Sunday, November 24, 2013

பாருதகதிமிதாவின் இன்றைய டைரி

உலக இலக்கியம் என்றால் எனக்கு உயிர்..(அப்ப இந்திய / தமிழக இலக்கியமெலாம் உனக்கு ம...ரான்னு கேட்டீங்கன்ன்னா பிளாக்தான்)

இலான் ஸ்டாவன்ஸ் எழுதிய ”அமெரிக்க இலக்கியம் குறுகிய எண்ணம் கொண்டவையா?” என்ற கட்டுரையில் அமெரிக்க இலக்கியம் மட்டுமே குறுகிய பார்வை உடையது என எண்ணம் கொண்டிருக்கிறோம். ஆனால் நாமும் இதர நாட்டு இலக்கியங்களைப்போலவே குறுகிய எண்ணங்கள் கொண்டவர்களே, நமது கட்டுரைகளே அதற்கு சாட்சி என்கிறார், ஸ்டாவன்ஸ்..

அமெரிக்க எழுத்தாளர் என்ற இனமே கிடையாது. மாறாக என்னிலடங்கா எழுதும் முறைகளைக் கொண்ட எழுத்தாளர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.. என்கிறார்.

1993க்குப் பிறகு இலக்கியத்திற்கு அமெரிக்காவின் எந்த எழுத்தாளர்களுக்கும் நோபல் பரிசுகிடைக்கவில்லை. அதற்கு நோபல் கமிட்டியின் தேர்வுக்குழுவினர் சொன்ன காரணம் அமெரிக்காவில் புயலைக்கிளப்பிவிட்டது. (இலக்கிய உலகில்)

அமெரிக்கர்களின் எழுத்து உலகத்துடன் ஒட்டாத தனக்கென ஒரு கூண்டுக்குள் அடைத்துக்கொண்ட எழுத்து எனச்சொன்னதும் பொங்கி எழுந்துவிட்டனர் அமெரிக்கர்கள்.. நமக்கு, ஒரு இந்தியனுக்கு நோபல் பரிசு கிடைப்பதெல்லாம் எனக்கு கிடைத்தால்மட்டும் சாத்தியம். அவ்வளவு எழுத்து வறட்சி இந்தியாவில். ஆங்காங்கே ஓரிருவர் தென்பட்டாலும் அவர்கள் நோபல் பரிசுக்கெல்லாம் தகுதியானவர்கள் எனச் சொல்ல எனக்கே கூசுகிறது. அதனால்தான் நான் என்னை மட்டும் தகுதியானவன் எனச் சொல்லிக்கொள்கிறேன். என் பலம் எனக்கு மட்டுமே தெரியும்.

ஹூகோ சாவேஸ் இறக்கும் முன்னர் எனது எழுத்துக்களை முழுதும் படிக்க முடியவில்லையே என வருத்தப்பட்டதாக அவரது உதவியாளர் சொன்னதாக எனக்கு வேண்டப்பட்டவர் சொன்னார். சாவேஸும், ஃபிடல் காஸ்ட்ரொவும் சந்தித்துக்கொள்ளும்பொதெல்லாம் எனது எழுத்துக்களைப் பற்றி மணிக்கணக்கில் விவாதித்துக்கொண்டிருப்பார்களாம். ஆனால் கம்யூனிஸம் ஆதரிக்கும் எதையும் முதலாளித்துவ நோபல் நிராகரிக்கும். அதனால்தான் இன்றுவரை நோபல் கமிட்டியால் எனது எழுத்துகள் சீண்டப்படுவதில்லை.

ஆப்ரிக்க எழுத்தாளரான பரோட்டா டெங்கமரோட்டா எழுதிய ஒரு நாவலை வாசித்திருக்கிறேன். அதில் பல வரிகள் எனக்குப் புரியவேயில்லை. இருப்பினும் அதை கீழே வைக்க மனம் வரவில்லை. இன்று தமிழகத்தில் ஒரு எழுத்தாளராவது லஜ்ஜாவைப் படித்திருப்பார்களா?

தஸ்லிமா நஸ்ரின் என்ற வங்க எழுத்தாளருக்கு உண்மையை எழுதியதற்கு கிடைத்த பரிசு நாடு துரத்தல். நானும் உண்மையைத்தான் எழுதுகிறேன். ஆயிரக்கணக்கில் செலவழித்து ஆதாரங்களுடந்தான் எழுதுகிறேன். அந்த உழைப்பைப் பாராட்டாவிட்டாலும் அடுத்த கட்டுரைக்கு உழைக்கவாவது ஏதாவது செய்யலாம். ஆனால் அதையும் செய்யாமல் எழுத்தாளனை புறக்கனிப்பதிலேயே ஒரு கூட்டம் அல்லாடுகிறது.

ஃபிரான்ஸில் எழுத்தாளன் என கர்வமுடன் சொல்லிவிட்டு எந்த பாரிலும் மது அருந்தலாம். எழுதியது எவ்வளவு போர் அடிக்கும் புத்தகமாய் இருந்தாலும் எழுத்தாளன் என்ற மரியாதை குறைவதில்லை.

தெரியாமல்தான் கேட்கிறேன், உலகில் எந்த நாவலாவது நலமுடன் வாழ்வது முதல், சம்போகம் வரையிலுமான தகவல்களையும், ஆன்மீகத்தையும் கலந்து கொடுத்ததாக வரலாறு உண்டா.? நான் எழுதினேன். ஒருபயல் சீண்டவில்லை. யாரோ ஒரு ஆள் எழுதிய “தனிமையின் நூறு ஆண்டுகள்” என ஒரு புத்தகமாம், அச்சிடுவதற்குள் முதல் பதிப்பு போனியாகிறது. நான் எழுதி ஒரு புத்தகம் கடைக்குவந்து எழுத்தே அழிந்தாலும் அழியுமே தவிர புத்தகம் விற்பதில்லை.

செக் நாட்டவர்கள் குடிக்க பணம் இல்லையென்றால்கூட குற்றச் செயல்கள் புரியமாட்டார்கள்.. ஆனால் புத்தகம் வாங்க காசில்லையென்றால் அவ்வளவுதான்..

இதை ஏன் சொல்கிறேன் என்றால் தமிழ் நாட்டில் மட்டும்தான் குடிக்கவும், சினிமாவுக்கும் மட்டும் செலவழிக்க ஆட்கள் இருக்கிறார்கள்.. ஆனால் காசு குடுத்து அதுவும் என் புத்தகத்தை காசு கொடுத்து புஸ்தகம் வாங்க மூக்கால் அழுகிறார்கள்.. இந்த சமுகமா உருப்படப்போகிறது?

அடுத்து ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கப்போகிறது. வெளியாகப்போகும் நாள் முதல் அதுகிளப்பிய புயலின் தூசி அடங்கும் நாள்வரைக்குமான இடைவெளி ஆண்டுக்கணக்கில் இருக்கப்போகிறது. அதன் பின்னர் தெரியும் என் அருமை. அந்த நாவலின் ஒரு பகுதியை டெல்லி ஜெ.என்,யூவின் சமூகவியல்துறை பேராசிரியர் ஒருவருக்கு அனுப்பி வைத்தேன். அதை அனுப்பி அரைமணி நேரத்திற்குள் ஒரு போன்கால். விசும்பலுடன்.. பேசவே முடியவில்லை அவரால்.. அவ்வளவு தூரம் அந்தப் பகுதி அவரை பாதித்துவிட்டது. எனது எழுத்தின் முழுத்தொகுதியையும் கேட்டிருக்கிறார். அனுப்பி வைக்க வேண்டும். ரோசியும் (லேடி டாக்) , நாயும்(ஆம்பளை நாய்) என் கவனத்தை சிதறடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்..

இந்தப் பத்தியையே ஒரு தவம்போல எழுதுபவன் நான்.. அந்த நாவல் எனது, உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொட்டி எழுதி இருக்கிறேன். யார் யாரோ எங்கெங்கோ போகிறார்கள்.. எனக்கு அதிகபட்சமாக உள்ளூர் கோடாங்கிகள்தான் சிஷ்யர்கள்.

எழுத்தாளனை வரவேற்காத சமூகம் எந்த நாட்டிலிருந்தால் என்ன? இங்கிருந்து கொண்டுபோன அதே எண்ணங்கள்தானே அங்கும் இருக்கும்..

இராக்
19.07.2013

No comments: