமல் போய்விட்ட மரத்தடி.டாட்.காமில் தீவிரமாக இயங்கியவர்.
குற்றுயிரும், கொலைஉயிருமாய் இன்றிருக்கும் மரத்தடி குழுவின் உறுப்பினராய் இருப்பவர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தீவிர விசிறி. எஸ்.பி.பி. பாடிய பாடல்களில் அவருக்குப் பிடித்த பாடல்களை வரிசையாக பாடல் வரிகளுடன் பாடும் நிலா பாலு என்ற வலைத்தளத்தில் வலையேற்றுபவர்.

நல்ல புகைப்படக் கலைஞர்.

கவிப்பகைவர்களுக்கு எமன். ( நிறைய கவிதைகள் எழுதுவார் சார்)

மிகச் சிறந்த மனிதாபிமானி.

தீவிர இலக்கிய வாசிப்பும் அதைப்பற்றிய தனது கருத்தை பதிவும் செய்பவர். ஜெ.ஜெ.சிலகுறிப்புகள் பற்றி சில குறிப்புகள் என 5 பாகங்களில் அப்புத்தகத்தைப் பற்றிய தனது கருத்துக்களை பதிவு செய்தவர். கிட்டத்தட்ட அந்தக் கதையை திறனாய்வு செய்தவர்.

சுஜாதா, சுரா மற்றும் ஜெயமோகனின் தீவிர விசிறி.

நாட்டுப்பற்றும், சமூகக்கவலையும் கொள்பவர்.

ஆபிதின் கதைகளை ரசிப்பவர்.
சாருநிவேதிதா ஆபிதீன் கதைகளைத் திருடி தனது என உரிமைகொண்டாடியதைக் கண்டபின் சாருவை முழுதுமாய் வெறுத்தவர். தற்போது எப்படி எனத் தெரியவில்லை..

எதற்கு இந்த நீண்ட முன்னுரை என்கிறீர்களா?

எனக்குப் பிடித்த வலைப்பதிவுகள் பற்றி எழுதி வருவதில் இவரது அகர முதல வலைப்பூ வை அறிமுகம் செய்யவே இப்பதிவு.

2004ல் இருந்து வலைப்பதிவு எழுதினாலும் 200க்கும் குறைவான பதிவுகளே எழுதியிருக்கிறார். தரத்திற்கு அவர் காட்டும் முக்கியத்துவம் காரணமாயிருக்கலாம்.

மரத்தடி, ராயர் காபி கிளப், அகத்தியர், பொன்னியின் செல்வன், தமிழ் உலகம் போன்று இன்னும்பல இணைய குழுக்களில் முக்கிய பங்காற்றுபவர்.

அவர் எழுதிய அந்தம் என்ற தொடரை 2004 வாக்கில் படித்து விட்டேன். இன்றுவரை என் மனதை விட்டு அகலாத ஒரு கதை இருக்கிறதென்றால் அது அந்தம் மட்டுமே. நினைக்கும்தோறும் மனதில் மிக அருமையான உணர்வை அளிக்கும். கிட்டத்தட்ட நான் அனுபவிக்க விரும்பிய வாழ்க்கை அது. கணவன் மட்டும் இல்லாமல் இருந்தால் நிச்சயம் நிலாவைப் போன்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம். கதையைச் சுருக்கமாகச் சொன்னால், தற்போது தொலைக்காட்சித் தொடர்களுக்கு தீனியாகும் விஷயம்தான்.. கல்யாணமான ஒரு பெண்ணுடன் மலரும் காதலும், இறுதியில் கதாநாயகியின் கணவன் வந்ததும் இருவரும் பிரிவதும்தான் மொத்தக் கதை. மருத்துவமனையில் கிடக்கும் கதாநாயகன் தனது ஞாபகங்களைத் திரும்பிப் பார்ப்பதுபோல சொல்லப்படுகிறது கதை.

தனது முதல் கதை இது எனச் சொல்கிறார் சுந்தர். ஆனால் நல்ல சரளமான எழுத்து நடையில் எழுதியிருக்கிறார். 2004ல் இத்தொடரைப் பற்றி அவரைப் பாராட்டி எழுதிய மின் மடல்கள் ஞாபகம் வருகிறது. அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. ஒருவேளை அதுதான் இந்தக்கதை இவ்வளவு பிடித்துப்போக காரணமோ? பல லாஜிக் ஓட்டைகள் கொண்ட இத்தொடரை இப்போது படித்தால் அபத்தமாக தெரிகிறது. ஆனாலும் இன்றுவரை என் மனதிற்கு நெருக்கமான காதல் கதை.

2004ல் இருந்து இக்கதையைப்பற்றிய எனது எண்னத்தைப் பதிவு செய்துவிட வேஎண்டும் என நினைத்து முடியாமல், இன்று கைகூடியிருக்கிறது. :-) கிறுக்குத் தெளிந்தபின் ?

2008 - 2009ல் 11 பாகங்களாக இவர் எழுதிய மூன்று வருடங்களூக்குப் பிறகு என்ற தொடர் தென்றல் இதழில் வந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஊருக்குச் செல்லும்போது ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பு. இத்தொடர் நம்மை நாமே திரும்பிப் பார்ப்பதுபோல இருக்கிறது. எவ்வளவு நல்ல விஷயங்களை இழந்துவிட்டோம் என்பதையும், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நடக்கும் விளைநிலங்களின் ஆக்கிரமிப்பு பற்றியும், கோவில்களிலும், பொது இடங்களிலும் பொது மக்களுக்கு சமூகபிரக்ஞை என்ற ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவு நடந்து கொள்வதையும் ஆதங்கத்துடன் பதிவு செய்திருக்கிறார். அவசியம் படிக்க வேண்டிய தொடர் இது.

ரஜினி என்ற ஆளுமையுடனான அவரது சில சந்திப்புகளையும், ரஜினி பெப்சியை மதுரையில் வெளியிட்டதைக் குறித்தும் அவரது பதிவு இது. என்ன பிரமாதம் இது என்கிறீர்களா? சுந்தர் தீவிர கமல் விசிறி.

எந்த நடிகனின் பின்னால் செல்லும் சினிமா ரசிகர்கள் செய்கிற கிறுக்குத்தனங்களையும் இங்கு சுட்டிக்காட்டுகிறார்


சுந்தர் ஒரு நல்ல கவிஞரும்,கூட..(அ)கவிதைகள் என்ற வலைத்தளத்தில் கவிதைகள் எழுதுகிறார். அவரது கவிதைகளில் ஒற்றை இறகும் துயிலும் என்னை மிகவும் கவர்ந்தவை.

புகைப்படங்களை ராஜபார்வை என்ற வலைத்தளத்தில் பதிகிறார்.

அவரது வலைப்பதிவுகள் குறித்து அவரே தரும் வாக்குமூலம் கீழே...


*அகரமுதல* - இது கிட்டத்தட்ட எனது டைரிக்குறிப்புகள் போன்ற (முதல்) வலைப்பதிவு.
*ராஜபார்வை* -நான் எடுத்த புகைப்படங்களுக்கான வலைப்பதிவு
*அகவிதைகள்* - கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டூழியங்களுக்கான வலைப்பதிவு.

இவரது குறையாக நான் நினைப்பது நினைவலைகள் என்ற பெயரில் கொசுவத்தி சுற்றுவதுதான். சுவையாகத்தான் இருக்கிறது என்றாலும் மிக அதிகமாய் கொசுவத்தி சுற்றிவிட்டார்.

சுந்தர், அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். என்னைக் கவர்ந்த நல்ல வலைப்பதிவுகளின் வரிசையில் இது இரண்டாவது. அவரது வலைப்பதிவில் தற்போது நிறைய எழுதுவதில்லை. நிறைய எழுதுங்கள் சுந்தர் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.

வயதானாலும்,( :-) ) மனதில் என்றும் இளமையாய் இருக்கும் வற்றாயிருப்பு சுந்தருக்கு வாழ்த்துக்கள்.

Saturday, August 28, 2010

சொல்வனம் இதழ் 32 குறித்து எனது எண்ணங்கள்.

சொல்வனம் இலக்கிய இணைய இதழ் குறித்து எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஒவ்வொரு இதழும் அதன் முந்தைய இதழை முந்திச் செல்கிறது தரத்திலும், உள்ளடக்கத்திலும். 23.08.2010 தேதியிட்ட சொல்வனத்தின் 32 வது இதழ் குறித்த எண்ணங்கள் கீழே

இந்த இதழும் வழக்கம்போல அருமை.

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக் கட்டுரை ராஜனின் எழுத்துத் திறமையின் பல பரிமானங்களை உனர்த்துகிறது. படிக்கப் படிக்க கட்டுரையின் உள்ளேயே இழுத்துச் சென்றுவிடுகிறது கட்டுரை. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

காமன்வெல்த் போட்டிகள் குறித்து சந்திரசேகரின் கட்டுரை இந்திய விளையாட்டுத்துறையின் லட்சனத்தை தோலுரிக்கிறது. ஆனால் அரசாங்கம் என்ற ஒன்று இந்த ஊழல்குறித்து ஏதும் செய்யாமல் இருப்பது, நாட்டின் மானத்தைவிட தனிப்பட்ட அரசியல்வாதிதான் முக்கியம் என்பது போல நடந்துகொள்வது அப்பட்டமாய் தெரிகிறது. ஒரு இந்தியனாய் மிக்க வருத்தமாய் உணர்கிறேன். நாட்டின் கௌரவத்துக்காக நடத்தப்படும் ( அவர்கள் சொல்லிக்கொள்வது போல) இந்த விளையாட்டுப்போட்டியிலேயே இவ்வளவு லஞ்சமும், ஊழலும் மோசமாய் தலைவிரித்தாடும் என நினைக்கவேயில்லை. அதிலும் நமது நாட்டின் கௌரவத்தையே அடகுவைத்துவிட்டு ஊழல் செய்யும் கல்மாதி போன்றவர்களைக்கூட நமது சட்டம் தண்டிக்காதெனில் மத்தியஅரசைப்பற்றி சாதாரன மக்கள் என்ன நினைப்பார்கள்?

ஆவுடை அக்காள் பாடல் திரட்டு குறித்த நாஞ்சில் நாடனின் கட்டுரை அருமை. பாரதிக்கு முன்னோடி மட்டுமின்றி, பாரதியின் கருத்துக்கள் ஆவுடை அக்காளின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டது என்ற ஒப்புமையும் புதிய தகவல். எப்போது எழுதினார் என்பதே தெரியாத அளவு பழமையான காலமாக இருந்தாலும் அக்காளின் கருத்துக்கள் இப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருப்பது நாஞ்சில நாடன் எடுத்துக்கட்டியுள்ள பாடல் வரிகளில் தெரிகிறது. இதுபோன்ற அடையாளம் அற்றுப்போன, அல்லது மறக்கப்பட்டுவிட்ட நமது மூதாதையர்களை எடுத்துக்காட்டும் நாஞ்சில் நாடனின் எழுத்து பாராட்டுக்குரியது.

துப்பு - சுகாவின் இன்னொரு அருமையான அனுபவக்கட்டுரை. அவர் சொல்லும் ”எல்லாப் பெரிய குடும்பங்களையும் போல உப்புப் பெறாத காரணங்களுக்காக அத்தனை காலம் தொடர்பில்லாமல் பிரிந்திருந்தோம்.’’ என்ற வரிகள்தான் இப்போதும் எத்தனைப் பொருத்தம். காலம் கடந்த பின்னர் இழந்ததை நினைத்து வருந்திப் பயன் என்ன? எத்தனை எத்தனை அண்ணன், தம்பிகள், அப்பா, மகன்கள் காலம் போடும் இந்தக் கண்ணாமூச்சியில் சிக்கி வாழ்க்கையின் நல்ல தருணங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கிறார்களோ? மொத்தக் கட்டுரையில் இந்த ஒரு வரி எவ்வளவு பெரிய உண்மையை சர்வசாதாரனமாய் சொல்லிச் செல்கிறது?

முதல் முறையாய் ராராவின் கார்டூன் சுமாருக்கும் கீழே வந்திருக்கிறது. வழக்கமாய் அவரது படங்கள் இன்றைய குழந்தைகளின் புத்திசாலினத்தை எடுத்துக்காட்டுவதாய் இருக்கும். இம்முறை குமுதத்தில் வரும் ஜோக் போலாகிவிட்டது.

சூப்பர் பக் குறித்த ராமன் ராஜாவின் கட்டுரை பயந்து போயிருக்கும் மக்களுக்கு ஒரு ஆறுதல். வெளிநாட்டவர் ஏன் இப்படி நம்மீது பாய்கிறர்கள் என்பதற்கு

// சேவைகள் துறையில் இந்தியா பீடு நடை போட்டு முன்னேறி வருகிறது. மென்பொருள் காண்ட்ராக்ட்களை ஒரேயடியாக வளைத்துப் போட்டாகிவிட்டது. அதே போல் மெடிக்கல் டூரிஸம் என்று அபுதாபியில் இருந்தெல்லாம் அராபிய ஷேக்கர்கள் வந்து இங்கே கிட்னி, இதயம் என்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு போகிறார்கள். காரணம், கிட்னி திருடுபோகும் அபாயத்தையும் மீறி இங்கே செலவு மிகவும் கம்மி//

இதுதான் காரணம் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறார். மேலும் வெளிநாட்டு ஆஸ்பத்திரின்னா எப்படித் தெரியுமா எனப் படம் போட்டவர்களுக்கு அங்கு கிடைக்கும் இலவச கிருமிகள் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை.

இன்னும் ஒரு அருமையான இதழ் சொல்வனழ் இதழ் 32.

Monday, August 16, 2010

தையல் - வலைப்பக்கம் அறிமுகம்.


முதலில் நமக்குத் தெரிந்த ஆட்கள் என்ற அபிப்ராயத்துடன் எதையும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற உண்மையை உணர வைத்தது ராம்கியின் தையல் வலைப்பக்கம். அப்படிப்பட்ட எண்ணம் அவர்கள் எழுத்தைப்பற்றிய உண்மையான அபிப்ராயம் நமக்குக் கிடைக்காமல் செய்துவிடும். அப்படிப்பட்ட எண்ணத்துடன்தான் தையல் வலைப்பதிவை தொடர்ச்சியாக தாண்டிச் சென்றிருக்கிறேன் என நினைக்கிறேன். அவரது வலைத்தளத்திற்கு பலமுறை வந்திருக்கிறேன். ஆனால் அவ்வபோது எதையாவது படித்துவிட்டு சென்று விடுவேன். இப்போது முதலில் இருந்து படிக்க ஆரம்பித்து முழுதும் முடித்திருக்கிறேன்.

எல்லாக் கட்டுரைகளும் நல்ல நடையிலும், கச்சிதமாகவும் இருக்கிறது. வள வள என்று நீளமாகவோ, தேவையற்ற கிண்டல்களோ, ஏதுமின்றி, ஒரு விஷயத்தை எப்படிச் சுவாரசியமாய்ச் சொல்ல முடியும் என தொடர்ந்து முயற்சித்திருக்கிறார் ஜெ.ராம்கி. எல்லாமே மிக நன்றாய் வந்திருக்கிறது.

கோவிலுக்குச் சென்று வந்ததைப் பற்றி அவர் எழுதும் குறிப்புகள் அந்தக்கோவிலையே பார்த்திராதவர்களுக்குக் கூட கோவில் எப்படி இருக்கும் , சென்று வந்தால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை தனது எழுத்து மூலமே தந்துவிடுகிறார். அடி அண்ணாமலை கட்டுரை இதற்கு ஒரு உதாரனம்.

சோபன்பாபு எபிசோட்.. ஆச்சரியம் கலந்த தகவல்.. நான் அப்போது 8ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். 17.04.1980ல் ஜெயலலிதா ஒரு வாசகர் கடிதம் எழுதி இருக்கிறார் என்பதும் அதில் சோபன் பாபுவைப் பற்றி சொல்லியிருக்கிறார் என்பதும் ஆச்சரியம் கலந்த உண்மை. ஜெ.ராம்கி அவர் எழுதிய ஜெ புத்தகத்தில் இதையெல்லாம் எழுதியிருக்கிறார்.

ராம்கியின் முதல் புத்தகமான ஜே.பி யை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு இன்னும் தீராத ஆச்சரியம் எப்படி இரண்டாம் சுதந்திரமான ”எமர்ஜென்ஸியிலிருந்து விடுதலை”க்குக் காரணமான ஒருவரை மக்களின் ஞாபகத்திலிருந்தே ஒரே ஒருகுடும்பத்தால் திட்டமிட்டு அழிக்கமுடிந்தது என்பதும், அதை காங்கிரஸை கடுமையாய் எதிர்க்கும் மற்ற எந்த கட்சியாலும் இந்த இருட்டடிப்பை தடுத்த நிறுத்த முடியாமலும், ஜெ.பியின் புகழை பரப்ப முடியாமலும் இருந்தார்கள் என்பதை நினைக்க ஆச்சரியமாய் இருந்தது. இத்தனைக்கும் இன்றைக்கும் பல தலைவர்கள் எமர்ஜென்ஸியின் கோரப்பிடியில் கொடுமையை அனுபவித்தவர்கள். ஒருவேளை இன்றைக்கு சுரண்டலினால் கிடைத்த வசதிவாய்ப்புகள் அவர்களுக்கு அந்த நினைவையே அத்துப்போகச் செய்திருக்கும். அதேபோல புத்தகத்தின் மூல ஆசிரியர் ( தேவ சகாயம்) எழுதியது போல இந்தியர்களாகிய நாமெல்லாம் ஜெ.பிக்கு செய்நன்றி கொன்றவர்கள்.

ரேஷன் கார்டு - ஒவ்வொரு இந்தியனின் கனவு அட்டை. ராம்கி அவரது பதிவில் சரியாகச் சொன்னபடி ரேஷன் கார்டு என்பது ” சென்னையில் அலல்து தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக வசிப்பதற்கான கிரீன் கார்டு” என்பதுதான் உண்மை. எங்கள் வீட்டு ரேஷன் கார்டில் என்னோட வீட்ட்டுக்காரம்மா பெயரைச் சேர்க்கும் சாதனை இன்னும் முற்றுப்பெறவில்லை. ஆனால் சென்னையில் வீட்டுக்காரம்மா பெயரை குடும்ப அட்டையில் இருந்து உடனே எடுத்துவிட்டார்கள். வித்தியாசமான அரசு இயந்திரம்.

புலிவிடும்தூது.. கலக்கல். அரசியல் நையாண்டியில் நிஜமாகவே வலிக்காமல் அடிக்கிறார்.

பிறவார்த்தை யாதொன்றும் கட்டுரையில் //தமிழ்நாட்டு மக்கள், புலிகளை தீண்டத்தகாதவர்களாகத்தான் பார்க்கிறார்கள் என்பதில் காங்கிரஸ் காட்டும் அசாத்திய உறுதி தவறானது என்பதை எந்த தேர்தல்களும் இதுவரை நிரூபிக்கவில்லை.// என்பது எவ்வளவு பெரிய உண்மை? இனிமேல் இலங்கைத் தமிழர் குறித்து ஒருவரும் பேசப்போவதில்லை..

சாரு நிவேதிதாவும் கருணாநிதியும்... சான்ஸே இல்லை.. இருவரையும் ஒப்பிட்டு எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதை மிக சுவாரசியமாய் சொல்லி இருக்கிறார்.

அடுத்த கட்டம் கட்டுரையெல்லாம் சொல்வனம் போன்ற இலக்கிய பத்திரிக்கைகளில் வரவேண்டியது. மிக அருமை. தமிழ் சினிமாவைப் பற்றியும் அதன் நிதர்சனங்களைப் பற்றியும் ஏதுமறியாதவர்கள் விடும் உதார்களை அழகாக தோலுரிக்கிறார்.

ரஜினியின் படங்களில் வரும் நல்ல பாடல்வரிகளை ”சில்லுண்டியிசம்” என்ற பெயரில் ரஜினியின் படத்தின் கீழே இடுகிறார்.

அவர் எழுதிய புத்தகங்கள் குறித்து இவ்வாறு “பா.ராகவன் புத்தக உலகை அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள் பற்றி புத்தகம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினி – சப்தமா? சகாப்தமா? (2005); மு.க (2006), பாகவதர் (2007), ஜெ (2008 ) போன்ற புத்தகங்களின் மூலமாக நல்ல அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து எழுதிய காவிரி, மன்மோஹன்சிங், மதிமுக புத்தகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த பின்னர் ஒரு வழியாக தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் ஓரமாக நிற்க முடிந்ததிருக்கிறது” என சுயபுராணத்தில் எழுதியிருக்கிறார்.

பொதுவாக சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கு சமூகத்தில் ஒரு இளக்காரமான பார்வையே பரிசாகக் கிடைக்கிறது. பொழுதுபோக்குக்காக சினிமாக்களைப் பார்க்காமல் அவர்களை கடவுள் ரேஞ்சுக்கு நினைப்பதும், அதற்காக வேலைசெய்வதுமாக வாழ்க்கையை வீணடிக்கிறார்கள் என்பதும் கிண்டல் செய்பவர்களின் வாதம். அதிலும் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்துவிட்டால் கிண்டல் இன்னும் கொஞ்சம் கூடும். உலக சினிமா எடுக்கிறேன் என ஆங்கில திரைப்படங்களை காப்பியடித்து கூத்தடித்துக்கொண்டிருக்கும் கமல் இவர்களுக்கு மிகச் சிறந்த நடிகன். ஆனால் உண்மையில் திரையிலும், நேரடி வாழ்க்கையிலும் நல்லவனாகவே வாழும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் விரும்பப்படும் ரஜினியை ரசித்தால் கிண்டல். ரஜினி ரசிகன் எனில் இலக்கியம் படைப்பதும், சமூக அக்கறை சார்ந்து எழுதக்கூடியவராகவும் இருப்பது நடக்கவே கூடாத ஒரு விஷயம் என நினைக்கிறார்கள்.

ரஜினியின் தீவிர ரசிகராகவும் இருந்துகொண்டு அதே சமயம் சமூக அக்கறையுடன் கூடிய கட்டுரைகளையும், நகைச்சுவைக் கட்டுரைகளையும் எழுதுவதுடன், நிறைய புத்தகங்களையும் எழுதும் ரஜினி ராம்கியை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் புதியவர்களுக்கு ஒரு நல்ல வலைப்பக்கமான தையலை அறிமுகம் செய்த திருப்தி எனக்கு.

Sunday, August 8, 2010

என்னத்தச் சொல்ல...

நமது பாரதப்பிரதமர் சமீபத்தில் காஷ்மீரத்துக்கு”ஏன் சுயாட்சி தரக்கூடாது” என திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார், இங்கே. இத்தனை காலம் காஷ்மீரத்தைப் பாதுகாக்க உயிர் நீத்த மற்றும் உயிரை பணயம் வைத்து போராடிக்கொண்டிருக்கும் இந்திய ராணுவத்தின் தியாகம் எல்லாம் இஸ்லாமிய ஓட்டு வங்கிக்காக தியாகம் செய்யப்படப்போகிறது, அல்லது காஷ்மீர முஸ்லிம்களிடம் பார்த்தீர்களா நாங்கள் சுயட்சி தர இருந்தோம் மற்றவர்கள்தான் தரவிடவில்லை எனச் சொல்லி வாக்குகளைப் பெற ஒரு குயுக்தியான வழி.

படிச்சவன் சூதும், வாதும் செஞ்சால் அய்யோனு போவான்..அம்போனு போவான் எனச் சொன்ன எங்கள் தீர்க்கதரிசியாம் பாரதியின் வாக்கு பொய்த்துப் போய்க்கொண்டிருக்கின்றது.

ஜனநாயகத்தின்மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த நேருவின் மகளால் இந்திய மக்கள்மீதும், தலைவர்கள் மீதும் ஏவிவிடப்பட்ட எமர்ஜென்ஸியிலிருந்து இரண்டாம் சுதந்திரம் என வர்ணிக்கப்பட்ட விடுதலையை வாங்கிக்கொடுத்த ஜெயப்பிரகாஷ் நாராயணனையே மறந்த பெருமைக்குச் சொந்தக்காரர்கள் நாம். ”நாட்டின் பாதுகாப்பு” என்ற போர்வையில் 70களில் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சியை நடத்திய கட்சியால் இன்றும் நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி என்று சொல்லி ஓட்டு வாங்க முடிகிறது.

ஒவ்வொரு பயங்கரவாதத்துக்கும் ”பெயர் வைப்பதை” விட்டு விட்டு பயங்கரவாதத்தை வேரறுக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் இருக்கும் ஆளும் கட்சியை நினைத்தால் இந்தியாவின் எதிர்காலம் குறித்த கவலை இன்னும் அதிகரிக்கிறது. இப்போது புதியதாக சிவப்பு பயங்கரவாதம் வேறு. மாவோயிஸ்ட்டுகள் செய்யும் பயங்கரவாதத்துக்கு நான் வைத்த ஒரு பெயர்.. ஏதோ நம்மாலான ஒரு உதவி.

ஆயிரம்கோடிக்கு குறைவாய் இருக்கும் ஊழல்கள் எல்லாம் இப்போது நமக்கெல்லாம் ஊழலாகவே தெரிவதில்லை. நேற்றுப் பிறந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு சினிமாப் படம் எடுக்க முடிவதெல்லாம் நிச்சயம் உழைத்து சம்பாதித்த பணத்தில் செய்ய முடியாது. இவர்களைப் போன்ற குடும்பமே நாடு என நினைக்கும் தலைவர்களிடம் இருந்து நாட்டைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்துக்களை உணராமலும், பாகிஸ்தானுடன் சேர்ந்துகொண்டு சீனா செய்யும் ஆக்கிரமிப்பு மற்றும் மாவோயிஸ்ட்டுகளுக்கு முழு ஆயுத உதவியும் செய்து இந்திய நாட்டின் பாதுகாப்பை நிலைகுலையச் செய்வதன் மூலம் விடும் மிரட்டல்கள் குறித்து ஆளும்கட்சி மக்களுக்குப் பொய்ச் சத்தியம் செய்வதை விட்டு விட்டு நாட்டின் எல்லைகளை பாதுகாக்க என்ன செலவானலும் அதை உறுதி செய்ய வேண்டும்.

மூன்றில் ஒரு இந்தியன் இரவு உணவின்றி படுக்கைக்குச் செல்ல, சேர்த்து வைக்கப்பட்டுள்ள தானியங்களை எலிகள் சூறையாடிக்கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்க்கும் அரசாங்கம் என்ன அரசாங்கமோ?

தொழில்நுட்பத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டால் தனது உணவுதானியங்களைக் கூட பத்திரப்படுத்த முடியவில்லையா? சேமிக்கப்பட்ட தாணியங்கள் உற்பத்தி செய்த தானியங்கள் போலல்லவா?

2011 தேர்தலுக்கு இப்போதிருந்தே எல்லோரும் அவரவர்களின் திறமைகளை காண்பித்து பெரிய அரசியல் கட்சிகளிடம் தனக்கான இடங்களைப் பெற முயன்றுகொண்டிருக்கிறன. தமிழக பெரும் கட்சிகள் காங்கிரசிடம் கூழைக்கும்பிடு போட ஆரம்பித்திருக்கின்றன. அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த பின்னர் நம்மிடம் கூழைக்கும்பிடு போட ஆரம்பிப்பார்கள். அதிக லஞ்சம் கொடுத்து வெல்பவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை கூழைக்கும்பிடு போட வைப்பார். நல்ல ஜனநாயகம்..

எல்லாத்தையும் பாத்த பிறகு மனசுல தோனுறது.. என்னத்தச் சொல்ல...

Thursday, July 29, 2010

கத்தார் நாட்டின் பத்திரிக்கை சுதந்திரம்

பொதுவாய் மன்னராட்சி நடக்கும் நாடுகளில் அரசு மற்றும் அது சம்பந்தப்பட்ட துறைகளை விமர்சிக்க முடியாது. கத்தாரில் பத்திரிகைகளுக்கு சுதந்திரம் அதிகம். அரசுத்துறையின் மெத்தனத்தை 12 நாட்களாக தினமும் வெளியிட்டு வருகிறது த பெனின்சூலா என்ற தினப்பத்திரிக்கை. இதை அகற்றும்வரை தினமும் படம் வெளியாகும் எனவும் சொல்கிறது. படத்தை பெரிதாக்கிப்பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.



இங்கையும் நம்மூரு மாதிரிதான் அப்படினு ஒரு சின்ன சந்தோஷம்..

Photo courtesy by The Peninsula

Tuesday, July 27, 2010

ரகு ராய் - பேட்டி

சொல்வனத்தில் எனது மொழிபெயர்ப்பில் வெளியான திரு.ரகுராய் அவர்கள் அளித்த பேட்டியை வாசிக்க இங்கே சொடுக்கவும்

Monday, July 26, 2010

இன்று கார்கில் வெற்றி தினம்



நம்மில் எத்தனை பேருக்கு இன்று கார்கில் வெற்றி தினம் ( ஜூலை 26) என்பது தெரியும்? நமது தாய் நாட்டின் பாதுகாப்பிற்காய் உயிர் நீத்த அந்த தீரர்களை நாம் மறக்கலாமா?

கார்கில் போர் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகம்..

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மலைப்பிரதேசத்தில் இந்திய - பாகிஸ்தானிய எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டை மீறி பாகிஸ்தானிய ராணுவமும், அதனால் பயிற்றூவிக்கப்பட்ட பயங்கரவாதக் கும்பலும் இந்திய எல்லைக்குள் உள்நுழைந்ததால் ஏற்பட்ட போராகும் இது. 1999 ஆம் ஆண்டும் மே மாதம் முதல் ஜூலை வரை நடந்த இந்தப் போரில் இந்தியா வென்றது. பாகிஸ்தானும் ,இந்தியாவும் தங்களது பரஸ்பர ராணுவ பலத்தை அதிகப்படுத்த இந்தப்போர் காரணமாக அமைந்தது. இந்தியா இந்தச் செலவையும் சமாளித்து இந்தியா முன்னேறிக்கொண்டிருக்க, பாகிஸ்தானின் வளர்ச்சி கீழ்முகமாகச் சென்றது. இன்றைக்கு அமெரிக்கா பணம் அனுப்பினால்தான் நாடு மூழ்காமல் தப்பிக்கும் என்ற நிலையில் இருக்கும் நாடு.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயால் வளர்த்துவிடப்பட்ட பயங்கரவாதிகளும், பாகிஸ்தானிய ராணுவமும் இணைந்து இந்தியா மீது தொடுத்த தாக்குதலில் பல வீரர்களை பலியாகத்தந்து ( அரசுக் கணக்குப்படி 449பேர்) அடைந்த வெற்றி இது.

மனித உரிமைகள் பேசும் மாக்களுக்குத் தெரியுமா, நமது ராணுவ வீரர்கள் போரிட்டுக்கொண்டிருப்பது மூளைச்சலவை செய்யப்பட்ட பைத்தியக்காரர்களிடம் என்பது? அவர்களிடம் சென்று அன்பும், கனிவும் கொண்டு பேசிக்கொண்டிருந்தால் நாம் நமது நிலப்பரப்புடன் சேர்ந்து நமது வீரர்களையும் இழக்க வேண்டியதுதான்.

கார்கில் மட்டுமின்றி தினமும் எல்லையைக் காக்கும் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலியும், எல்லைகளை இழக்காமல் காக்கும் முப்படை வீரர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவிப்போமாக..



போரில் உயிர்நீத்த வீரர்களின் பட்டியல் இது


போரில் பங்கு பெற்ற வீரர்களுக்குக் கிடைத்த பதக்கப் பட்டியல் இது

Wednesday, July 21, 2010

மதராசப்பட்டிணம்


கல்பாத்தி எஸ்.அகோரம் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட ஒரு தயாரிப்பாளர் தமிழில் மிகவித்யாசமான படங்களாய் எடுத்துக்கொண்டிருக்கிறார். முதலில் இம்சை அரசன் 23ம் புலிகேசி, பின்னர் இரும்புகோட்டை முரட்டுச் சிங்கம்.. என்ற வரிசையில் இப்போது மதராசப்பட்டிணம்.

இது தவிர வேறு எத்தனை நல்ல படங்கள் எடுத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் நான் பார்த்த எல்லாப்படங்களுமே ஒவ்வொரு வகையில் பிரம்மாண்டம்.

23ம் புலிகேசியில் ராஜா காலத்துக் கதையை வைத்து பிரம்மாண்டம்

இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கத்தில் கௌபாய் கதையை வைத்து பிரம்மாண்டம்

மதராசப்பட்டிணத்தில் சுதந்திரத்திற்கு முந்தைய தமிழகத்தையும், தற்போதைய தமிழகத்தையும் காட்டுவதில் பிரம்மாண்டம்.

படத்தின் ஆகப்பெரிய பலம் ஒவ்வொரு காட்சியும் நம்பும்படி இருப்பது. அதீத வில்லத்தனமோ அல்லது ஹீரோத்தனமோ இன்றி படம் முழுக்க இயல்பாய் நகர்கிறது.

ஒரு பிரிட்டனைச் சேர்ந்த பாட்டி இன்றைய சென்னையில் பழைய நினைவுகளை மீட்டெடுப்பதுதான் கதை.

ஒரு ஆதர்ச காதல் கதை எனச் சொல்லலாம். ஆனால் காதலர்கள் சேர்வதில்லை. சேர்த்து வைத்திருந்தால் என்னவாம் என இயக்குனரை மனதிற்குள் கேட்கும்படி அமைந்த கதையும், திரைக்கதையும், காட்சிகளும் கலக்கல்.


நம்ம பழைய மதராஸையும், வெள்ளையர்களின் மதராசப்பட்டிணத்தையும் இன்றைய சென்னையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்த வெள்ளைப்பாட்டி தனது நினைவிலிருந்து நமக்குக் காண்பிக்கிறது.

பாட்டியின் கனவிலியில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே நிகழ்காலச் சென்னைக்கும், முன்நாளைய மதராசப்பட்டிணத்திற்குமாக மாற்றி மாற்றிக் காண்பிக்கும்போது நாமும் அதை இயல்பாய் ரசிக்கிறோம். சென்னை மக்கள் வெள்ளத்தால் எப்படி அடையாளமற்றுப்போய்விட்டது என்பதும் தெரிகிறது.

இங்கிலாந்தில் இருக்கும் என்பது வயது பாட்டிக்கு திடீரென உடல்நலம் குறைகிறது. மூளையில் ரத்தம் கட்டியிருக்கிறது என மருத்துவர் சொல்கிறார். வாய்ப்பே இல்லையே..எப்படி எனக் கேட்கிறார்கள் மகளும், பேத்தியும்? சிறுவயதில் எப்போதாவது தலையில் அடிபட்டிருக்கும், அதனாலதான் எனச் சொல்கிறார் மருத்துவர்.ஒரு வாரத்தில் பாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் எனவும், பிழைக்க 50 சதவீதம் வாய்ப்பிருக்கிறது என சொல்கிறார் மருத்துவர்.

இதைக்கேட்டுக்கொண்டிருக்கும் அவருக்கு பழைய நினைவுகள் திரும்ப ஆரம்பிக்கிறது. இந்தியாவில் பாட்டிக்கு ஏற்பட்ட காதலும், கட்டாயத்தால் இங்கிலாந்து திரும்பும்போது அவளிடம் காதலன் சொன்ன வாக்கும், கொடுத்த பரிசும் நினைவுக்கு வருகிறது. சுதந்திரம் கிடைத்த உடன் நாட்டைவிட்டு வெளியேறும் வெள்ளையர்களுடன் அவளும் வம்படியாய் இழுத்துச் செல்லப்படுகிறாள். பாட்டிக்கு வைத்தியம் செய்ய ஒரு வாரம் இருக்கும் நேரத்தில் பாட்டியிடம் இருக்கும் தாலியை ( காதலன் இந்தியாவில் கொடுத்தது) பழைய காதலனின் மனைவியிடம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்குச் செல்ல வேண்டும் என அடம்பிடிக்கிறது. தற்போது சென்னையாகியிருக்கும் மதராசப்பட்டிணத்தில் சென்று தனது அழகிய பழைய நினைவுகளை மீட்டெடுப்பதுடன், தனது பழைய காதலனைக் கண்டுபிடிக்கவும் முயல்கிறது.

வில்லனாக நடித்தவரும் கலக்கியிருக்கிறார்.


பழைய வண்டிகள், சாலைகள், மனித முகங்கள், வண்ணாரப்பேட்டை இடங்கள், நமது நட்டின் பாரம்பரிய விளையாட்டான மல்யுத்தம், அந்நாளைய பிரிட்டிஷார், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள், எல்லாம் பார்த்துப்பார்த்துச் செய்யப்பட்டுள்ளன.

மல்யுத்தம் படத்தின் ஒரு முக்கிய அங்கமாகவே வருகிறது. வண்ணாரப்பேட்டையிலிருந்து மக்களை அப்புறப்படுத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்து அதற்கு வெள்ளைக்கார கமிஷனர், ’என்னை மல்யுத்தத்தில் வென்றால் இங்கு வரும் கட்டிடங்களை தடுத்து நிறுத்துவேன். உங்கள் இடம் திரும்ப வழங்கப்படும்’ என்கிறான். அதற்கு மல்யுத்தம் நடக்கிறது. படத்தில் அடிக்கடி மல்யுத்த விளையாட்டு காண்பிக்கப்படுகிறது. வஸ்தாதாக நாசர். மல்யுத்தப் பற்சியாளராகவே இருக்கிறார் படம் முழுக்க. சொல்வனத்தில் வெளியான மைசூர்பட்டணத்து மல்லர்கள் நினைவிற்கு வந்துபோனது. நாம் நமது பாரம்பரியக் கலைகளை காலில் போட்டு மிதித்துவிட்டு ஜென்டில்மேன் விளையாட்டைப் பிடித்துக்கொண்டிருக்கிறோம்.

கூவம் நதியில் கிழவியும், காதலனும் படகில் சவாரி செய்யும் நினைவும், அழகோ அழகு.. செட்டிங்தான் என்றாலும் இப்படி ஒரு சுத்தமான நதியை சாகடித்துவிட்டோம் என நினைக்கையில் மனது கனக்கிறது. நமது அரசியல்வாதிகள் கூவத்தை வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டதுதான் மிச்சம்.


வெள்ளையர்களின் அல்லக்கையாக கொச்சின் ஹனீஃபா வந்து செல்கிறார். சுமரான ரோல். உயிருடன் இருந்தபோது நடித்த கடைசிப் படமாய் இருக்கும் என நினைக்கிறேன்.

கதாநாயகியாக வரும் எமி அழகோ அழகு. நமது கதாநயகிகளுக்கு சரியான போட்டியாவார். அவ்வளவு இயல்பான நடிப்பு, உணர்ச்சிகளை அழகாய் வெளிப்படுத்தும் முகம். இந்தியச் சாயல் அவரது நடிப்பிற்கு மிகப்பெரிய பலம்.

அவரது சொந்த ஊரில் அவர் உடை உடுத்தப் பிரியப்படுவதில்லை எனக் கேள்வி. எப்போதும் முடிந்தவரை திறந்தமேனியாக இருப்பாராம். ஆனால் இந்தப்படத்தில் இவரைவிட வேறு யாரும் நன்றாய் நடிக்க முடியாது எனத்தோன்றுகிறது.

பாட்டியாய் நடித்திருப்பவரும் மனதை கொள்ளைகொள்கிறார். இறுதியில் கதாநாயகனோடு சேர்த்து வைத்திருக்கலாம். அவ்வளவுதூரம் மெனக்கெட்டு இந்தியா வந்த அவருக்கு காதலனின் கல்லறையும், அந்நாளைய துபாசுவி(கொச்சின் ஹனீபா)ன் போட்டோவும்தான் பார்க்கக் கிடைக்கிறது. காதலன் தனாது நினைவாய்ச் செய்து வைத்திருக்கும் தர்ம ஸ்தாபனங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அவனது கல்லறையிலேயே உயிரை விடுவதுடன் சுபம்.

ஒரு மெல்லிய காதல்கதையை அப்படியே தேசப்பற்றில் முக்கி எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது கதை. அதை நல்லவிதமாயும் எடுத்துள்ளார்கள்.

பார்க்கலாம்.

Tuesday, July 20, 2010

தோற்றுப்போன நாடுகள்?

தமிழ் ஹிந்துவில் வெளீயாகியுள்ள எனது கட்டுரையான தோற்றுப்போன நாடுகள்? படிக்க இங்கே சொடுக்கவும்.

Tuesday, July 13, 2010

வாழத்தெரிந்த மனிதன் வாரன் பஃப்பெட் ( Warren Buffet)


நான் பணக்காரனாவேன் எனக்கு எப்போதுமெ தெரிந்திருந்தது. அதைப்பற்றி ஒரு நிமிடம்கூட சந்தேகித்ததாக ஞாபகமில்லை - வாரன் பஃப்பெட்.


வாரன் பஃப்பெட்டைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு

அதிகமில்லை வெறும் 31 பில்லியன் டாலர்தான் உலக மக்களின் நலனுக்காக நன்கொடையாக கொடுத்துள்ளார்.

பில்கேட்ஸ் இவரிடம் பேச அரைமணிநேரம் ஒதுக்கியிருந்தார்.. பஃப்பெட் பேச ஆரம்பித்த பின்னர் அந்த உரையாடல் 10 மணி நேரத்திற்கு நீண்டது.

பஃப்பெட்டின் சமீபத்திய கோரிக்கை - பணக்காரர்கள் தங்களது செல்வத்தில் பாதியை நன்கொடையாகத் தாருங்கள் என்பதே.

சி.என்.பி.ஸி தொலைக்காட்சி அவரிடம் எடுத்த பேட்டியின் சாராம்சம் இது.

வாரன் பஃப்பெட் தனது 11ம் வயதில் பங்குச் சந்தையில் தனது முதல் பங்கை வாங்கினாராம்.. ரொம்ப லேட்டாக முதலீடு செய்துவிட்டேன் என இப்போது வருந்துகிறார்.

பெரியவர்களுக்கு அவர் சொல்வது “குழந்தைகளை முதலீடு செய்ய ஊக்கப்படுத்துங்கள்.”

தனது 14வது வயதில் வீடுகளுக்கு பேப்பர் போடுவதில் சேமித்த தொகையைக்கொண்டு ஒரு பண்ணைவீட்டை வாங்கினார்.

அவர் சொல்வது சிறுகச் சிறுகச் சேர்த்தே பல பொருட்களை வாங்கிவிட முடியும்.
உங்கள் குழந்தைகளை ஏதேனும் ஒரு தொழில் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.

வாரன் ப்ஃபெட் வசிப்பது மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டில். அதுவும் அதை அவர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனபோது வாங்கியது. அவர் அதில் அவருக்கு வேண்டிய எல்லா வசதியும் இருக்கிறது என்கிறார். வீட்டைச் சுற்றி கோட்டைச் சுவரோ அல்லது வேலியோ கிடையாது. ஒரு பணக்காரர் எப்படிப்பட்ட வீட்டில் இருக்கவேண்டும் என நாம் நினைக்கிறோமோ அதற்கு நேரெதிரான வீட்டில்.

அவர் சொல்வது உங்களது தேவைக்கு மேல் எதையுமே வாங்காதீர்கள். அதுபோன்றே உங்கள் குழந்தைகளை சிந்திக்கவும் செயல்படவும் வையுங்கள்.

தனது காரை தானே ஓட்டிச் செல்கிறார். ஓட்டுனர் வைத்துக்கொள்வதில்லை. பாதுகாப்பிற்கும் ஆள் வைத்துக்கொள்வதில்லை.


அவர் சொல்வது “ நீங்க நீங்கதான்” நம்மால ஓட்ட முடிஞ்சப்போ நமக்கு எதுக்கு டிரைவர்?

அவர் வெளியூர் செல்ல தனக்கென பிரைவேட் ஜெட் வைத்துக் கொள்வதில்லை. இதென்ன பிரமாதம் என்கிறீர்களா?

உலகின் மிகப்பெரிய ஜெட் கம்பெனியின் முதலாளி இவர்.

அவர் சொல்வது உங்கள் வேலைகளை எவ்வளவு சிக்கனமாக ஆக்கிக்கொள்ள முடியுமோ அப்படி வைத்துக்கொள்ளுங்கள்.

இவரது கம்பெனியின் பெயர் ”ஹாத்வே பெர்க்‌ஷையர்” 63 கம்பெணிகளைக் கொண்டது. இவர் அந்தந்த கம்பெணியின் மேளாளர்களுக்கு ஆண்டிற்கு ஒரே ஒருமுறை அடுத்த ஆண்டிற்கான வியாபாரக் குறிக்கோள்களைக் குறித்து கடிதம் எழுதுகிறார். மீட்டிங் போடுவதோ, அவ்வப்போது கூப்பிட்டு பேசுவதோ இல்லை.

அவர் சொல்வது சரியான இடத்தில் சரியான ஆளைப் போடுங்கள். திருவள்ளுவர் இதை 2000 வருஷம் முன்னாடியே சொல்லிவிட்டார். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் அப்படினு.

அவரது கம்பெனியின் தலைமை செயல் அலுவலர்களுக்கு இரண்டே இரண்டு விதிமுறைகள்தான் கொடுத்துள்ளார்.

விதிமுறை ஒன்று: உங்கள் பங்காளர்களின் பணத்தை எப்போதும் இழக்காதே.

விதிமுறை இரண்டு : விதிமுறை ஒன்றை மறக்காதே.

அவர் சொல்வது, ஆட்களுக்கு குறிக்கோள்களைக் கொடுத்துவிடுங்கள். அவர்கள் அதன்மீதே கவனம் வைத்திருக்கிறார்களா என்பதை மட்டும் பாருங்கள்.

பெரிய மனிதக் கூட்டத்துடன் சேர்ந்திருப்பதில்லை. வீட்டிற்கு வந்ததும் அவரது பொழுதுபோக்கு பாப்கார்னைப் பொரித்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பதுதான்.

அவர் சொல்ல வருவது...பெருமை பீற்றிக்கொள்ளாதீர்கள். பெருமைக்காக உங்கள் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். நீங்கள் நீங்களாக இருங்கள், உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்.

வாரன் பஃப்பெட் மொபைல்போன் வைத்துக்கொள்வதில்லை, ஒரு கம்ப்யூட்டர்கூட கிடையாது அவரது அலுவலகத்தில்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் பணக்காரர் பில்கேட்ஸ், வாரன் பஃப்பெட்டை சந்திக்க அரை மனி நேரம் ஒதுக்கியிருந்தார். இருவருக்குள்ளும் ஒத்த விஷயங்கள் என எதுவும் கிடையாது என நினைத்துக் கொண்டு. ஆனால் அந்த சந்திப்பி 10 மணி நேரத்திற்கு நீண்டது. சந்திப்பு முடிந்தபோது பில்கேட்ஸ் வாரன்,கிட்டத்தட்ட பஃப்பெட்டின் பக்தனாகிவிட்டார்.

இளம் வயதினருக்கு வாரன் பஃப்பெட் சொல்வது..

கடன் அட்டைகளிலிருந்து தூர விலகி இருங்கள்.. உங்களையே நீங்கள் முதலீடாக்கி நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது

01. பணம் மனிதனை உருவாக்கவில்லை, மனிதன்தான் பணத்தை உருவாக்கினான்.

02. எவ்வளவு எளிமையாய் வாழமுடியுமோ அவ்வளவு எளிமையாய் வாழுங்கள்.

03. மற்றவர்கள் சொல்வதைச் செய்யாதீர்கள், அவர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு உங்களுக்குச் சரியெனப்படுவதைச் செய்யுங்கள்.

04. பெரிய கம்பெனியின் தயாரிப்பு என்பதற்காக எதையும் வாங்காதீர்கள். உங்களுக்கு சௌகரியப்படும் பொருட்கள் எங்கு கிடைத்தாலும், எவ்வளவு விலையிலும் வாங்கி அணியுங்கள்.

05. தேவைப்படும் செலவுகளைத் தவிர வேண்டாத செலவுகளைச் செய்யாதீர்கள்...

06. இது உங்கள் வாழ்க்கை, இன்னொருவர் உங்களை ஆள ஏன் வாய்ப்புத்தரவேண்டும்?

மகிழ்சியான மக்களிடம் எல்லா சிறந்தவைகளும் இருக்கவேண்டியதில்லை..அவர்கள் இருப்பதைக் கொண்டு மகிழ்வுடன் இருக்கிறார்கள்.

எளிமையான மற்றும் புத்திசாலித்தனமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்போம்.

எவ்வளவு ஈசியா இருக்கு?

அவர் மேற்சொன்ன கருத்துக்களின் ஆங்கில வடிவம் ஸ்லைட்ஷோ வடிவில் கீழே