Tuesday, October 9, 2007

காந்திநிகேதனில் மற்றும் காந்திகிராமத்தில் எனது வாழ்க்கை

Gandhiji
எல்லோருக்கும் தனது வாழ்வில் படித்த பள்ளியை பற்றிய இனிமையான ஞாபகங்கள் எப்போதும் இருக்கும்..

இன்றைக்கு அப்துல் கலாமின் கனவு காணுங்கள் என்ற பதத்தை பயன்படுத்தாத ஆட்கள் குறைவு. ( நல்ல விதமாகவும், அதையே கிண்டலாகவும் சொல்கின்ற நபர்களும் உண்டு.)

மனம்போல் வாழ்வு என்ற தலைப்பில் எனது பள்ளி தலைமைஆசிரியர் திரு.து.பால்ராஜ் அவர்கள் ஆற்றிய உரைதான் எனது வாழ்வில் மிக முக்கிய பங்கு வகித்ததென்றால் அது மிகை இல்லை.

மற்ற எந்த பள்ளிக்கும் இல்லாத பெருமை எங்கள் பள்ளிக்குண்டு. அது, சுதந்திர போராட்ட காலத்தில் அஹிம்சா வழியில் போரிட ஆட்களை தயார் செய்யும் பயிற்சி கூடமாக ஆரம்பித்து ஏராளமான பெண்களும், ஆண்களும் பயிற்சி பெற்று கிராமங்களுக்கு சென்று காந்தியடிகளின் கிராம ராஜ்ய கனவை நனவாக்க பாடுபட்டனர்.

பின்னர் சுதந்திரம் கிடைத்த பின்பு அதை "காந்தி நிகேதன் ஆசிரமம்" ஆக மாற்றி கிராமப்புற மக்களுக்கு கல்வியும், கிராமக் கைத்தொழில்களும் கற்றுக்கொடுக்கும் ஒரு பயிற்சி நிலையமாக மாறியது. இன்றும் அது தனது கொள்கையில் சிறிதும் மாற்றமின்றி புதிய கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப கல்வித்திட்டத்தை மாற்றிக் கொண்டதே தவிர அதன் அடிப்படை கொள்கையான கிராமப்புற மக்களுக்கு கல்வி என்ற கொள்கையிலும் கிராம முன்னேற்றம் என்ற குறிக்கோளிலும் எந்த வித மாற்றமின்றி இன்றுவரை ஒரு காந்திய நிறுவனம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நடக்கிறது நான் படித்த காந்தி நிகேதன் ஆசிரமம்...

தொடர்வேன்...

3 comments:

ஹரன்பிரசன்னா said...

நான் படித்த பள்ளிகளிலேயே மோசமான பள்ளி இந்தப் பள்ளிதான். மாணவர்களை அடிமை போலவும் ஆடு மாடுகள் போலவும் நடத்திய பள்ளி. அதில் முதன்மையானவர் து.பால்ராஜ். மேலும் அப்பள்ளியில் இருந்த ஜாதி துவேஷம் இப்போதும் என் நினைவுக்கு வருவதாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பெரும்பாலும் மோசமான ஆசிரியர்களாலேயே அதன் வகுப்பறைகள் நிரப்பப்பட்டிருந்தன. மதுரையில் எம் எல் டபுள்யூ ஏ வில் சேர்ந்த பின்னர்தான் வகுப்பறைகள் சுதந்திரத்திற்கானவை என்பதையே நான் கண்டுகொண்டேன்.

காந்தியைப் பற்றிய எண்ணங்களை விதைத்ததைத் தவிர அப்பள்ளி எதையும் சாதிக்கவில்லை என்பதே என் எண்ணம்.

தொடரவும்.

பிரகாஷ் said...

நேரும், எதிருமாய்,அப்பள்ளியில் படித்தவர்களின் ஆளுமையில் காந்திநிகேதன் தன் தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது.
அடி,உதை,ஜாதி,எல்லாம் இருந்த போதும்,
அந்தப் பள்ளி கொடுத்த spiritual orientation இப்போதும் எனக்கு நல்ல ஒரு அடித்தளமாக உள்ளது.
நானும்,நீங்களும் பார்த்த காந்திநிகேதனின் நல்ல முகங்களை நன்றாகப் பார்க்கும் வாய்ப்பும்,நேரமும் ஹரன் பிரசன்னாவுக்கு கிடைக்கவில்லை.
அதை ஒரு "மாதிரி" பள்ளி என்றெல்லாம் சொல்லமுடியாவிட்டாலும்,பால்ராஜ் அய்யா சொன்னது போல,"இது மாநிலத்தில் முதல் ரேங்க் வாங்கும் மாணவர்களை உருவாக்கும் பள்ளி அல்ல:இந்த சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராமப்புற ஏழை,எளியவர்களுக்கு கல்வியறிவு கொடுப்பதுதான் இதன் முதல் நோக்கம்"
மற்றபடிக்கு, நல்லதும்,கெட்டதும்,வருந்தத்தக்கதும்,நெகிழத்தக்கதுமான விஷயங்கள் காந்திநிகேதனில் நிறையவே உண்டு.
பகிர்ந்து கொள்வோம்.

ஹரன்பிரசன்னா said...

//,"இது மாநிலத்தில் முதல் ரேங்க் வாங்கும் மாணவர்களை உருவாக்கும் பள்ளி அல்ல:இந்த சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராமப்புற ஏழை,எளியவர்களுக்கு கல்வியறிவு//

இந்த நல்ல விஷயத்தின் அடிப்படையில் பால்ராஜ் அதீத சுதந்திரம் எடுத்துக்கொண்டு விட்டார் என்பதே என் கருத்து!