Sunday, November 24, 2013

எனது பள்ளி ஆசிரியர்கள்..

குட்டி ஒண்ணாப்பு : அழகம்மாள் அக்கா. ( தூங்கலைன்னா அடிப்பாங்க  )

ஒண்ணாப்பு : ஜானகி அக்கா. 

ஒரு மாதிரியான ஆன்குரல் கலந்த குரலில் ஓரோன் ஒன்னு, ஈரோன் ரெண்டு என ஆரம்பித்து வைத்தவர்.

ரெண்டாப்பு : சந்திராபாய் அக்கா. 

மூனாப்பு : பாக்கியம் அக்கா 

கணக்கு வரவில்லை என்பதற்காக தலையில் ஸ்கேலால் அடித்து ரத்தம் வர வைத்தவர் 

நாலாப்பு : வாலகுருசாமி அய்யா.

சொரி அய்யர் என்ற பட்டத்தை வழங்கி வகுப்பில் கடைசியில் அமரவைத்து ரசித்தவர். அப்போது உடம்பெல்லாம் சிரங்கு.

ஐஞ்சாப்பு : லில்லி ஜாய்ஸ் அக்கா.

வகுப்பில் திருடுபோன அவர்களது அடிஸ்கேல், பேனா, மைக்கூடு, போன்ற விலைமதிக்க முடியாத பொருட்களை திருடியவர்களை கண்டுபிடித்துக்கொடுத்ததால் என் மீது மிகுந்த பிரியமாய் இருந்தவர். மேலும் முழுப்பரிட்சை நேரத்தில் குடும்பத்துடன் தென்னிந்திய சுற்றுலா சென்றுவிட, பரீட்சை எழுதாமலேயே ஆறாம் வகுப்புக்கு போக ப்ரமோட்டட் கார்டு தந்தவர். தலைமை ஆசிரியர் ராமசாமி அய்யா ஆசியுடன் தான்.

ஆறாப்பு : காந்தி ஐயா / பாக்கியம் அக்கா.

எதற்காக பாக்கியம் அக்கா வகுப்பில் இருந்து காந்தி ஐயா வகுப்புக்கு மாற்றினார்கள் என நினைவில்லை. ஆனால் எனது அண்ணன் அவரது மாணவன் என்பதால் வெங்கட்ராமன் தம்பியாடா நீயி, முட்டாப்பயலே என ஒவ்வொருமுறையும் எங்க அண்ணனுடன் கம்பேர் செய்தே என்னை நொங்கெடுத்தவர்.

ஏழாப்பு : பாக்கியம் அக்கா.

பெரியப்பா பள்ளியின் ஹாஸ்டலில் சமையல்காரராய் இருந்தார். பெரியப்பா மீதான மரியாதையால் அடி கொஞ்சம் குறைவாக கொடுத்தவர். சாமி மகனாடா நீயி, நல்லாப்படிக்கனும் என்னா?

எட்டாப்பு : மெய்ஞான குரு அய்யா.

இவர் பையனும் நானும் ஒரே வகுப்பு மற்றும் நண்பர்கள் என்பதால் சாத்துமுறை குறைவு. அவனும் என் ரேஞ்சுக்குத்தான் படித்தான்.

ஒம்பதாப்பு : சோமசுந்தரம் அய்யா.

வரலாறு & புவியியல் பாடம் எடுத்தவர். 10ம் வகுப்பில் 66 மார்க் வரலாறு, புவியியலில் எடுத்தேன். அதுதான் எனது அதிகபட்ச மாக் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடங்களில். அவரிடம் நான் கேட்ட அறிவுபூர்வமான கேள்வி துருவப் பிரதேசங்களில் ஏற்கனவெ குளுருது, இதுல எதுக்குங்கய்யா ஏ.சி.ரூமு? அப்போது ஏ.சி. என்பது எப்படி இருக்கும் என்பது கற்பனையில்கூட தெரிந்திராத காலம்.

பத்தாப்பு : அக்பர் அலி அய்யா.

காதில் கடுக்கன் போடும் அளவு கிள்ளுவார். அவர் கிள்ளி முடித்து 1 மணி நேரத்துக்காவது எரிச்சல் இருக்கும். கணக்கில் அவர் கொஞ்சம் தடுமாறுவார். அதனால், அவருக்கு தெரியாத கணக்குகளை சாய்ஸில் விட்ருங்கப்பா என்பார். ஒருமுறை நானும் அவர் போர்டில் கணக்குப்போடுவதற்கு தடுமாறுவதைப் பார்த்துவிட்டு சும்மா இல்லாமல், பரவாயில்லைய்யா, நங்க சாய்ஸ்ல விட்டுர்ரோம் எனச் சொல்ல, அப்பாவை அழைத்துவரச் சொல்லிவிட்டார், முறையான சாத்துமுறை மற்றும் கிள்ளலுக்குப் பின்னர்.

நாடார் மஹாஜன சங்க ஐ.டி.ஐ - கள்ளிக்குடி - எந்த ஆசிரியர் பெயரும் ஞாபகமில்லை. ( வகுப்பு நடந்ததே 40 நாட்களுக்குள்தான் இருக்கும், 3 மாதங்களில்) இங்குதான் 15 வயசுப்பய கூட சிகரெட் அடிப்பார்கள் என்பதையும், சோ கால்டு பலான புத்தகங்களை வகுப்பிலேயே படிக்கும் தைரியம் பெற்ற நண்பர்களையும் கொண்டிருந்தேன். ( இது மத்திய அரசின் என்.சி.வி.டி அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதை ஐ.டி.ஐ நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு சொன்னதால், அந்த வருடம் வேஸ்ட் ஆனது. அந்த நேரத்தை கல்லுப்பட்டியின் கே.கே.எஸ். சுப்பையஞ் செட்டியார் கடையில் துணியைக் கிழித்துக்கொண்டிருந்தேன்.)

பதினொன்னாப்பு : அப்பாஸ் அலி அய்யா.

ஆல் த பாய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் 12பி க்கு வந்திருங்கடா, ஐ வில் டேக் போயம் கிளாஸ் .. என்ன புரியுதா? என ஒரு வித்யாசமான ஆங்கிலத்தை அறிமுகம் செய்து வைத்தவர். நானும், பிரகாஷ் ராஜகோபாலும், பள்ளியில் முதலிடத்தைப் பிடித்த பஷீர் அஹமதுவும் சந்தித்துக்கொண்டு மிக நெருக்கமானது, இந்த வகுப்பில்தான். இன்றும் நாங்கள் நெருங்கிய நண்பர்கள்.

பன்னெண்டாப்பு : அப்பாஸ் அலி அய்யா.

நாமளே ஆங்கிலத்தை படிச்சாதாண்டா பொழைக்க முடியும் என எங்களை ஆங்கிலம் படிக்க வைத்தவர். டெய்ரி சயின்ஸ் எடுத்த சாந்தி அக்காவுக்கு நெருக்கமாக பிரகாஷும், பஷீரும் இருக்க, நான் மட்டும் மந்தையில் இருந்து பிரிந்த ஆடாக இருந்த காலம். இருப்பினும் பிரகாஷின் உதவியால் பள்ளியில் மூன்றாம் இடத்தில் தேறினேன்.

டிப்ளமோ இன் அக்ரிகல்ச்சர் : கண்ணன் சார், கணேசன் சார், கோவிந்தன் சார் இவர்களே மனதில் நின்றவர்கள். இம்மூவரிலும் மாணவர்களைப் பார்த்து பேசிக்கொண்டே போர்டில் எழுத்தை நேர்வரியாக எழுதும் கோவிந்தன் சாரும், எண்டமாலஜியையும், ஜெனிடிக்ஸையும், அக்ரோ கெமிக்கல்ஸையும் அழகாய் நடத்திய கண்ணன் இருவரையும் மிகவும் பிடிக்கும். கண்ணன் சார் மூலமாகத்தான் 90 மினிட்ஸ் அட் எண்டப்பி கதையை முதன் முதலில் கேட்டு இஸ்ரேலியர்கள் மீதான ஒரு பிடிப்பு உண்டானது.

பிரகாஷ் ராஜகோபால் என்பவர்(ன்) அய்யாவும் அல்ல, சார் ருமல்ல.. ஆனால், எல்லா ஆசிரியர்களைவிடவும் எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்தவர்.

எல்லோரும் அவங்கவங்க வாத்யார்களைப் பத்தி சொல்லிக்கிட்டிருக்காங்க.. என்னோட பங்குக்கு நானும்..

No comments: