Thursday, June 17, 2010

நான் பத்தாப்புப் படிச்சதை இன்னிக்குப் படிப்பவர்களுடன் ஒப்பிட்டு திரும்பிப் பார்க்கிறேன்

இன்றைக்கு தினமலரில் ஒரு செய்தி

4.கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி ராமநாதபுரம் கல்வி அதிகாரி விசாரணை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பள்ளி கழிப்பறையில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பெண் குழந்தை பெற்றது குறித்து விசாரணை நடத்த, மாவட்ட கல்வி துறை அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சுரிதா (மாணவி நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி கழிப்பறையில் யாருடைய உதவியுமின்றி தானாக குழந்தை பெற்று, கழிப்பறையில் போட்டுவிட்டு சென்றார். குழந்தையின் அழுகுரல் கேட்டு மற்ற மாணவிகள் கூறியதை தொடர்ந்து , கழிப்பறையில் உயிருக்கு போராடிய பச்சிளம் பெண் குழந்தையை ஆசிரியர்கள் மீட்டனர். பள்ளி நிர்வாகத்தினர் கல்வி துறை அதிகாரிக்கே தெரியாமல் ,மாணவியின் பெற்றோரிடம் மாணவி மற்றும் பச்சிளம் குழந்தையை ஒப்படைத்து, மாணவியின் பள்ளி டி.சி.,யையும் வழங்கினர். தகவல் வெளியே தெரிந்ததை தொடர்ந்து ,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலசுப்பிரமணியம் உத்தரவின்படி, பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட கல்வி அதிகாரி ஹெப்சிபா பியூலா ஜெயராணியை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளனர்.
மாவட்ட கல்வி அதிகாரி கூறியதாவது: தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவிகள் என அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தினேன். சம்பவம் நடந்த தினத்தில்,"" மாணவி உடையில் அதிக ரத்தம் இருந்ததால் ஆசிரியர்கள் மாதவிலக்கு அதிகமாக போயிருக்கலாம்,'' என, கருதி மாணவிக்கு தேவையான நாப்கின் வழங்கி உரிய உதவி செய்துள்ளனர். முதலில் மாணவிக்கு ரத்தபோக்கு அதிகமாகியிருக்கிறது என்றுதான் அனைவரும் நினைத்துள்ளனர். குழந்தை பெற்றிருப்பார் என யாரும் நினைத்துகூட பார்க்கவில்லை . குழந்தையின் அழுகுரல் கேட்டதை தொடர்ந்துதான் ஆசிரியர்களுக்கே தெரியவந்துள்ளது.இதன் விசாரணை அறிக்கை கல்வி துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.
குழந்தையை காப்பாற்றிய ஆசிரியர்கள் : மாணவி பெற்ற பெண் குழந்தை சிவப்பு நிறந்தில் அழகாக இருந்துள்ளது. குழந்தையை பெற்ற மாணவியோ, செய்வதறியாமல் பெற்ற பச்சிளம் குழந்தையை கழிப்பறை ஓட்டையில் திணித்து விட்டு வந்துள்ளார். அழுகுரல் கேட்டு மற்ற மாணவிகள் கூறிய தகவலை தொடர்ந்து, ஓடிவந்த ஆசிரியர்கள் ஆறு பேர் துரிதமாக செயல்பட்டு கழிப்பறையில் உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றி முதலுதவி வழங்கினர். ஆசிரியர்களின் துரிதநடவடிக்கையால் பச்சிளம் குழந்தை காப்பாற்றப்பட்டது. "" மாணவியின் நிலைக்கு யார் காரணம்,'' என, வெளியே சொல்ல மாணவி மறுத்துவருகிறார் என கூறப்படுகிறது. மாணவியை ஏமாற்றியவரை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்


முதலில் இந்தப் பெண்ணைப் பெற்றோருக்கு மகளைப்பற்றி எவ்வளவு அக்கறை இருந்திருக்கும்? இப்படி ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள் என்பதுகூட அறிய முடியாத அளவு..

அடுத்த அதிர்ச்சி, பத்தாம் வகுப்புப் படிக்கும்பெண் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமின்றி கடந்த 10 மாதங்களாக இருந்திருக்க முடிந்திருக்கிறது.

இந்தப் பெண் பெற்றோரிடம் கூறியிருந்தாலாவது இந்த அவமானத்தையாவது தடுத்திருக்கலாமே? எது தடுத்திருக்கும்? பிள்ளையைப் பெற்று தூக்கி எறிந்துவிடலாம் என்ற தைரியமா?

இப்போதெல்லாம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. போட்டியான உலகில் அதிக மதிப்பெண்கள் பெற ஒரு குழு தன்னார்வத்தாலோ அல்லது பெற்றோர்களின் வற்புறுத்தலாலோ ஓடிக்கொண்டிருக்க, இப்படி ஒரு குழு எதிர்காலத்தை தனது வயதிற்குப் பொருந்தாத செயல்கள்மூலம் வாழ்க்கையை வீணடித்துக்கொண்டிருக்கிறது.

ஆசிரியர்களுக்கு தன்னிடம் படிக்கும் குழந்தைகளின் ஜாதகமே தெரிந்திருந்தது நாங்கள் படிக்கும் காலங்களில். இத்தனைக்கும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை எனில் எல்லாப் பிரிவுகளுக்கும் ( அ பிரிவு முதல் ஊ பிரிவு வரை) அவர்தான் கணிதமோ, அறிவியலோ எடுப்பார். அப்படியிருந்தும் அது சாத்தியமானது. ( சுப்பையா மகந்தானடா நீயி? நாளைக்கு உங்கப்பாவக் கூப்டுட்டு வா)

இதுபோன்ற வருத்தம் தரும் நிகழ்வுகளுக்கு பெற்றோர்களின் செல்லம் ஒரு பங்கு எனில் ஊடகங்களின் பங்கு முக்கால் பங்கு. காலைமுதல் மாலைவரை ஓடும் பாடல் நிகழ்ச்சிகளின் கீழே பார்த்திருக்கிறீர்களா? ரம்யா ஐ லவ் யூ - அய்யப்பன், சுப்பு, மீட் மி அட் அவர் ப்ளேஸ் என ஓட விடுவதன்மூலம் டி.ஆர்.பி ரேட்டிங்கோ, காண்போர்களை தக்க வைக்கவோ முயல்கிறது ஊடகங்கள். ஆனால் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய கெடுதலைச் செய்கிறோம் என உணர்வதேயில்லை. உண்மையில் காதலிப்பவர்கள் இப்படி டி.வியில் ஓட விட்டா காதலிப்பார்கள்?. எதையும் செய்துபார்க்கத் துடிக்கும் இளைய தலைமுறையை இப்படியா வீணடிப்பது?

தினமலர் கொஞ்சமவது பொறுப்புனர்ச்சியுடன் நடந்து கொண்டிருக்கிறது. இல்லையெனில் பத்திரிக்கையை விற்பதற்காக அந்த பெண்ணின் புகைப்படத்தைக்கூட போடத்தயங்க மாட்டார்கள் சில வியாபாரிகள்.

சமீபத்தில் பள்ளியை விட்டு வெளியேவந்தபோது கூட மாணவர்களின் தரம் ஓரளவு நன்றாய் இருந்தது ( 1992). இன்றைய நிலையை நினைத்துப்பார்க்கவே அச்சமும், மலைப்புமாய் இருக்கிறது, வயதுக்கு வந்த குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களை நினைக்கையில்.

நன்றி: தினமலர்.

1 comment:

snkm said...

நன்றி! அருமை! பெற்றோர்கள் குழந்தைகளை சரியாக கவனிக்காததன் தன்மை இது! பெற்றோர்களுக்கு விடுக்கப் பட்டுள்ள எச்சரிக்கையும் கூட!