Sunday, November 24, 2013

இமாம் ஹுஸ்ஸைன்

பரவாயில்லையே.. எல்லாம் நல்லா போய்க்கிட்டிருக்கே இந்த இமாம் ஹுசைன் நினைவு தினத்தில்கூடன்னு நெனச்சேன் இன்னிக்கு காலையில.. நேத்து ராத்திரியும் மகிழ்ச்சியா ஊரச்சுத்தி படமெல்லாம் எடுத்து தள்ளுனேன். இன்னிக்கு காலையில சைட்டுக்கு போய்ட்டு இருக்கேன், போலிஸ் செக்போஸ்ட்டில் வழக்கமான சிரிப்பு இல்லை. இந்தியனா, சரி, கிளம்பு என வழியனுப்பினர். இவனுங்க இப்படி இருக்க மாட்டாங்களேன்னு நெனச்சிட்டே போனா, நேத்து ராத்திரி ஒரு எகிப்தியன்(பிரித்தானிய பாஸ்போர்ட் உள்ளவன்) இமாம் ஹுசைன் படம் போட்ட கொடியை இரண்டாய்க் கிழித்து காலுக்கடியில் போட்டு மிதித்திருக்கிறான். அந்தச் செய்தி கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி இன்றைக்கு வெடிக்கக் காத்திருக்கும் குக்கர் போலாகிவிட்டது பாஸ்ரா.

இராக்கிய பிரதமரும் அந்த எகிப்தியனை உடனே நாட்டைவிட்டு வெளியே அனுப்ப உத்தரவிட்டிருக்கிறார். இப்போது கோபம் தலைக்கேறிய மக்கள் எகிப்தியர்களையும், பிரித்தானியர்களையும் தாக்கக்கூடும் என உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளதால் பரவலாக பதட்டம் இருக்கிறது. எண்ணெய்க் கம்பெனிகள் வேலைக்குப் போயிருந்த எல்லோரையும் கேம்புக்கு அழைத்துவிட்டது. நாளையும் வேலை இல்லை. (இமாம் ஹுசைன் இறந்த 10ம் நாள் நாளை)

இப்படியே பொங்காமல் போய்விட்டால் நல்லது. கடந்த ஓராண்டுகளில் கலவரம் ஏதும் இல்லாத பாஸ்ராவில் ஏதும் நடக்காமல் இருக்க வேண்டும். இல்லையெனில் பாஸ்ரா மீண்டும் இன்னொரு பாக்தாத் ஆகும். (தினமும் 40 முதல் 60 பேர் வரை உயிரிழப்பு) ஷியா, சன்னி சண்டைகளால்.

ஒரு கிறுக்கன் செய்த சிறு தவறு அமைதியாக இருந்த சமூகத்தை மூர்க்கத்தனமாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

இதிலும் ஒரு லாஜிக்குடந்தான் ஆட்களைத் தாக்க முயல்கிறார்கள். அவன் பிறப்பால் எகிப்தியன்.. எனவே எகிப்தியர்களைத் தாக்கு, பிரித்தானிய பாஸ்போர்ட் வைத்திருக்கிறான். எனவே பிரித்தானியர்களையும் தாக்கு என்பதே..

No comments: