Sunday, August 8, 2010

என்னத்தச் சொல்ல...

நமது பாரதப்பிரதமர் சமீபத்தில் காஷ்மீரத்துக்கு”ஏன் சுயாட்சி தரக்கூடாது” என திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார், இங்கே. இத்தனை காலம் காஷ்மீரத்தைப் பாதுகாக்க உயிர் நீத்த மற்றும் உயிரை பணயம் வைத்து போராடிக்கொண்டிருக்கும் இந்திய ராணுவத்தின் தியாகம் எல்லாம் இஸ்லாமிய ஓட்டு வங்கிக்காக தியாகம் செய்யப்படப்போகிறது, அல்லது காஷ்மீர முஸ்லிம்களிடம் பார்த்தீர்களா நாங்கள் சுயட்சி தர இருந்தோம் மற்றவர்கள்தான் தரவிடவில்லை எனச் சொல்லி வாக்குகளைப் பெற ஒரு குயுக்தியான வழி.

படிச்சவன் சூதும், வாதும் செஞ்சால் அய்யோனு போவான்..அம்போனு போவான் எனச் சொன்ன எங்கள் தீர்க்கதரிசியாம் பாரதியின் வாக்கு பொய்த்துப் போய்க்கொண்டிருக்கின்றது.

ஜனநாயகத்தின்மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த நேருவின் மகளால் இந்திய மக்கள்மீதும், தலைவர்கள் மீதும் ஏவிவிடப்பட்ட எமர்ஜென்ஸியிலிருந்து இரண்டாம் சுதந்திரம் என வர்ணிக்கப்பட்ட விடுதலையை வாங்கிக்கொடுத்த ஜெயப்பிரகாஷ் நாராயணனையே மறந்த பெருமைக்குச் சொந்தக்காரர்கள் நாம். ”நாட்டின் பாதுகாப்பு” என்ற போர்வையில் 70களில் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சியை நடத்திய கட்சியால் இன்றும் நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி என்று சொல்லி ஓட்டு வாங்க முடிகிறது.

ஒவ்வொரு பயங்கரவாதத்துக்கும் ”பெயர் வைப்பதை” விட்டு விட்டு பயங்கரவாதத்தை வேரறுக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் இருக்கும் ஆளும் கட்சியை நினைத்தால் இந்தியாவின் எதிர்காலம் குறித்த கவலை இன்னும் அதிகரிக்கிறது. இப்போது புதியதாக சிவப்பு பயங்கரவாதம் வேறு. மாவோயிஸ்ட்டுகள் செய்யும் பயங்கரவாதத்துக்கு நான் வைத்த ஒரு பெயர்.. ஏதோ நம்மாலான ஒரு உதவி.

ஆயிரம்கோடிக்கு குறைவாய் இருக்கும் ஊழல்கள் எல்லாம் இப்போது நமக்கெல்லாம் ஊழலாகவே தெரிவதில்லை. நேற்றுப் பிறந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு சினிமாப் படம் எடுக்க முடிவதெல்லாம் நிச்சயம் உழைத்து சம்பாதித்த பணத்தில் செய்ய முடியாது. இவர்களைப் போன்ற குடும்பமே நாடு என நினைக்கும் தலைவர்களிடம் இருந்து நாட்டைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்துக்களை உணராமலும், பாகிஸ்தானுடன் சேர்ந்துகொண்டு சீனா செய்யும் ஆக்கிரமிப்பு மற்றும் மாவோயிஸ்ட்டுகளுக்கு முழு ஆயுத உதவியும் செய்து இந்திய நாட்டின் பாதுகாப்பை நிலைகுலையச் செய்வதன் மூலம் விடும் மிரட்டல்கள் குறித்து ஆளும்கட்சி மக்களுக்குப் பொய்ச் சத்தியம் செய்வதை விட்டு விட்டு நாட்டின் எல்லைகளை பாதுகாக்க என்ன செலவானலும் அதை உறுதி செய்ய வேண்டும்.

மூன்றில் ஒரு இந்தியன் இரவு உணவின்றி படுக்கைக்குச் செல்ல, சேர்த்து வைக்கப்பட்டுள்ள தானியங்களை எலிகள் சூறையாடிக்கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்க்கும் அரசாங்கம் என்ன அரசாங்கமோ?

தொழில்நுட்பத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டால் தனது உணவுதானியங்களைக் கூட பத்திரப்படுத்த முடியவில்லையா? சேமிக்கப்பட்ட தாணியங்கள் உற்பத்தி செய்த தானியங்கள் போலல்லவா?

2011 தேர்தலுக்கு இப்போதிருந்தே எல்லோரும் அவரவர்களின் திறமைகளை காண்பித்து பெரிய அரசியல் கட்சிகளிடம் தனக்கான இடங்களைப் பெற முயன்றுகொண்டிருக்கிறன. தமிழக பெரும் கட்சிகள் காங்கிரசிடம் கூழைக்கும்பிடு போட ஆரம்பித்திருக்கின்றன. அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த பின்னர் நம்மிடம் கூழைக்கும்பிடு போட ஆரம்பிப்பார்கள். அதிக லஞ்சம் கொடுத்து வெல்பவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை கூழைக்கும்பிடு போட வைப்பார். நல்ல ஜனநாயகம்..

எல்லாத்தையும் பாத்த பிறகு மனசுல தோனுறது.. என்னத்தச் சொல்ல...

4 comments:

அப்பாதுரை said...

உங்கள் பொருமலின் பின்னணி புரிகிறது. கடந்த கால விரயங்களும் தியாகங்களும் எதிர்கால வளர்ச்சியையும் நிம்மதியையும் பாதிக்க விடலாமா? முப்பது வருடங்களுக்கு மேலாகப் பிரச்சினையாகவே இருந்து வரும் ஒன்றைத் தீர்க்க இந்த வழியில் ஏன் செல்லக்கூடாது? சுயாட்சி தருவதால் பிரச்சினை தீருமா பார்ப்பதில் ஒன்றும் தவறில்லை என்று தோன்றுகிறது.

கானகம் said...

அப்பாதுரை, தங்களின் வருகைக்கு முதலில் நன்றி.

எதை நீங்கள் பொருமல் எனச் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. காஷ்மீரத்தைக் கொடுப்பதன் மூலம் நிம்மதியையும், வளர்ச்சியையும் நம் தொடர்வோம் எனவும், அதைத் தொடர இந்த ருசிகண்ட பூனைகள் விடுவார்கள் என நீங்கள் நம்புவது, நீங்கள் நிதர்சனத்திலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது. பாக்கிஸ்தான் வாங்கிய மூன்று மரண அடிகளுக்கு பதிலடியாகத்தான் இந்த காஷ்மீரப் பிரச்சினையை வைத்து குளிர்காய்ந்து வருகிறது. இன்று இதற்கு அனுமதித்தால் நாளை கேரளாவிலிருந்து தனி நாடு குரல் கேட்கும். அதற்கான அடிப்படை வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டது. இதைச் சொன்னவர் வேறு யாருமல்ல, அம்மாநிலத்தின் முதலமைச்சர். இந்தியா காஷ்மீரத்தில் கவனம் செலுத்த வேண்டியது எப்படி அப்பாவி மக்கள் பாதிக்காத வன்னம் வன்முறையை நசுக்குவது என்பது மட்டுமே.

நன்றி. மீண்டும் வாருங்கள் அப்பாதுரை

எல் கே said...

//நாளை கேரளாவிலிருந்து தனி நாடு குரல் கேட்கும்//

muthalil thamilagathil irunthu ketkum

கானகம் said...

LK,

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. நீங்கள் சொல்வதும் உன்மைதான். நன்றி. உங்கள் கவிதைகள் நன்று. நல்ல வாசகர் வட்டமும் இருக்கிறதுபோல..

வாழ்த்துக்கள்.