Saturday, March 28, 2009

அபியும் நானும்



தமிழ் சினிமா உலகில் மக்கள் ரசனையைப் பற்றிய மிக மோசமான அபிப்பிராயம் உள்ளது. அவர்களுக்கு குத்து டான்சுதான் பிடிக்கும், அதுவும் கும்தாஜ், மும்தாஜ் மற்றும் நமிதா கோஷ்டிகள் ஆடினால்தான் பிடிக்கும் என்பது மாதிரியும், கதாநாயகன் என்பவன் ஒரே குத்தில் 50 பேரை அடித்து வீழ்த்தும் பலமுள்ளவன் போலவும், ஆனால் சிறு விமர்சனத்தைக் கூட தாங்க முடியாமல்.. ஏய்.. பேசிக்கிடிருக்கோம்ல.. சைலன்ஸ் அப்படினு சவுண்டு விட்டுக்கொண்டு திரியும் இந்த நேரத்தில்தான் “ராதாமோகனின்” அபியும், நானும் மக்களின் ரசனையை உயர்வாக மதித்து அவர்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. ’மொழி’ படமும் ராதா மோகன் இயக்கியதுதான்..

’நமது குழந்தைகள் நம் வழியாக வந்தவர்களேயன்றி நமக்கானவர்கள் அல்லர்’ என்ற கலீல் கிப்ரானின் கவிதை வரிகள்தான் கதை .

தனது மகள் மீது அளவு கடந்த அன்பு செலுத்தும் ஒரு தகப்பன் மகள் தன்னிஷ்டப்படி காதலித்து திருமனம் செய்து கொண்டு போனபின்பு திருப்தியுடன் பூங்காவில் சந்திக்கும் ஒருவரிடம் ( பிரித்விராஜ்) தனது (பிரகாஷ்ராஜ்) வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் விவரிக்கும் வகையில் சொல்வதுதான் படம்.

வாழ்க்கையின் சந்தோஷமான தருனங்களை ஒவ்வொன்றாக பிரகாஷ்ராஜ் சொல்ல அது அப்படியே பிளாஷ்பேக்காக விரிகிறது. படம் முழுக்க கதை சொல்லும் பானியிலேயே எடுக்கப்பட்டு அந்த உத்தியில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.

பிளஸ்கள்:-

முதலில் படத்தில் எதிர்மறை கருத்தென ஒன்றும் இல்லாததற்கே ஒரு பாராட்டு.

அநாவசியமான சண்டை, ஹீரோயிசம் எதுவும் இல்லாமல் தெளிந்த நீரோடைபோல படம் செல்வது.

குளுமையான இடங்களில் மட்டுமே படம் செல்கிறது. படத்தில் வெயிலைப் பார்த்ததாக ஞாபகமில்லை. அவ்வளவு குளிர்ச்சி, பசுமை படம் முழுக்க.

தெளிவான கதை உத்தி.முதலில் ஆசுவாசமாகச் சொல்லி பின்னர் வேகவேகமாய் ஓடாமல் ஒவ்வொரு காட்சியையும், அழகாக செதுக்கி இருக்கிறார் இயக்குனர்.

மைனஸ்கள்

என்னைப் பொருத்தவரை இந்தப் படத்துக்கு பாடல்களே தேவை இல்லை. இந்தப் படத்தில் பாடல்கள் மிக செயற்கையாகப் படுகிறது. பஞ்சாபி இசை தவிர பிற பாடல்கள் செயற்கையாகத் தெரிகிறது.

பிரகாஷ் ராஜின் அலட்டல்கள் சில சமயம் எல்லைமீறும்போது.. குறிப்பாய் அவர் பிரதமரிடமிருந்து அழைப்பு என்றவுடன் ”எஸ் சார், ஓக்கே சார், தாங்க்யூ சார்” என சவுண்டு விடுவது வழக்கமான பிரகாஷ்ராஜ்.

மற்றபடி மிக அருமையான குடுமபத்துடன் கானத் தகுதியுள்ள திரைப்படம் அபியும் நானும்.

படத்திலிருந்து சில நல்ல காட்சிகள்.

பஞ்சாபி மக்களின் வாழ்க்கையே கொண்டாட்டமானது. அவர்களுக்கு இசையும் நடனமும் உயிர்.. துள்ளலான இசையை வாழ்க்கையில் கொண்டவர்கள் அவர்கள். சுத்தமான இதயமும், பொய் சொல்லாத குணமும், தேசத்தை நேசிக்கும் குணமும், பிறரை ஆதரித்து வாழும் கொள்கையும், சுயகௌரவத்தை தங்களது வாழ்க்கையாகவும் கொண்டவர்கள்.. ( இது நமது பிரதமருக்குப் பொருந்தாது)

திரிஷா ஜோகி என்ற சர்தாருடன் கோவை விமான நிலையத்தில் வந்திறங்க ஜோகியைப் பார்த்ததும் பிரகாஷ்ராஜ் காட்டும் உடல் மொழி அருமை..

அடுத்தடுத்து வீட்டில் வீட்டில் வடநாட்டு உணவுகளாகப் பரிமாறப்பட அவர் காட்டும் முகபாவங்கள், ஜோகியின் சொந்தமக வரும் ஒருவர் பிரகாஷ்ராஜை கட்டிப்பிடித்து அவரகளது பானியில் வாழ்த்துச் சொல்வதும், பிரகாஷ்ராஜ் அல்லல்படுவதும், இரண்டு சிறுவர்கள் பிரகாஷ்ராஜைப் படுத்தும் பாடும் என நல்ல நகைச்சுவைக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.

இவர் யாரும்மா என பிரகாஷ் ராஜ் மகளிடம் கேட்க எங்க ஸ்கூல் வாசல்ல பெக்கரா இருக்காரு என சின்ன வயது திரிஷா சொல்ல என்னமோ பேங்க்குல மேனேஜர் மாதிரி சொல்றம்மா..என பிரகாஷ் ராஜ் சொல்லும் இடம்..

எல் கேஜி அட்மிஷனுக்கு பிரகாஷ்ராஜ் விழுந்து விழுந்து படிப்பதும் கடைசியில் கேப்பிடேஷன் பீஸ் வாங்கிக்கொண்டு குழந்தையை சேர்த்துக்கொண்டு விட “ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சிருக்கேன்மா.. ரெண்டு மூனு கேள்வியாவது கேளுங்க” என கெஞ்சுவதும், படாய்படுத்தி படிக்க வைத்த மனைவியை அவர் பார்க்கும் பார்வையும் ..


பிச்சைக்காரர்களை வீட்டிற்குள் சேர்த்துக்கொள்வதுபோல படம் எடுப்பது இப்போதுதான் என நினைக்கிறேன். அது உறுத்தாமலும் அவர்களைக் கேவலமாகக் காட்டாமலும் அழகாக எடுத்திருக்கிறார் அந்தப் பகுதியை. அவனுக்கு ஜோகியின் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் காதல் வர அவர்களுக்கு திருமணமும் நடக்கும். நல்ல முதிர்ச்சியான மற்றும் பெருந்தன்மையான மனம் இயக்குனருக்கு.

நன்பனாக வரும் தலைவாசல் விஜய் அவருக்கான பாத்திரத்தைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். நம்பிக்கையூட்டும் வசனங்கள் மூலம் குழந்தைகளை தத்தெடுப்பது பற்றிய பிரக்ஞையை உருவாக்குகிறார்.

நல்ல திரைக்கதையுடன், அருமையான பாத்திரங்கள் மூலம் நம்மைக் கட்டிப்போடுகிறார்கள் அபியும், நானுமாகிய ராதாமோகன்.

அபியாக திரிஷாவும், நானுமாக பிரகாஷ் ராஜும், அபியின் அம்மாவாக ஐஷ்வர்யாவும், பிரகாஷ்ராஜின் நன்பனாக தலைவாசல் விஜயும் நடித்துள்ளார்கள்.

1 comment:

Unknown said...

உங்களுடைய பீக்கதைகள் வலைப் பக்கத்தைப் படிக்க நேர்ந்தது. பல விடயங்களை பதிவிடுவது நல்ல முயற்சி. அது தொடர எனது வாழ்த்துக்கள்.