Saturday, June 16, 2012

அம்மா என்றால் அன்பு. ( எனக்கு மட்டும் இது கடந்தகாலம்)

கூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும்? எங்களின் கூட்டுக்குடும்பத்தின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என்று பார்த்தால் எனது அப்பாவுக்கு 3 குழந்தைகள், பெரியப்பாவுக்கு ஆறு குழந்தைகள், அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி ஆக வீட்டு உறுப்பினர் மட்டும் 15 பேர். இது தவிர சில விருந்தினர்கள் எப்போதும் இருப்பார்கள். காலையில் எழுந்ததும் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் அப்பா, அக்கா, வயதான பெரியவர்களுக்கான காலை உணவு, ஒவ்வொருவராக எழுந்துவர அனைவருக்குமான காப்பிக் கடை. முதல் சுற்றுக் காப்பிக் கடை முடியும் போது 8 மணி எனில் 10 மணிக்கு இன்னொரு ரவுண்டு காபி வீட்டில்உள்ளோருக்கு. 11 மணிக்கு பெரியவர்களுக்கான காலை மற்றும் மதிய உணவும் இனைந்த பிரஞ்ச். மதியம் கொஞ்சம் ஓய்வு. மீண்டும் 4 மணீக்கு காபிக் கடை, இரவு உணவு, பின்னர் அனைவருக்கும் பால் அல்லது ஏதாவது ஒரு பானம். இது தவிர தீபாவளி, பொங்கல் போன்ற விசேட நாட்களில் சிறப்பு உனவு, நீத்தார் கடன் நாட்களில் அதற்கான பிரத்யோக சமையல், இதையனைத்தையும் ஒருவரே செய்யவேண்டும் அதுவும் கிட்டத்தட்ட 35 வருடங்களாக ஒருவர் செய்தால் எப்படி இருக்கும்? அப்படிச் செய்தவர்தான் ஜெயலக்‌ஷ்மி எனும் எனது அம்மா. தற்போது இருக்கும் வசதிகள் எதுவும் அப்போது இருந்ததில்லை. காய்ந்த விறகு அடுப்பு இல்லையெனில் மரத்தூள் அடுப்பு. ( மர அறுவை மில்லில் மரம் அறுக்கும்போது கிடைக்கும் தூசிதான் மரத்தூள்) மரத்தூள் அடுப்பை சமையலுக்கு தயார் செய்தலே ஒரு தனி கலை. அடுப்பு வட்ட வடிவில் இருக்கும். கீழ் பகுதியில் விறகு வைக்க ஒரு இடம் இருக்கும். நடுவில் ஒரு மன் எண்ணெய் பாட்டிலை வைத்துவிட்டு பின்னர் கழுத்துவரை மரத்தூளை நிரப்ப வேண்டும்.விறகு வைக்கும் பகுதியை கையால் மூடிக்கொண்டு மரத்தூளை அடுப்பில் நிரப்ப வேண்டும். மரத்தூளை அப்படியே நிரப்பினால் பாதி சமையல் செய்யும்போதே கீழே விழுந்துவிடும் எனவே கொஞ்சம் நீர் தெளித்து நன்றாக அழுத்தி அழுத்தி தூளை நிரப்ப வேண்டும். அதன் பின்னர் நடுவில் வைத்த பாட்டிலை எடுக்கும் முன்னர் விறகு வைக்கும் இடத்தில் இருக்கும் மரத்தூளை எடுத்து விட்டு பின்னர் பாட்டிலை கொஞ்சம், கொஞ்சமாக அசைத்து எடுக்க வேண்டும். அதுதான் சமையல் அடுப்பு. சில சமயங்களில் சோம்பேறித்தனத்தினால் சரியாக அடைத்துக் கொடுக்காமல் இருந்தால் அம்மாவின் பாடு பாவம். தூள் எல்லாம் கீழே விழுந்துவிடும். பிறகு முள் விறகால் சமையலைத் தொடர வேண்டும். இப்படித்தான் சமையல் 1982 வரை. அதன் பின்னர்தான் மன் எண்ணெய் அடுப்பு வந்தது. நூதன் ஸ்டவ். அதிலும் ஏதேனும் ஒன்றுதான் வைக்க முடியும். மீதி சமையல் எல்லாம் தூள் அடுப்பிலும், கரி அடுப்பிலுமாக நடக்கும். அம்மாவின் சமையல் அட்டகாசமான சுவையுடன் இருக்கும். அதிலும் நொட்டை, நொள்ளை சொல்லி இருக்கிறேன். சாப்பிடாமல் போயிருக்கிறேன். பாவம் அம்மா, வாசலில் அமர்ந்துகொண்டு குமாரோ..குமாரோ என நான் வீட்டிற்கு வந்து சாப்பாட்டை போட்டுத் தொலை என திட்டும்வரை வாசலிலேயே காத்திருப்பார்கள். தானும் சாப்பிட மாட்டர்கள். அதன்பின்னர் கொஞ்சம் வசதி வந்த பின்னர் அதாவது நான் 10வது படிக்கும்போது ஒரு மாபெரும் கிரைண்டர் வந்தது. அதன் பின்னர்தான் அம்மாவிற்கு கொஞ்சமேனும் ஓய்வு கிடைத்தது. இல்லையெனில் 15 பேருக்கு கையாலேயே இட்லி, தோசை மாவு அரைத்து அதை செய்தும் கொடுக்க வேண்டும். இப்போது நினைத்தாலே நெஞ்சடைக்கிறது. எப்படி அம்மா இதையெல்லாம் தனியாகச் செய்தார்கள் என. அம்மாவிற்கு இப்படி வேலை செய்ததில் எல்லாம் வருத்தம் இருந்ததில்லை. ஆனால் யாராவது சாப்பாடு பிடிக்கவில்லை என சாப்பிடாமல் போனால்தான் தாங்க முடியாது. எவ்வளவு அலுப்பில் படுத்திருந்தாலும் உடனே எழுந்து அவர்கள் சாப்பிட வேறு ஏதாவது செய்து கொடுத்துவிட்டுத்தான் படுப்பார். அம்மாவுக்கு என்மீது எப்போதும் தனிப்பிரியம். அம்மாவும், அப்பாவும் எதோ ஒரு சப்பைக் காரணத்துக்காக சண்டை போட்டு கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் பிரிந்திருந்து மீண்டும் சேர்ந்த பிறகு பிறந்த குழந்தை நான். மேலும் எல்லோராலும் சோனிப்பூனை என அன்புடன் அழைக்கப்பட்டவன். அதனாலேயே இன்னும் கொஞ்சம் பிரியம் அதிகம். ஒரு சிறு தடுமாற்றத்தில் சொத்துக்களை எல்லாம் இழந்துவிட்டோம். அப்போதும் இந்தக் கூட்டுக் குடும்பமே கைகொடுத்தது. அப்பா அரசு வேலையில் இருந்ததால் உனவுக்கு ரொம்பக்கஷ்டமின்றி இருந்தாலும் மதியம் பள்ளியில் கிடைக்கும் சத்துணவும் பள்ளி சென்ற எங்கள் அனைவருக்கும் வசதியாக இருந்தது. சத்துணவு சாப்பிட்டு வருவதால் மாலை வந்தஉடன் எனக்கென கொஞ்சம் சாதம் எடுத்து வைத்து நிறைய நீர்மோர் ஊற்றி கொஞ்சம் குளம்போ, ரசமோ போட்டுத் தருவார்கள் அம்மா. கூட்டுக்குடும்பத்தில் பெரியப்பா, சித்தப்பா என்பதெல்லாம் அடையாளம் சொல்லி அழைப்பதற்காகவே இருக்கும். பெரியப்பாவும், எனது அப்பாவும் எல்லோருக்கும் அப்பாக்களே. ஆஸ்ரம அப்பா என்பது எனது பெரியப்பாவைக் குறிக்கும். அவர் காந்திநிகேதன் ஆஸ்ரமத்தில் சமையல் வேலை செய்து வந்தார் . அதனால் அந்தப் பெயர். பெரியம்மாவும், அம்மாவும் அம்மாவே. அப்பாவிடம் சொல்லி ஒரு காரியம் ஆகவில்லையெனில் பெரியப்பாவிடம் சொல்லி சாதிக்கப்பார்ப்போம். பெரும்பாலும் நடக்காது. எனது அப்பாவிற்கு பெரியப்பாவின் முதல் மகள் மற்றும் கடைசி பையன் மீதும் உயிர். அப்பாவிடம் நான் திட்டுவாங்குவதற்கு அவந்தான் காரனம். காலையில் எழுந்து பட்டையை போட்டுக்கொண்டு தெய்வப்பழம்போல இருப்பான். அவன் குளித்து கோவிலுக்கு போய்விட்டு வந்த பின்னர்தான் நான் படுக்கையில் இருந்தே எழுவேன். படிப்பிலும் பயங்கர கெட்டி அவன். நான் 50 பேர் கொண்ட வகுப்பில் கீழிருந்த 5வது ஆள். கூட்டுக்குடும்பத்தில் குழந்தைகளுக்குள்ளாக நடக்கும் வழக்கமான போட்டிகள், சண்டைகள் எல்லாம் உண்டு. அம்மாவிற்கு என்மீது பெரிய எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லை. ஆனல் நான் எப்படியாவது “ காலை ஊன்றிவிட வேண்டும்” என்பதற்காக எங்கள் தெரு ஆஞ்சநேயரிடம் சண்டை போட்டுக்கொண்டிருப்பார், பையனுக்கு ஒரு வழி செய்யக்கூடாதா என. எனது அண்ணன் ஆரம்பத்தில் இருந்தே அவரது கல்வியில் ஆரம்பித்து, வேலைவரை எதுவுமே அப்பாவிடம் கேட்ட்தில்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே ஒவ்வொரு பாடத்துக்கும் ஜாதிக்கொரு நோட்ஸ் வைத்திருப்பேன். அப்படியும் 272 மார்க்தான் பத்தாம் வகுப்பில். அது ஒரு குறை அம்மாவுக்கு. பின்னர் 12ம் வகுப்பில் உருப்படியாய் படித்ததில் கொஞ்சம் சந்தோஷம். பின்னர் கல்லூரி முடித்துவிட்டு ஆண்டிற்கு சராசரியாக மூன்று கம்பெனிகள் மாறிக்கொண்டே இருந்ததில் நான் என்ன ஆவேனோ என்ற கவலை. என்னைப்பற்றி மட்டுமே எப்போதும் கவலையில் இருந்த அம்மாவுக்கு நான் வெளிநாட்டில் வேலைக்குச் சென்று ஒருவருடம் தொடர்ச்சியாய் இருந்தபின்னர்தான் பையன் இனிமேல் பிழைத்துக்கொள்வன் என நம்பிக்கை பிறந்தது. வேலையற்று இருக்கும்போது அம்மாவிடம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பேன். உனக்கு என்னம்மா வேனும் என .. அம்மாவுக்கு காசு மாலை போட்டுக்கொள்ள வேண்டும் என அதிக நாள் ஆசை. அதை நிறைவேற்றினோம்( நானும், அண்ணனும் சேர்ந்து) கைநிறைய காசு வேண்டும். அதையும் எப்போது எவ்வளவு கேட்டாலும் நிறைவேற்றினோம். இதற்கு ஒரு காரணமும் உண்டு. கூட்டுக் குடும்பம் என்பதினால் எனது அப்பாவின் சம்பளம் முழுக்க பள்ளிக் கூட செலவுக்கும், வீட்டுச் செலவுக்குமே சென்றுவிடும். அம்மாவிடம் காசு என ஒன்றும், இருக்காது. கனவன் கை நிறைய சம்பாதித்தும், தன்னிடம் காசு இல்லையே என்ற குறை இருந்து கொண்டே இருந்தது. அது எங்களால் தீர்ந்தது. எங்கள் தலைமுறையினரில் முதல் திருமணம் எங்கள் அக்காவிற்கு நடந்தது 1989ல். கல்யாணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்றார்கள் எங்கள் அக்கா. (பெரியப்பா மகள்) முதல் ஆறுமாதம் எப்படி இருக்கிறாளோ, என்ன செய்கிறாளோ என எனது பெரியம்மாவைவிட அனது அம்மாதான் புலம்பிக்கொண்டிருந்தார்கள். வெள்ளந்தித்தனத்திற்கும் எனது அம்மாதான் உதாரனம். வெளியுலகம் குறித்த எந்த அனுபவமும் இன்றி இருந்தார்கள். வீட்டிற்கு முதன்முதலாய் தொலைபேசி வந்தது. வீட்டில் யாருமில்லாத சமயத்தில் மணி அடிக்கவும் அம்மா சமையல்கட்டில் இருந்தபடியே “இருங்க வாரேன்” எனச் சொல்ல மணி பாட்டுக்கு தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது. அதான் வாரேன்னு சொல்றேன்ல என தொலைபேசியை அன்புடன் கோபித்துக்கொள்வதற்குள் மணியடிப்பது நின்றுவிட்டது. இதை சொல்லிச் சொல்லியே அம்மாவை கிண்டல் செய்து கொண்டிருந்தோம். அதேபோல பெரியம்மாவுக்கும், அம்மாவுக்குமான சண்டைகள்.. எதிலும் பெரியவர்கள் யாரும் எனது குழந்தை எனவோ, என் மனைவியை ஏன் சொன்னாய் என்றோ சண்டை போட்டுக்கொண்டதில்லை. அதையும் கலகலப்பாக்கி விடுவார்கள். சண்டை ஆரம்பித்த உடன் அப்பா சொல்வது இதெல்லாம் சண்டையா.. ரெண்டு பேருக்கும் ஆளுக்கொரு கம்பைக் குடுத்து ரூமில அடைங்கடா. யாராவது ஒருத்தர் வெளியே வரட்டும் என்பார். அம்மா, பெரியம்மா சண்டையின் ஆயுசு அடுத்த காபி போடும் வரைக்கும்தான்.. ஏ லக்‌ஷ்மி காபி போடேன் என பெரியம்மாவோ அல்லது வேனி காபி போடேன் என அம்மாவோ சொல்வதுடன் அந்த பழைய சண்டை முடிவுற்று நீதான் இன்னிக்கு ஒரு நாளைக்கு காபி போடேன் என பெரியம்மாவை அம்மா சத்தம் போடுவதிலிருந்து அடுத்த சண்டை ஆரம்பமாகும். அது இரவு உணவுக்கு அமரும் வரைதான். அதன்பின்னர் குளம்பு புளிப்பு என்பதற்கோ, மோர் அநியாயத்திற்கு புளிக்கிறது என்பதற்கோ அடுத்த சண்டை ஆரம்பிப்பதில் முதலில் இருந்த சண்டை முடிவுக்கு வரும். வீட்டிற்கு புதிதாய் யாராவது வந்தால் இன்றோடு இந்தக் குடும்பம் இரண்டாகப் போகிறது என நினைப்பார்கள்..அப்படி சண்டை நடக்கும். ஆனால் அதன் ஆயுள் அரைமணி நேரம் மட்டுமே என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். எனது காலஞ்சென்றுவிட்ட பாட்டிக்கு அம்மாவைக் குறை செல்வது ஒரு பொழுதுபோக்கு. எனது பாட்டிதான் எனது அப்பாவை எடுத்து வளர்த்தார் என்பதால் அவரது சவுண்டுக்கு அப்பாவிடம் பயங்கர மதிப்பு இருக்கும். பாட்டியை திருப்திப் படுத்த அம்மாவை திட்டுவார். பாட்டி எனது அம்மாவை மட்டும் திட்டுவதில்லை. நேற்று பிறந்த குழந்தை முதல் எனது தாத்தா வரை எல்லோருக்கும் சமமாக திட்டுக்களை பகிர்ந்தளிப்பார். அவரது மகளை அதாவது எனது பெரியம்மாவை அவர் திட்டுவதைப் பார்த்தால் மாமியார் மருமகள் சண்டை என நினைத்துக் கொள்வார்கள். இப்படி எல்லோரிடமும் திட்டும் வாங்கிக்கொண்டு, அப்பாவின் அனுசரனையும் முழுதாய் இல்லாமல் இருந்தாலும உடலில் வலு இருந்தவரை சமைப்பதில் எந்தக் குறையும் இன்றி செய்தார்கள். உடல்நிலை குறித்த சரியான அக்கறையின்மை சர்க்கரை வியாதியையும், ரத்தக் கொதிப்பையும் கொண்டுவந்தது. எல்லா வைத்தியங்களும் செய்தோம். 2012, ஏப்ரல் 14ம் தேதி சர்க்கரை அளவு அதிகமாகி கோமா நிலைக்கு சென்றுவிட்டார்கள். உடனே மருத்துவமனையில் சேர்த்து கிட்டத்தட்ட 21 நாட்கள் மதுரை அப்பல்லோ மருத்துவர்கள் போராடியும், மேமாதம் 5ம் தேதி இரவு 10.40க்கு எனது தாயார் காலமாகிவிட்டார்கள். கடந்த ஒரு வருடமாகவே அதிகப்ட்சமாக வீட்டிற்குள் மட்டுமே நடமாடிக்கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்சகாலம் உயிரோடிருந்திருந்தால் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும். இறைவன் அம்மாவுக்கு 74 வயது போதும் என நினைத்துவிட்டான். ஜெயக்குமார்

13 comments:

M.Rishan Shareef said...

அன்பின் நண்பருக்கு,

உங்கள் பதிவு மிகவும் வருத்தத்தைத் தருகிறது. அம்மாவுக்காக எனது ஆழ் மன இரங்கல்கள். இத் துயரத்திலிருந்து மீண்டு வர இறைவன் உங்களுக்கு வல்லமை தரட்டும் !

Rathnavel Natarajan said...

அம்மா என்றால் அன்பு - அருமை, மனதை நெகிழ வைக்கிறது திரு ஜெயகுமார் அவர்களின் பதிவு.
நன்றி திரு ஜெயகுமார், அற்புதம்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். மிக்க நன்றி.
Keep it up.

கானகம் said...

ரிஷான்.. நன்றி

ரத்னவேல் நடராஜன் - நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவு மனதை மிகவும் நெகிழ வைத்தது !

கானகம் said...

மிக்க நன்றி தனபாலன்.. வருகைக்கும், கருத்திற்கும்.

snkm said...

நெகிழ வைக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்.

கானகம் said...

இரங்கலுக்கு நன்றி எஸ்.என்.கே.எம்..

பத்மகிஷோர் said...

மிகுந்த கிலேசம் கொண்டேன், அஞ்சலிகள்.

கானகம் said...

பத்மகிஷோர்..அஞ்சலிகளுக்கு நன்றி. நீங்கள் இன்னும் நிறைய எழுதலாம்.

giri said...

அன்பு நண்பரே...உங்கள்எழுத்தானது நல்ல எழுத்து நடையைகொண்டுள்ளது , பாராட்க்கள் . - அம்மாவுக்கு நிகர் அம்மாதான்.அம்மாமரணம்எவரையும் காயப்படுத்தும்அதை தாங்கிட கடவுள் உங்களுக்குமனதிடம்கொடுக்கட்டும்

மூர்த்தி, லா ரோஸ் said...

தல,
ஒரு கூட்டுக் குடும்பத்தில் வளரவில்லையே என்ற ஏக்கத்தையும் அதில் பெண்களின் மகத்தான பங்களிப்பையும்,தங்கள் தாயின் பிரிவையும் ஒருங்கே உணர வைத்தது உங்களின் பதிவு. என்ன தான் நீங்கள் பகடி கலந்து எழுதி இருந்தாலும் உங்களின் துக்கத்தை அறிய முடிகிறது.
என்ன செய்ய? ஆறாத வேதனைகளை எல்லாம் எழுத்தின் மூலம் தான் கடக்க வேண்டி இருக்கின்றது.
தங்கள் தாயாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்
அன்புடன்
மூர்த்தி, லா ரோஸ்

கானகம் said...

கிரி, வருகைக்கும், ஆறுதல் வார்த்தைக்கும் நன்றி.

மூர்த்தி - உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி.

பிரகாஷ் said...

லட்சுமி அத்தையின் பிரிவு மிகவும் வருத்தமளிக்கிறது. ஈடுசெய்யவே முடியாத ஒரு பேரிழப்பு. எதிர் வீட்டில் இருந்த நான் எப்போது உங்கள் வீட்டுக்கு சென்றாலும், அவரை நான் பார்த்தது சமையலறையில் தான். விருந்தோம்புதலில் அவரை மிஞ்ச யாராலும் முடியாது. நீ வெளியூர் / வெளிநாடுகளில் வேலை பார்க்கையில், அவரிடம், குமாருக்கு லெட்டர்/ இ மெயில் போடுறேன்., என்ன சொல்லணும் என்கிற என் கேள்விக்கு, “ அவன ஒழுங்கா வேளா வேளைக்கு சாப்பிட்டு, உடம்பப் பாத்துக்கச் சொல்லு! எப்ப இங்க வருவான்னு கேளு” என்கிற பதிலையே எப்போதும் கொடுப்பார். கனிவும்,விட்டுக் கொடுத்தலையுமே தன் வாழ்வின் அடிநாதமாகக் கொண்டிருந்தார். எங்கள் வீட்டின் எந்த விசேஷத்திலும், எல்லா நவராத்திரி பூஜைகளிலும், ஆரத்தி எடுக்கையிலும் ஒலிக்கும் முதல் பாடல் அவருடையதே. உன் அப்பாவுக்கு பெங்களூர் சீதோஷ்ணம் ஒத்துக் கொள்ளாத காரணத்தால், உன் பெற்றோர் இருவரையும் பெங்களூருக்கு அழைத்து வந்து, என்னுடன் இருக்கச் சொல்லி, அவர்களை கவனித்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காதது என் துரதிர்ஷ்டமே. லட்சுமி அத்தையின் ஆன்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்.