Sunday, November 24, 2013

ஈராக் அனுபவங்கள்...(அருகிலிருந்த கிராமத்திற்கு ஒரு விசிட்)

இன்று பாஸ்ராவை ஒட்டியுள்ள கிராமத்திற்கு சென்றிருந்தேன். பஜாரில் டாக்ஸியை நிறுத்திவிட்டு கொஞ்சம் பழங்கள் வாங்கலாம் எனச் சென்றுவிட்டு வந்து பார்த்தால் டாக்ஸி ட்ரைவரை போலிஸ் பிடித்து எதுக்கு ராசா ராங் பார்க்கிங் செஞ்சனு குடைந்திருக்கிறார்கள்.(அவர்களுக்கு ராங் பார்க்கிங்கை விட ரொம்ப நேரம் ஒரு வண்டி ஒரே இடத்தில் நின்றிருந்தாலே அவர்களுக்கு டென்ஷன் கூடும்)

எனது ட்ரைவர் போலிஸிடம் ஒரு இந்தியனை அழைத்து வந்தேன், பழங்கள் வாங்கப் போயிருக்கிறார் எனச் சொல்லி இருக்கிறார். இங்க ஏதுடா இந்தியன்னு சொல்லிட்டு அந்தாளு வந்ததும் என்கிட்ட சொல்லு அதுவரைக்கும் இங்கையே இருன்னு சொல்லிட்டுப் போய்ட்டார் போலிஸ்.

நான் வந்ததும் போலிஸும் வந்தார். வழக்கம்போல சலாம் அலைக்கும் எல்லாம் முடிந்த பின்னர் அவர் கேள்விகள் கேட்க நான் அரபியிலேயே பதில் சொல்ல அவருக்கு நான் இந்தியந்தானா என்பதில் சந்தேகம் வந்து நீ இரானியா, பாக்கிஸ்தானியா, பெங்காலியா என எல்லாம் கேட்டுவிட்டு கடைசியில் இந்தியனா என நம்பமுடியாமல் கேட்டு, பாஸ்போர்ட்டைப் பார்த்ததும்தான் அவருக்கு நம்பிக்கை வந்தது.. அப்புறம் அவர் என்னுடன் விரும்பி போட்டோ எடுத்துக்கொண்டதெல்லாம் தனிக்கதை. ( கீழே சில படங்கள்)

அதேபோல பழங்கள் வாங்க சென்றிருந்தேன் எனச் சொன்னேன் இல்லையா, ( நன்றி சாரு) ஒரு கிலோ திராட்சை நம்முர் காசுக்கு 200 ரூபாய்கள். செர்ரி பழமும் கிலோ 160 ரூபாய். நான் பேரம் பேசியதில் ஒரு 25 ரூபாய் மட்டும் குறைத்தார். அப்புறம் அவருக்கு எதோ சந்தேகம். நீங்கள் இரானியா என்றார்? ( ஆம் என்றிருந்தால் அந்த கழிவும் கிடைத்திருக்காது  இல்லை, இந்தியன் என்றதும் நம்மூர் வணக்கத்தை ஒரு 5 முறை செய்து விட்டு, கைகுலுக்கி என்ன செய்வதெனத் தெரியாமல் 10 பிளம்ஸ்களை எடுத்துப்போட்டு ஒருகிலோ செர்ரி மற்றும் ஒரு கிலோ திராட்சை மற்றும் கொசுறாக கொடுத்த 10 பிளம்ஸ் எல்லாவற்றிற்கும் சேர்த்து 200 ரூபாய் (4 டாலர்) மட்டும் போதுமென்றார். நம்மளையும் மனுசனா மதிக்கிற நாடு இருப்பதில் மீண்டும் மகிழ்ச்சி.

இராக்கில் கனரக துப்பாக்கி ஏந்தி முரட்டுத்தனமாய் வண்டியின் ட்ரங்க்குகளை மூடும் போலிஸ்கூட இந்தியன் வண்டியில் இருக்கிறான் என்றால் உடனே வண்டிக்குள் தலையைவிட்டு கைகுலுக்கி, சிரிப்புடன் இரு வார்த்தைகள் பேசாமல் போவதில்லை.

நேற்றைக்கு எனது நண்பர்களை ஒரு வேலையாக பாஸ்ரா வரச் சொல்லி இருந்தேன். வேலை முடிய நேரம் ஆனதால் பஜாருக்குச் சென்று சாண்ட்விச் வாங்கித்தந்துவிட்டு திரும்பும் நேரம் ஒரு பெரிய வண்டி வந்து நின்றது. அதில் தலைவர் போல இருந்த போலிஸ் அருகில் வருமாறு எனது நண்பர்களுக்கு சைகை காட்டினார். நண்பர்களுக்கு உடம்பெல்லாம் குப்பென வியர்த்து விட்டது. தலைமை போலிஸ் கைகாட்டவும் நாலு போலிஸ் துப்பாக்கியுடன் வந்து உங்களைத்தான் அழைக்கிறார் எனச் சொல்லவும், எனக்கே கொஞ்சம் பயமாகிவிட்டது. அருகில் சென்றதும் எல்லோருக்கும் கை கொடுத்துவிட்டு, எங்கு வேலை செய்கிறீர்கள், இந்தியாவின் எநதப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் விசாரித்துவிட்டு, இந்தியா பிடிக்கிறதா, இராக் பிடிக்கிறதா எனக் கேட்க நண்பர்கள் இந்தியாதான் எனச் சொன்னதை நான் மொழிபெயர்த்துச் சொல்ல ஒரு வெடிச்சிரிப்புடன் ”உண்மைய பேசுற” எனச் சொல்லிவிட்டு கிளம்பினார். போட்டோ எடுக்கனும்னு சொல்கிறார்கள் என்றதும், நான் போட்டோவிலெல்லாம் வரக்கூடாது, தப்பா நெனைச்சுக்காதீங்க எனச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நண்பர்களின் த்ரில் அடங்க கொஞ்ச நேரம் ஆனது..

No comments: