Monday, December 28, 2015

நேபாளம் - நரகத்தில் வாழும் மக்கள்.

20.09.2015 - இடைக்கால அரசியலமைப்புச்சட்டத்தை நீக்கி புதிய அரசியலமைப்புச்சட்டத்தை அமல்படுத்திய நாள். எல்லோரும் மகிழ்வுடன் கொண்டாடவேண்டிய நேரத்தில் நேபாளத்தில் காலம்காலமாய் வாழ்ந்துவரும் மாதேசிகள் என்ற இந்திய வம்சாவழியை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஏற்கனவே பூகம்பத்தால் பல ஆயிரம் உயிர்களை பலிகொடுத்து, பல்லாயிரம்கோடி மதிப்புள்ள சொத்துக்களை இழந்து நிமிர முயற்சி செய்யும் நேரத்தில் மாதேசிகளின் கோரிக்கையான அரசியலமைப்பில் திருத்தம் வேண்டிய போராட்டம் விஸ்வரூபமெடுத்தது.
2015, செப்டம்பர் 23ம் தேதி ஆரம்பித்த இந்த போராட்டத்தால் நேபாள நாடே முழுதும் பாதிக்கப்பட்டது. நிலத்தால் சூழப்பட்ட நேபாள நாட்டின் 90 சதவிகித தேவைகளை இந்தியாவே தீர்க்கிறது. போராட்டக்காரர்களின் இலக்கு இந்தியாவிலிருந்துவரும் பொருட்களை நேபாளத்திற்குள் வரவிடாமல் செய்வதே. அதில் வெற்றியும் கண்டதால் நேபாளமே ஸ்தம்பித்தது. மிக மோசமாக அடிவாங்கியது நேபாள தொழில் துறையும், போக்குவரத்துமே. தொழில்களுக்கு தேவையான கச்சாப்பொருள் கிடைக்காததால் நேபாள தொழில்துறை காலவரையின்றி மூடப்பட்டன. எரிபொருள் எதுவும் கிடைக்காததால் வாகனங்கள் ஓடவில்லை, இருக்கும் எரிபொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்தது. வீடுகளில் மண்ணென்ணெய், கேஸ் என ஏதுமின்றி மக்கள் மீண்டும் பழைய முறையான விறகு அடுப்புகளில் சமைக்க வேண்டியிருக்கிறது.
இதன் பாதிப்பு நேபாளத்தின் வருவாயின் உயிர்நாடியான சுற்றுலாத்துறையிலும் எதிரொலிக்கிறது. ஆசிய வங்கியின் கணக்குப்படி இந்த ஆண்டு இருக்க வேண்டிய வளர்ச்சி விகிதமான 4.5 சதவீதம் இந்த போராட்டத்தினால் 1% வளர்ச்சி அடைவதே கடினம் என சொல்லி இருக்கிறது.
யார் இந்த மாதேசிகள்? அவர்களுக்கு என்ன வேண்டும்?
நேபாளத்தின் டெராய் பகுதியைச் சேர்ந்த மக்கள். பெரும்பாலும் இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். நேபாள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர்.
அவர்களின் கோரிக்கைகள் என்ன?
01. மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் எங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் அதிக பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்.
02. மாநிலங்கள் பிரித்த வகையில் வேண்டுமென்றே எங்கள் மக்கள் வாழும் பகுதிகளை கூறுபோட்டு எங்களுக்கான பிரதிந்தித்துவம் கிடைக்காமல் செய்ததை திரும்பப்பெற்று மீண்டும் மாதேசிகள் வாழும் பகுதிகளை ஒன்றாக்க வேண்டும்.
மாதேசிகளை பொருத்தவரை புதிய அரசியலமைப்புச் சட்டம் மாதேசிகளின் கோரிக்கைகள், கருத்துகள் எதையும் கேளாமல் வலுக்கட்டாயமாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது என்பதே. அவர்களின் போராட்டம் உரிமைப்போராட்டம் என்கின்றனர்.
தற்போது இந்த உள்நாட்டுச் சண்டையில் அரசுக்கும், மாதேசிக்கும் நடுவில் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்திருப்பவர் நேபாள மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரச்சாந்தா. இவர் எப்போதுமே இந்திய எதிர்ப்பாளர். இவரால் பிரச்சினை அதிகரிக்கலாமே தவிர குறைய வாய்ப்பில்லை. போராட்டக்காரர்களுக்கும், அரசுக்கும் நடுவே பாலமாய் இருக்க விரும்புகிறேன் எனச் சொல்லி இந்த தரகு வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்திய அரசின் நிலைப்பாடு
இந்திய அரசாங்கத்தைப்பொருத்தவரை எந்தவித பொருளாதார தடையையும் விதிக்கவில்லை. நேபாளத்தில் நடக்கும் உள்நாட்டுக்கலவரத்தால் வாகனங்களில் பொருளைக்கொண்டு செல்வோர் அச்சப்படுவதால் நேபாளத்திற்குள் பொருட்கள் வரவில்லை. இந்த தடைகளுக்கும், இந்திய அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என நிலையை தெளிவாக்கியுள்ளது. ஆனால், இது உண்மையா என்றால், பாதி உண்மை, பாதி உண்மை இல்லை.
நேபாளத்தின் மொத்த மக்கள் தொகை 2.8 கோடி மட்டுமே. ஒப்பீட்டுக்கு சொன்னால் சென்னையும் அதைச்சுற்றியுள்ள 8 மாவட்டங்களை சேர்த்தால் இருக்கும் மக்கள் தொகையே நேபாள நாட்டின் மக்கள் தொகை. இந்தியா நினைத்திருந்தால் உதவ வழி கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், கலவரத்தில் வழிபிறக்கட்டும் என விட்டுவிட்டனர். ஏனெனில், போராட்டக்காரர்கள் இந்திய வம்சாவழியினர் என்பதால்.
நேபாளத்தின் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடியைக்குறித்து நேபாள மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பும், இந்தியா என்ற பெரியண்ணன் நமக்கு நிறைய உதவுவார் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால், தற்போதைய அறிவிக்கப்படாத பொருளாதார தடையினால் இந்தியா மீதும், இந்திய மத்திய அரசாங்கத்தின் மீதும் பெரும் எரிச்சலையும், இந்திய விரோத மனப்பான்மையையும் கொண்டுவந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
இருதினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன ஒரு ஹேஷ் டாக் ‪#‎BackofIndia‬ ‪#‎IndaSTOPbullyingNepal‬ என்பன.
கிட்டத்தட்ட மூன்றுமாதத்திற்கும் மேலான இந்த போராட்டத்தால் அரசியல் சாசனத்தில் சில திருத்தங்களை ஏற்படுத்த ஒத்துக்கொண்டுள்ளது நேபாள பாராளுமன்றம். ஆனால், நேபாள பாராளுமன்றம் செய்வதாக சொல்லி இருக்கும் திருத்தங்கள் தங்களுக்கு திருப்தி கிடையாது எனச் சொல்லி இருக்கிறார்கள் மாதேசிகள்.
இதற்கு நடுவே நிலைமையை சமாளிக்க நேபாளம் சீனாவுடன் சில நீண்டகால ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது, குறிப்பாக தடையற்ற எரிபொருள் சப்ளையும் அதில் அடங்கும். சீனாவுடன் நேபாளம் பகிரும் எல்லைகளில் மேலும் பல எல்லைச்சாவடிகளை அமைத்தும், பழைய எல்லைச்சாவடிகளை புதிப்பிக்கவும் இருநாடுகளும் திட்டமிட்டுள்ளன. நேபாளம் இந்தியாவுடன் உறவு நன்றாக இருக்கும் காலத்திலேயே நேபாளத்தை சீனாவுடன் இணைக்கும் சாலையை இந்திய எதிர்ப்பையும் மீறி செயல்படுத்தியது. அதனால், இதை இந்தியாவுக்கான பின்னடைவு எனக்கொள்ளாமல், தற்காலிக கோபமாக கொள்ளலாம். ஏனெனில், கூப்பிடு தூரத்தில் இருப்பது இந்தியா மட்டுமே. நம்முடனே நேபாளிகள் கொண்டும், கொடுத்தும் வாங்கியும் இருந்திருக்கிறார்கள், நமது மதம், கலாச்சாரம் எல்லாம் பிண்ணிப்பிணைந்தது.
நேபாள பத்திரிக்கைகளின் தலையங்கங்களும் இந்தியா மீது நேபாளிகள் வைத்திருக்கும் நன்மதிப்பை இழந்துகொண்டிருக்கிறது. நேபாளத்தின் சுயமரியாதையை அளவுக்கு மீறி சீண்டினால் இந்திய வெறுப்பு எல்லை மீறும் எனவும் எச்சரிக்கும் வேளையில் ஆளும் அரசாங்கத்திற்கும் பிரச்சினைக்கு சுமூக தீர்வு விரைவில் கண்டு பிரச்சினையை தீர்க்கும்படியும் அறிவுறுத்துகிறது.
எழுதப்படிக்கத்தெரிந்த நேபாளிகள் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் இந்தியாவுக்கு எதிராக எழுதிக்கொண்டுள்ளனர். அவர்களின் வார்த்தைகளில் தெரிவதெல்லாம் இயலாமையும், கோபமுமே. உங்களையே நாங்கள் சார்ந்து இருப்பதால்தான் இப்படி கேவலப்படுத்துகிறீர்கள், அத்யாவசியப்பொருட்கள்கூட கிடைக்காத அளவு எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறீர்கள் எனக்கேள்வி எழுப்புகின்றனர்.
இதில், எரியும்வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற எண்ணத்தில் மணிசங்கர் அய்யர் போன்றோர் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வேலையை திறம்பட செய்கின்றனர். மாதேசிகள் பிரச்சினையைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாமல், நேபாளத்தில் இருக்கும் அறிவிக்கப்படாத பொருளாதாரதடை நரேந்திர மோடி உண்டாக்கியது என என்.டி.டிவியில் கட்டுரை எழுதுகிறார்.
மாதேசிகள் பிரச்சினை, கலவரம், மேலும் இந்திய வாகன ஓட்டுநர்கள் நேபாளத்திற்குள் செல்ல பயப்படுகிறார்கள் என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தனது தேவைகளுக்கு இந்தியாவையே நம்பியிருக்கும் ஒருநாட்டை இப்படி கையை முறுக்குவது சரியல்ல என்பதே எனது எண்ணம்.

No comments: