Thursday, January 23, 2014

வடக்கு ருமைலா - Iraq

இன்று வடக்கு ருமைலா என்ற இடத்தில் ஒரு வியாபார சந்திப்பு. பாஸ்ராவிலிருந்து 100 கிலோமீட்டர்கள் பாக்தாத் போகும் வழியில். செக்போஸ்ட் சோதனைகள் முடிந்து உள்ளே சென்றால் தனி உலகம். எல்லாக் கம்பெனிகளும் தங்களது கிளையை இங்கேயும் வைத்திருக்கின்றன.

நான் சந்திப்புக்குச் சென்றது ஒரு ஈராக்கிய கம்பெனிக்கு. சந்திப்புக்கு அழைத்திருந்தவர் பாக்கிஸ்தானி.. அந்த நிறுவண சி.ஈ.ஓ ஒரு இந்தியர்.

சந்திப்பெல்லாம் முடிந்து கிளம்பும் நேரம் வரைக்கும் அந்த சி.ஈ.ஓ வை எங்கேயோ நெருக்கமாக சந்தித்திருக்கிறேன் என மனது சொல்லிக்கொண்டே இருந்தது. புறப்படும்போது சட்டென ஞாபகம் வந்துவிட்டது.

ஈராக் கிளையை ஆரம்பிக்கும்போது ஒரு ஆர்டருடன் ஈராக்கில் நுழைந்தால் கைக்காசு செலவில்லாமல் கம்பெனியை ஆரம்பித்துவிடலாம் என அவரிடம் ஒரு பைப்லைன் வேலையை எங்கள் கம்பெனிக்கு ஒதுக்கித் தரும்படி கேட்கப் போயிருந்தேன்., 2012 செப்டம்பரில்.

உங்களால் ஈராக்கிலெலாம் வேலை செய்ய முடியாது. விசாவில் ஆரம்பித்து, சாதனங்களை ஈராக்குக்குள் கொண்டு வருவதும், வெளியே கொண்டு செல்வதும் பெரிய கம்பெனியான எங்களாலேயே முடியவில்லை. அதனால் உங்களுக்கு ஆர்டரைக்கொடுத்துவிட்டு நாங்கள் கஷ்டப்பட முடியாது எனச் சொல்லி அனுப்பிவிட்டார். அதன் பின்னர் அவரை சந்திக்கும் வாய்ப்பு வரவில்லை.

இன்றைய சந்திப்புக்குப் பின்னர் எப்படிப் போகுது ஈராக் பிஸினஸ் எல்லாம் என்றார்.. நீங்க முடியாதுன்னு சொன்ன உடனேயே எங்கே ஈராக்கில் கம்பெனி திறக்க முடியாதோ என்ற பயத்தில் முழுசா இறங்கி அடுத்த மாசமே கம்பெனி லைசென்ஸ் அப்ளை செஞ்சு 2013 ஜனவரிக்குள்ளேயே நாங்கள் ரெடியாகி இதுவரை 3 பெரிய ப்ரஜக்டுகளை முடித்து விட்டேன். நீங்கள் என்னை சந்திப்புக்கு அழைத்திருக்கும் இந்த வேலையின் மிகப்பெரிய பகுதி ஒரு துருக்கிக் கம்பெனியிடம் உள்ளது. அந்த வேலையை நாங்கள்தான் செய்கிறோம் என்றதும் மிக்க மகிழ்ச்சி எனச் சொல்லி கை குலுக்கினார்.

போகும்போது ”I was wrong Jay. We should have given the job to you guys. The contractor killed us you know?" என்றார்.

இப்படிப் பட்ட பொட்டல்காட்டில்கூட எதிர்பாராத ஆட்களை சந்திக்கும்போதெல்லாம் தோன்றும் ஒரே சினிமா டயலாக் “ ரொம்ப ஸ்மால் வேல்டுங்க”

சந்திப்புக்கு பின்னர் சுற்றிப் பார்த்ததில் நிறைய தமிழ் முகங்கள். திருச்சியைச் சேர்ந்த பக்கிரிசாமி என்ற புதிய நண்பர் கிடைத்தார். பார்த்த 5 நிமிடங்களிலேயே நண்பர்கள்... 

இன்னும் சில தமிழர்கள் வேலைக்காக சைட்டுக்கு சென்றிருந்தனர். அவர்களிடம் போனில் பேசினேன்.

எல்லோரும் சில நிமிட உரையாடலுக்குப் பின்னர் கேட்கும் ஒரே கேள்வி, எப்ப சார் அடுத்து ஊருக்கு? 

No comments: