Monday, February 25, 2008

கலியாணப் பாடல்கள் - ஒலிநாடா- பம்பாய் சகோதரிகள்.


சமீபத்தில் பம்பாய் சகோதரிகள் பாடிய கலியாணப் பாடல்களை கேட்க நேர்ந்தது.

எனக்கும் கலியாணம் நடந்தது. ஆனால் இந்தப் பாடல்கள் இல்லாமலேயே நடந்து முடிந்தது. கலியாணம் ஆனபிறகு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் இதைக் கேட்டபோது நமது கலியாணத்திலும் பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

பாடல்களை கலியாணத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக பாடி இருப்பது திருமணங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வுகளும் அந்தக் காலத்தில் எப்படி அனுபவித்து திருமணங்களை நடத்தி இருப்பர் என நினைக்கும்போது இன்று நடக்கும் திருமணங்களின் நிலையை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அந்தக்காலத்தில் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை நடந்த திருமணங்கள் பின்னர் ஐந்து நாட்களாக குறைந்து பின்னர் மூன்று நாட்களாகி தற்போது ஒருநாள் திருமணங்களாகி வருகிறது. போகிற போக்கைப் பார்த்தால் எனக்கு கலியாணம் ஆகிவிட்டது அப்படியே இருந்த இடத்திலே ஆசிர்வாதம் செய்யுங்கள் பரிசுப் பொருட்களை மட்டும் அனுப்பிவைத்துவிடுங்கள் என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என தோன்றுகிறது..

அந்தக் காலத்தில் திருமணங்கள் தொலைவில் இருக்கும் சொந்தங்கள் சந்திக்கும் இடமாகவும் பின்னர் உறவுகளுக்கேற்றபடி 10 நாட்கள் முதல் ஒரு மாதம்வரை தங்கி இருந்து திருமணத்தை நடத்திக் கொடுத்த காலங்களாக இருந்தது. இன்று அவரவருக்கு இருக்கும் பணபலத்தை நிரூபிக்கும் இடமாக திருமணங்கள் மாறியுள்ளன.

நான் பார்த்த 5 நாள் திருமணம் எங்கள் வீட்டில் வைத்து நடைபெற்ற எனது தூரத்து உறவினர் ஒருவரின் திருமணம். திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே வந்திருந்து நல்லபடியாய் நடத்திக்கொடுக்கும்படி கேட்டுக் கொண்ட திருமணப் பத்திரிக்கையை அப்படியே மனதில் கொண்டு எங்கள் வீட்டில் 10 நாட்களுக்கு முன்னதாகவே கூட்டம் ஆரம்பித்துவிட்டது. இதில் எங்கள் அனைவருக்கும் ஒரே சந்தோஷம். முதலில் வீடு முழுக்க ஆட்கள். பின்னர் நாங்கள் பள்ளிக்கூடத்திற்கு போனோமா இல்லையா என பார்ப்பதற்கு யாரும் இல்லாத தைரியத்தில் பள்ளியில் "அய்யா எங்க வீட்ல கலியாணம்" என 5 நாட்களுக்கு முன்னரே பள்ளிக்கு நாங்களே விடுமுறை விட்டுக் கொண்டது என ஒரே அமர்க்களமாய் இருந்தோம். திருமணம் முடிந்தபின்பு பள்ளிக் கூடத்தில் என்னமோ புது வகுப்புக்குள் போவதுபோல இருந்தது. நாங்கள் படிக்கும்போது ஒரே வாத்தியார் தமிழ் முதல் புவியியல் வரை எடுப்பார். எனவே 5 நாட்களில் ஒவ்வோரு பாடத்திலும் இரண்டு, மூன்று பாடங்கள் போய்விட்டது. படிக்கிற புள்ளைக்குத்தான அந்தக் கவலையெல்லாம்.. நானெல்லாம் உப்புக்குச் சப்பாணிமாதிரி பள்ளிக்குப் போய்வந்தேன். எனவே பாடங்கள் போனதெல்லாம் பெரிய விஷயமாய் தெரியவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம்…

பெண்னை அழைத்து வருவதில் ஆரம்பித்து, திருமணம் நடத்தி, பூப்பந்து விளையாடி, மணமகனை கிண்டல் செய்து, மணமகளையும் கிண்டல் செய்து, சாந்திமுகூர்த்தம் செய்து, தாம்பூலம் கொடுத்து பின்னர் கணவன் மனைவியான பின்பு அவர்களுக்குள் எற்படும் ஊடலையும் பாடலாக்கி அருமையான இசை விருந்தளித்துள்ளார்கள் என்று சொன்னால் அது மிகை இல்லை.

திருமணப்பாடல்களில் நாயகனாக மதுரையம்பதியையும், நாயகியாக மீணாட்சியையும் கொண்டு அவர்களது திருமண பாடல்களாக இதை எழுதி இருக்கிறார்கள்.

எல்.கிருஷ்னனின் இனிய இசையில் தமிழில் பாடல்களனைத்தும் கேட்பதற்கு இனிமையாய் உள்ளன.

திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவுவகைகள் பற்றி ஒரு பாடலில் (போஜனம் செய்ய வாருங்கள் என்ற பாடல்) சைவ உணவு வகைப் பட்டியலை அதில் கேட்கலாம்.

சாம்பார் வகைகள்
ரசம் வகைகள்
இனிப்பு வகைகள்
வடைவகைகள்
பழங்கள்
சித்ராண்ணங்கள்
அரிசி சாதமும், நெய்யும் சேர்த்து சாப்பிட வாருங்கள் என பாடி இருக்கிறார்.

மாப்பிள்ளை சமர்த்தரடி… என்ற பாடலில் மாப்பிள்ளை எதில் சமர்த்தராம்??? காபி குடிப்பதில்.. அதுவும் காது கடுக்கனை விற்று.. நகையெல்லாம் எடுத்துப்போய் போன விலைக்கு விற்று மட்டை மட்டையாய் பொடி போடுவதிலாம்…

பூப் பந்தாடினார் பரமசுந்தரன் பாண்டியன் பெண்ணோடு.. என்ற பாடலைக் கேட்கும் போது எனக்கு "வசந்தவல்லி பந்து விளையாடிய" காட்சிதான் ஞாபகத்திற்கு வந்தது.

நல்ல தமிழிசை.. நல்ல குரல்வளம் கொண்ட பாடகிகள், அருமையான பக்க வாத்தியங்கள் கொண்டு எல்.கிருஷ்ணன் கொடுத்துள்ள இந்த இசைத்தொகுப்பை வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் கேளுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


நன்பர் ஒருவர் கொடுத்த கலியாணப் பாடல் லின்க்
Marriage Songs,
Vani Recording Co.(P) Ltd,
Post Box: 2063, Chennai – 600 020

10 comments:

பிரகாஷ் said...

காசு கொழுத்துப் போய், கல்யாணங்களை ஐந்தாறு நாட்கள் நடத்திய காலமெல்லாம் இப்போது மலையேறி விட்டது.
இந்தப் பாழாய்ப் போன கட்டாயமாக்கப் பட்ட திருமண சடங்குகள் நிறையப் பெற்றோர்களை ஆயுட்காலக் கடனாளிகளாக்கியிருக்கின்றன.
அந்தக் காலத்தில் பையனும் பெண்ணும் திருமணத்திற்கு முன்பு ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவே முடியாத சூழ்நிலையில், அவர்களது அன்னியோன்னியத்திற்காக நிறைய சடங்குகளை வைத்திருந்தனர்.
அது இப்போதைக்குத் தேவையில்லை.ஒரே நாளில் குறைந்த செலவில், முக்கியமான, அவசியமான சடங்குகளை மட்டும் வைத்துத் திருமணங்களை நடத்துவதே சிறந்தது.
இல்லையெனில், ஹனிமூனுக்குக்கூட காசில்லாமல் எல்லாவற்றையும் கல்யாணத்திலேயே செலவழித்து விட்டு,கல்யாணமான முதல் வாரமே கருத்து வேறுபட்டு சண்டை போட வேண்டியதுதான்.

பத்மகிஷோர் said...

முன்பெல்லாம் வீட்டிலேயே அனாயாசமாக 5 நாள் கல்யாணங்களை நடத்தியுள்ளனர். இப்போ கேட்டரிங்க் இவென்ட் மேனேஜ்மெட்ன் அது இது என்று வந்தபிறகும் ஒரே நாளில் பெண்டு கழண்டு விடுகிறது.... ஹூம்ம்ம்

பிரகாஷ் said...

மற்றபடிக்கு, கலியாணப் பாடல்கள் கேட்பதற்கும்,ரசிப்பதற்கும் சுகமாகத் தான் இருக்கின்றன.

Anonymous said...

இந்தக் காலத்தில்தான் காசு கொழுத்துப் போய் கல்யாணம் செய்கிறார்கள். அந்தக் காலத்தில் கல்யாணம் அத்தனை செலவு பிடிப்பது இல்லை.

கல்யாணம் என்பது பல உறவினர்கள் ஒன்றாய் சேர்ந்து, பல சுவையான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, மகிழ்வோடு இருக்கும் நிகழ்வு. அதாவது, அந்தக் காலத்தில்.

இந்தக் காலம்போல கோடிக்கணக்காய் செலவழிக்கவில்லை. மிக எளிமையாகவே திருமணச் சடங்குகள் நடந்தன.

ஜயக்குமார், மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். இலக்கியத் தரம் வாய்ந்ததாக இந்த கட்டுரை உள்ளது.

கானகம் said...

நன்றி..பிரகாஷ் மற்றும் பத்மகிஷோர்.. வருகைக்கும் கருத்துக்களுக்கும்..

கானகம் said...

//இந்தப் பாழாய்ப் போன கட்டாயமாக்கப் பட்ட திருமண சடங்குகள் நிறையப் பெற்றோர்களை ஆயுட்காலக் கடனாளிகளாக்கியிருக்கின்றன//

உண்மை பிரகாஷ்..

//இல்லையெனில், ஹனிமூனுக்குக்கூட காசில்லாமல் எல்லாவற்றையும் கல்யாணத்திலேயே செலவழித்து விட்டு,கல்யாணமான முதல் வாரமே கருத்து வேறுபட்டு சண்டை போட வேண்டியதுதான்//

:)

கானகம் said...

பனித்துளி...

யாரெனத்தெரியவில்லை. வருகைக்கு நன்றி.ஆனால்

" இலக்கியத் தரம் வாய்ந்ததாக இந்த கட்டுரை உள்ளது.// என்ற உங்கள் கருத்துதான் கொஞ்சம் இடிக்கிறது..

பிரகாஷ் said...

//இலக்கியத் தரம் வாய்ந்ததாக இந்த கட்டுரை உள்ளது.// என்ற உங்கள் கருத்துதான் கொஞ்சம் இடிக்கிறது//
கொஞ்சம் இல்ல...
ரொம்பவே இடிக்கிறது:)

ஹரன்பிரசன்னா said...

மிகவும் மேம்போக்காக நின்று போன கட்டுரை. தொடர்ந்து எழுதவேண்டும் என்கிற எண்ணம் சந்தோஷத்தைத் தருகிறது. போகிற போக்கில் கல்யாணம் ஒரு வாரம் பத்து நாள் நடந்ததாக எல்லாரும் சொல்வதைக் கேட்கிறேன். இதற்கான ஆதாரம் எதுவும் இருந்ததா எனக் கேட்கவேண்டும். கட்டுசாதம் என்ற ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் வண்டி கட்டிக்கொண்டு கல்யாணத்திற்கு வந்து வண்டி கட்டிக்கொண்டு போவார்கள். அவர்களுக்கானது அது. இன்று ஃப்ளைட்டில் வந்து இறங்கி கல்யாணம் கட்டிக்கொண்டாலும் கட்டுசாதத்தை யாரும் விட்டபாடில்லை. டிரெடிஷன் சார்.

கானகம் said...

Dear Haran,

Thanks for coming.

JK