Monday, December 28, 2009

சொல்வனம் - இசைச் சிறப்பிதழ் குறித்து..


வலையுலகமெலாம் மொக்கைகளின் பின்னாலும், நுன்னரசியல்களின் பின்னாலும் சென்று அறிவியல் தந்த வசதியை வெட்டி அரட்டைகளாக ஆக்கி வைத்திருக்கும் இந்த சூழ்நிலையில், தமிழில் உருப்படியான வலை இதழ்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் ஒன்று சொல்வனம் என்பதை நிச்சயம் சொல்லலாம்.


மாதமிருமுறை, வித்தியாசமான கட்டுரைகளையும், முயற்சிகளையும், அபூர்வமான கலைஞர்களையும், அறிவியலையும் நமக்குத் தருவதில் காட்டும் முனைப்பில் அவர்களது சமூக அக்கறை புலப்படுவதைக் கானலாம்.


அதன் தொடர்ச்சியாக இந்த இதழை சொல்வனம் “இசைச் சிறப்பிதழ்” ஆக தயாரித்துள்ளது. நமது வாராந்தரிகளைப் பொருத்தவரை ”இசைச் சிறப்பிதழ்” என்றால் என்னென்ன வாத்தியங்கள் உண்டோ அவைகளைப் பற்றிய சிறுகுறிப்பும், அதை நடிகையர் வைத்திருப்பதுபோல படமிட்டும் வெளியிடுவது மட்டுமே. பெரிய பத்திரிக்கைகள், அதிகம் விற்கும் பத்திரிக்கைகள் என தங்களை அழைத்துக்கொள்ளும் குமுதம், விகடன் போன்ற இதழ்களும் இப்படித்தான் வெளியிடுகின்றன. விதிவிலக்குகளாக சில நல்ல கட்டுரைகள் வந்துவிடுவதும் உண்டு. இந்த மாதிரியான வணிக சூழ்நிலையில் , வலைப் ப்த்திரிக்கை ஒன்றில் இசையைப் பற்றி இப்படி ஒவ்வொரு கட்டுரையையும் மிக நேர்த்தியாக எழுதப்பட்டு, ஒரு நல்ல இசை ரசிகனுக்கு என்னெவெல்லாம் பிடிக்குமோ, அதை தரமான முறையில் வாசகர்களுக்கு வழங்கி இருக்கிறது சொல்வனம் குழு.


சேதுபதி அருணாச்சலம் எழுதிய பட்டம்மாள் ஒரு சமூக நிகழ்வு என்ற கட்டுரையில், எப்படி இன்றைய தலைமுறைக்கு நமது முந்தைய தலைமுறையின் இசையுலகின் அரசியைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் கூட இல்லாமல் நமது ஊடகங்கள் திரைப்படங்கள் மூலம் சமூகத்தை மழுங்கடித்து வைத்திருக்கிறது என்பதையும், சாதீய ரீதியான உணர்வு எப்படி தகுதியுள்ள ஒருவரை அவரது மறைவின்போது கூட புறக்கனிக்கச் செய்துவிட்டது எனபதைப் பற்றி அக்கறையுடனும், தற்போதைய தமிழ் சமூகம் குறித்தான கவலையுடன் எழுதியிருக்கிறார்.

வழக்கம்போல இலங்கை தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ”தாமரை பூத்த தடாகம்” என்ற கட்டுரையில் அவரது இளமைக் காலங்களில் அவருக்கிருந்த இசையுடனான அனுபவங்களை நல்ல நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறார்.


அதில் ஓரிடத்தில்

//தனக்குப் பக்கத்தில் ஒருத்தன் நின்று மினக்கெட்டு சுருதிப்பெட்டியை இந்த அமத்து அமத்துகிறானே, இவனுடன் கொஞ்சம் ஒத்துப்போவோமே, என்றெல்லாம் வேலுச்சாமி நினைக்கவில்லை. அவன் தன் பாட்டுக்கு பாடினான். நான் என் பாட்டுக்கு சுருதிப் பெட்டியை போட்டேன். அன்று வானொலியில் பாடியபோது அவன் பாட்டுக்கு பக்கத்து பக்கத்தில் தனியாக ஒலித்த சுருதி நான் உண்டாக்கியதுதான்.//

//அதன் பிறகு எப்படியோ செய்தி பரவி ஒருவரும் என்னை சுருதிபோட அழைக்கவில்லை. நானும் அதை பெரிய இழப்பாக கருதவில்லை. ஏனென்றால் நான் அப்பொழுது இசைப்பருவத்தை தாண்டி இன்னொரு பருவத்துக்குள் நுழைந்துகொண்டிருந்தேன்//

எனற தனது இசை அனுபவத்தை நகைச்சுவையுடன் பதிவு செய்கிறார்.


பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”க் கட்டுரையில் எப்படி ஒரு நல்ல இசையை அனுபவிக்க சங்கீதம் தெரிந்திருக்க வேண்டியதில்லை என்பதை தனது வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாகவே நமக்குக் காட்டுகிறார். தனது குட்டிக்கு பால் தராத ஒரு ஒட்டகம எப்படி இசைக்கு மயங்கி தாயுணர்வுடன் தனது குட்டிக்கு பால் தந்தது எனபதை குறித்தான ஒரு மங்கோலியத் திரைப்படம் குறித்து சொல்லும்போது இசையின் வலிமையை குறிப்பால் உனர்த்துகிறார்.


ரா.கிரிதரன் எழுதிய ”எப்படிப் பெயரிட” ( How to name it?") என்ற இளையராஜாவின் அருமையான இசைமுயற்சி எப்படி கண்டுகொள்ளப்படாமலேயே போனது என்பது குறித்தும், அதன் சிறப்பு குறித்தான கட்டுரை என்னைப்போன்ற இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு பூஸ்ட்டாக இருக்கும்..


ஒரு நல்ல நாதஸ்வர இசையில் மனம் கரையும் ஒரு வெள்ளையனைப் பற்றிய ஒரு கதை தி.ஜானகிராமனின் ”செய்தி” கதையிலும், இன்றைய சபாக்களில் பாடும் இசைக்கலைஞர்களின் தரம் குறித்தும், அவர்களது இசை அறிவு குறித்தும், சபாக்களில் பாட கிடைக்கும் வாய்ப்புகளுக்கு பின்னிருக்கும் அரசியல் பற்றியும் அங்கதமான நடையில் தேசிகன் எழுதியுள்ள “கல்யாணி” கதையும், ராமன்ராஜாவின் வழக்கமான அதிரடி நகைச்சுவையுடன் கூடிய அறிவியலைக் கலந்துதரும் ”வயலின் 35 லட்சம் டாலர், வசூல் 32 டாலர்” கட்டுரையும் வாசகர்களை அதிகம் கவரும்.

இதுதவிர கர்நாடக இசைப்பிரியர்களுக்கென எழுதப்பட்டுள்ள பல அரிய தகவல்களை உள்ளடக்கிய பல கட்டுரைகளும் இருக்கின்றன.

மொத்தத்தில் சொல்வனத்தில் இதுவரை வெளியான இதழ்களில் இந்த இசைச் சிறப்பிதழ் ஆகச்சிறந்த சொல்வனம் இதழ்களில் ஒன்றாக இருக்கும். இனிமேல் வரும் இதழ்கள் இதையும் விஞ்சும்படி தயாரிக்கவேண்டிய சோதனை சொலவனம் குழுமத்தாருக்கு...

ஆதரித்து, வாழ்த்த வேண்டிய இதழ் சொல்வனம் எனபதில் சந்தேகமில்லை..

No comments: