Friday, December 14, 2012

பீயிங் மோகன்தாஸ் வலைப்பக்கம் குறித்த எனது எண்ணங்கள்

மலரினும் மெல்லிய காமம் என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு மோகன்தாஸின் பீயிங் மோகன்தாஸிற்குள் நுழைந்தேன். அருமையான காதல் கதை. அவர்களின் உரையாடல்களும், மோகன் தாஸின் தற்குறிப்பேற்றங்களும் மிகவும் ரசித்துப் படிக்க வைத்தது. அப்படியே அவரது வலைப்பக்கங்களை முழுதும் படித்து முடித்த பொழுது கொஞ்சம் பிரமிப்பும், நிறைய மகிழ்வுமாய் இருந்தது.

மோகன் தாஸ் கதை எழுதுகிறார், ஓவியம் வரைகிறார், அருமையான புகைப்படம் எடுக்கிறார்,கவிதை எழுதுகிறார்...கவிதை தவிர எல்லாவற்றையும் சிறப்பாகவும் செய்கிறார். இது எனது அபிப்ராயம். அவரது வலைப்பதிவில் ஒரு சில கவிதைகள் தவிர மற்றவை சுவாரசியமாக இல்லை.

இவரது வலைப்பதிவைப் பற்றி ஒரு வரியில் சொல்லச் சொன்னால் “ அழகான மெல்லிய காமம் “ என்பேன். வலைப்பதிவின் பெரும்பான்மையான இடத்தை மெல்லிய காமமே பிடித்துக்கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் கதாநாயகன்  மோகனாக, அல்லது தாஸாக அல்லது இரண்டும் சேர்ந்து மோகன் தாஸாக வருகிறார். அதேபோல நாயகியும் ஒரே ஆள்தான்.. அகிலா. எனக்கு மிகவும் பிடித்தமான பெயர் ஆகிவிட்டது.

எல்லாக் கதைகளும் வெவ்வேறு காலகட்டங்களான கல்லூரி வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை, வேலை செய்யும் இடம், திருமணம் முடிந்து நடக்கும் வாழ்க்கை இப்படி மோகன் மற்றும் அகிலாவைக் குறித்த டைரிக்குறிப்பை ரசனையுடன் கதையாக்கித் தந்தால் எப்படி இருக்குமோ அதுதான் மோகன் தாஸின் வலைப்பதிவில் கதைகள்.

இது தவிர சொந்தக் கதையையும் அப்படியே எழுதுகிறார். பள்ளி வாழ்க்கையில் நடந்த முதல் காதல் குறித்த பதிவு. எல்லோரும் எழுதலாம்தான். ஏன் நிறைவேறவில்லை என்பதில் உள்ளதைச் சொல்லிச் செல்கிறார்.

அதேபோல முடிந்தவரை மனதில் உள்ளதை உள்ளபடிச் சொல்லிச் செல்கிறார். ஹீரோ பில்டப் எல்லாம் இன்றி, என்னால் முடியவில்லை, அல்லது நான் அதற்கு தகுதியாய் இல்லை என்பதை எல்லாம் அப்படியே சொல்கிறார்.

காமக்கதை என்றாலே எப்படி இருக்கும் என்பது இணையத்தில் உலவும், அல்லது பள்ளி கல்லூரிகளில் அப்படிப்பட்ட புத்தகத்தைப் படித்திருப்பவர்களுக்கு தெரியும். மிஞ்சிப்போனால் 5 அல்லது 10 உறவுமுறைகள்தான் மீண்டும், மீண்டும். ஒரு காலகட்டத்திற்குப் பின்னர் குப்பை என நமக்கே தெரிந்துவிடும். ஆனால் இவரது கதைகளில் நமது வாழ்க்கையில் நடப்பதை அப்படியே சொல்லிச் செல்கிறார். வழக்கமாய் எழுதுபவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்தரங்கம் குறித்து எழுதுவதில்லை. பழைய சினிமாக்களில் காட்டுவதைப்போல இரண்டு பூக்களை ஒட்டவைத்து நம்மை கேவலமாய்ச் சிந்திக்க வைப்பதைப்போல. 

மோகன் தாஸ் அந்தரங்கம் என நாம் நினைப்பதையும் எழுதுகிறார், இயல்பான வார்த்தைகளில். அதைவிட முக்கியம் அந்த சூழ்நிலைகளில் நாம் எப்படிப் பேசுவோமோ அப்படியே. அதைவைத்து மட்டுமே மெல்லிய காமம் என்கிறேன் நான். 

மோகன் தாஸ் பக்கத்தை நான் எனது தங்கைக்கோ, மகளுக்கோ அறிமுகம் செய்வேனா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால் அவர்கள் படிக்கலாம் என்பதே எனது எண்ணம். ஆனால் அறிமுகம் செய்து படிக்க வைக்க மனத்தடை உள்ளது.

இன்னும் கொஞ்ச காலம் ஆனபின்னால் படிக்கச் சொல்வேனோ என்னமோ.

கதைகளில் சுவாரசியம்தான் அடிப்படையே. நமது காலகட்டத்திய கதையாய் இருப்பதால் நமது பள்ளி, கல்லுரி காலத்தை மீண்டும் மகிழ்வுடன் அசைபோடும் ஒரு வாய்ப்பாக எனக்குப் படுகிறது.

அழகான தொய்வற்ற எழுத்து நடை, நிகழ்வுகளை அழகாக தொகுத்தளித்தல், காமத்தையும் அதன் எல்லை மீறாமல் அழகாகச் சொல்வது, விவரனைகளை சுவாரசியமாக சொல்வது என அவருக்கென ஒரு நடையை வைத்திருக்கிறார். அவரது கதைகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே டெம்ப்ளேட்டில் வார்த்த கதைகள் போலிருப்பினும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தைப் பேசுவதால் போரடிப்பதில்லை.


ஏன் மோகன் தாஸ் வலைப்பக்கத்துக்கு ஒரு அறிமுகம் எழுதினேன்? நான் படிக்க ஆரம்பித்த பின்னர் அப்படியே உள்ளிழுத்துக்கொண்டது கதைகள், சுவாரசியம்தான் காரனம்.

பலவகையான விஷயங்களைப் பற்றிச் சொல்ல தொடர்ந்து முயன்றிருக்கிறார். வலைப்பதிவின் அக்கப்போர்கள் இருந்த காலத்தில்கூட அக்கப்போர்களில் கலந்து கொள்ளாமல் அவைகளைப் பற்றிய விவரங்கள் மட்டுமே பதிவு செய்திருக்கிறார்.

கிட்டத்தட்ட எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் அளித்திருக்கிறார். 

அவரது எழுத்தை அவரே ரசிக்கிறார். நமக்கே பிடிக்காத விஷயத்தை எப்படி மற்றவர்களுக்குத் தருவது? 2005 முதல் வலைப்பதிவு எழுதி வருகிறார். செகுவேரா வின் தீவிர விசிறி. பிடல் காஸ்ட்ரோ குறித்தும் ஒரு பதிவு எழுதி இருக்கிறார். நிறைய வாசித்திருக்கிறார், வாசிக்கிறார். பாரதியின் கவிதைகள் இவருக்கு ஆதர்சம். அச்சமில்லை என்ற பாரதியின் பாடல் எப்படி இவருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உந்துதலாய் இருந்தது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.

குறைகள் எனச் சொன்னால் சில நல்ல தொடர்கதைகளை அப்படியே பாதியிலேயே தொங்க விட்டிருப்பது. குறிப்பாக நீராக நீளும் காதல். வேறு வழியின்றி விபச்சாரம் செய்யும் பெண்ணை நாயகன் சந்தித்து அதன் பின்னர் அது காதலாக மாறும் என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அடுத்த பகுதியைக் காணவில்லை. 

அதேபோல கொலைத்தொழில் வல்லவன் என்ற ஒரு தொடர்..அதுவும் பாதியில்..

எனக்கு மிகவும் பிடிக்கும் பதிவுகள் எனில் கதைகள், தொடர் கதைகள், சினிமா விமர்சனம், புகைப்படங்கள்.

Being Mohandoss'ல் எனக்குப்பிடித்த டாப் டென் கதைகள்..

01. மலரினும் மெல்லியது காமம் ( தலைப்பு உதவி வள்ளுவராம் :-) )

02. உள்ளம் உடைக்கும் காதல்

03. மதுமிதா

04. தேவதையின் காதலன்

05. சோழ பரம்பரைக் கதைகள்

06. மோகனீயம் தொடர்கள்

07. Curse of the Golden Flower - Cinema Review

08. கன்னடப் பைங்கிளீயுடன் ஒரு காதல் மொழி.

09. I lost my virginity to Mohandoss

10. அவளை அவன் கண்விடல்.

இது தவிர நிறையக் கதைகள் பிடித்திருந்தாலும் மேற்சொன்ன கதைகள் மிகவும் அருமையான வாசிப்பனுபவத்தை தந்தவை.

ஃபிடல் காஸ்ட்ரோ குறித்த பதிவும் அருமை. இவரது வலைப்பதிவில் நல்ல நல்ல புகைப்படங்களும், ஓவியங்களையும் காணலாம்.

என்னங்கப்பா மோகன் தாஸ் வலைப்பதிவுக்கே அறிமுகமானு கேட்பவர்களுக்கு.. புதுசா நான் தெரிஞ்சிகிட்டேன்.. அதை மத்தவங்களுக்கும் நான் சொல்றேன்..அம்புட்டுத்தேன்.

Saturday, November 10, 2012

இராக்கில் ஒரு பயணம்

இராக்கில் ஒரு பயணம் - ஜெயக்குமார்"

எனது இராக்கிய பயண அனுபவங்களை இட்லிவடையில் எழுதி இருக்கிறேன். அதன் சுட்டி இங்கே 


படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லவும்.

ஜெயக்குமார் 

Tuesday, June 26, 2012

3 திரைப்பட விமர்சனம்

நான் எழுதிய 3 திரைப்பட விமர்சனம் இட்லிவடையில் வெளியாகி இருக்கிறது.



படிக்க இங்கே சொடுக்குங்கள்.



Saturday, June 16, 2012

அம்மா என்றால் அன்பு. ( எனக்கு மட்டும் இது கடந்தகாலம்)

கூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும்? எங்களின் கூட்டுக்குடும்பத்தின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என்று பார்த்தால் எனது அப்பாவுக்கு 3 குழந்தைகள், பெரியப்பாவுக்கு ஆறு குழந்தைகள், அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி ஆக வீட்டு உறுப்பினர் மட்டும் 15 பேர். இது தவிர சில விருந்தினர்கள் எப்போதும் இருப்பார்கள். காலையில் எழுந்ததும் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் அப்பா, அக்கா, வயதான பெரியவர்களுக்கான காலை உணவு, ஒவ்வொருவராக எழுந்துவர அனைவருக்குமான காப்பிக் கடை. முதல் சுற்றுக் காப்பிக் கடை முடியும் போது 8 மணி எனில் 10 மணிக்கு இன்னொரு ரவுண்டு காபி வீட்டில்உள்ளோருக்கு. 11 மணிக்கு பெரியவர்களுக்கான காலை மற்றும் மதிய உணவும் இனைந்த பிரஞ்ச். மதியம் கொஞ்சம் ஓய்வு. மீண்டும் 4 மணீக்கு காபிக் கடை, இரவு உணவு, பின்னர் அனைவருக்கும் பால் அல்லது ஏதாவது ஒரு பானம். இது தவிர தீபாவளி, பொங்கல் போன்ற விசேட நாட்களில் சிறப்பு உனவு, நீத்தார் கடன் நாட்களில் அதற்கான பிரத்யோக சமையல், இதையனைத்தையும் ஒருவரே செய்யவேண்டும் அதுவும் கிட்டத்தட்ட 35 வருடங்களாக ஒருவர் செய்தால் எப்படி இருக்கும்? அப்படிச் செய்தவர்தான் ஜெயலக்‌ஷ்மி எனும் எனது அம்மா. தற்போது இருக்கும் வசதிகள் எதுவும் அப்போது இருந்ததில்லை. காய்ந்த விறகு அடுப்பு இல்லையெனில் மரத்தூள் அடுப்பு. ( மர அறுவை மில்லில் மரம் அறுக்கும்போது கிடைக்கும் தூசிதான் மரத்தூள்) மரத்தூள் அடுப்பை சமையலுக்கு தயார் செய்தலே ஒரு தனி கலை. அடுப்பு வட்ட வடிவில் இருக்கும். கீழ் பகுதியில் விறகு வைக்க ஒரு இடம் இருக்கும். நடுவில் ஒரு மன் எண்ணெய் பாட்டிலை வைத்துவிட்டு பின்னர் கழுத்துவரை மரத்தூளை நிரப்ப வேண்டும்.விறகு வைக்கும் பகுதியை கையால் மூடிக்கொண்டு மரத்தூளை அடுப்பில் நிரப்ப வேண்டும். மரத்தூளை அப்படியே நிரப்பினால் பாதி சமையல் செய்யும்போதே கீழே விழுந்துவிடும் எனவே கொஞ்சம் நீர் தெளித்து நன்றாக அழுத்தி அழுத்தி தூளை நிரப்ப வேண்டும். அதன் பின்னர் நடுவில் வைத்த பாட்டிலை எடுக்கும் முன்னர் விறகு வைக்கும் இடத்தில் இருக்கும் மரத்தூளை எடுத்து விட்டு பின்னர் பாட்டிலை கொஞ்சம், கொஞ்சமாக அசைத்து எடுக்க வேண்டும். அதுதான் சமையல் அடுப்பு. சில சமயங்களில் சோம்பேறித்தனத்தினால் சரியாக அடைத்துக் கொடுக்காமல் இருந்தால் அம்மாவின் பாடு பாவம். தூள் எல்லாம் கீழே விழுந்துவிடும். பிறகு முள் விறகால் சமையலைத் தொடர வேண்டும். இப்படித்தான் சமையல் 1982 வரை. அதன் பின்னர்தான் மன் எண்ணெய் அடுப்பு வந்தது. நூதன் ஸ்டவ். அதிலும் ஏதேனும் ஒன்றுதான் வைக்க முடியும். மீதி சமையல் எல்லாம் தூள் அடுப்பிலும், கரி அடுப்பிலுமாக நடக்கும். அம்மாவின் சமையல் அட்டகாசமான சுவையுடன் இருக்கும். அதிலும் நொட்டை, நொள்ளை சொல்லி இருக்கிறேன். சாப்பிடாமல் போயிருக்கிறேன். பாவம் அம்மா, வாசலில் அமர்ந்துகொண்டு குமாரோ..குமாரோ என நான் வீட்டிற்கு வந்து சாப்பாட்டை போட்டுத் தொலை என திட்டும்வரை வாசலிலேயே காத்திருப்பார்கள். தானும் சாப்பிட மாட்டர்கள். அதன்பின்னர் கொஞ்சம் வசதி வந்த பின்னர் அதாவது நான் 10வது படிக்கும்போது ஒரு மாபெரும் கிரைண்டர் வந்தது. அதன் பின்னர்தான் அம்மாவிற்கு கொஞ்சமேனும் ஓய்வு கிடைத்தது. இல்லையெனில் 15 பேருக்கு கையாலேயே இட்லி, தோசை மாவு அரைத்து அதை செய்தும் கொடுக்க வேண்டும். இப்போது நினைத்தாலே நெஞ்சடைக்கிறது. எப்படி அம்மா இதையெல்லாம் தனியாகச் செய்தார்கள் என. அம்மாவிற்கு இப்படி வேலை செய்ததில் எல்லாம் வருத்தம் இருந்ததில்லை. ஆனால் யாராவது சாப்பாடு பிடிக்கவில்லை என சாப்பிடாமல் போனால்தான் தாங்க முடியாது. எவ்வளவு அலுப்பில் படுத்திருந்தாலும் உடனே எழுந்து அவர்கள் சாப்பிட வேறு ஏதாவது செய்து கொடுத்துவிட்டுத்தான் படுப்பார். அம்மாவுக்கு என்மீது எப்போதும் தனிப்பிரியம். அம்மாவும், அப்பாவும் எதோ ஒரு சப்பைக் காரணத்துக்காக சண்டை போட்டு கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் பிரிந்திருந்து மீண்டும் சேர்ந்த பிறகு பிறந்த குழந்தை நான். மேலும் எல்லோராலும் சோனிப்பூனை என அன்புடன் அழைக்கப்பட்டவன். அதனாலேயே இன்னும் கொஞ்சம் பிரியம் அதிகம். ஒரு சிறு தடுமாற்றத்தில் சொத்துக்களை எல்லாம் இழந்துவிட்டோம். அப்போதும் இந்தக் கூட்டுக் குடும்பமே கைகொடுத்தது. அப்பா அரசு வேலையில் இருந்ததால் உனவுக்கு ரொம்பக்கஷ்டமின்றி இருந்தாலும் மதியம் பள்ளியில் கிடைக்கும் சத்துணவும் பள்ளி சென்ற எங்கள் அனைவருக்கும் வசதியாக இருந்தது. சத்துணவு சாப்பிட்டு வருவதால் மாலை வந்தஉடன் எனக்கென கொஞ்சம் சாதம் எடுத்து வைத்து நிறைய நீர்மோர் ஊற்றி கொஞ்சம் குளம்போ, ரசமோ போட்டுத் தருவார்கள் அம்மா. கூட்டுக்குடும்பத்தில் பெரியப்பா, சித்தப்பா என்பதெல்லாம் அடையாளம் சொல்லி அழைப்பதற்காகவே இருக்கும். பெரியப்பாவும், எனது அப்பாவும் எல்லோருக்கும் அப்பாக்களே. ஆஸ்ரம அப்பா என்பது எனது பெரியப்பாவைக் குறிக்கும். அவர் காந்திநிகேதன் ஆஸ்ரமத்தில் சமையல் வேலை செய்து வந்தார் . அதனால் அந்தப் பெயர். பெரியம்மாவும், அம்மாவும் அம்மாவே. அப்பாவிடம் சொல்லி ஒரு காரியம் ஆகவில்லையெனில் பெரியப்பாவிடம் சொல்லி சாதிக்கப்பார்ப்போம். பெரும்பாலும் நடக்காது. எனது அப்பாவிற்கு பெரியப்பாவின் முதல் மகள் மற்றும் கடைசி பையன் மீதும் உயிர். அப்பாவிடம் நான் திட்டுவாங்குவதற்கு அவந்தான் காரனம். காலையில் எழுந்து பட்டையை போட்டுக்கொண்டு தெய்வப்பழம்போல இருப்பான். அவன் குளித்து கோவிலுக்கு போய்விட்டு வந்த பின்னர்தான் நான் படுக்கையில் இருந்தே எழுவேன். படிப்பிலும் பயங்கர கெட்டி அவன். நான் 50 பேர் கொண்ட வகுப்பில் கீழிருந்த 5வது ஆள். கூட்டுக்குடும்பத்தில் குழந்தைகளுக்குள்ளாக நடக்கும் வழக்கமான போட்டிகள், சண்டைகள் எல்லாம் உண்டு. அம்மாவிற்கு என்மீது பெரிய எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லை. ஆனல் நான் எப்படியாவது “ காலை ஊன்றிவிட வேண்டும்” என்பதற்காக எங்கள் தெரு ஆஞ்சநேயரிடம் சண்டை போட்டுக்கொண்டிருப்பார், பையனுக்கு ஒரு வழி செய்யக்கூடாதா என. எனது அண்ணன் ஆரம்பத்தில் இருந்தே அவரது கல்வியில் ஆரம்பித்து, வேலைவரை எதுவுமே அப்பாவிடம் கேட்ட்தில்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே ஒவ்வொரு பாடத்துக்கும் ஜாதிக்கொரு நோட்ஸ் வைத்திருப்பேன். அப்படியும் 272 மார்க்தான் பத்தாம் வகுப்பில். அது ஒரு குறை அம்மாவுக்கு. பின்னர் 12ம் வகுப்பில் உருப்படியாய் படித்ததில் கொஞ்சம் சந்தோஷம். பின்னர் கல்லூரி முடித்துவிட்டு ஆண்டிற்கு சராசரியாக மூன்று கம்பெனிகள் மாறிக்கொண்டே இருந்ததில் நான் என்ன ஆவேனோ என்ற கவலை. என்னைப்பற்றி மட்டுமே எப்போதும் கவலையில் இருந்த அம்மாவுக்கு நான் வெளிநாட்டில் வேலைக்குச் சென்று ஒருவருடம் தொடர்ச்சியாய் இருந்தபின்னர்தான் பையன் இனிமேல் பிழைத்துக்கொள்வன் என நம்பிக்கை பிறந்தது. வேலையற்று இருக்கும்போது அம்மாவிடம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பேன். உனக்கு என்னம்மா வேனும் என .. அம்மாவுக்கு காசு மாலை போட்டுக்கொள்ள வேண்டும் என அதிக நாள் ஆசை. அதை நிறைவேற்றினோம்( நானும், அண்ணனும் சேர்ந்து) கைநிறைய காசு வேண்டும். அதையும் எப்போது எவ்வளவு கேட்டாலும் நிறைவேற்றினோம். இதற்கு ஒரு காரணமும் உண்டு. கூட்டுக் குடும்பம் என்பதினால் எனது அப்பாவின் சம்பளம் முழுக்க பள்ளிக் கூட செலவுக்கும், வீட்டுச் செலவுக்குமே சென்றுவிடும். அம்மாவிடம் காசு என ஒன்றும், இருக்காது. கனவன் கை நிறைய சம்பாதித்தும், தன்னிடம் காசு இல்லையே என்ற குறை இருந்து கொண்டே இருந்தது. அது எங்களால் தீர்ந்தது. எங்கள் தலைமுறையினரில் முதல் திருமணம் எங்கள் அக்காவிற்கு நடந்தது 1989ல். கல்யாணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்றார்கள் எங்கள் அக்கா. (பெரியப்பா மகள்) முதல் ஆறுமாதம் எப்படி இருக்கிறாளோ, என்ன செய்கிறாளோ என எனது பெரியம்மாவைவிட அனது அம்மாதான் புலம்பிக்கொண்டிருந்தார்கள். வெள்ளந்தித்தனத்திற்கும் எனது அம்மாதான் உதாரனம். வெளியுலகம் குறித்த எந்த அனுபவமும் இன்றி இருந்தார்கள். வீட்டிற்கு முதன்முதலாய் தொலைபேசி வந்தது. வீட்டில் யாருமில்லாத சமயத்தில் மணி அடிக்கவும் அம்மா சமையல்கட்டில் இருந்தபடியே “இருங்க வாரேன்” எனச் சொல்ல மணி பாட்டுக்கு தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது. அதான் வாரேன்னு சொல்றேன்ல என தொலைபேசியை அன்புடன் கோபித்துக்கொள்வதற்குள் மணியடிப்பது நின்றுவிட்டது. இதை சொல்லிச் சொல்லியே அம்மாவை கிண்டல் செய்து கொண்டிருந்தோம். அதேபோல பெரியம்மாவுக்கும், அம்மாவுக்குமான சண்டைகள்.. எதிலும் பெரியவர்கள் யாரும் எனது குழந்தை எனவோ, என் மனைவியை ஏன் சொன்னாய் என்றோ சண்டை போட்டுக்கொண்டதில்லை. அதையும் கலகலப்பாக்கி விடுவார்கள். சண்டை ஆரம்பித்த உடன் அப்பா சொல்வது இதெல்லாம் சண்டையா.. ரெண்டு பேருக்கும் ஆளுக்கொரு கம்பைக் குடுத்து ரூமில அடைங்கடா. யாராவது ஒருத்தர் வெளியே வரட்டும் என்பார். அம்மா, பெரியம்மா சண்டையின் ஆயுசு அடுத்த காபி போடும் வரைக்கும்தான்.. ஏ லக்‌ஷ்மி காபி போடேன் என பெரியம்மாவோ அல்லது வேனி காபி போடேன் என அம்மாவோ சொல்வதுடன் அந்த பழைய சண்டை முடிவுற்று நீதான் இன்னிக்கு ஒரு நாளைக்கு காபி போடேன் என பெரியம்மாவை அம்மா சத்தம் போடுவதிலிருந்து அடுத்த சண்டை ஆரம்பமாகும். அது இரவு உணவுக்கு அமரும் வரைதான். அதன்பின்னர் குளம்பு புளிப்பு என்பதற்கோ, மோர் அநியாயத்திற்கு புளிக்கிறது என்பதற்கோ அடுத்த சண்டை ஆரம்பிப்பதில் முதலில் இருந்த சண்டை முடிவுக்கு வரும். வீட்டிற்கு புதிதாய் யாராவது வந்தால் இன்றோடு இந்தக் குடும்பம் இரண்டாகப் போகிறது என நினைப்பார்கள்..அப்படி சண்டை நடக்கும். ஆனால் அதன் ஆயுள் அரைமணி நேரம் மட்டுமே என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். எனது காலஞ்சென்றுவிட்ட பாட்டிக்கு அம்மாவைக் குறை செல்வது ஒரு பொழுதுபோக்கு. எனது பாட்டிதான் எனது அப்பாவை எடுத்து வளர்த்தார் என்பதால் அவரது சவுண்டுக்கு அப்பாவிடம் பயங்கர மதிப்பு இருக்கும். பாட்டியை திருப்திப் படுத்த அம்மாவை திட்டுவார். பாட்டி எனது அம்மாவை மட்டும் திட்டுவதில்லை. நேற்று பிறந்த குழந்தை முதல் எனது தாத்தா வரை எல்லோருக்கும் சமமாக திட்டுக்களை பகிர்ந்தளிப்பார். அவரது மகளை அதாவது எனது பெரியம்மாவை அவர் திட்டுவதைப் பார்த்தால் மாமியார் மருமகள் சண்டை என நினைத்துக் கொள்வார்கள். இப்படி எல்லோரிடமும் திட்டும் வாங்கிக்கொண்டு, அப்பாவின் அனுசரனையும் முழுதாய் இல்லாமல் இருந்தாலும உடலில் வலு இருந்தவரை சமைப்பதில் எந்தக் குறையும் இன்றி செய்தார்கள். உடல்நிலை குறித்த சரியான அக்கறையின்மை சர்க்கரை வியாதியையும், ரத்தக் கொதிப்பையும் கொண்டுவந்தது. எல்லா வைத்தியங்களும் செய்தோம். 2012, ஏப்ரல் 14ம் தேதி சர்க்கரை அளவு அதிகமாகி கோமா நிலைக்கு சென்றுவிட்டார்கள். உடனே மருத்துவமனையில் சேர்த்து கிட்டத்தட்ட 21 நாட்கள் மதுரை அப்பல்லோ மருத்துவர்கள் போராடியும், மேமாதம் 5ம் தேதி இரவு 10.40க்கு எனது தாயார் காலமாகிவிட்டார்கள். கடந்த ஒரு வருடமாகவே அதிகப்ட்சமாக வீட்டிற்குள் மட்டுமே நடமாடிக்கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்சகாலம் உயிரோடிருந்திருந்தால் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும். இறைவன் அம்மாவுக்கு 74 வயது போதும் என நினைத்துவிட்டான். ஜெயக்குமார்

Friday, December 16, 2011

விஷ்ணுபுரம் விருது விழா 2011


தமிழின் ஆகச்சிறந்த இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான திரு.ஜெயமோகன் அவர்களின் மிகச்சிறந்த நாவலான “விஷ்ணுபுரம்” பெயரால் ஒரு இலக்கிய வாசகர் வட்டம் உருவாகி அவர்களும், ஜெயமோகன் அவர்களும் இணைந்து தகுதி இருந்தும் இதுவரை கவனிக்கப்படாமல் இருக்கும் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களை கௌரவிப்பதுடன், அவர்களின் படைப்புகளை வாசிப்போர்களிடம் கொன்டு செல்வதுடன், ஆய்வுகளுக்கும் உட்படுத்தி எழுத்தாளருக்கும், அவரது படைப்புகளுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தித் தருகின்றனர்.

குன்றிலிட்ட விளக்கை வெளியில் கொண்டு வரும் ஒரு சிறிய முயற்சியே. இருப்பினும் இந்த அளவு இலக்கிய வாசகர்களை தனது எழுத்துமூலம் இணைத்து ”விஷ்ணுபுரம் விருது” வழங்கும் நிகழ்தலை சாத்தியப்படுத்தி இருக்கிறார் திரு.ஜெயமோகன். அவருக்கும், அவருடன் இணைந்து இலக்கியத்திற்காக தன்னாலான உழைப்பை நல்கும் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்வரும் காலங்களில் ”விஷ்ணுபுரம் விருது” இலக்கிய விருதை பெறுதல் ஒரு தகுதியாக ஆகும் காலம் கனிக எனவும் வாழ்த்துகிறேன்.



விஷ்ணுபுரம் விருது 2011

தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது

மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்

பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

கலந்துகொள்ளும் ஆளுமைகள்


எழுத்தாளர் ஜெயமோகன்,

வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்,

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,

எழுத்தாளர் நாஞ்சில்நாடன்

கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,

இயக்குனர் பாரதிராஜா

எழுத்தாளர் பூமணி

உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)

Wednesday, November 2, 2011

13 Assassins (Japanese)


நமக்குத் தெரிந்ததெல்லாம் டி.வி.எஸ் சாமுராய் தான் ஒரு காலத்தில். ஆனால் சாமுராய் என்ற பெயருக்கு ஜப்பானில் இருக்கும் மதிப்பே தனி. சாமுராயாக இருப்பதே ஒருவகை சுமைதான். அதை விரும்பி ஏற்றுக்கொள்வோரே சிறந்த சாமுராயாக இருக்க முடியும்.

சாமுராய்கள் தொழில்மயமான ஜப்பானின் காலத்திற்கு முன்பு இருந்தவர்கள். அவர்களுக்கென தனியானதொரு சட்ட திட்டங்கள் உண்டு. அதன் பெயர் புஷிடோ. சாமுராய்கள் பெரும்பாலும் குறுநில மன்னர்கள், மற்றும் நிலச்சுவாந்தாரர்களின் செல்வங்களுக்கும், அவர்களுக்கும் பாதுகாப்பாய் இருந்தனர். அவர்களது பாதுகாப்புக்காக உயிரையும் அர்ப்பணித்தல் அவர்களின் கடமைகளில் ஒன்று. சாமுராய்களில் பெண்களும் உண்டு. சாமுராய்கள் எதிராளியிடம் தோற்க நேர்ந்துவிட்டால் தற்கொலை ( ஹரகிரி ) செய்துகொள்ள வேண்டும். அதற்கும் எப்படி ஹரகிரி செய்து கொள்ளவேண்டும் என்ற சட்டங்களூம் உண்டு.

ஆனால் எங்கும் இருப்பதுபோல ஜப்பானிலும் நூற்றுக்கணக்கானோர் தாங்கள் சாமுராய் எனக் கூறிக்கொண்டிருந்தாலும் அவர்களெல்லம நம்மூர் “டாக்டர்கள்” போலத்தான்.

அப்படி ”சாமுராய்”க்களின் காலம் மறையும் நேரத்தில் 13 உண்மையான சாமுராய்கள் சேர்ந்து மக்களுக்கு கொடுமை செய்யும் ஒரு கொடூரமான பிரபுவை (நாரிட்சுகு)அழிக்க தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராகிறார்கள்.

யார் அந்த கொடூரமான பிரபு? ஜப்பானில் ”ஷோகுன்” என்றால் படைத்தலைவன். அப்படி ஒரு முன்னாள் படைத்தலைவனின் மகனும், தற்போதைய படைத்தலைவனின் இளைய தம்பியுமய் இருக்கும் ஒருவன், பெயர் மட்சுடிரா நாரிட்சுகு. இந்தத் தகுதிகளினால் எந்த சட்டமும் இவனைக் கட்டுப்படுத்தாது. ஷோகுன்களை ஜப்பானிய அரசர் நேரடியாக நியமிப்பார். கேட்க வேண்டுமா? நினைத்த பெண்ணை கற்பழிப்பது, கொடூரமாக கொலை செய்வது, அங்கங்களை வெட்டி விளையாடுவது இப்படியாக கொடூரமாக இருந்தவன்.

இவனது கொட்டத்தைப் பார்க்கும் ஒரு அரசு அதிகாரி இப்போதே இவ்வளவு கொடுமைகளைச் செய்யும் இவன், நாளைக்கு அதிகாரத்தின் உச்சிக்குச் செல்லும்போது இன்னும் என்னென்ன கொடுமைகள் செய்வானோ? அதற்குள் இவனை அகற்றிவிட வேண்டுமென நினைக்கிறார். அதற்காக ஷின்சிமொன் என்ற ஒரு சாமுராயை நாரிட்சுகுவைக் கொல்லும்படி வேண்டுகிறார்.

ஷின்சிமொன் பொறுக்கி எடுத்த மேலும் 11 பேரை சேர்த்துக் கொண்டு ”ஈடோ” என்ற இடத்திற்கு நாரிட்சுகு (வில்லன்) செல்லும் வழியில் ஊடறுத்து நாரிட்சுகுவை (வில்லன்)கொல்லுதல் என்று திட்டம்தீட்டுகிறார்.

13வது ஆள் பெயர் கிகா. காட்டில் இவர்களுக்கு வழி காட்டியாக வந்து இவர்களுடன் சேர்ந்து கொள்பவன்.கிகா சாமுராய் அல்லன். ஆனால் சாமுராய்கள் என்றால் பெரிய கொம்பா என்ற எண்ணம் கொண்டவன். அவனாலும் சிறப்பாய் சண்டையிட முடியும் என நினைப்பவன். அவனையும் அவர்களது திட்டத்தில் சேர்த்துக் கொள்கின்றனர்.

நல்லவேளையாக ஆங்கில சப்டைட்டிலுடன் படம் பார்த்தேன். இல்லையெனில் ஒரு அட்சரம் கூட புரிந்திருக்காது.

ஏன் நாரிட்சுகுவைக் ( வில்லன்) கொல்ல வேண்டும் என்பதற்கு நியாயம் சேர்க்கும் காட்சிகள் உறைய வைக்கின்றன. ஒரு காட்சியில் ஒரு பெண்னை கையையும், காலையும் வெட்டி, நாக்கையும் அறுத்து வைத்திருப்பான். இப்படி செய்வது அவனது விளையாட்டாம். அவளுடன் விளையாடுவது போரடித்த பின்னர் அவளை வெளியே வீசிவிடுவான்.

இன்னொரு காட்சியில் ஒரு பெண்ணை கற்பழித்து விடுவான்,அவள் ஹரகிரி செய்து கொள்வாள்.கணவனை வெட்டிக் கொன்றுவிடுவான்.

இன்னொரு காட்சியில் ஒரு குடும்பத்தையே அம்புகள் விட்டு கொல்வான். சிறு குழந்தை உட்பட.

அதுபோல மக்கள் அனைவரும் அவனது அடிமைகள். அதுதான் அவன் கொள்கை. ஓரிடத்தில் ஹன்பேயிடம் Ruling is convenient, but only for rulers. The people must live to serve. என்பான்.

இதையெல்லாம் கேட்கும் ஷின்ஷிமோன் இந்த அநியாயத்தைச் செய்யும் நாரிட்சுவைக் கொல்வதே சாமுராயாக இருக்கும் தனக்குப் பெருமை அளிக்கும் என நினைக்கிறார். ஒரு சாமுராய் கௌரவமாய்ச் சாவதைவிட என்ன பெருமை இருக்க முடியும் என்கிறார். இதை, கொலை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தவரிடம் I shall accomplish your task... with magnificence என்பார்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு என்ற நம்மூர் பழமொழியையே ஜப்பானிலும் சொல்கின்றனர். தூண்டிலைப் போட்டு வைத்துவிட்டு காத்திருக்க வேண்டும். அவசரப்பட்டால் மீன் புழுவை மட்டும் சாப்பிட்டு ஓடிவிடும். பொறுமையாய் இருந்தால் மீன் வசமாய்ச் சிக்கும். வில்லனைக் கொல்ல காத்திருக்க வேண்டியிருக்கும் நேரத்தில் தனது குழுவிடம் ஷின்ஷிமோன் சொல்வது மேற்சொன்னது.

வில்லனைக் கொல்ல இவர்கள் திட்டமிட்டு காத்திருக்கும் இடத்திற்கு வராமல் வேறுபாதையில் சென்றுவிட்டதுபோல ஒரு மாயையை நாரிட்சுகு உருவாக்குவான். ஆனால் நிச்சயம் இவர்கள் வலைவிரித்துக் காத்திருக்கும் வழியில்தான் வருவான் என்பதை ஷின்ஷிமொன் சொல்வார். அதைப்போலவே 70 பேர் கொண்ட குழுவாகப் புறப்பட்ட அந்தக்கொடூரன் மறைவாகப் பதுங்கி இருந்துவிட்டு ஆட்களை மேலும் சேர்த்து 200 பேருக்கும் மேலாக வந்து தாக்குவான்.

13 பேர் கொண்ட சாமுராய் குழு 200 பேர் கொண்ட குழுவை வென்றதா, அந்தக் கொடூரன் கொல்லப்பட்டானா என்பதுதான் கதை.

நாரிட்சுகுவைத் தாக்க திட்டமிட்டிருந்த முழுகிராமத்தையே அவர்களுக்கான வலையாக மாற்றியிருப்பார்கள், 13 பேரும் சேர்ந்து. வெடிகள், முட்கள், அம்புகள், வாட்கள் என எல்லாவற்றையும் கொண்டு சண்டையிடும் காட்சிகள் அருமை. ஆனால் அந்த சண்டைதான் மிக முக்கியம் என்பதால் மிக நீளமான சண்டையாக எடுத்திருக்கின்றனர்.

இந்தப்படத்தின் ஒளி மற்றும் ஒலிப்பதிவு குறித்து. இசையற்றிருத்தலே சிறந்த இசை என்பதை புரிந்து கொண்ட இசையமைப்பாளர் இதற்கு இசை அமைத்திருக்கிறார். மிக மிக அவசியமான இடம் தவிர வேறு எங்கும் இசையை நம்மால் உணர முடிவதில்லை. கிட்டத்தட்ட படத்துடன் இயல்பாக பயணிக்கிறது இசை. பிரம்மாண்டம் ஏதுமின்றி சாமுராய்களின் வாழ்க்கை பற்றி அருமையாகச் சொல்கிறது படம்.

ஒளிப்பதிவும் அருமை. கண்ணைகூசச் செய்யும் ஒரு இடம்கூட இல்லை. அழகான ஜப்பானிய கிராமங்களைப் பார்த்த உணர்வு. இவ்வளவு இயற்கை அழகுடனா ஜப்பான் இருக்கும்? அழகோ அழகு சாமுராய்கள் எதிரியை எதிர் கொள்ளும் இடம். படத்தில் எங்கும் வெயில் வந்து பார்த்தாக ஞாபகம் இல்லை.

ஹீரோயிஸம், பறந்து பறந்து சண்டை, என்ற எதுவும் இன்றி கெட்டவனை அழிக்க தன்னைப் பணயம் வைக்கும் 13பேரின் கதை. அவ்வளவே. அந்தக்காலத்தில் எப்படி செய்திருப்பரோ அதேபோல.

எதிரியின் படைத்தலைவன் ஹன்பே (அவனும் சாமுராய்தான்) தலை வெட்டப்பட்டு விழுந்து கிடக்கும். அதைக் காலால் எட்டி உதைப்பான் அந்தக் கொடுரன். “அவன் உன்னைக்காக்கத்தானே தனது உயிரை இழந்தான் அவன் தலையை எட்டி உதைக்கிறாயே என ஷின்ஷிமோன் கேட்பார். நாரிட்சுகு பதிலாக திமிருடன், உனக்கு வேண்டுமெனில் எனது தலையை வெட்டி நீ காலால் உதை என்பான்.

இறுதிச் சண்டையாக நாரிட்சுகுவை “உன்னால் கஷ்டப்பட்ட மக்களுக்காகவும், இனி நாடு அமைதியாக இருப்பதற்காகவும், எனது நண்பனின் குடும்பம் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவும், உன்னால் சர்வநாசம் செய்யப்பட்ட அந்தப் பாவப்பட்ட பெண்ணிற்காகவும் உன்னைக் கொல்கிறேன் எனச் சொல்லி அவனை அழிக்கிறான் சாமுராய் ஷின்ஷிமோன். ஷின்ஷிமோனும் நாரிட்சுவால் வாளால் குத்தப்படுகிறார். இருவரும் இறக்கின்றனர்.

எல்லா கொடூரர்களுக்கும் அவர்களது சாவு என்பது வலி மிகுந்தே இருக்கிறது,அன்று முதல் இன்றுவரை. ஷின்ஷிமோனால் வயிற்றில் குத்தப்பட்டு துடிக்கும்போது வலிக்காக அழுகிறான், சாகப்போவதை நினைத்து சகதியில் புரண்டு அழுகிறான். ஷின்ஷிமோன் அவனது தலையைக் கொய்து அவனது வலியிலிருந்து விடுதலை அளிக்கிறார். அவ்வளவு கொடூரமானவனுக்கும் கருனையே காட்டுகிறான் இந்த சாமுராய்.

சாமுராய்களின் வாழ்க்கை என்பதே ஒரு சுமைதான் என்பதை கடைசியில் வீழ்ந்து கிடக்கும் ஷின்ஷிமோன் சொல்வார். திருமணம் ஆகாத ஒரு சாமுராய்க்கு (ஷின்ஷிமோனின் மருமகன்) இனிமேல் உன் வாழ்க்கையை நீ விரும்பிய வழியில் வாழ்ந்துகொள் என்பதுடன் நிறைவு பெருகிறது.

கிகாவாக வரும் அந்த காட்டுவாசி ஒரு மனிதனே அல்ல. அவன் ஒரு காட்டுப் பேய். ஆனால் நன்மை செய்யும் பேய். அவன் சொல்லும் உபாஷி என்ற பெண் அந்தக் கூட்டத்தின் தலைவியின் மகளாக இருக்கக் கூடும். அவனது தலைவியின் மகள்மீது கைவைத்ததால்தான் தன்னை கைவிட்டுவிட்டு சென்றுவிட்டதாக கிகா சொல்கிறான் ஓரிடத்தில்.

சண்டையில் அவனுக்கு கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு விடுவான். கடைசியில் எநதக் காயமும் இன்றி அவன் அடுத்த காட்சியில் வருவான். எஞ்சி இருக்கும் ஒரு சாமுராய் எப்படி உனக்கு காயமே இல்லை எனக் கேட்கும்போது Compared to fighting a wild bear these wounds are nothing. என்று சொல்லி விடுவான்.

சாமுராய்களுக்கு உதவ கிகா என்ற நல்ல பேய் உதவுவதாகக் கூட கொள்ளலாம்.


இது திரைப்படத்துக்காக உருவாக்கப்பட்ட கதை அல்ல.. நிஜமாகவே நடந்தது, திரைவடிவத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

1963ல் இதே பெயரில் வந்த கருப்பு வெள்ளைப் படத்தின் மறுதயாரிப்புதான் இந்தப் படம்.

இயக்கம் : தகாஷி மைக் ( Takashi Miike.)
ஜப்பான் அகாதமி பரிசுக்கு சிறந்த படம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம்.

இந்தப் படத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்.

படத்தின் ட்ரெய்லரைக் காண இங்கே சொடுக்குங்கள்.

இந்தப் படத்திற்கான அதிகாரபூர்வ வலைத்தளம் இது.

Tuesday, November 1, 2011

ஜானி ட்ரை ஙுயென் .. எல்லாம் நமக்குத் தெரிஞ்ச ஆளுதான்


ஜானி ட்ரை ஙுயென்.

அமெரிக்காவில் வசிக்கும் இவர் பல ஆங்கிலத் திரைப்படங்களில் டூப் நடிகராகவும் நடித்திருக்கிறார், 24 படங்களில் நடித்தும் இருக்கிறார்.

தற்காப்புக்கலை வல்லுநராகவும் இருக்கும் இவர் பிறந்தது தென் வியட்நாமில்.

8 வயதிலெயே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து விட்ட இவரது அம்மா சீனாவைச் சேர்ந்தவர்.எனவே இவர் பாதி சீனர், பாதி வியட்நாமியர்.

இவரது அண்ணன் சார்லி ஙுயென் தான் ”த ரீபெல்” படத்தை இயக்கியவர்.

சூர்யா நடித்த திரைப்படத்தில் வில்லனுக்கு கைதட்டும், விசிலும் பறப்பது இதுவே முதல் முறை. சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு என்ற தமிழ் திரைப்படத்தில் டோங் லீ என்ற பெயரில் நடித்திருக்கிறார்.

சும்மா அம்பது அடி தூரத்தில் இருந்து கொண்டு ஒருத்தனை மெஸ்மெரிசம் செய்தல் சாத்தியமா, 5 விநாடிக்குள் ஒருவருக்கு கராத்தே கற்றுக்கொடுத்தல் சாத்தியமா என்ற லாஜிக் கேள்விகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் ”டோங் லீ” என்ற பாத்திரத்தில் நடித்த ஜானி ட்ரை ஙுயெனின் நடிப்பு அட்டகாசம்.

அவரது உடல் மொழி, நடக்கும் விதம், அடுத்தடுத்து ஆளைத் தேடிக்கண்டுபிடித்துக் கொண்டே போவது, கொஞ்சம்கூட வில்லத்தனம் செய்யாமல் வில்லன் வேலையைச் செய்யும் விதம் இவருக்கு பல ரசிகர்களை பெற்றுத்தந்திருக்கிறது.

சண்டை ஒவ்வொன்றும் இயல்பாய் இருக்கிறது. கிட்டத்தட்ட விமர்சனம் எழுதிய எல்லோரும் போட்டுச் சாத்திய அதே விஷயத்தை நாமும் எழுதாமல் நல்லதாய் எழுதுவோம் என நினைத்ததால் இந்தப் பதிவு.



இந்தப் பட விமர்சனங்களை தமிழ்கூறும் நல்லுலகின் வலைப்பதிவர்கள் கிட்டத்தட்ட போஸ்ட்மார்ட்டமே செய்துவிட்டதால் அங்கே சென்று படித்துக் கொள்க.

ஜானி ட்ரை ஙுயென் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்