Wednesday, December 31, 2014

மோதியும் நிருபரும்..(குஜராத் கலவரத்தை முன்வைத்து)

இவரும் அரசியல்வாதிதான்.. மாநில முதலமைச்சர்தான்.. இவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.. எங்கேயும் ஓடி ஒளியவில்லை. அவசியமின்றி வாய்தா எதுவும் கேட்கவில்லை. வழக்கை முழுமையாக சந்தித்தார். அவரை முழுதும் வீழ்த்திவிட அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, பொய்சாட்சிகளை வைத்து இல்லாததும் பொல்லாததும் சொல்ல வைத்தனர். அத்தனையையும் உண்மையால் வென்று மோதி குற்றமற்றவர் என உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். மக்களும் அவரை பிரதமர் ஆக்கினார்கள். அதன் பின்னரும் இந்த காசுக்கு குரைக்கும் மீடியா நாய்கள் விடாமல் அவரை துரத்துவது நடந்துகொண்டுதான் இருந்தது. 

அந்த நேரத்தில் ஒரு நிருபர் அப்ரண்டீஸ் மிகப்பெருந்தன்மையாக நடந்து கொள்ள அறிவுரை சொல்வதாக நினைத்து “ போனது போகட்டும், நடந்ததற்கு மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன், மேலும் முன்னேறுவோம் என நீங்கள் ஏன் சொல்லக்கூடாது என மோடியைப் பார்த்துக்கேட்கிறார்.. 

அதற்கு மோடியின் பதில்...(ஆங்கிலத்தில்) நான் ஏதும் தவறு செய்திருந்தால் எனக்கு தண்டனை வேண்டும். ஒரு படி மேலேயே கேட்கிறேன்.. மேலும், இந்தியாவில் குற்றவாளிகளுக்கு வாய்ப்பளிக்காதீர்கள். அவர்களுக்கு தண்டனை கொடுங்கள். (இதன் பின்னர் ஹிந்தியில் பேசியது) மோதி தவறிழைத்திருந்தால், மோதிக்கு தண்டனை கிடைக்க வேண்டும். நீங்கள் ஏன் இந்த பாவிக்கு மன்னிப்பு வழங்கப்பார்க்கிறீர்கள் எனப்புரியவில்லை.அதில் உங்களுக்கு என்ன லாபம்? மோதியை ஏன் மன்னிக்கிறீர்கள்? நிச்சயம் (மன்னிக்க)கூடாது. மோதிக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். 125 கோடிப்பேர் பார்க்க இந்த ஆள் இப்படிப்பட்ட குற்றங்கள் இழைத்தார், அதனால் இந்த தண்டனை கிடைத்துள்ளது (எனத்தெரியும்படி தண்டனை வாங்கிக் கொடுங்கள்) அடுத்து வரும் 100 ஆண்டுகளுக்கு இன்னொருவர் இப்படி தப்பு செய்யாதபடிக்கு அப்படி செய்யுங்கப்பா...இப்படி மோதியை மன்னிக்கிற வேலையையெல்லாம் செய்துகொண்டிருக்காதீர்கள்.. நேராகவே சொல்கிறேன். இப்படிப்பட்ட வேலையைச் செய்யாதீர்கள். (அதற்கு பதிலாக) என்.டி.டி.வியுடன் கைகோர்த்து மோதிக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க பிரச்சாரம் செய்யுங்கள், அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். 




 இந்தியாவுல எத்தனை அரசியல்வாதிகளுக்குய்யா இந்த தில்லும், திமிரும், முதுகெலும்பும் இருக்கு? இவருக்கு இந்த தில்லும், திமிரும், முதுகெலும்புள்ளவனின் பதிலுமாக இருக்க காரனம் மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை. 

Tuesday, December 30, 2014

தமிழக முக்கிய செய்திகள். (நவம்பர் 2014)


01. நாடாளும் மக்கள் கட்சியின் பல லட்சம் தொண்டர்களுடன் காங்கிரஸில் இணைந்த கார்த்திக்கால் தமிழக அரசியல் நிலவரமே மாறிவிட்டதாகவும், அவரை அதிமுக, திமுக இரண்டும் தங்கள் கூட்டணியில் இணைய வ்ரும்படி தூது அனுப்பி இருப்பதாக கழுகார் / ஆந்தையார் / பூனையார் / எலியார் / பன்றியார் தெரிவிக்கின்றனர்.

02. வாசன் தனிக்கட்சி தொடங்கியதால் காங்கிரஸின் கோஷ்டிகளில் ஒன்று குறைந்ததாக காங்கிரஸ் கோஷ்டி மேய்ப்புக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இனி அவர் தனிக்கட்சி கோஷ்டி என்ற பிரிவின் கீழ் செயல்படுவார் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. 

03. பாஜகவின் தமிழிசை சவுந்தர்ராஜன் புதுக்கட்சி வரவேற்புக்குழு தலைவராக தன்னிச்சையாக நியமித்தது செல்லாது என அறிவித்துள்ளது, தமிழக தமிழிசை எதிர்ப்புப்பிரிவு பாஜக. 

04. கரடியே காரித்துப்பிய கட்சிகளில் தாங்களே முடலிடம் என திமுகவும் ( பாமக மற்றும் மதிமுக கரடிகள் துப்பியதால்) நாங்களே என பாஜகவும் ( வாசன் கரடி துப்பியதால்) அறிவித்துள்ளன. 

05. மக்கள் முதல்வரே இன்னும் ஆட்சியில் இருப்பதாகவும் தமிழக முதல்வர் என்ற பதவி இன்னும் உருவாக்கப்படவில்லை என்றும் ஏஜென்ஸியை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன. 

06. அதிமுக தாடி வளர்ப்புக்குழுவின் தலைவராக திரு.ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாக நமது எம்ஜிஆர் செய்தி வெளியிட்டுள்ளது. 

07. நானே 2016ல் முதல்வர் என்ற சுப்ரமணியசாமியின் அறிவிப்பால் தமிழக பாஜக கோஷ்டிகள் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாகவும், அப்படி ஒன்று நிகழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே சு.சாமியை அமித்ஷா தூண்டிவிட்டதாகவும் டெல்லியில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

08. நாம் தம்ப்ளர், நாம் டபரா கட்சியும் தாங்களே முதல்வர் என்றும், டெபாசிட் கிடைக்கும் நிலை ஏற்பட்டால் மக்கள் முதல்வராக செயல்படுவோம் என சைமன் அறிவித்துள்ளார். 

09. அரசியல் அநாதைகளாக தாங்கள் ஆனதற்கு திராவிடக் கட்சிகளே காரணம் என தாவீது பாண்டியன் அறிவித்துள்ளார், இருப்பினும் கோபாலபுரத்திலும், போயஸ் கார்டனிலும் ஒற்றர்களை அமைத்துள்ளதாகவும் கதவு திறந்தால் உடனே பாய்ந்து உள்ளே செல்லும்படியும் உத்தரவிட்டுள்ளதாகவும் செங்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது. 

10. யாருக்கு ஆதரவாக அறிக்கை விடுவது என விடுதலை உணர்வுடன் சிந்திப்பதாக வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். 

11. இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையில் ”லட்சிய திராவிட முன்னேற்றக்கழக”த்தை புறக்கனித்துவிட்டு யாரும் ஆட்சியமைக்க முடியாது எனப்பாட்டுப்பாடி பேட்டி கொடுத்துள்ளார் டி.ராஜேந்தர். இதைச் சொல்லும்போது ராஜேந்தர் கண்ணீர் மல்க நின்றிருந்ததாகவும், என்னசார் தனியா நின்னு அழுதுட்டு இருக்கீங்க? என்று கேட்ட நிருபரிடம் How do you say, I am alone, I am a Green Tamilan, do you know? How do you say that I am alone,, ? இறுதியாக தமிழண்டா, தமிழண்டா, தமிழன் தமிழன் எனப் பல்வேறு மாடுலேஷன்களில் சொன்னதாக புதிய பறவை செய்தியாளர் அவரது பிளாக்கில் எழுதியுள்ளார். 11. 2016 நம்ம கையிலே, சந்திப்போம்டா தோளா நம்ம சட்ட சபையில என குருவி, கத்தி நடிகரும், ஜாதிவாரியாக உள்ள நடிகர்கள் அனைவரும் சொல்லி இருப்பதையும் தமிழகம் உன்னிப்பாக கவனித்து வருவதாக கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். 

12. சமீபத்திய ஜாதி அரசியல் கட்சிகள் வெளியிட்ட மக்கள் தொகை எண்ணிக்கையை கூட்டிப்பார்த்த தமிழக மக்கள் தொகைக்கணக்கெடுப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஜாதிக்கட்சிகளின் கணக்குப்படி தமிழகத்தில் கிட்டத்தட்ட 70 கோடி மக்கள்தொகை இருப்பது தெரிய வந்துள்ளது. 

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தது.. வணக்கம்

Monday, December 29, 2014

7.83 ஹெர்ட்ஸ் - சுதாகர் கஸ்தூரி


தமிழில் அறிவியல் புனைகதைகளின் அரசன் என்றால் முதலில் சுஜாதா.

அவரது ஏன் எதற்கு எப்படி மக்களிடம் பெற்ற வரவேற்பும் இன்றும் விரும்பிப் படிக்கக்கூடிய புத்தகமாக இருப்பதற்கும் வாசகனின் தரத்துக்கு இறங்கி வந்து எழுதியதே. இதையே ஒரு குறையாகவும் அப்போது சொல்லிக்கொண்டிருந்தனர். 

அறிவியலை நீர்த்துப்போகச் செய்து வாசகனை அடுத்த நிலைக்குச் செல்லவிடாமல் தடுக்கிறார் என. என் இனிய இயந்திரா நான் வாசித்து அதிசயித்த முதல் சயின்ஸ் பிக்‌ஷன். அடுத்து மீண்டும் ஜீனோ. 

அந்த வரிசையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகவும் ரசித்து வாசித்தது சுதாகர் கஸ்தூரியின் 6174. முதலில் புத்தகத்துக்கு வெறும் எண்களை மட்டுமே தலைப்பாக வைத்து அது பெருவாரியான வரவேற்பைப்பெற்றதும் அதிசயமே. 

தமிழ் எழுத்துச் சூழலில் இப்படி தலைப்பைப் பார்த்ததுமே ஏதோ கணக்கு புத்தகம்போல என தாண்டிச் செல்வோரே அதிகம். அதன் நடையும், கட்டமைப்பும் மொழியும் வாசகர்களை பெரும் விளம்பரம் ஏதுமின்றியே தேடிச்சென்றடைந்தது. 

சுதாகர் கஸ்தூரியின் அடுத்த நாவல் 7.83 ஹெர்ட்ஸ். மனிதனின் எண்ன அலைகளை கட்டுப்படுத்த வசதியான ஓர் அலைவரிசை. அப்படி இந்த அலைவரிசைக்கு மனிதர்களை வரவைத்து அவர்கள் மூலம் நாசவேலைகளைச் செய்தலின் சாத்தியங்களை செயலாக்க முனையும் ஒரு குழு., அப்படி நடந்தால் என்ன மாதிரியான அழிவுகள் இருக்கும் என்பதையும் அவரது பாணியில் அருமையாக சொல்லி இருக்கிறார். 

கதையின் ஆரம்பம் பெங்களூரில் நடக்கும் ஒரு தீவிரவாதச் செயல். இஸ்லாமிய தீவிரவாதம் அல்ல. ஒரு வித்தியாசமான வாளின் கைப்பிடிதான் அந்த சம்பவத்தில் கிடைக்கும் முக்கியமான க்ளு. அதைவைத்துக்கொண்டு கதை முன்னேறுகிறது. கதை முடியும் முன்னர் குஜராத், தமிழ்நாடு, முன்னாள் ரஷ்யா, ஜப்பான், என பயணிக்கிறது. 

கதையில் எனக்குப் பிடித்த பகுதியாக நான் நினைப்பது அந்த நாகர்கோவில் பெரியவர் ஓநாய்களைப் பற்றிய தகவல்களை நாகர்கோவில் மொழியில் சொல்லிக்கொண்டே செல்லுதலும், ஒரு இடத்தில் ஓநாய்க்கூட்டத்தை சந்தித்ததை விவரிப்பதும். ஓநாய்கள் குறித்த தகவல்கள் மற்றும் மூளையை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிகள் குறித்த தகவல்கள் அபாரம். படிக்க மிக சுவாரசியமான பதிவுகள். 

அதிகம் அறிவியலைச் சுற்றி இருந்தாலும் போரடிக்காமல் வாசிக்க வைக்கின்றன. ஏகப்பட்ட கதை மாந்தர்கள் சுற்றி வந்தாலும் அவர்களை இணைத்த விதமும் அருமை. கதையில் நடக்கும் சிறு சம்பவங்களுக்கும் கதையில் ஓரிடத்தில் விளக்கம் இருக்கிறது. அதை சேர்த்த விதமும் அருமை. 

செசன்யா, துருக்கி, ரஷ்யா இந்தியா மற்றும் இந்தியாவின் காடுகள் என கதை சுற்றினாலும் எல்லாவற்றையும் இணைக்கும் ஒழுங்குதான் சுதாகர் கஸ்தூரி அவர்களின் எழுத்து ரகசியம். தமிழில் சொல்லப்பட்ட இன்னொரு அருமையான அறிவியல் புனைகதை. 

தமிழ்ஹிந்துவில் வெளியான விரிவான விமர்சனம் இங்கே

Sunday, December 28, 2014

வைகோவின் அரசியல் நிலைப்பாடுகள்..

ஐந்து இந்திய மீனவர்கள் கைதும், விடுதலையும் இலங்கை மற்றும் இந்திய அரசும் போடும் நாடகம்.. வைகோ. (12.11.2014)

வைகோ போன்றோர் எதற்காக அரசியலில் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. திமுகவில் இருக்கும்போதும், வெளி வந்தபோதும், தனிக்கட்சி தொடங்கியபோதும், கட்சி பாக்கியில்லாமல் மாற்றி மாற்றி கூட்டணி அமைத்தபோதும், நீங்கள் செய்ததற்கு பெயர் என்ன மிஸ்டர் வைகோ? 

ஒரு கூட்டணியில் சேரும்போது சம்பந்தப்பட்ட கட்சித்தலைவரை இந்திரன், சந்திரன் என புகழ்வதும், வெளியேறியவுடன் ஒருமையில் பேசுவதும் என்ன வகையான நாடகம் வைகோ? சுயநினைவுள்ள ஒருவன் செய்யும் காரியங்களா நீங்கள் செய்வது.? 

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்திய மீனவர்கள் அனுதினமும் செத்துக்கொண்டிருந்தபோதும், கைதாகிக்கொண்டிருந்தபோதும் வெற்றுக்கூச்சல்களையே உங்களால் போட முடிந்தது. கையாலாகாமல் பார்த்துக்கொண்டிருந்தீர்கள். 

இன்றைக்கு மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசின் கொள்கையால் மீனவர்கள் கைதாவது நின்றும், சுடப்படுவதும், சூறையாடப்படுவதும் நின்றபின்னரும் மத்திய அரசாங்கத்தையும், மோதி ஜியையும் வாய்க்கு வந்தபடி பேசுவது யாரைக்குளிர்விக்க? விசா கொடுங்கள், நாங்கள் சென்று அழைத்து வருகிறோம் எனச் சொல்கிறீர்களே, கைதானவர்கள் அங்கே அவர்களின் பாட்டி வீட்டில் அமர்ந்திருப்பதாக நினைக்கிறீர்களா? 

இலங்கைத்தமிழர் குறித்து உங்களைப்போன்றவர்கள் வாய் திறக்காமல் இருப்பதே அங்குள்ளவர்களுக்கு நல்லது எனவும், இங்கு இருக்கும் இலங்கை அதிகளை திருப்பி அனுப்புங்கள் என திரு.விக்னேஸ்வரன் கேட்கும் அளவில் இருப்பதே இந்தியாவில இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக சொல்லும் மக்களின் லட்சனத்தைச் சொல்லும். 

கைது செய்யப்பட்டுள்ள ஐவரும் போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டோர். உண்மையோ, பொய்யோ, ஆனால் கைதுசெய்திருப்பது ஒரு அரசாங்கம், வழக்கு நடந்து அளிக்கப்பட்ட தீர்ப்பு. இருப்பினும் பொது மன்னிப்பு வாங்கித்தரும் அளவு இந்தியாவுக்கு செல்வாக்கு இருக்கிறது, இது தவறான முன்னுதாரனத்தை ஆரம்பித்து வைக்கும் என்றாலும் எனக்கு மீனவர்கள் திரும்புவதில் மகிழ்ச்சியே. 

இன்றைய சூழலில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். உங்களிடம் இருக்கும் பெரும் செல்வம் நல்ல தமிழ். அதைக்கொண்டு தமிழகத்தில் தமிழை வளர்க்க பாடுபடுங்கள். தமிழின் உன்னதங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். வெற்றுக்கூச்சலை நம்பி ஓட்டுப்போடும் கூட்டமல்ல இன்றைய தமிழ் மக்கள் என்பதை உணர்ந்தால் உங்களுக்கு நல்லது. 

You have lost all your respect and credibility Mr.Vaiko, please go home.... and save your face. People are not as foolish as you think. Need an example? see your election results and political journey.. You have been continuously thrown in the corner for more than a decade.

12.11.2014ல் ஃபேஸ்புக்கில் எழுதியது.

Saturday, December 27, 2014

ஹிந்தி ஒழிக?

90 களில் வேலை செய்த இடங்கள் ஆந்திரா கர்நாடகா உத்திர பிரதேசம்.

 கற்ற மொழிகள் பேச்சு தெலுங்கு, பேச்சு ஹிந்தி, பேச்சு உருது, 

நான் பேசிக்கொண்டிருந்த கன்னடம் எவ்வளவு பிழைகள் மலிந்தது எனத்தெரிந்து குறைந்தபட்சமாக அவர்கள் பேசுவதை சரியாக புரிந்துகொள்ள கற்றது இருந்த உடைந்த ஆங்கிலம் சரியானது. 

கிடைத்த பயன்கள்.. தெலுங்கு தெரிந்த ஒரே காரனத்தினால் ஸ்டெர்லிங்க் ட்ரீ மேக்னத்தில் ஆந்திராவின் விஜயநகரத்தில் பிளாண்டேஷன் சூப்பர்வைசர் வேலை. ( 92ல் 3500 ரூபாய் சம்பளம், அப்போது விவசாய டிப்ளொமா படித்தோருக்கு கிடைத்த அதிகபட்ச சம்பளம் 2500 ரூபாய்) ஹிந்தி / ஆங்கிலம் / தென்னிந்திய மொழிகள் தெரிந்ததால் முதன்முறையாய் வெளிநாடுக்கு விமானம் எறினேன். 

தமிழ்தான் எனக்குப் பிடித்த மொழி. ஆனால், இதர மொழிகள் தெரிந்திருந்தது வாழ்க்கையில் உயர மிக உதவியது. 

தமிழே சொல்லித்தராமல் ஹிந்தியை மட்டுமே புகுத்தும் முயற்சியை நான் வன்மையாக கண்டிப்பேன். அதேபோல, தமிழுடன் ஹிந்தியை கற்றுக்கொள்ள வாய்ப்புக்கிடைப்பதை தடுக்கும் மூடர்களையும் நிச்சயம் எதிர்க்கிறேன். 

ஹிந்தி தெரிஞ்சா ஏன் வடநாட்டான் இங்கே வந்து பானிபூரி விற்கிறான் என எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்களாய் பேசும் மக்களுக்கு, ஹிந்தி தெரியாமல் வடநட்டில்போய் ஹிந்தி கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறியோர் பலர். 

”கற்ற வித்தை காலத்திற்குதவும்” என்பதையும் நம் தமிழ்நாட்டு முன்னோர்கள்தான் சொல்லிச் சென்றார்கள் என்பதை ஞாபகத்தில் கொண்டால் ஹிந்தியை இப்படி கண்மூடித்தனமாக எதிர்க்க மாட்டோம். இனி அவரவர் பாடு....

Friday, December 26, 2014

Qatar National Day (18.12.2014)

2004 நவம்பரில் 15 நாள் வேலையாக மஸ்கட்டிலிருந்து தோஹா - கத்தார் வந்து சேர்ந்தேன். வந்த நாளிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு பம்பரமாய் சுற்றியதில் ஊர் பிடிபட்டு விட்டது. மஸ்கட்டில்தான் எனக்கு வேலை என்றாலும் ஆன் அரைவல் விசாவிலேயே 6 மாதங்களுக்கு மேலாக கழித்து வந்தேன். விசா காலாவதியாகும்போது பஹ்ரெய்னுக்கு ரிடர்ன் டிக்கெட் எடுத்து போகும் விமானம் திரும்பிவரும்போதே வந்துவிட்டால் அடுத்த 28 நாளைக்கு கவலையில்லை. 

மகா மோசமான சாலைகள், போக்குவரத்து விதிகளை மதிக்காத கத்தாரிகள், தொழிலாளர்களுக்கு ஆதரவாக இல்லாத லேபர் டிபார்ட்மெண்டுகள், யார்மீது தப்பிருந்தாலும் உள்ளூர் கத்தாரிகளுக்கே சப்போர்ட் செய்யும் போலிஸ் என மூன்றாம்தர அரபு நாடாகத்தான் எனக்கு கத்தார் தெரிந்தது. 

2006 டிசம்பரில் ஆசிய விளையாட்டுப்போட்டிகளை கத்தார் நடத்த வாய்ப்பு பெற்றிருந்தும் 2006ம் ஆண்டு செப்டம்பர் வரை எந்தவித முன்னேற்றமும், வசதி வாய்ப்புகள் எதையும் செய்யாமல் இருந்தது. திடீரென முழித்துக்கொண்டு செப்டம்பர் முதல் நவம்பர் இறுதிக்குள் ஏனோ, தானோ என சாலைகளும், மானாவாரியாக ரோட்டை தோண்டி எடுப்பதுமாக என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதே தெரியாமல் வேலை செய்து ஒருவழியாக டிசம்பர் 1, 2006ல் ஓப்பனிங் செரிமொனியில் ஒர் கலக்கு கலக்கினார்கள். 

ஆசிய விளையாட்டுப்போட்டிகள் முடிந்த பின்னரே கத்தாரை இப்படியெல்லாம் முன்னேற்ற முடியாது என எண்ணி முழுத்திட்டங்கள் தீட்டி சாலைகளும், பாலங்களும், வசதி வாய்ப்புகளும், கனினி மயமாக்கங்களுமாக கத்தார் கொஞ்சம் கொஞ்சமாக கண் முன்னால் நிமிர ஆரம்பித்தது. அழுது வடிந்துகொண்டிருந்த போலிஸ் துறை மிக நவீனமயமாக்கப்பட்டு கத்தாரின் எந்தப்பகுதியில் விபத்து நடந்தாலும் 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் தரைவழியாகவோ, இல்லை ஆகாய மார்க்கமாகவோ சென்றடைய திட்டம் தீட்டி செயலும் படுத்தினர். நம்மூர் பையன் இந்த ஏர் ஆம்புலன்ஸால் காப்பாற்றப்பட்டான். பின்னர் சிவில் கேஸ்களை கவனிக்க தனி போலிஸ், போக்குவரத்துக்கென தனிப்போலிஸ், அவசரங்களை மட்டும் கவனிக்க தனி போலிஸ், தீயனைப்புக்கென தனிப்போலிஸ் என ஏரியா பிரித்துக்கொண்டு சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது. தயவு தாட்சன்யம் இன்றி சாலை விதிகளை மீறுவோர்க்கு கடும் தண்டனை அளிக்கப்பட்டது. பின்னர் வியாபாரம் நடத்துவதற்கான சூழலை நன்றாக்கினார்கள். இருப்பினும், விசாக்கள் பெறுவது எப்போதும் சிக்கலான காரியமாகவே இருந்து வருகிறது. 

இத்தனை வளர்ச்சிக்குப்பின்னரும் அடிப்படைவாத இஸ்லாம் கண்ணுக்குத்தெரியாமல் ஆனால் தெளிவாக இருந்து வந்தது. 2008 வாக்கில் கொஞ்சம் சரியானது. இப்போது அவ்வளவாக பிற மதத்தினருக்கு கெடுபிடிகள் இல்லை. 2020ல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்த உரிமை பெற்றுள்ளது, கத்தார். அதற்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. நிச்சயம் சிறப்பாக செய்து முடிப்பார்கள். இத்தனை வளர்ச்சியை சாத்தியப்படுத்திய தொழிலாளர் நலன் மட்டும் இன்னும் அத்தனை முன்னேற்றம் அடைந்துவிடவில்லை. இன்றும் எக்ஸிட் எனப்படும் ஸ்பான்சரின் ஒப்புதலின்றி நாட்டைவிட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. எத்தனை கொடுமையான முதலாளியாக இருந்தாலும் வேறு கம்பெனிக்கு எளிதா மாறும் வாய்பில்லை. அங்கு வேலை செய்வோர் குடும்பத்தை அழைத்து வந்து கத்தாரில் வாழ்வது அத்தனை எளிதில்லை. பணக்காரர்களின் தேசமாகவே இன்னும் இருந்து வருகிறது. 

இன்று (18 December 2014) அதன் நேஷனல் டே எனப்படும் தேசிய தினம். நான் பார்த்த ஒரு கிராம ஏர்போர்ட் போல இருந்த தோஹா ஏர்போர்ட் இன்றைக்கு ஹமது இண்டர்நெஷனல் ஏர்போர்ட்டாக பிரம்மாண்டமாக மாறி இருக்கிறது. வளர்ச்சிகளுக்கு வாழ்த்தும் இந்நேரத்தில் கத்தார் அதன் வளர்ச்சிக்கு காரனமான வெளிநாட்டவர் நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டும் என்பது எனது ஆசையும், அவர்களது தார்மீக கடமையும் கூட.

Published in Face Book on 18th December, 2014

Thursday, December 25, 2014

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது.

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது..(தமிழ்நாட்டுலதான்) உலகின் எந்தக் கம்பெணி தொழில் தொடங்க வந்தாலும் அது சென்னையைத்தாண்டுவதில்லை.. அதிகபட்சம் திருச்சி தெற்கு தமிழகத்தில் குடிக்க தண்ணீரோ, மின்சாரமோ இல்லையெனில் கேட்க நாதியில்லை.. ஆனால், வடக்கிலோ கிட்டத்தட்ட 24 மணிநேர குடிநீர், தடையற்ற மின்சாரம். தென் தமிழகத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வக்கில்லை, ஆனால் வடக்கு தமிழகத்தில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் ஆடம்பர விழாக்கள் நடத்த தடையில்லா மும்முனை மின்சாரம். சிங்காரச் சென்னையாம், ஆனால் மதுரை மட்டும் இன்னும் அதே குப்பைக்கூளங்களுடன். கட்சித்தலைமைகள் பலத்தைக் காட்டனுமா, ஓடு மதுரைக்கு.. புதுக்கட்சி ஆரம்பிக்கனுமா, ஓடு மதுரைக்கு.. புதுப்படம் ரிலீசானா ரிசல்ட் தெரியனுமா, மதுரையைக் கேளு,. புதுசா செய்தித்தாள் ஆரம்பிக்கனுமா, ஓடு மதுரைக்கு ஆனா, கரண்டு, தடையில்லா குடிநீர், அமைதியான சூழல், சட்டம் ஒழுங்குக்கு தெந்தமிழக மக்கள் சாலைக்கு வந்தாலும் மதுரைக்கு ஒன்றும் ஆவதில்லை. எனவே, திருச்சி மற்றும் திருச்சிக்கு தெற்கே உள்ள தமிழகத்தை மதுரை நாடு என பிரித்து வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இவன், மாமதுரை நாட்டினர் (இது நகைச்சுவை பதிவல்ல.. )

Wednesday, December 24, 2014

ஸ்வர்ன ஆகர்ஷன பைரவர் - தாடிக்கொம்பு

திண்டுக்கல் அருகிலிருக்கும் சுக்காம்பட்டியில் தங்கிக்கொண்டு நத்தத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த நேரம். (1999 -2001) சுக்காம்பட்டியில் இருந்து நத்தம் போகும் வழியில்
தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் ஒரு கும்புடு போட்டுச் செல்வது வழக்கம். அப்போதெல்லாம் தாடிக்கொம்பு மக்களே அப்படி ஒரு பெருமாள் கோவில் இருப்பதாக காட்டிக்கொள்ள மாட்டார்கள், பஞ்சத்தில் அடிபட்ட பெருமாள் கோவிலாக இருந்தது. அப்படி யாருமே செல்லாத கோவில் அது. இத்தனைக்கும் அருமையான சிற்பங்களைக்கொண்ட வசந்த மண்டபம் உண்டு. கல்யாணம் ஆகாத பெண்கள் மட்டும் வந்து மன்மதன், ரதி சிலைக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்துவிட்டுச் செல்வார்கள். அருகிலிருக்கும் அழகிய சிற்பங்கள் கண்ணிலேயே படாது. :)

ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கிருக்கும் அர்ச்சகரிடம் சொல்லிவிட்டு சக்கரத்தாழ்வார் சன்னிதி செல்லும் வழியில் புதர் மண்டியிருப்பதை சுத்தம் செய்கிறேன் எனச் சொல்லிவிட்டு 3 வாரங்களில் சுத்தம் செய்து கொடுத்தேன். அர்ச்சகருக்கும் மிகுந்த சந்தோஷம். இந்தக்கோவிலையும் மதிச்சி ஒருத்தன் வாரான், மேலும் கோவிலுக்கு உழவாரப்பணி செய்யவும் முன்வருகிறானே என. அதற்கு பிரதிபலனாக நின்ற பெருமாளுக்கு 10 அடிதூரத்தில் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்ல அனுமதிப்பார், சனிக்கிழமைகளில். நானும் வாராவாரம் காலையில் சாப்பிடாமல் வந்து சகஸ்ரநாமம் சொல்லிவிட்டு,பின்னர் தாடிக்கொம்பிலோ அல்லது திண்டுக்கல்லிலோ சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்வேன். 

கோவிலுக்கு எப்படி மக்களை வரவழைப்பது என்பது அங்கிருந்த அர்ச்சகரது கவலையாக இருந்தது. இத்தனை தேஜஸான பெருமாள், அழகிய சிற்பங்கள், அருமையான சூழலில் அமைந்த கோவிலாக இருந்தும் யாரும் வருவதில்லை என்ற கவலை அவருக்கு. யார்வந்தாலும், வராவிட்டாலும், பெருமாளுக்கு தினமும் விதவிதமாய் அலங்காரம் செய்வார். ஒருநாள் காய்கறிகளால் பெருமாளுக்கு அலங்காரம் செய்திருந்தார். அன்றைக்கு பெருமாள் அப்படி ஒரு அழகாக இருந்தார். திண்டுக்கலில் ஃபேமஸாக இருந்த துணிக்கடை எஸ்.கே.சீஸ் (இப்போதும் இருக்கும் என நினைக்கிறேன்) அதன் முதலாளி தாடிக்கொம்பு பெருமாள் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது நானும், என் கல்லூரி சீனியரும் அப்போதைய எனது பாஸுமான ரமேஷ்குமார் அண்ணனும், அர்ச்சகரும் இருந்தோம். பெருமாளின் அலங்காரத்தைக்கண்டு அசந்துபோய் நீண்ட நேரம் சன்னிதி முன்பு அமர்ந்துவிட்டுச் சென்றார். அதற்கு அடுத்தவாரமே சனிக்கிழமை மிகப்பெரிய திருவிழா அளவுக்கு அலங்காரங்கள் செய்ய உபயமும், பிரசாதத்துக்கு ஏற்பாடும், ஒரு சிறு கச்சேரிக்கும் ஏற்பாடு செய்தார். 

திண்டுக்கல் மக்களுக்கு தங்களுக்கு இத்தனை அருகில் இப்படி ஒரு கோவில் இருப்பதே அப்போதுதான் கண்ணுக்கு தெரிந்தது. அதன் பின் நான் 100 அடி தள்ளி அமர்ந்துதான் சகஸ்ரநாமம் சொல்லும்படி ஆனது. அவ்வளவுதூரம் மக்கள்கூட்டம். பெருமாளுக்கு கூட்டம் அம்ம ஆரம்பித்தது. 

ஒருகாலத்தில் கேட்க நாதியில்லாத கோயிலில் பார்க்கிங் டிக்கெட் போடும் அளவு கார்களும், பைக்குகளும். அடுத்து கோவிலின் உள்ளே வலது பக்கம் இருந்த ஒரு பைரவர் சிலைக்கு ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் என ஒரு போர்டு மாட்டினார். தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார். எஸ்கேஸி உபயத்தில் சில வாரங்கள் ஓடியது. அதன் பின்னர் எஸ்கேஸி முதலாளியே அபிஷேகம் செய்ய சில மாதங்கள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. இப்போதெல்லாம் நீங்கள் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இப்போது பெருமாளுக்கு இணையாக ஸ்வர்ண ஆகர்ஷன பைரவருக்கும் மக்கள் கூட்டம். இந்த வசதிவேண்டி அம்மும் கூட்டம் மறந்துபோனது அங்கிருக்கும் அழகான சிற்பங்கள். 2008 வாக்கில் வீட்டுக்காரம்மாவை அழைத்துச் சென்றிருந்தேன் இந்தக்கோவிலுக்கு, கொஞ்சம் ஆன்மீகம் இல்லாத்தன்மையாக தெரிந்தாலும் என் அனுபவத்தில் இந்தக்கோவிலிலும், கல்லுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலிலும் உழவாரப்பணிகள் செய்த சில மாதங்களிலேயே சம்பந்தமே இல்லாமல் வெளிநாடு வேலைக்கு தேர்வானேன். (மிகப்பெரிய கூட்டத்தில் நான் தேர்வானது ஒரு அதிசயம்) 

இன்று ராமச்சந்திரன் உஷா எழுதிய பதிவில் இருந்த ”பைரவர்” என்ற வார்த்தை இந்த ஞாபகங்களைக் கிளறிவிட்டது. வாய்ப்புக்கிடைத்தால் தாடிக்கொம்பிலிருக்கும் அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாளையும், தாயாரையும், ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரையும், சக்கரத்தாழ்வாரையும் தரிசித்துவிட்டு வாருங்கள். சாம்பிளுக்கு ஒரு சிற்பத்தின் படம். 


கோவில் குறித்த தகவல்களும், சிற்பங்களின் படங்களையும் இங்கு காணலாம். http://thadicombu-sri-soundararaja-perumal.blogspot.com/

Tuesday, December 23, 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 2014 - 2017வரை)

 ..... ராசி நேயர்களே.. ( உங்க ராசியை கோடிட்ட இடத்தில் நிரப்பி வாசிக்க ஆரம்பிக்கவும்) 

இந்த சனிப்பெயர்ச்சியினால் உங்களுக்கு பொதுவாக நல்லதே பெரும்பன்மையாக நடக்கும். சனி அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும், பகைவர்களிடம் நட்பு பாராட்டுவதன் மூலம் வலிமையான பகைவர்களிடம் இருந்து தப்பிக்கலாம். மேலும், தேவையில்லாத சண்டைகள் உங்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். 

பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்திருப்போர் கவலைகொள்ள தேவையில்லை. எத்தனை அடி வாங்கினாலும் உங்களை எல்லோரும் “நல்லவண்டா” எனப்புகழக்காண்பீர்கள். 

தொழில் மிகச் சிறப்பாக இருக்கும். அதற்கு முக்கியமாக கடின உழைப்பும், நாட்டு நிலவரத்தையும் நன்கு தெரிந்திருத்தல் நல்லது. எக்கனாமிக்ஸ் டைம்ஸ் உங்களுக்கு பேருதவியாக இருக்கும். 

குழந்தைகள் மூலம் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு. அவர்களை கண்டிப்பதன் மூலம் உங்கள் மரியாதைக்கு பங்கம் வர வாய்ப்புண்டு. எனவே கவனம். 

காசு, பணம் விரயமாகும் காலமிது. எனவே இருக்கும் பணத்தில் கத்தி, கபடா போன்ற படங்களுக்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கிச் செல்வதை தவிர்க்கவும். 

பெண்களுக்கு :- கனவர்கள் கைக்குள் அடங்கி இருப்பார்கள். மாமியார்களால் மற்றும் நாத்தனார்களால் தொல்லை உண்டு. அனுசரித்துப்போவது நல்லது. மாமியாருக்கு பிடித்த சீரியல் பார்க்க தினமும் அரைமணிநேரம் ரிமோட்டை தருவது நல்ல பலனை தரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். நீண்ட நாட்களாக மாமியாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். 

மாணவர்களுக்கு:- நன்றாக படித்தால் முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உண்டு. தினமும் சரஸ்வதி ஸ்லோகம் சொல்லிவர படிப்பும், பெற்றோர்கள் சொல்வதைக் கேட்க நல்லபிள்ளை எனப் பெயர் வர வாய்ப்புண்டு. 

உத்யோகத்தில் இருப்போர்களுக்கு :- கடும் உழைப்பு நல்ல பலனைத்தரும். சட்டத்திற்கு உட்படாத காரியங்களை செய்ய வேண்டாம். லஞ்சம் வங்குவதை எப்போதும் தவிர்ப்பது கடமை என்றாலும் நமநமக்கும் கையை அமுக்கி வைத்துக்கொள்வது வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும். 

எல்லோருக்குமான பொதுப்பலன்கள் :- தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். செலவைக் குறைத்தால் சேமிப்பு வளரும். அண்ணன் தம்பி உறவு வலுப்பட மனைவியரின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டாம். அக்காள் தங்கைகள் பொறாமைப் படுவதைக் குறைக்க வேண்டிய நேரமிது. 

சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு எள்ளோதரை படையலும், நல்லெண்ணெய் விளக்கும் இட்டு வழிபட்டால் சனியின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். சுபம்.

ஆண்டாள் கிளியின் கண்கள் - ராமச்சந்திரன் உஷா

மத்திய கிழக்கு வாழ்க்கை அல்லது ”காக்காப்பொன்” 

மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய கம்பெனிகளின் கேம்புகளில் ஆயிரக்கணக்கில் ஆட்கள் தங்கி இருப்பார்கள், பல அடுக்குகளில். அப்படிப்பட்ட கேம்புகளில் அவ்வப்போது கேள்விப்படும் விஷயமாக / முதுகுக்கு பின்னால் பேசும் விஷயமாக இருக்கும் இது. ஊர்ல இருந்து வந்து ஒருவருஷத்துக்கு மேல ஆகப்போகுது, குழந்த பொறந்துருக்குனு லட்டு தாராண்டா என லட்டு கொடுத்தவனை கேவலமாக பேசும் கும்பல் உண்டு. 

என்னுடன் வேலை பார்த்த ஒருவனின் மனைவியைப்பற்றி மிக மோசமாக வதந்திகள் உலவவிடப்பட்டதுண்டு. இத்தனைக்கும் அவனுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை 1 மாதம் லீவ் என்று வேலைபார்த்தவன் / ஊருக்கு சென்று வருபவன். 

வெளிநாட்டில் வேலைபார்ப்பதாலேயே ஆடம்பரமாக இருக்க நினைப்போரின் சிக்கல்கள், போலி பெருமை எல்லாம் தொட்டுச் செல்கிறார். 

”ஆண்டாள் கிளியின் கண்கள்” என்ற தலைப்பில் Ramachandran Usha எழுதி தினகரன் - வசந்தம் இதழில் வெளிவந்த தொடர் மத்திய கிழக்கில் வாழும் பலருக்கு நெருக்கமானதாக தோன்றும். 

”அவனுக்கென்னடா, வெளிநாட்டுல சம்பாதிக்கிறான்” என உள்ளூரில் இருந்துகொண்டு பேசும் நண்பர்களுக்கும் மத்திய கிழக்கில் இருப்போரின் வலி புரிய வாய்ப்பிருக்கும் என நினைக்கிறேன். 

இரு பகுதிகளுக்குத்தான் பதிந்திருந்தார். மீதமுள்ளதை விரைவில் பகிர்வார் என நம்புகிறேன். ஆண்டாள் கிளியின் கண்கள் - முதல் பாகம் 

ஆண்டாள் கிளியின் கண்கள் - இரண்டாம் பாகம்