
ஜெயமோகனின் முதல் படைப்பான ரப்பரை வாசிக்கும் அனுபவம் நேற்றுத்தான் கிடைத்தது.. வர்ணனைகளின் மன்னனாகத்தான் இருந்திருக்கிறார் அன்றும், இன்றும்...
அது ஊமைச் செந்நாயாகட்டும், மத்தகமாகட்டும், விஷ்ணுபுரம் ஆகட்டும் தனது வார்த்தைகளாலேயே சூழ்நிலையை கண்முன் கொண்டு வரும் கலையை வரப்பெற்றவர்.
மரவள்ளிகிழகிற்காக ஒரு குழந்தையை அடித்து கொன்றவன் பெருவட்டன் என்ற பட்டம் பெறுவதும் அந்த குடும்பம் மீண்டும் மீள்வதும் ரப்பர் நாவல் என கொள்ளலாம். நாயர்கள் நாடார்களை விலங்குகளைப்போல கொல்ல, நாடார்கள் நாயர்களுக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக வளர்ந்த கதை ரப்பர். கோடீஸ்வரர்களாக இருந்த நாயர்களிடம் கூலி வேலை செய்த நாடார்கள் ரப்பரால் பெருவட்டர்கள் ஆனதும் கொட்டாரங்கள் அமைத்ததும் நாயர்கள் பொருளாதார நிலையில் கீழ்நிலைக்கு போனதும் பற்றிய நாவல் ரப்பர்.
தனது சுயநலத்திற்காக இயற்கையை காவுகொடுத்து வளர்க்கப்பட்ட ரப்பரால் ஒரு இனம் உயர்ந்ததும் இன்னொரு இனம் தனது போலி கௌரவத்தாலும் பழம்பெருமையினாலும் அழிந்த கதை ரப்பர்.
இப்படி எப்படி வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்...

பெருவட்டன் என்பது குடும்பப் பெயர்.. அவர்கள் எப்படி பெருவட்டர்கள் ஆனார்கள்.. அதற்கு முன்பு அவர்களின் நிலை என்ன?? அந்த சூழ்நிலையில் அங்கிருந்த நாடார்களுக்கு நிகழ்ந்ததென்ன?? யார் செய்தது?? அங்கு சமூகத்தில் நடந்த கிறிஸ்தவ மதமாற்றம் குறித்தும் அது அந்த சூழ்நிலையில் எப்படி ஏற்பட்டது என்பதையும் அது எப்படி அவர்களின் வாழ்க்கையில் அந்தஸ்தைக் கூட்டியது என்பதையும், வாழ்ந்து கெட்ட குடும்பங்களைப் பற்றியும் ஏன் அப்படி ஆனார்கள் என்பதையும் அழகாக விவரித்துக்கொண்டே அந்த மாற்றங்களில் ரப்பரின் பங்கு என்ன என்பதையும் அழகாக விவரிக்கிறார்..
பெருவட்டன் குடும்பத்தில் இருக்கும் லிவியும், பிரான்ஸிசும், பெருவட்டத்தியும் (பெருவட்டரின் மனைவி) எதிர் எதிர் துருவங்களாக இருக்க, பெருவட்டன் அரசியல் சதுரங்கத்தில் கானாமல் ஆக்கப்படுகிறார். அவரது வாழ்க்கை தகப்பனார் பெரிய பெருவட்டன் சம்பாத்தியத்தில் ஆரம்பித்து இறுதியில் எல்லாவற்றையும் இழப்பதுடன் முடிவடைந்து விடுகிறது.
கங்காணி என ஒருவர் கதையில் பெரிய பெருவட்டரின் ஆரம்பகால நன்பனாக வருகிறார். அவரும், பெரிய பெருவட்டனும் இணைந்துதான் மலையை விவசாய பூமியாக்கி வளம் பெற்றனர். அவரைப்போலவே கிராமங்களில் இன்றும் எசமானனுகாக உழைக்கும் கங்காணிகளைப் பார்க்க முடியும். அவர்கள் எண்ணமெல்லாம் எப்படி தனது முதலாளிகளுக்கு உழைப்பது என்பதிலேயே இருக்கும். கங்காணி, பெரிய பெருவட்டர் மரணப்படுக்கையில் இருக்க அவரை வந்து சந்திக்கும்போது கங்காணியின் உடல்வலிமை கண்டு, பெருவட்டர் நாணத்தால் அவரை சந்திக்க அஞ்சுவதும், பெருவட்டரின் குடும்பத்தால் அவமரியாதையாக அவரை நடத்தும்போது புதுப்பணக்காரர்களின் வாழ்க்கையும், அதைப்பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் கங்காணியால் தாண்டிச்சென்றுவிட முடிகிறது, அவரது எளிய வாழ்க்கைமுறையினால், முதலாளியின் நிலைகண்டு வருந்துவதும், குழந்தைபோல அழுவதும் மிக இயல்பாய் சொல்லப்படுகிறது.
பணக்காரர் ஆன வழியை இறுதிக்கலத்தில் நினைத்துப்பார்க்கிறார் கிழவர். எதற்கு இவ்வளவு கொள்ளையும், கொலையும் செய்து சம்பாதித்தோம், எதற்காக என்ற எண்ணம் அவரை ஆட்கொள்கிறது. வாழும் காலத்தில் முரடனாகவும், யாருடைய உதவியும் தேவைப்படாத வாழ்க்கையை வாழ்ந்து இருந்த பெரிய பெருவட்டர் இறுதிக்காலத்தில் தனது அடிப்படித் தேவைகளுக்குக் கூட அவரது உதவிக்காக அமர்த்தப்பட்ட குஞ்ஞியின் உதவியில் வாழநேர்வதை நினைத்து சுயபரிதாபம் கொண்டு தனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுமாறு வேண்டுகிறார்.
அவர் உயிரோடு இருப்பதால் வீட்டை விற்கத்தயங்குகிறார் பெருவட்டர். அதனால் பெரிய பெருவட்டர் இறக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். பெற்ற தகப்பன் சாகவேண்டும் என நினைத்த அந்த எண்ணமே அவரைக் கொல்கிறது. ஆனால் வியாபாரத்தில் தப்பிக்க வேறு வழியில்லை. சொத்தை விற்றால்தான் முடியும் என்ற நிலை..இல்லையெனில் மொத்தமாக முழுகுவதுடன் கடனும் இருக்கும்.
பெருவட்டத்திக்கு (பெருவட்டரின் மனைவி) பல தவறான தொடர்புகள்..பெருவட்டருக்கும், பிரான்ஸிசுக்கும் கூடத் தெரியும். பெருவட்டருக்கு அவளது அழகின்மேல் மோகமும், அவள் தன்னை அவமதிப்பதுகூட அவளது உரிமை எனவும் நம்பத்தலைப்படுகிறார்.
பெருவட்டரின் வீட்டில் வேலைசெய்யும், அறைக்கல் குடும்பத்து பெண்ணான தங்கம் பெருவட்டத்தியால் அவ்வப்போது அவமரியாதை செய்யப்பட்டும் லிவியால் அவ்வப்போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டும் அவள் அங்கேயே தொடர்ந்து வேலைசெய்வது அவளது தேவை கருதியே. பெருவட்டருக்கும் அவரை அவமதித்த பழைய எஜமானர்களை மீண்டும் அவமதிக்ககூடிய ஒரு வாய்ப்பாகவே கருதினார். அதை வெளியே சொல்லாவிட்டாலும் மனதில் அதுதான். வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரிடமும் அவளது அறைக்கல் ராஜவம்சத்தைப்பற்றியும், அது வீழ்ந்ததையும் சொல்லி இன்று வேலைக்காரியாய் தனது வீட்டில் இருப்பதை சொல்ல விரும்பாதவர்போல அனைவரிடமும் சொல்லி விடுவார். பலவிதமான குணாதிசயங்களைக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரது வாழ்க்கையையும் ஜெயமோகன் தனது எழுத்துக்களின்மூலமாகவே கண்முன் நிறுத்துகிறார்.
பிரான்ஸிஸ், தாத்தாவின் செல்லப்பேரன். படிக்கும் காலத்தில் முரடணாகவும் படிப்பெதுவும் ஏறாமல் பள்ளிக்குச் செல்லாமலும் இருக்க தாத்தாவால் அரவணைக்கப்பட்டு அவனுக்கு ஒரு பாதுகாவலனாகவே விளங்குகிறார். ’படிக்க வேண்டாமா வேண்டாம், விவசாயம் செய்’ என்ற தாத்தாவின் அறிவுரையும் கேளாமல் தான் தோன்றித் தனமாக சுற்றும் பிரான்ஸிஸுக்கு தங்கத்தின் மீதான அனுதாபமும் அவளை லிவி உபயோகப்படுத்துவது தெரிந்தும் அவன்மீது எரிச்சல்படுகிறான். அவனை மதிப்பதாக இல்லை. இதே பிரான்ஸிஸ் தாத்தா படுக்கையில் கிடக்க யாரும் அவரை மதிக்காமல் இருப்பதை நினைத்து உள்ளம் புழுங்குகின்றான். அவனுக்கு உண்மையில் அந்த வீட்டில் எந்த பிடிப்புமில்லை தாத்தாவைத் தவிர. அவர் இறந்துவிட்டால் உடனே வெளியே சென்றுவிடவேண்டியதுதான் என்ற அளவில்தான் வீட்டின்மீதுள்ள அபிமானம். எல்லாக்கெட்ட பழக்கங்களும் கொண்டவன்.
கங்காணியின் பேரனாக வரும் லாரன்ஸ், தாத்தாவைப் போலவே எளிய வாழ்க்கை வாழ்ந்து தனது நாஞ்சில் பகுதியினுடைய சுற்றுப்புற சூழியல் கெடுதலுக்கு எதிராக தன்னாலான முயற்சிகளைத் தொடருகிறான். அதை மருத்துவர் ராமின் இடத்தில் வைத்து விவரிக்க தாத்தாவின் முடிவும் தொலைப்பேசியில் கிடைக்க லாரன்ஸ்-உடன் அவன் இணைவதாக கூறி முடிகிறது கதை.
’வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்பதைப் போல நாஞ்சில் நிலத்திற்கு சற்றும் பொருந்தாத ரப்பர் மரங்களை அதனால் கிடைக்கும் லாபத்திற்காக ’முதலாளிகள் ‘ பயிரிட வழக்கமான விவசாயம் நொடிய அதை எதிர்த்து களமிறங்குகிறான் லாரன்ஸ். ரப்பரால் கெட்டுப்போன சுற்றுப்புற சூழலையும் ரப்பரால் வளமடைந்த முதலாளிகளையும் அதன் பின்னிருக்கும் அரசியலையும் அழகாக விளக்குகிறார்.
நாவல் முழுக்க நாஞ்சில் நாட்டு வட்டாரவழக்கு மொழி பயன்படுத்தப்பட்டிருந்தாலும் நாவலின் ஓட்டத்தை அது ஏந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.
’நான் கடவுள்’ படத்தில் கடவுளை திட்டிய ஜெயமோகன் இதற்கு முன்னரே தனது முதல் நாவலிலேயே கடவுளை ஃபாதர் வாயிலாக திட்டியிருக்கிறார். அது கடவுளைக் குறித்தான அவமரியாதையோ எள்ளலோ அல்ல. கடவுளின் பிரதிநிதிகள் தனது தன்நிலை இழக்கும்போது அவர்கள் கடவுளை எவ்வளவு மதிக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே. ஜெயமோகனின் இதர நாவல்களைவிட எந்தவிதத்திலும் உயர்ந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் முதல் நாவலிலேயே தனது முத்திரையை பதித்திருக்கிறார் ஜெயமோகன்.
நாவல் கிடைக்குமிடம் : கவிதா பப்ளிகேசன் No. 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை - 17
3 comments:
உங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப்போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்
நல்ல விமர்சனம்
கார்கில் ஜெய், தங்களது வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க..
:-)
Post a Comment