Sunday, November 24, 2013

ஈராக்கிய அனுபவங்கள் ( ருமைலா எண்ணெய்க் கினறுகள்)

இன்றைக்கு வடக்கு ருமைலா (North Rumaila) என்ற எண்ணெய்க்கினறுகள் உள்ள ஒரு பகுதிக்கு ஒரு அலுவல் ரீதியான சந்திப்புக்காக சென்றிருந்தேன். ஒரு அமெரிக்க கம்பெனிக்கு அவர்கள் வாங்கும் ஒரு கருவியின் தரத்தை சோதிப்பதற்கான வழிகள் குறித்து பேசுவதற்காக. 

அது முடிந்த பின்னர் அந்தப் பகுதியை சுற்றிப்பார்க்க சென்றுவந்தேன். படமெடுக்க அனுமதி இல்லை. ( விதிகளை மீறுதல் கூடாது என்ற கொள்கையாலும், எங்கிருந்தாவது மெஷின் கன் நம்மைக் குறிபார்க்கும் என்ற பயத்தாலும் படம் எடுக்கவில்லை)

எங்கெங்கு பார்த்தாலும் எண்ணெய்க் கினறுகள். கச்சா எண்ணெயை கேதரிங் ஸ்டேஷன் எனப்படும் ஓரிடத்தில் சேமித்து அதை வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர். பெரும்பன்மையான எண்ணெய் தரையில் பள்ளம் தோண்டி பெரிய குளம்போல சேமித்து வைத்துள்ளனர்.

இன்றைய தேதிக்கு ஈராக் தினமும் 20 லட்சம் பேரல்களை உற்பத்தி செய்கிறது. டாலர்களில் கிட்டத்தட்ட 300 மில்லியனை தினமும் சம்பாதிக்கிறது. 2015க்குள் ஆறுமில்லியன் பேரல்களாக உற்பத்தியை அதிகரிக்க திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. (அதனால்தான் எங்கள் பிழைப்பு ஓடுகிறது என்பதைச் சொல்லத்தேவையில்லை  )

இவ்வளவு வருமானம் இருந்தும் பாக்தாத்தில் ஆரம்பித்து, தென்கோடியான பாஸ்ராவரை எந்த ஊரையும் குறைந்த பட்ச சுத்தத்துடன் வைத்திருக்க முடியவில்லை.

இன்றுவரை ஈராக்கிய மக்களுக்கு எந்த ஊரிலும் பாதுகாப்பான குடிநீர் கிடையாது. யூப்ரடிஸ், டைகிரிஸ் நதியில் வரும் நீரை குழாய்களில் வழங்குகிறார்கள். காலையில் குழாயைத் திறந்ததும் முதல் 10 நிமிடம் கீழே ஓட விட வேண்டும். அப்படியே சாக்கடை நாற்றம். அதைத்தான் 100 சதவீத ஈராக்கியர்களும் பயன்படுத்த வேண்டும். நகரங்களில் தங்கியிருக்கும் என்னைப்போன்ற வெளிநாட்டவருக்கும் அஃதே.

எண்ணெய் துரப்பனப்பணியில் ஈடுபட்டிருப்போருக்கு மட்டும் போர்வெல்களிலிருந்தும், மறு சுத்திகரிப்பு செய்யப்பட்ட வாயில் வைக்க முடிந்த அளவு உள்ள குடிநீர். ஏனெனில் அதில் 99% மக்கள் வெளிநாட்டவர்கள். இந்த வசதியைக்கூட செய்துதரவில்லையெனில் ஓடிவிடுவார்கள்.

ஈராக்கிய குழந்தைகளுக்கு 7 வயதில்தான் பள்ளி வழ்க்கையே ஆரம்பமாகிறது. 7 வயதுக்கு முன்னர் பள்ளிகளும் சேர்த்துக்கொள்வதில்லை. குழந்தைகளும் பள்ளிக்குச் செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. நம்மூரில் குழந்தைகள் 7 வயதில் 2ம் வகுப்பு முடிந்திருக்கும். எழுதப்படிக்க தெரிந்திருக்கும். ஆனால், ஈராக்கிய குழந்தைகளுக்கு 2ம் வகுப்பில்தான் எழுத்தும், படிப்பும் ஆரம்பமாகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் என்ன கற்றுக்கொண்டிருப்பார்கள் என்பதை உங்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். தொடர்ச்சியாக 5 நிமிடம் ஆங்கிலம் பேசும் ஒரு இளைஞனைக் கூட பார்ப்பது அரிது. பேசத்தெரிந்தவன் மட்டும் எண்ணெய்க் கம்பெனிகளில் பி.ஆர்.ஓ வாக சேர்ந்துகொள்கிறான்.

ஒரு நல்ல கல்லூரியோ, பாலிடெக்னிக்கோ, ஐ.டி.ஐயோ கிடையாது. எனவே இளைஞர்களின் பள்ளி வாழ்க்கை 5 ஆண்டுகளோடு சரி. இருக்கும் பல்கலைக் கழகத்தின் தரமும் அப்படியே...

நம்முர்போல எனக்கு இதைச் செய்துகொடு, அதைச் செய்துகொடு என கோஷமிட்டு வெளியே ஊர்வலம் எல்லாம் செய்ய முடியாது. மொத்தக்கூட்டத்தையும் கேள்வி கேப்பாடு இல்லாமல் அழித்து விடுவார்கள். இராக்கிய போலிஸ் மற்றும் மிலிட்டரியின் தினசரி சோதனைகளே ஈராக்கிய பொதுமக்களின் தைரியத்தை குலைப்பதற்கு போதுமானதாக இருக்கும்.

எதற்கு இதெல்லாம் என்றால் இவ்வளவு வருமானமும் எங்கு செல்கிறது?

எனது வருத்தமெல்லாம்

ஏன் ஒரு அரசங்கத்தால் தனது குடிமக்களுக்கு குறைந்த பட்ச தேவையான சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீரைக்கூட வழங்க முடியவில்லை?

நல்ல கல்லூரிகளையோ, பாலிடெக்னிக்கையோ, ஐ.டி.ஐயையோ நிர்மானித்து இளைஞர்களுக்கு கைத்தொழில் சொல்லித்தர முடியவில்லை?

தடையற்ற மின்சாரம், ஏழைகளுக்கு நல்ல உறையுள் இப்படி எதுவும் செய்ய முடியவில்லை?

இன்றைக்கு நடக்கும் வன்முறைகளுக்கு இப்படி வெட்டியாய் பொழுதுபோக்கும் இளைஞர்களும் காரணம்.

இதே ஈராக்கின் இன்னொரு மாநிலம்தான் குர்திஸ்தான்.. அவர்களும் சதாம் காலத்தில் அப்படி ஒரு கொடுமையை அனுபவித்தவர்கள். குர்தி என்பதற்காக (அவர்கள் சதாமை தலைவராகவே ஏற்றுக்கொள்ளவில்லை..அதனால் குர்திக்கள் சதாமால் கிட்டத்தட்ட சித்ரவதை செய்யப்பட்டார்கள்) அமெரிக்க படைகள் சதாமை அகற்ற ஆரம்பித்தபோது குர்திஸ்தானைத்தான் சதாம் அழித்தார்.

ஆனால், அதே குர்திஸ்தான் இன்றைக்கு மத்திய கிழக்கின் எந்த நாட்டுடனும் போட்டி போடும் அளவு அடிப்படை கட்டமைப்புகளான தண்ணீர், மின்சாரம், சாலைகள், வீடுகள், கல்லூரிகள், பல்கலைகள் என கலக்கிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் அவர்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டே செய்திருக்கிறார்கள்.

அதெப்படி ஈராக்கின் பெரும்பகுதி இருட்டிலும், வசதியின்றியும் இருக்க ஒரே ஒரு மாநிலம் மட்டும் இப்படி ஒளிர்கிறது? ரொம்ப சிம்பிள்..

ஒளிவுமறைவற்ற வியாபாரம், மற்றும் அரசங்க செயல்பாடுகள், திட்டமிட்ட முன்னேற்றம், முடிந்த அளவு தனியார் மயமாக்கம், மொழிப்பற்று. இதை நாங்கள் ஈரக்கின் ஒரு பகுதி என்பதைச் சொல்லியே சாதித்திருக்கிறார்கள். (தனி குர்திஸ்தானம் கோரிக்கை சதாம் காலத்துக்கு முன்பிருந்தே இருக்கிறது)

இந்த ஏற்றத்தாழ்வை ஆராய்ந்தால் நமக்குத் தெரிவதெல்லாம் நல்ல தலைமை கிடைத்தால் / ஊழலற்ற ஆட்சியமைந்தால் / மக்களுக்குள் பிரிவினை இன்றி இருந்தால் / நமது நாடு என்ற எண்ணம் இருந்தால் ஒரே யூனியனுக்குள் இருந்துகொண்டே மிக நல்லவண்ணம் வாழலாம்,

தனது விதியை நொந்துகொண்டே நம்மை ஆள்பவர்கள் நம்மை கேவலமாக நடத்துவதை அனுமதிக்க மாட்டோம்.

இந்தியாவில் இதை ஒப்பிட வேண்டுமெனில் இதர வடக்கு மாகானங்களையும், குஜராத்தையும் ஒப்பிடலாம்.

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பாலங்கள், சப் ஸ்டேஷன்கள் என ஒவ்வொன்றாக வருகிறது. காலத்தில் உறைந்துபோன ஈராக்கிய நகரங்கள் ஓரளவு நிமிரும்போது பக்கத்து நாடுகளும், குர்திஸ்தானும் எங்கேயோ சென்றிருப்பார்கள்.

தினமும் பிச்சையெடுக்கும் ஈராக்கிய பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் வயிற்றெரிச்சலாய் இருக்கும். குடும்பத்தலைவன் சரியில்லாத குடும்ப பெண்களின், குழந்தைகளின் நிலைதான் அவர்களுக்கும்.

No comments: