Sunday, November 24, 2013

வயோதிகம் படுத்தும் பாடும், துபாயும்..

போனமாதம் விசாவுக்காக குடும்பத்துடன் துபாய் போயிருந்தபோது குழந்தையையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தேன்.. வழியில் இந்த தம்பதியைப் பார்த்தேன். இந்தியராக / சர்தாராக இருப்பதால் மரியாதைக்காக சாஸ்த்ரிகால் ஜி எனச் சொன்னவுடன் மீண்டும் முகமன் சொல்லிவிட்டு, எப்படியாவது பேசவேண்டும் என்ற தவிப்பில் உரையாடலை ஆரம்பித்தார். எங்கு வேலை செய்கிறேன், இந்தியாவில் எங்கே, தமிழ்நாடு எனச் சொன்னதும் எனது ஹிந்தியைப் பாராட்டி சில வரிகள், அவர் அங்கு வந்ததுமுதல் தற்போது வரையிலான அனைத்து நிகழ்வுகளையும் கொட்டித்தீர்த்து விட்டார்.

தூரத்தில் ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. பெயர்த்தி.

குழந்தையோட அப்பா அம்மா வரலையா எனக் கேட்டதுதான் தாமதம்..

என்னோட பையனும், மருமகளும் ஒரே இடத்துல வேலை பாக்குறாங்க, ஆளுக்கொரு கார எடுத்துகிட்டு போறாங்க..

சாயந்தரம் ஆச்சின்னா ரெடி ஆகிட்டு மறுபடியும் சுத்தக் கிளம்பிர்ராங்க.. எங்க போறாங்கன்னுகூட சொல்றதில்லை.. குழந்தையையும் கூப்டுட்டு போறதில்லை..

பெரியவங்கன்னு சொல்லி கூப்ட்டு வந்தான்.. நின்னு அஞ்சு நிமிஷம் பேசுறதில்லை. வீட்டுக்குள்ளையெ உக்காந்திருந்தா பயங்கர போரடிக்குது. இந்தக் குழந்தை எப்ப பாத்தாலும் டி.வி பாத்துகிட்டே இருக்கு.. அதான் குழந்தைய கூப்டுட்டு வெளிய வந்தோம்னு சொல்லி முடிச்சார்.

முக்கியமான ஆதங்கம்.. பெருமைக்கு பெற்றொர்களை அழைத்து வந்துவிட்டு வார இறுதியில் நண்பர்கள் வீட்டுக்கு உணவுக்கு அழைத்துச் செல்வதுடன் பெரியவர்களுக்கான மரியாதை நின்று விடுகிறது..
சாப்பிட்டார்களா, இல்லையா என்றுகூட மகனோ, மருமகளோ கேட்பதில்லை என்ற வருத்தம்..

நான் நின்று ஒரு 10 நிமிடம் பேசியதில் அவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. வீட்டுக்கு அழைத்தார்கள். அவர் பேசிய பின்னர் வீட்டு நிலவரம் தெரிந்திருந்ததாலும், அடுத்த இரு தினங்களில் இந்தியா திரும்ப வேண்டியிருந்ததாலும் மரியாதையுடன் மறுத்து விட்டேன்..

இந்தியா முழுக்க பெற்றோர்களின் நிலை இதுதான் போல..

No comments: