Tuesday, August 4, 2009

அக்ரஹாரத்தில் பூனை - திலீப்குமார் - எனது எண்ணங்கள்


அக்ரஹாரத்தில் பூனை - திலீப்குமார் - எனது எண்ணங்கள்.

சமீபத்தில் சொல்வனத்தில் படித்த திலீப்குமார் எழுதிய அக்ரஹாரத்தில் பூனை என்ற இந்தக் கதை தமிழில் நான் படித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று எனச் சொல்வேன்.

குஜராத்திக் குடும்பத்தில் நடக்கும் இந்த கதை சொல்லும் விஷயங்கள் பல..

மிக எளிய நடையில் நமக்குக் கதைசொல்லும் பாணியில் ஒரு நகைச்சுவை இழையுடன் இந்தக்கதை சொல்லப்படுகிறது. முதலில் ஆச்சாரசீலராய் இருப்போருக்கும் மனதில் இருக்கும் வன்மம்.. இத்தனை வன்மத்தை இயல்பாய் மனதில் வைத்துக்கொண்டு சாதாரனமாய் இருப்பவர்களின் இன்னொரு முகத்தை காட்டுகிறது இக்கதை.

அதே சமூகத்தில் முரடனாகவும், தீய பழக்கங்கள் கொண்டவனாகவும் அறியப்படுபவனுக்கு (சூரி) இருக்கும் நல்ல எண்ணம் மற்றும் குணம் இரண்டு நிகழ்வுகளில் காட்டப்படுகிறது.

பூ விற்கும் பெண்ணிடம் வம்புசெய்பவர்களின் சைக்கிளைக் கோவில் குளத்துக்குள் வீசுவது.... நீதிக்குப் பின்தான் சாதி எனபது அவனது கொள்கை...

பூனையை பப்லிப் பாட்டி மூக்குப்பொடி தேய்த்து அது சித்திரவதை அனுபவிக்கும்போது கூடிநிற்பவர்கள் அதைப்பார்த்து சிரிக்க, பூனைபடும் அவஸ்தையைப் பார்த்து தாளமாட்டாமல் சிரிப்பவர்களை நோக்கி அவன் மிக மிக மோசமான கெட்டவார்த்தையை உதிர்த்துச் செல்வது என அவனுக்குள் இருக்கும் மனிதத் தன்மையை காட்டுவதும்..

பப்லிப்பாட்டியின் ஆசாரத்தன்மையையும், இறைவனுக்குப் பூஜை செய்யாமல் உணவு அருந்தாதவள் என்ற குணத்தை விஸ்தாரமாக விளக்கிவிட்டு, அதே பப்லிப் பாட்டி ஆத்திரத்தின் உச்சத்தில் வாயில்லாப் வாயில்லாப் பிராணியான பூனையைக் கொடுமைப் படுத்தக்கூட தயங்காதகுணத்தையும், தனது மருமகளை அவள் வார்த்தையால் விளாசுவதையும்.. பப்லிப் பாட்டியின் மகள் வியாதியால் அளவே இல்லாமல் பெருத்துக் கிடந்தும் அவளுக்காக கிழவி கண்ணிர் உகுப்பதையும், அவரது மருமகன் தன் மனைவியை உயிராக நினைப்பதையும் என பல குணாதிசயங்களைக் கொண்ட மக்களைக் கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர்.


அவரவர்களது குறைநிறைகளை ஏற்றி இறக்கிச் சொல்லாமல் அப்படியே சொல்லிச் செல்வதன்மூலம் கதையை இயல்பாய் இருக்கவிட்டிருக்கிறார் திலீப்குமார்

இந்தக் கதையைப்பற்றிய முன்னுரையாக சொல்வனத்தில் இப்படி இருக்கிறது...

// இந்தச் சிறுகதை ‘க்ரியா பதிப்பகம்’ வெளியீடாக வந்த ‘கடவு’ என்ற திலீப்குமாரின் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றது. இந்தச் சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு The Leeds University Journal-இல் 2005-ஆம் ஆண்டு வெளிவந்தது.//

ஆச்சரியமில்லை என நான் நினைக்கிறேன்.


திலீப்குமார் பற்றிய ஜெயமோகனின் பதிவு இது.
சொல்வனத்தில் திலீப்குமார் குறித்த திருமலைராஜன் எழுதிய அறிமுகப்பதிவு இது

No comments: