Saturday, January 30, 2010

மூன்று முட்டாள்கள். ( 3 Idiots)




தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்காமே.. அதான் 3 Idiots பெயரை தமிழ் "படுத்தி" இருக்கிறேன்

தமிழில் இலக்கியத்தில் முற்போக்கு சிந்தனை காணப்படுகிறதா அல்லது பிற்போக்கு சிந்தனை காணப்படுகிறதா என்ற வினாவிற்கு ஜெயகாந்தன் சொன்னது “ இலக்கியத்தில் முற்போக்கு, பிற்போக்கு என்பதெல்லாம் கிடையாது.. எல்லாம் ஒரே போக்குத்தான், அது முற்போக்கு மட்டுமே” என்று.

அப்படி முற்போக்காய் சிந்திக்கும், படமெடுக்கும் அளவு போய்க்கொண்டிருக்கும் சமகால நடிகர் மற்றும் தயாரிப்பாளராகியுள்ள அமீர்கானும், அவரது வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் இந்தித் திரைப்பட உலகமும், ரசிகர்களும்.

படத்தைப்பற்றிய ஒரு அறிமுகம்

இம்பீரியல் பொறியியல் கல்லூரியல் படிப்பவர்கள் ஃபர்ஹான், (மாதவன்), ராஜு ரஸ்தோகி (ஷர்மான் ஜோஷி) மற்றும் ரன்ச்சோட் என்றழைக்கப்படும் ரன்ச்சோட்தாஸ் ஷியாமள்தாஸ் ச்சன்சட் ( அமீர்கான்) மூவரும் தங்கியிருப்பதும் ஒரே அறையில்தான்.

ஃபர்ஹானும், ராஜுவும் குடும்பத்தின் கஷ்டத்தை நிவர்த்திப்பதற்காக பொறியியல் கல்லூரிக்கு வந்திருப்பவர்கள், ஆனால் ரன்ச்சோட் படிக்கும் மகிழ்ச்சிக்காகவும், வாகனங்களை வடிவமைப்பதிலும் அதன் பொறியியல் மீதான ஆவலாலும் கல்லூரிக்குப் படிக்க வந்துள்ள பணக்கார மாணவன்.

ரன்ச்சோட்வின் புதியதான, வழக்கத்திற்கு மாறான பதில்களால் கல்லூரியின் முதல்வர் வீரு சஹஸ்ரபுதே ( பொமான் இரானி) வின் கோபத்திற்கு ஆளாகிறார்.

இரக்கமற்ற முதல்வரின் செயலால் ( பிராஜக்டை முடிக்க கொஞ்சம் அவகாசம் தராமலும், உங்கள் மகன் பாஸ் செய்ய மாட்டான் என மானவனின் பெற்ற்றோருக்கு போன்மூலம் தெரிவிப்பதும்) ரன்ச்சோட்வின் கூடப்படிக்கும் மாணவன் ஜாய், மனஅழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறான்.

அந்த தற்கொலைக்குக் காரணம் முதல்வரின் முட்டாள்தனமான, மனிதாபிமானம் அற்ற, வெற்றுப்படிப்பை மட்டுமே படிப்பு எனக் கொள்ளும் அவரது குணமே என்று குற்றம் சாட்டுகிறான் ரன்ச்சோட். கோபம் கொள்ளும் முதல்வர் ரன்ச்சோட்டை மாணவர்களுக்கு வகுப்பெடுக்கச் சொல்ல, ரன்ச்சோட் உண்மையில் இல்லாத ஒன்றைச் சொல்லி அதைக் குறித்து விளக்குமாறு கேட்க ஆசிரியர்களும், மாணவர்களும் புத்தகத்தை முன்னும் பின்னும் புரட்டிக் கொண்டிருக்க இறுதியில் அப்படி ஒன்றுமே இல்லை என்பதைச் சொல்லி வைரசையும், இதர ஆசிரியர்களையும் தர்ம சங்கடத்துள்ளாக்குகிறான். முதல்வர் வைரஸ் ரன்ச்சோட்விடம் நட்பாய் இருக்கும் மற்ற இருவரையும் பிரிக்க முயல்கிறார்.

அதிக மதிப்பெண்கள் எடுப்பவதே வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வழி, அதுவே மதிப்பையும், பணத்தையும் சம்பதித்துத் தரும் என்பதை குறிக்கோளாய்க் கொண்டிருக்கும் இன்னொருவன் சதுர் ராமலிங்கம் எனும் சைலன்ஸர் ( ஓமி வைத்யா)

தான் அதிக மதிப்பெண்கள் இவன் எடுக்க வேண்டுமெனில் மற்றவர்கள் குறைவாய் எடுக்க வேண்டும் என்பதற்காக எல்லாருடைய அறையிலும் ஆபாசப் புத்தகங்களை போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறான். கொஞ்சம்கூடப் புரியாமல் படித்து ஒப்பிப்பது மட்டுமே இவனது சாமர்த்தியம். சரியான பாடம் புகட்ட ரன்ச்சோட் தீர்மானிக்கிறான். சைலன்ஸருக்கு முதல்வர் வைரஸ் பட்டமளிப்பு விழாவில் பேசுவதற்கான வாய்ப்பை வழங்க, அவன் பேச வேண்டிய இந்திக் குறிப்பை கல்லூரி நூலகர் ஆங்கிலத்தில் டைப்படித்து வைத்திருக்க அதில் ”சமத்கார்” என்று வரக்கூடிய இடங்களிலெல்லாம் ”பலாத்கார்” என்று மாற்றிவைத்துவிடுகிறான். சைலன்சர் உனர்ச்சிகரமாக அந்த உரையைப் படிக்க மொத்த அரங்கமே குலுங்குகிறது. அவமானத்தின் உச்சத்தை அடைகிறான் சைலன்ஸர். வாழ்க்கையில் அவர்கள் அனைவரையும் விட மிக உயர்ந்த நிலையை அடைந்த பின் நிச்சயம் சந்திப்பேன் என்கிறான்.

ரன்ச்சோட் வைரசின் மகள் பியாவுடன் ( கரீனா கபூர்) காதல் - தனி டிராக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருநாள் நண்பர்கள் மூவரும் குடித்துவிட்டு வைரஸுக்குத் தெரியாமல் வைரஸின் மகள் பியாவைப் பார்க்கச் சென்றுவிட்டு அவரது வீட்டிலுள்ள பெயர்ப் பலகையில் சிறுநீர் கழித்துவிட்டு வருகின்றனர். அந்தப் போதையுடன் கல்லூரி வகுப்பரையில் உளரும் ராஜுவை கல்லூரியிலிருந்து வைரஸ் நீக்குவதாக சொல்கிறார். அதிலிருந்து தப்பிக்க ரன்ச்சோட்தான் இதைச் செய்தான் எனச் சொல்லிவிட்டால் போதும் என்கிறார் வைரஸ்.

கல்லூரியிலிருந்து வெளியேயும் வரமுடியாமல், நண்பனையும் காட்டிக்கொடுக்க இயலாமல் மாடியிலிருந்துகீழே குதித்து விடுகிறான். தீவிர சிகிச்சையும், ரன்ச்சோட் மற்றும் பர்ஹானின் இடைவிடாத முயற்சியும் ராஜுவை படுக்கையிலிருந்து காப்பாற்றுகின்றது. பர்ஹானும், ராஜுவும் ரன்ச்சோட்வின் வழிமுறையை உனர்கின்றனர். பர்ஹானுக்கு வரும் நேர்முகத்தேர்வுக்கு கால், கையில் கட்டுடனும், சக்கர நாற்காலியிலும் சென்று ராஜு கலந்துகொள்கிறான். அவர்கள் எதிர்பாராத ஆனால் நேர்மையான பதிலால் ராஜுவுக்கு வேலை கிடைக்கிறது.

பர்ஹானும் அவனதுபெற்றோரிடம் வாதாடி விருப்பமான புகைப்படக்காரனாய் ஆகிறான்.

ராஜு தேர்வை முடித்தால்தான் வேலைகிடைக்கும் என்பதால் அவனை தேர்வில் வெற்றிபெற முடியாத அளவு கடினமான கேள்விகளை வைத்து அவனைத் தோற்கடிப்பேன் என்கிறார் வைரஸ்..

பியாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை எப்படி பணம் மட்டுமே வாழ்க்கை என இருக்கிறான் என இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் ரன்ச்சோட் நிரூபிக்க, கலியாணம் நடக்க இருக்கும் சில மணி நேரத்தில் மற்ற இரு நண்பர்கள் மற்றும் தனது பெருமையை நிரூபிக்கவும், தனது வியாபாரத்திற்க்கான கூட்டணி அமைக்கவும் இந்தியாவுக்கு வந்திருக்கும் வைரசுடனும் ரன்ச்சோட்வுடன் சேர போகிறாள்.

அதன் பின்னர் பியா ரான்ச்சோவுடன் சேர்ந்தாளா,

ரன்ச்சோட் என்பவன் ரன்ச்சோட்தானா ? அதன் பிண்ணனி என்ன?

வாழ்க்கையில் வெற்றியடைந்த மற்ற இரு நண்பர்களும், பியாவும் ரன்ச்சோட்வைக் கண்டார்களா?

சைலன்ஸர் வாழ்க்கையில் அவன் எதிர்பார்த்த வெற்றியடைந்தானா?

எது உண்மையில் வெற்றி என நமக்கும் புரிகிறதா?

என்ற கேள்விகளுக்கு விடை வெண் திரையில் ..

தாரே ஜமீன் பர் ( மண்ணில் வின்மீன்கள்) என்ற முதல் படத்திலேயே குழந்தைகளின் பிரச்சினைகளைக் கூட கண்டுகொள்ளமுடியாத அளவு கண்ணை மூடிக்கொண்டு போட்டியில் ஜெயிக்க வைக்க முயலும் பெற்றோரைச் சாடியிருந்தார்.

இந்தப் படத்தில் நமது கல்வித்துறையின் போக்கை நகைச்சுவை கலந்த, சீரியஸ்தனத்துடனும் அனுகி இருக்கிறார்.

தனது சொந்த மூளையை உபயோகித்து படிக்கிறவனுக்கும், மனப்பாடம் செய்து ஒப்பிப்பவனையும் கானும் இன்றைய ஆசிரியர் மனப்பாடம் செய்து ஒப்பிப்பவனையே நல்ல மாணவனாகக் கொள்கிறார்.

ஒரு சிறிய உதாரனமாக இயந்திரம் என்றால் என்ன என்ற கேள்விக்கு “ மனிதனின் வேலையை எளிதாக்கும் எல்லாமே” இயந்திரம் தான் என்பார் அமீர்கான். ஆனால் ஒரு இயந்திரம் என்றால் என்ன என்பதை புத்தகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதுபோல ஒப்பிக்கும் ஒரு மாணவனை பாராட்டுவார் ஆசிரியர்.

படித்ததை பரீட்சையில் வாந்தி எடுப்பவர்களில் அதிகம் வாந்தி எடுப்பவருக்கு அதிகம் மதிப்பெண்கள் கிடைக்கிறது. உலக நடப்பில் அவரே சிறந்தவராகவும் வெற்றியாளராகவும் அறியப்படுகிறார். இதில் உள்ள அபத்தத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார் அமிர்கான்.

போட்டி, போட்டி என குழந்தைகளின் இயல்பாய் மலர வேண்டிய அறிவை பாடங்களினால் நிரப்பி அதை வாந்தியெடுக்க வைக்கும் அபத்தத்தையும், குழந்தைகளின் உண்மையான திறனை அடையாளம் கண்டு அதனை அந்தந்த துறையில் வளரவிடாமல் பெற்றோர்களின் ஆசைப்படி வளரவேண்டிய கட்டாயத்தில் இன்றைய குழந்தைகள் இருக்கும் நிலையையும் சுட்டிக் காட்டுகிறார் இந்தப் படத்தில்.

சோகம், மகிழ்ச்சி, கிண்டல் என படம் முழுக்க சந்தோஷமாய்ச் செல்கிறது.

உகாண்டாவில் பிறந்து, பாண்டிச்சேரியில் படித்த தென்னிந்தியர்போல சித்தரிக்கப்பட்டுள்ள (ராமலிங்கம்) ஒருவரை வைத்து தென்னிந்தியர் அனைவரும் மொட்டை மனப்பாடம் செய்பவர்கள் என்பதுபோல கிண்டலடித்திருக்கிறார் அமீர். இது வடக்கின் எண்ணம் நம்மைப் பற்றி.

”எத்தனையோ பன்னிட்டோம், இதச் செஞ்சிரமாட்டமா” என்பதன் நாகரீக வடிவம்தான் ”ஆல் இஸ் வெல்” என்று பிரமாதப்படுத்தப்படும் வசனம்.

மொத்தத்தில் உன்மீது நம்பிக்கை வை என்பதை மாணவர்களுக்கும், குழந்தைகள் மீது உங்கள் ஆசையை தினிக்காமல் அவர்கள் ஆசைப்படி அவர்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள் என பெற்றோருக்கும் அமீர் விடுத்துள்ள வேண்டுகோளே இப்படம்.

அவசியம் பெற்றோருடன் சென்று பாருங்கள். உங்க தம்பியோ, தங்கச்சியோ விரும்பியபடி படிக்க உங்க அம்மாப்பா வாய்ப்பளிக்கலாம்.

3 comments:

Unknown said...

நல்ல படமாக இருக்கலாம். எனக்கு ஹிந்தி தெரியாதே

kargil Jay said...

seems you know both malayalam and hindi other than tamil and english..

i know neither.. anyways congrats on nice article

கத்தார் சீனு said...

எல்லாமே இந்த படத்தில் பிடித்து இருந்தது!!!
except south indians கிண்டல் மட்டும் தாங்க முடியல !!!