Wednesday, June 9, 2010

ராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்


ஒரு கொலை வழக்கை நாவல் போல விவரிக்க முடியுமா? முடியும் என காட்டியிருக்கிறார் ரஹோத்தமன்.

இந்த புத்தகத்தைப் படிக்கையில், நமது நாட்டில் ஆள் பலமும், அதிகார பலமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து விட முடியும் என்பதையும், நமது தலைவர்களின் பாதுகாப்பு ஏற்படுகளைப்பற்றி அறிய நேர்கையில் பொதுஜனமாகிய நாமெல்லாம் பிழைத்திருப்பது கடவுள் புண்ணியத்தால் என்பதும் தெரிய வருகிறது.

புத்தகம் முழுக்க கேஸ் நம்பரும், இடங்களுமாக எழுதி அறுத்துத் தள்ளாமல், தோளில் கைபோட்டு “என்ன நடந்துச்சி தெரியுமா” எனப்பேசும் ஒரு நண்பனைப் போல இருக்கிறது இப்புத்தகம்.

இன்றைய இலங்கை நிலவரத்தைக் காண்கையில், இதற்காகவா இவ்வளவும் செய்தார்கள் என்பதை குறைந்தபட்சம் மனதளவிலாவது கேட்காமல் இருக்கமாட்டார்கள் தமிழ்பேசுவோர். தமிழர்களுக்காக, அவர்தம் உரிமைகளுக்காக போராடுவதாகச் சொன்ன இயக்கம், அதற்குத் தடையாக இருப்பவர்கள் என அவர்கள் நினைத்தவர்களையெல்லாம் ஒழித்தார்கள். அவர்கள் நினைத்ததுபோல நடக்காத ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பழிவாங்க தீர்மானித்ததில் முக்கிய குறி நமது முன்னாள் பாரதப் பிரமர் ராஜீவ் காந்தி. ஆனால் அதைக்கூட உணரமுடியாத அளவு நமது உளவுப்படைப்பிரிவினர் சாதாரன அரசு குமாஸ்தாவின் மனநிலையில் செயல்பட்டதால் நமது முன்னாள் பிரதமரை இழந்தோம் என்பதைத் தெளிவாய்ச் சொல்கிறது புத்தகம்.

விடுதலைப்புலிகள் எப்படி தங்கள் இயக்கத்துக்கான ஆதரவாளர்களை உருவாக்குகிறார்கள், தனது வாழ்க்கையையே அர்பனிக்க வைக்கிறார்கள்? எப்படி தங்களது திட்டங்களுக்கு தேவையெனில் சாகவும் தயங்காத ஆட்களைச் சேர்க்கிறர்கள், மூளைச்சலவை எப்படியெல்லாம் செய்யப்படுகிறது என்பதெல்லாம் அப்படியே போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். அவர்கள் ராஜீவைக் கொலைசெய்தல் என்ற திட்டத்தைச் செயல்படுத்த எப்படி இயங்கினார்கள் என்பதை படிக்கையில், நமது உளவுத்துறையினர் போகவேண்டிய தூரத்தை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.

விடுதலைப் புலிகள்தான் இந்தக் கொலையைச் செய்திருப்பார்கள் என இந்திய உளவுத்துறையில் இருக்கும் ஒருவருக்குமே சந்தேகம் வராதபடிக்குத்தான் விடுதலைப்புலிகள் இயக்கம் இயங்கியிருக்கிறது. விடுதலைப்புலிகளும் நாங்கள் இதைச் செய்யவில்லை, செய்தவர்களை முடிந்தால் கண்டுபிடியுங்கள் என சவால் விடும் நிலையில்தான் நமது உளவுப்பிரிவுகள் இயங்கிக்கொண்டிருந்தன. விடுதலைப்புலிகளின் கர்னல்கிட்டு சொல்வதை வைத்து தமது கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார் நமது உளவுப்பிரிவுத் தலைவர் என்ற அதிர்ச்சித் தகவலைக் கேட்டபின் மற்ற தகவல்கள் எதுவுமே நமக்கு அவ்வளவு அதிர்ச்சியைத்தருவதில்லை.

இன்றைக்கு பூனைப்படை, எலிப்படை என எல்லா வகையான படைகளையும் வைத்துக்கொண்டு சுற்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், மக்களின் தலைவனாய், எளிமையாய், இந்தியாவை வல்லரசாக்கும் கனவில் இருந்தவரை உடலைச் சிதறடித்துக் கொன்றுவிட்டார்கள். எல்லோரும் எளிதில் அனுகும் விதத்தில் அவர் இருந்ததும், பாதுகாப்பு வளையத்தைத் தாண்டிச்செல்வதை அவர் விரும்பியதுமே எதிரிகளுக்கு வசதியாகவும், அவருக்கு எமனாகவும் அமைந்துவிட்டது.

விசாரனையை எங்கிருந்து ஆரம்பிப்பது என தெரியாமல் இருந்த விசாரனை அதிகாரிகளுக்கு உளர ஆரம்பிக்கும் போட்டோகிராபர் மூலமாய் முதல்துப்பு கிடைக்கிறது. பிறகு நளினி - முருகன் காதல், வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. எப்படி திட்டமிட்டார்கள் என்பதையும், எப்படி செயல்படுத்தினார்கள் என்பதையும் கொலையாளிகளின் வாக்குமூலத்தையே நமக்கு எழுதிக்காட்டியிருக்கிறார் ரகோத்தமன்.

ஆழமாய்ப் படிக்க ஒன்றுமே இல்லைபோலத் தோன்றினாலும், தமிழகத்தில் இருந்த மற்றும் இன்றிருக்கும் பல பெரிய தலைகளுக்கு தெரிந்தேதான் இந்தப் படுகொலை நடந்திருக்க முடியும் என்பதை ரகோத்தமன் நம்புகிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாய், அவர் விசாரிக்க விரும்பிய தலைவர்களான வை.கோ, கருணாநிதி, மரகதம் சந்திரசேகர் எனப் பலரை விசாரிக்க விடாமல் மூத்த அதிகாரி கார்த்திகேயன் நடந்துகொண்டதை சுட்டிக்காட்டுகிறார். ஒருவகையில் பார்த்தால் புத்தகத்தில் பல இடங்களில் நேரடியாகவே கார்த்திகேயன் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டே இருக்கிறார். சரியாக விசாரிக்க அனுமதித்திருந்தால் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்க முடியும் என்பதுதான் அவரது வருத்தமெல்லாம்.

மொத்தத்தில் நமது ஆட்சியாளர்களின் ஊழல்களை மட்டுமே பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன நமக்கு அவர்களுக்கு இருக்கும் இன்னொரு முகத்தையும் நமக்கு காட்டுகிறார் ரகோத்தமன். அவர்கள் நிஜமாகவே கையும், களவுமாய் பிடிபட்டால் நொட்டைநியாயம் செய்வதற்கு என்ன காரணங்கள் வேண்டுமானலும் சொல்லலாம். ஆனால் அப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் தொடர முடிந்ததும், மீண்டும் ஆட்சியில் அமர்வதும் நாம் நமக்காக பொதுவாழ்க்கையில் ஈடுபட இருப்பவர்களில் எவ்வளவு தரமானவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதற்கு ஒரு சாம்பிள்.

இந்தியாவில், குறிப்பாய் தமிழகத்தில் ஆளும் கட்சியின் ஆதரவிருந்தால் நீங்கள் உலகமகா கொலைகாரனாய் இருந்தாலும் உங்களை போலிஸ் பிடிக்காமல் போலிஸே பார்த்துக்கொள்ளும். ஆளும் கட்சிக்கு எதிராய் இருந்தால் உங்கள் வீட்டில் உங்களுக்குத் தெரியாமலேயே கஞ்சாபொட்டலம் இருக்கும். உங்களை கைது செய்து அழைத்துச் செல்வார்கள்.

பத்மநாபாவைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவர்களை கைது செய்ய வேண்டாம் என ஒரு வாய்மொழி உத்தரவு வந்ததாக ரகோத்தமன் குறிப்பிடுகிறார். அப்படியெனில் வாய்மொழியாக உத்தரவிடும் பொறுப்பில் இருப்பவருக்கு யார் கொல்லப்படப் போகிறார் என்பதும், யார் கொல்லப்போகிறார் என்பதும், தெரிகிறது. அவரை தப்ப விட உத்தரவிட்டதன் மூலம் ஏதேனும் ஒரு ஆதாயமோ அல்லது தனக்கு ஆபத்து வராமலோ பார்த்துக்கொள்ள முடிகிறது. நமது நாட்டில் மட்டுமே இப்படியெல்லாம் நடக்க சாத்தியங்கள் உண்டு. அப்படி யார்வாய்மொழி உத்தரவிட்டார்கள் என்பதை இன்று வரை பொதுமக்களுக்கு தெரியாமல் மறைத்துவிட முடிகிறது. இந்த வழக்கின் உயரதிகாரியான ரகோத்தமன் அவர்களுக்கே தெரியாமல் மறைத்துவிட முடிகிறது.

நாட்டின் பாதுகாப்பில் ராணுவத்திற்கு எத்தனை பங்கு இருக்கிறதோ அதே அளவு அல்லது அதைவிட மேலேயே உளவு நிறுவனங்களுக்குப் பங்கிருக்கிறது. ஆனால் அதிலும் திறமையின்மை, ஊழல், சுயநலம் எல்லாம் புரையோடிய மனிதர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் நமது நாட்டை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.
ராஜீவ் கொல்லப்பட காரணமான அலட்சியத்துடன் நடந்துகொண்ட அதிகாரிகள் குறித்த விசாரனைகூட முறையாய் நடைபெறவில்லை என்று ரகோத்தமன் பதிவு செய்கிறார். அதற்கான கேஸ் டயரிகூட இல்லை என எழுதுகிறார்.

எங்கெங்கு காணினும் ஊழலடா என்பதைப் போல இன்றும் அங்கிங்கெனாதபடிக்கு ஊழல் புரையோடிப்போயிருப்பதை ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியில் காணமுடிகிறது. மத்திய அமைச்சர் பதவி யார்யாருக்கு என்பதை ஒரு தரகுப் பெண்மனி முடிவு செய்கிறார். மந்திரியாக வரப்போகும் நபரிடம் பேரம் பேசுகிறார். இன்று ஊழல் என்ற ஒன்று இல்லாத ஏதேனும் ஒரு அமைச்சகம் இருக்குமா என்றால் இல்லை என்பதே பதிலாய் இருக்கும்.
நம் நாட்டு ராணுவ ரகசியங்களையும், ராஜாங்க ரகசியங்களையும் எதிரி நாட்டினருக்கு பனத்திற்காகவோ, அல்லது காதலுக்காகவோ விற்கும் கும்பல்தான் நமது ராஜாங்க அதிகாரிகள்.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை ஏன் இத்தனைகாலம் காலம் தாழ்த்திச் சொல்லவேண்டியிருந்தது என்பதற்கு ரகோத்தமன், வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த தேடப்படும் குற்றவாளியான பிரபாகரன் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதும், இந்த வழக்கு முடிந்துபோனதாக அறிவிக்கப்பட்டிருப்பதாலும்தான் என்றிருக்கிறார்.


இந்தப் புத்தகத்தில் பல கருப்பு நகைச்சுவையும் உண்டு.

சீக்கிய தீவிரவாதிகளால் இந்திராவிற்கு ஆபத்து என உளவுப்பிரிவு எச்சரிக்க, இந்திராகாந்தியின் பாதுக்காப்புப் பணியில் இருந்த அனைத்து சீக்கியர்களும் விடுவிக்கப்பட்டு வேறு ஆட்கள் அமர்த்தப்படுகிறார்கள். இப்படிச் செய்ததன்மூலம் சீக்கியர்களை அவமதித்து விட்டீர்கள் என குரல் எழுந்தவுடன் எல்லா சீக்கியரும் மீண்டும் இந்திராகாந்தியின் பாதுகாப்புப் பணியில். சில மாதங்களில் அன்னை இந்திரா சீக்கியர்களால் சுடப்பட்டு இறக்கிறார்.


மந்திரியாய் இருக்கும் சுப்ரமணியசாமி விடுதலைப்புலிகள்தான் இந்தக் கொலையைச் செய்திருப்பார்கள் என அடித்துச் சொல்ல, உளவுப்பிரிவுத்தலைவர் சொல்கிறார், நான் விடுதலைப் புலிகள் கூட்டத்தில் நமது உளவாளியை வைத்திருக்கிறேன், நிச்சயமாய் இந்தக் கொலையை விடுதலைப்புலிகள் செய்யவில்லை என்கிறார். அவர் சொல்லும் உளவாளி கர்னல் கிட்டு.
மொத்தத்தில் ஒரு துப்பறியும் நாவலைப் படித்துமுடித்த திருப்தியும், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய சோர்வும் ஒருசேர எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சென்னையில் விமானத்தில் ஏறும்போது படிக்க ஆரம்பித்து 4 மணிநேரத்திற்குள் படித்து முடித்துவிட்டேன். அவ்வளவு எளிமையான, சுவாரசியமான மற்றும் விறுவிறுப்பான எழுத்து நடை.

வாய்ப்புக்கிடைத்தால் அவசியம் படியுங்கள்.

ராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்

ஆசிரியர் : கே.ரகோத்தமன்

விலை : ரூ.100

கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.


நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்

9 comments:

கத்தார் சீனு said...

மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்.
ரொம்ப நாளா, நானும் இந்த புத்தகத்தை பத்தி ஒரு பதிவு எழுதி கொண்டு தான் இருக்கிறேன்.
இன்னும் முடித்த பாடில்லை. புத்தகம் உண்மையாகவே பல முடிச்சுகளை அவிழ்த்து உள்ளது.

பத்மகிஷோர் said...

தலைப்பைப்பார்த்ததும் 'என்ன ராஜீவ் காந்தி செத்துட்டாரா!!!' என்றுதான் பின்னூட்ட எண்ணினேன். பதிவை படித்ததும் என் 'காமெடி சென்சை' நானே கடிந்துகொண்டேன் . நூல் விமரிசனம் நன்றாக எழுதியுள்ளீர்கள் . வாழ்த்துக்கள்.

பத்மகிஷோர் said...

தலைப்பைப்பார்த்ததும் 'என்ன ராஜீவ் காந்தி செத்துட்டாரா!!!' என்றுதான் பின்னூட்ட எண்ணினேன். பதிவை படித்ததும் என் 'காமெடி சென்சை' நானே கடிந்துகொண்டேன் . நூல் விமரிசனம் நன்றாக எழுதியுள்ளீர்கள் . வாழ்த்துக்கள்.

parottacricket said...

தல
அருமையான விமர்சனம்
அதுவும் போலீஸ் புடிக்காம போலீசே பார்த்துக்கும் ன்ற வரி நூறு சதவீதம் உண்மை.
இந்த நேர்மை கடமை நியாயம் எல்லாம் போய் வெறும் சுயநலம் மட்டும் தான் இருக்கு ஆனா எல்லா சுயநலமிகளும் சேர்ந்து பலி கொடுக்கறது கொஞ்சம் அடுத்தவங்கள பத்தி யோசிக்கிரவங்களையும் மிச்சம் இருக்குற நல்ல விஷயங்களையும் தான்...
மூர்த்தி
லா ரோஸ்

parottacricket said...

தல
அருமையான விமர்சனம்
அதுவும் போலீஸ் புடிக்காம போலீசே பார்த்துக்கும் ன்ற வரி நூறு சதவீதம் உண்மை.
இந்த நேர்மை கடமை நியாயம் எல்லாம் போய் வெறும் சுயநலம் மட்டும் தான் இருக்கு ஆனா எல்லா சுயநலமிகளும் சேர்ந்து பலி கொடுக்கறது கொஞ்சம் அடுத்தவங்கள பத்தி யோசிக்கிரவங்களையும் மிச்சம் இருக்குற நல்ல விஷயங்களையும் தான்...
மூர்த்தி
லா ரோஸ்

parottacricket said...

தல
அருமையான விமர்சனம்
அதுவும் போலீஸ் புடிக்காம போலீசே பார்த்துக்கும் ன்ற வரி நூறு சதவீதம் உண்மை.
இந்த நேர்மை கடமை நியாயம் எல்லாம் போய் வெறும் சுயநலம் மட்டும் தான் இருக்கு ஆனா எல்லா சுயநலமிகளும் சேர்ந்து பலி கொடுக்கறது கொஞ்சம் அடுத்தவங்கள பத்தி யோசிக்கிரவங்களையும் மிச்சம் இருக்குற நல்ல விஷயங்களையும் தான்...
மூர்த்தி
லா ரோஸ்

satheshpandian said...

ராஜீவ் கொலை வழக்கில் சிவராசன், தாணு, சுபா தவிர மற்றவர்கள் மீதான குற்றங்கள் இவரின் சொந்த கற்பனையில் உருவானதே தவிர வேறு ஒன்றும் இல்லை.

swaminathan said...

kilakku pathipakam books are very interesting.

swaminathan said...

kilakku pathipakam books are very interesting.