Wednesday, November 18, 2009

ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்




சங்க கால இலக்கியங்கள் நமக்கு அறிமுகம் ஆவதெல்லாம் ஏதேனும் ஒரு திரைப்படத்தின் பாடலில் முதல் இரண்டு வரியாகவோ அல்லது காதல் காட்சிகளில் பின்னனியாகவோ ஓட விடுதல் மூலமே..

காலஞ்சென்ற சுஜாதா அவர்கள் அடிக்கடி சங்க இலக்கியங்களில் உள்ள சுவைகளை அடிக்கடி மேற்கோள் காட்டியும் வந்தார்.

அதற்குப்பின்னர் தற்போது பல்கலைக்கழகங்களில் தமிழை முக்கியப்பாடமாக எடுத்து படிப்போர் தவிர இதர தமிழர்களுக்கு சங்க இலக்கியங்களில் பரிச்சியமோ, அப்படி ஒன்று இருப்பதை அறிந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே.

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது ஜெயமோகனின் சில புத்தகங்களை வாங்கி வந்தேன்.. அதில் சங்கச் சித்திரங்களும் ஒன்று.

அவருக்குப் பிடித்த சங்க காலப் பாடல்களை தமது வாழ்க்கை அனுபவங்கள் மூலம் கதையாகச் சொல்லி அந்தப் பாடலின் எளிய தமிழ் வடிவத்தை அந்தக் கட்டுரையின் இறுதியில் தருகிறார். படிக்க படிக்க சுவாரசியமாகவும், சங்க காலப் பாடலை நாம் நேரடியாக படிக்கும்போது ஒன்றுமே புரியாததுபோலத்தெரிந்த அதே பாடல் அவரது எளிமைப் படுத்தப்பட்ட பாடலை படித்த பின்பு மீண்டும் படிக்கும்போது கொஞ்சம் புரிந்துகொள்ள முடிகிறது.

பாடல்களை அக்குவேறாக ஆனிவேறாக அலசாமல், அந்தந்தப் பாடலுக்கு ஏற்றாற்போல் தனது வாழ்க்கை அனுபவங்களை சொல்லியிருப்பது படிக்க சுவாரசியமாய் இருக்கிறது. நமக்குப் பிடிக்காத விஷயங்களை நாம் எப்போதுமே தாண்டிச் செல்லவே விரும்புவோம். ஆனால் அதே விஷயத்தை நமக்குப் பிடித்ததுபோல அறிமுகம் செய்யும்போது அதன்மீது ஒரு மரியாதை வந்துவிடுகிறது. அதைத் தெரிந்துகொள்ள விழைகிறோம். அதைத்தான் இந்த சங்கச் சித்திரங்கள் செய்கிறது.

தமிழர்களின் சொத்தான சங்கப்பாடல்கள், கூலிக்கு மாரடிக்கும் பெரும்பான்மையான தமிழாசிரியர்களால் தானும் சரியாகப் புரிந்துகொள்ளாமல், தனது மாணவனுக்கும் சரியாக சொல்லித்தராமல் கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள் சங்கப்பாடல்களின் வாசனையே இன்றி பள்ளிக்கூடங்களைத் தாண்டிவந்துவிட்டது.

ஒரு நல்ல ஆசிரியனைபோல நல்ல விஷயங்களை நமது மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கும் ஜெயமோகனின் இந்த உழைப்பு பாராட்டப்படவேண்டியது.

ஏற்கனவே ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த சமயத்திலேயே பரவலான பாராட்டைப் பெற்றது இந்த சங்கச் சித்திரங்கள்.

5 comments:

தேடுதல் said...

நன்று, நான் முதன்முதலில் ஆனந்தவிகடனில் வந்த சங்கசித்திரங்களின் வழியாகவே ஜெயமோகனை வாசிக்க ஆரம்பித்தேன். இன்று அவரது ஆக்கங்களை அனைத்தையும் வாசித்தாகிவிட்டது. அசோகவனத்திற்க்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

கானகம் said...

zorbathebuddha வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. நானும் அசோகவனத்திற்காக காத்திருக்கிறேன். நம் காலத்திய அருமையான எழுத்தாளர் ஜெயமோகன்.

Unknown said...

வணக்கம் ஜெய்,

உங்களுடைய பின்னூட்டம் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி.

சுகுமாரன் மொழி பெயர்த்த 'மதிலுகள்' படித்திருக்கிறீர்களா? இல்லையெனில் காலச்சுவடில் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள், அருமையான மொழி பெயர்ப்பு. மேலும் காலச்சுவடு பஷீரின் மேலும் பல அறிய படைப்புகளை மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் அடுத்த ஆண்டு வெளி வந்துவிடும்.

உங்களுடைய பதிவுகளும் அருமையாக இருக்கிறது நண்பரே. படிக்க கொஞ்சம் அவகாசம் தேவை. தொடர்ந்து எழுதுங்கள்.

தொடர்பில் இருப்போம்.

Unknown said...

தல,
ஜெயமோகன் சொன்னது போல
அவரது பெரும்பாலான வாசகர்கள் சங்க சித்திரங்கள் மூலம் அவரிடம் வந்தவர்களே

யாதும் ஊரே யாவரும் கேளிர் னு பொன்மொழியா கேட்டு பழகிய எனக்கு அந்த முழு செய்யுளும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் இன்னும் பசுமையாய் நெஞ்சில் இருக்கிறது. முக்கியமா அந்த கடைசி ரெண்டு வரிகள்.
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

மீண்டும் ஒரு முறை வாசிக்கத் தூண்டும் பதிவு. நன்றி

மூர்த்தி, லா ரோஸ்.

கானகம் said...

மூர்த்தி,

வருகைக்கு நன்றி.

இதர இடுகைகளையும் ஒரு பார்வை பாத்துருங்க..

:-)