
மணிரத்னத்தின் இன்னுமொரு மெகா முயற்சி. ராமாயணமும், மஹாபாரதமும் இன்னும் எத்தனையோ படங்களுக்கு கதை தரும் போல.. மீண்டும் ஒரு ராமாயணக் கதை கொஞ்சம் மாடர்னாக பர்னச்சாலையில் இருந்து ஆரம்பித்து ராவணன் இறப்பதுவரையாக தொடர்கிறது.
அண்ணன் விக்ரம்தான் ராவணன். ஐஷ்வர்யாதான் சீதா, கார்த்திக்தான் கிட்டத்தட்ட அனுமார், விக்ரமின் தம்பியாக வருபவர்தான் விபீஷணன்.
ராவணனால் கடத்தப்பட்ட தனது மனைவியை மீட்டு வரும் ராமர்தான் பிரித்விராஜ்.
இப்படியும் புரிந்து கொள்ளலாம்..
அல்லது
தமிழ்த் தேசியவாதியாக இறப்பதற்கு முன்னும், இன்னும் ஆக்கப்பட்ட வீரப்பர் கதையைப் போலவும் இதைப் புரிந்துகொள்ளலாம். போலிஸ் அராஜகங்களில் இருந்து மலைவாழ் மக்களை காக்கும் காவலாளியாக விக்ரமையும், முத்துலட்சுமியாக ரஞ்சிதாவையும், அவனது அடிப்பொடிகளாக பிரபு வகையறாக்களையும், சேர்க்கலாம்.
அல்லது
தங்கையைக் (பிரியாமணி) கொன்ற போலீஸ்காரர்களை பழிவாங்கும் அண்ணனின் கதையாகவும் கொள்ளலாம்.
படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிக அழகான காடுகளிலும், அருவிகளிலும் அலைந்து திரிந்து வருகிறோம், நாம். நல்ல தியேட்டரில் பார்க்கக் கொடுத்துவைத்திருந்தால் அருவியின் சாரல் நம்மீது அடிப்பதைக் கூட உணரலாம்.
துல்லியமான ஒளிப்பதிவு, சந்தோஷ் சிவனும் அவரது உதவியாளர் ஒருவரும் கலக்கியிருக்கிறார்கள். நிச்சயம் எல்லோருக்கும் படத்தில் பிடித்த மிக நல்ல அம்சமாய் ஒளிப்பதிவு இருக்கும்.
இசை - ஏ.ஆர்.ரஹ்மான், ஓரிரு பாடல்கள்தவிர மற்றதெல்லாம் சுமார் ரகம். பிண்ணனி இசை, ஓவர் சத்தம்.
சுகாசினியின் வசனங்கள் சுமார் ரகம். சந்தன வீரப்பனின் கிறுக்குத்தனமான உடல் மொழிகளுக்கேற்ற சில ஒலிகளை விக்ரம் அடிக்கடி விட்டுக்கொண்டே இருக்கிறார். ஓரளவுக்குமேல் எரிச்சல் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
ஐஷ்வர்யா பச்சன்.படத்தின் மிகப்பெரிய பலம் இவரே. மிக மிக அழகாய் இருக்கிறார். எளிமையான உடையில், கண்ணை உறுத்தாத கவர்ச்சி காட்டுகிறார்.
அழகாய் இருப்பதாலோ என்னவோ, அவரது முகபாவனைகளும், அவரது உடல்மொழிகளும் மிக நன்றாய் இருக்கிறது.
விக்ரம்.
இந்த பாத்திரத்திற்கேற்ற உடல் முறுக்கும், வேஷங்களுமாக சூப்பராய் இருக்கிறார். ஐஷ்வர்யாவுடனான சொல்லாமலே காதல் காட்சிகளில் உடல்மொழிகளிலும், சிரிப்புகளுமாக கலக்குகிறார். படத்தின் இன்னொரு முக்கிய பலம் இவரே.
பிரித்விராஜ்.
மிக நல்ல நடிகர். இந்ந்தப்படத்தில் போலிஸ் அதிகாரியாக வந்து கடத்திச்செல்லப்பட்ட மனைவியை மீட்பது மட்டுமே இவரது வேலை. இவரது திரைவாழ்க்கையில் ஐஷ்வர்யாவின் ஜோடி என்பது மிக முக்கியமானதொரு விஷயமாய் இருக்கும்.
விக்ரமும், ப்ரித்விராஜும் தொங்கு பாலத்தில்போடும் சண்டை மிகப்பெரிய பிளஸ்பாயிண்ட். இருவருமே கலக்கியிருப்பார்கள்.
ரஞ்சிதா.
நித்தி கேசுக்குப் பின்னர் வெளியாகும் ரஞ்சிதா நடித்த படம் இது. ஐஷ்வர்யாவைவிட மிக அதிக கைதட்டல் கிடைப்பது இவருக்குத்தான். இவர் திரையில் தோன்றும் முதல் காட்சி முதல் எப்போதெல்லாம் திரையில் தோன்றுகிறாரோ அப்போதெல்லாம் கைதட்டல் காதைப் பிளக்கிறது. அருகிலிருந்த மலையாளி கூட்டம், எதுக்குடா இந்த சப்பை பிகருக்கு இந்தக் கைதட்டல் என நினைத்திருக்கும். படத்தில் ஏன் இவர் இருக்கிறார் எனத்தெரியவில்லை. இவர் இருக்கும் பகுதிகளை வெட்டியிருந்தால்கூட படத்தில் ஒரு வித்தியாசமும் இருந்திருக்காது. படத்தில் திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். நித்தி கேசினால் மட்டுமா இல்லை, மணிரத்னமே போதும் என நினைத்ததாலா எனத் தெரியவில்லை.
பிரியாமணி
படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் கதையில் வரும் இவர் இருக்கும் சில நிமிடங்களில் நன்றாய்ச் செய்திருக்கிறார். போலிஸ் ஸ்டேஷனில் நடந்ததை விவரிப்பதும், அதன் பின்னர் கிணத்தில் விழுந்து இறப்பதுடன் அவரது பகுதி முடிந்து விடுகிறது. இதற்குத்தான் அண்ணன் விக்ரம் பழிவாங்கப் புறப்படுகிறார்.
கார்த்திக்
சிறிய வேடம் என்றாலும் கிட்டத்தட்ட படம் முழுக்க வருகிறார். புரியும்படி வசனம் பேசிய அவரது மிகச்சில படங்களில் இதுவும் ஒன்றாய் இருக்கும்.
மணி ரத்னத்தின் திரைக்கதை, இயக்கம், அவருக்கு அவர் நினைத்ததுபோல வந்திருக்கும் போல. ஆனால் நமக்குத்தான் ஒரு சராசரி தமிழ் படத்தை விட ஒரு படி மேலான படம் பார்த்த நிறைவு அவ்வளவே. குத்துப்பாட்டுகள், அனாவசிய சண்டைகள் ஏதுமின்றி ஒரு படம் காணக்கிடைப்பதே அரிதாய் இருக்கும் நேரத்தில் நிச்சயம் இது ஒரு இலுப்பைப் பூ சர்க்கரைதான்.
உயிரே படத்தில் எல்லையோரக் காவல்படையை வில்லனாக்கியிருந்தார். இந்தப் படத்தில் தமிழகக்காவல் துறையை வில்லனாய்க் காட்டியிருக்கிறார், மணிரத்னம்.






.jpg)












