Sunday, November 24, 2013

பாரதிமணி அய்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து

24, September...

சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் பழக்கமான பெரியவரை பார்க்கச் சென்றிருந்தேன். வழக்கமான அறிமுகத்திற்கு பின்னர் பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கும் உணர்வினை ஏற்படுத்தி இருந்தார், தனது தொடர்ச்சியான கலகலப்பான பேச்சினால்.

சினிமா, நாடகம், எழுத்து, வேலை அனுபவங்கள் மற்றும் சில நகைச்சுவைத் துணுக்குகள் என கலந்து கட்டி பேசிக்கொண்டிருந்தோம். எனது இந்திய பயணத்தில் அவரைச் சந்திப்பதும் திட்டத்தில் இருந்தது.

இணையத்தில் பழகிய சில நாட்களில் அவர் எழுதிய புஸ்தகத்தைக் கேட்டு (பல நேரங்களில் பல மனிதர்கள் ) அதற்க்குண்டான பணத்தை தந்துவிடுகிறேன் எனச் சொன்னதற்கு இந்த புஸ்தகத்தை உங்களுக்கு தருவதன்மூலம் எழையாகிவிட மாட்டேன், யாரையாவது அனுப்பி வாங்கிக்கொள்ளுங்கள் என அனுப்பி வைத்தார்.

சினிமா அவருக்கு அள்ளிஎல்லாம் கொடுக்கவில்லை. கிள்ளித்தான் கொடுத்திருக்கிறது.கிடைத்ததையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார். எல்லாம் பெரிய இடத்து தொடர்புகள். சினிமாவில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஆளுமை. இருப்பினும் துளி பந்தா பழகும் அற்புத குணத்துக்கு சொந்தக்காரர்.

பாரதி படத்திற்கு தனது கைக்காசை போட்டு வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். அவருக்கு கிடைத்த சன்மானம் ஒரு விமான டிக்கெட்டுக்கு கூட காணாது. அவ்வளவு சொற்பம் மற்றும் அற்பத்தொகை, இருப்பினும் தமிழின் ஒரு முக்கியமான படத்தில் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக செய்து கொடுத்திருக்கிறார்.

தனது கையால் போட்ட காபியைக் கொடுக்காமல் யாரையும் அனுப்புவதில்லை.

முன்பின் பார்த்திராத இணையத்தில் மட்டுமே பழகியிருந்த என்னையும் அன்புடன் வரவேற்று பேசிய வயதில் மூத்தவரும் எனது அன்பு நண்பருமனான பாட்டையாவை அவரது பிறந்தநாளில் வணங்கி மகிழ்கிறேன்.

பந்தா இல்லாத பிறருக்கு தீங்கு நினையாத எங்கள் பாட்டையா நீடூழி வாழ இறைவன் அருளட்டும்.

No comments: