Sunday, July 12, 2009

வெளிநாட்டிற்கு வருகிறீர்களா??

வெளிநாட்டிற்கு குறிப்பாய் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக வரும் நண்பர்களுக்காக எனது பதிவு இது....

திரைகடல் ஓடியும் திரவியம் தேட முடிவெடுத்ததே மிகப் பெரிய சாதனைதான்.. வேலைக்கு வந்து இறங்கும் முன்னர் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என நான் நினைப்பதை இங்கு பதிந்திருக்கிறேன். நான் குறிவைத்து எழுதுவது நடுத்தர மக்களைப் பற்றியும் கடைநிலை மக்களைப் பற்றியும் மட்டுமே...

கம்பெனியைப் பற்றி..

வேலைசெய்யப்போகும் கம்பெனி பற்றிய முழு விபரங்களையும் அவர்களது வலைப்பக்கத்தில் தேட முயலுங்கள். அதைவிட நம்பகமானது நண்பர்களின் நண்பர்கள் அல்லது நமது நண்பர்கள் யாராவது அங்கு வேலை செய்வார்கள்.. அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது மிகவும் நல்லது..

முக்கியமாய் தெரிந்து கொள்ள வேண்டியது..

01. சொல்லும் சம்பளத்தில் எதுஎதெல்லாம் சேர்த்து இந்தத் தொகை அல்லது சொல்லப்பட்டது சம்பளம் மட்டுமா? இதர படிகள் எல்லாம் தனியானதா??

02. ஒண்டிக்கட்டை எனில் சாப்பாடுக்கு அவர்களே ஏற்பாடு செய்து விடுவார்களா?? இல்லை நமக்கு அலவன்ஸ் என்ற ஒரு தொகை கொடுத்து விட்டு அதில் நாமே சமைத்தோ அல்லது வெளியிலோ சாப்பிட்டுக் கொள்ள வேண்டுமா???

03. தங்குமிடம் எப்போதும் இலவசம்தான்.. ஆனால் அது ஒன்டிக்கட்டையாய் (Bachelor) இருக்கும்போது..

ஃபேமிலி ஸ்டேட்டஸ் (Family Status) தருகிறோம் என்று நேர்முகத் தேர்வில் சொல்லும் கம்பெனிகளிடம் உஷாராய் இருங்கள். கம்பெனியே குவார்டர்ஸ் தரும் அளவு பெரிய கம்பெனிகள் எனில் மிகவும் நல்லது. இல்லையெனில் அந்தந்த நாட்டின் நிலாரத்தைப் பொறுத்து வீட்டு வாடகை கேட்கலாம்.. உதாரனமாக கத்தாரில் சம்பளம் ஆறாயிரமும் வீட்டு வாடகை மூவாயிரமும் தருகிறேன் என்று உங்கள் கம்பெனி சொன்னால் இந்தியாவில் இருக்கும் நமது வீட்டைப் போல இருக்கும் ஒரு வீட்டில்தான் தங்கப் போகிறோம் என்பதை உங்கள் மனைவிக்கு சொல்லியே அழைத்து வாருங்கள். குளிர்பதனம் மட்டும் கூட இருக்கும் நம் வீட்டைக் காட்டிலும்..அவ்வளவே..

04. சாதாரனமாக குடித்தனம் செய்ய ஆயிரத்தி ஐநூறு முதல் இரண்டாயிரம் கத்தாரி ரியால்கள் தேவைப்படும். இதை நீங்கள் சம்பளத்திலிருந்துதான் கொடுப்பீர்கள்.

விசாக்கள்.(Visas)

இரண்டு விதமான விசாக்கள் வேலைக்கு வருபவர்களுக்கு தருகிறார்கள்.

விசிட் விசா அல்லது பிசினஸ் விசா:- ( Visit or Business Visa)

ஒரு முறை வந்தால் ஒரு மாதம் வரை தங்கிக் கொள்ளும் வகையிலும் அதன் பின்னர் இரண்டு மாதங்கள் வரையிலும் தங்கல் நீட்டிப்பு செய்துகொள்ளவும் முடியும். பொதுவாக இந்த விசாக்களில் வருபவர்கள் வேலை செய்து வருவாய் ஈட்டக்கூடாது.. யாரும் கண்டுகொள்வதில்லையாதலால் பலர் இந்த விசாவில் வந்து வேலையும் செய்து கொண்டு புதிய நிரந்தர வேலைகளைத் தேடுகின்றனர்.

ரெசிடெண்ட் விசா அல்லது வொர்க்கர் விசா:- ( Employment)

இதில் ஒருவர் குறைந்த பட்சம் இரண்டாண்டு காலம் வேலை செய்வதற்கு உறுதி அளிக்கும். குடியிருக்கும் காலம் ( Duration of Residence) இரண்டாண்டுகள் எனறு விசாவிலும் போட்டிருக்கும். அப்படிப் போடவில்லையெனில் அது ரெசிடெண்ட் அல்லது வொர்க் விசா அல்ல..மேலும் உங்களுக்கு என்ன பிரிவில் விசா எடுக்கிறார்களோ அதே மரியாதைதான் அரசு அலுவலகங்களில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்கில் பட்டம் பெற்றிருப்பீர்கள். இஞ்சினியர் வேலைக்குத்தான் உங்களை எடுத்திருப்பார்கள். ஆனால் அவர்களிடம் எஞ்சினியர் விசா இல்லாத காரனத்தால் இருக்கும் விசாக்களில் ஒன்றை ( ஃபோர்மென், மெக்கானிக் இப்படி சில) உங்களுக்கு கொடுத்து விடுவார்கள். அதற்குண்டான மரியாதைதான் அரசு அலுவலகங்களில் கிடைக்கும்.

வேலைக்கான விசாவில் உங்கள் பதவி பற்றி தெளிவாக இல்லையெனில் என்ன ஆகும் என்பதை விளக்கும் கற்பனைக் கதை இது...

துபாய் மிருகக் காட்சி சாலைக்கு ஒரு சிங்கம் வந்தது.. எல்லாம் குளிர்பதனம் செய்யப்பட்ட சுத்தமான கூண்டு, சிங்கத்திற்கு மிக்க மகிழ்ச்சி...முதல் நாள் அதற்கு இரண்டு வாழைப்பழம் மட்டும் கொடுத்தர்கள். சிங்கம் நினைத்துக் கொண்டது.. இடம் புதுசில்லையா..சாப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா பழக்கப்படுத்துறாங்க.. இன்னும் ரெண்டு மூனு நாளில் இறைச்சியைப் போடுவார்கள் என நினைத்துக் கொண்டது. ஒரு வாரம் ஆன பின்பும் இரண்டு வாழைப்பழம் மட்டும் போட்டவுடன் காட்டுராஜாவுக்கு கோபம் வந்து நான் யார் தெரியுமா?? சிங்கம்.. எனக்கு எதற்கு வாழைப்பழ்ம் போடுகிறீர்கள் என கர்ஜித்தது.. உடனே மிருகக்காட்சி சாலை பனியாள் சொன்னார் ”இருக்கலாம்..ஆனால் நீ வந்திருப்பது குரங்கு விசாவில்” எனவே இதுதான் உனக்குக் கிடைக்கும் என்றாராம்.

விசாவில் கவனிக்க வேண்டியவை:-

01. உங்களது ஆங்கிலப் பெயர் ( பாஸ்போர்ட்டில் உள்ளபடி)

02. உங்களது பாஸ்போர்ட் எண்.

03. உங்களது பிறந்த தேதி

04. உங்களது பாஸ்போர்ட் காலாவதியாகும் நாள், ஆண்டு

05. உங்களை வேலைக்கு எடுத்துள்ள பதவி அல்லது அதை ஒட்டிய பதவி..

இந்த முதல் நான்கு தகவல்களும் பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டபடி விசாவில் இருக்க வேண்டும். இதில் எந்த தவறு இருப்பினும் நீங்கள் செல்லும் நாட்டின் குடியமர்த்துதல் துறையோ, அல்லது விமானக் கம்பெனிகளோ உங்களை அனுமதிக்க மறுக்ககும். எனவே இதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

முதலில் விசிட் விசாவிலும் அங்கு போன பின்பு ரெசிடெண்ட் விசாவும் மாற்றித் தருகிறோம் என்று சொல்லும் ஏஜெண்டுகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். இப்படி மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு ஐம்பது சதவீதம் மட்டுமே.

உங்களிடம் இருக்கும் விசா அசல்தானா என்பதை அந்தந்த நாட்டின் அரசு வலைப்பக்கத்தில் சோதித்துக் கொள்ளலாம்

ஏஜெண்டிடமோ அல்லது நீங்கள் வேலை பார்க்கப் போகும் கம்பெனியிடமோ உங்களது அசல் சான்றிதழ்களை எப்போதும் தராதீர்கள். அப்படி கண்டிப்பாய் வாங்கி வைத்துக் கொள்ளும் கம்பெனிகளிடம் அசல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டதற்கு அத்தாட்சி கேளுங்கள். அத்தாட்சி இல்லாமல் நீங்கள் இந்திய தூதரகத்திலோ, அல்லது போலிஸ் ஸ்டேஷனிலோ சென்று கம்பெனிக்கு எதிராக புகார்கூட கொடுக்க முடியாது. உங்கள் பாதுகாப்பில் இருக்கும்போது தொலைந்ததுபோல கருதப்பட்டு ஏகப்பட்ட கெடுபிடிகளுக்குப் பின்னர் கிடைக்கவில்லை என்ற சான்றிதழ் தரப்படும்.

உங்களது வேலைக்கான் ஒப்பந்தத்தை ( Employment Agreement) இந்திய தூதரகத்திலும், அந்தந்த நாட்டின் தொழிலாளர் நலத்துறையிலும் அட்டெஸ்டேஷன் செய்து தரும்படிக் கேளுங்கள். இது கட்டாயமும் கூட.. பெரும்பாலானவர்கள் இதைச் செய்வதில்லை. இதைச் செய்யாமல் வாய்மொழி உறுதிமொழிகளோ, அல்லது உங்கள் ஏஜெண்ட் தரும் எழுத்து உத்திரவாதமோ இந்த நாட்டில் செல்லாது.

உங்கள் விசா சம்பந்தமான செலவுகள், இந்த நாட்டில் வந்த பின்பு ஏற்படும் அரசாங்கச் செலவுகள் அனைத்தும் கம்பெனியையே சாரும். உங்களிடம் அவர்கள் வசூல் செய்ய விட்டுவிடாதீர்கள்.

இந்தியத் தூதரகம்:-

இந்தியத் தூதரகம் எங்கிருக்கிறது என்ற தகவலையும் அதன் தொலைபேசி என்களையும் எப்போதும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் வந்தவுடன் அங்கு சென்று உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஆத்திர, அவசரத்திற்கு உதவும்.

வெளிநாட்டில் நடந்துகொள்ள வேண்டியவைகளில் முக்கியமானது..

நம்மூரில் ஒரு பழமொழி உண்டு.. பகலில் பக்கம் பார்த்துப் பேசு.. ராத்திரி அதுவும் பேசாதே என்று. நம்ம ஊருக்கே இப்படி என்றால் வெளிநாட்டில் வந்த பின்பு நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை விட்டுவிட்டு உள்ளூர் அரசியல், மற்றும் அரசர், அவர்களது வேலை செய்யும் முறை, மதசம்பந்தப்பட்ட வழிபாட்டு முறைகள் இதிலெல்லாம் தலையிடாமலும், கருத்து சொல்லாமலும் இருக்க வேண்டும்.


போலிஸ்:-

லஞ்சம் வாங்காத போலிசுகள்தான் இங்கு...எனவே என்ன பிரச்சினை என்றாலும் நீங்கள் இங்கு செல்லலாம்.. கம்பெனி உங்களுக்கு அநியாயம் செய்து விட்டது என நினைக்கும் பட்சத்தில்.. கம்பெனிக்கு உள்ளேயே என்றால் மேலதிகாரிக்கு தகவல் சொல்லி விட்டு பின்னர் போலிஸ் ஸ்டேஷன் செல்லலாம்..

லேபர் டிபார்ட்மெண்ட்:-

உங்களது வேலைக்கான ஒப்பந்தத்தில் எழுதப்பட்டு கம்பெனி உங்களுக்குத் தராமல் இருக்கும் எந்த விஷயத்திற்கும் இங்கு அனுகலாம்.. உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் வெற்றி உங்களுக்கே.

இது தவிர வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டமிடுங்கள் .. தகவல் தெரிவிக்கிறேன்.

ஆல் தி பெஸ்ட்...

1 comment:

M.Rishan Shareef said...

மிக மிக நல்லதொரு, பயனுள்ள பதிவு.