Friday, October 15, 2010

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும்,சித்ராவையும் நேரில் கண்டேன்..


கத்தாரில் வாழும் இந்தியர்களுக்காக உதவும் இந்தியன் கம்யூனிட்டி பெனவேலண்ட் ஃபோரம் (ICBF)என்ற அமைப்பு அதன் நிதி ஆதாரத்தைப் பெருக்கிக்கொள்ள ஒரு இசை நிகழ்ச்சி நடத்தியது. பத்மஸ்ரீ.எஸ்.பி.பாலசுப்ரமணியம், பத்மஸ்ரீ.கே.எஸ்.சித்ரா, பிஜு நாராயணன் கலந்துகொண்ட அலி இண்டர்நேஷனல் ரிதம் 2010 என்ற இசை நிகழ்ச்சிதான் அது.

நிகழ்ச்சி இரவு ஏழு மணிக்கு துவங்க வேண்டியது. சரியாக 7.15 மணிக்குத் துவங்கி பாலு மைக்கைப் பிடித்து ஒருவன் ஒருவன் முதலாளி ( முத்து) என நிகழ்ச்சியை ஆரம்பிக்க, அதன் பின்னர் இசைமழை என்றால் என்ன என்பதை நேரில் கண்டேன்.. எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பிரம்மாண்டம் எப்படி இசை ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறது என நேரில் பார்த்த நாள் அது. ரசிகர்களுடன் உரையாடுவதாகட்டும், பாடல்களைப் பற்றிய அவரது கருத்துக்களைச் சொல்வதாகட்டும் அவரது கணீர்குரலால் எல்லோரையும் மயக்கிக் கொண்டிருந்தார். சங்கரபரணம் திரைப்படத்தில் சங்கராஆஆஆஆஆஆஆஆஆஆ என அவர் எழுப்பிய ப்ரீலூடுக்கும், முழுப்பாடலுக்கும் அரங்கமே மயங்கிக் கிடந்தது. தேரே மேரெ பீச்சுமே என்ற ஹிந்திப்பாடலிலும், வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலும் அட்டகாசம். மிக எளிமையான உடையில் வந்திருந்தார். பேங்கில் வேலை செய்பவர் போல ஒரு சபாரி உடை.

சித்ரா - அதே சின்னக்குயில் சித்ரா, அதே முகம் முழுக்க சிரிப்பாய், பாடல்களை அனாயாசமாய் பாடி கைதட்டல்களை அள்ளிக்கொண்டிருந்தார். கண்ணாளனே (பம்பாய்) பாடலை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளிலும் ஒரு பத்தியைப் பாடி கலக்கினார்.

பிஜு நாராயணன் என்ற மலையாளப் பாடகரும் வந்திருந்தார்.. மலையாளப் பாடல்களை அவரும், சித்ராவுடன் இணைந்தும் பாடினார். கங்கே.. எனத்தொடங்கும் ஒரு பாடலைப் பாடினார். உடலெல்லாம் சிலிர்க்க.. அப்படி ஒரு ஆலாபனை.. கிடத்தட்ட 30 செகண்டுகள் வரை மூச்சைப் பிடித்து அவர் சொன்ன கங்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ தான் அவர் பாடிய பாடல்களில் மிகச் சிறப்பு.

ஆர்க்கெஸ்ட்ரா குழுவினராக ஜெண்டில்மேன் இசைக்குழு என்ற சென்னையைச் சேர்ந்த குழுவினர் வந்ந்திருந்தார்கள். தமிழ், மலையாளப் பாடல்களுக்கு சிறப்பாய் இசையமைத்தனர். எஸ்.பி.பி பாடிய பாடல்களுக்கு அவரே இசைஇயக்கமும் செய்து கொண்டார்.

சுவையான நிகழ்வுகள்

எஸ்.பி பாலசுப்ரமணியம் பொத்தி வச்ச மல்லிக மொட்டு பாடலில் ’இது சாயங்காலமா மடி சாயுங்காலமா’ என்ற வரியில் கைகடிகாரத்தை சித்ரா சேச்சிக்கு காட்டிக் கொண்டிருந்தார். சேச்சி கொஞ்சங்கூட அசராமல் கருமே கண்ணாக பாடிக்கொண்டிருந்தார்.

மண்ணில் இந்த காதலன்றி பாடலில் ரசிகர்கள் மூச்சு விடாம பாடுங்க என சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தனர் .. இதைக் கவனித்த எஸ்.பி "பாடலைன்னா ?" என்று கேட்டுவிட்டு இதை மூச்சு விடாம பாட முடியாது அப்படின்னு ஆயிரம் மேடையில சொல்லிட்டேன். இப்பவும் சொல்றேன். அது ஒரு மியுசிகள் கிம்மிக்ஸ் அவ்வளவே என்றார். ’எப்படி இருந்தாலும் நான் பாடி முடிஞ்சதும் நீங்க கைய தட்டுவீங்கன்னு தெரியும்’ என்றார். அதுபோலவே ரசிகர்களும் கரகோஷம் செய்தனர்.

அதேபோல தான் இசையை முறைப்படி கற்றவனல்ல என்றும் திரைத்துறையில் நுழைந்தபிறகு இசையையே உயிராக பாவித்து பாடிவருவதாகவும், எந்த ஒரு பாடலையும் முழுமையாக தெரிந்துகொண்ட பிறகே அப்பாடலை மேடையில் பாடுவதாகவும் குறிப்பிட்டார். இதுவரை ஏறக்குறைய 36000 பாடல்களை பாடியிருக்கலாம் என்றும் கூறினார்.

நிகழ்ச்சி தொகுபாளர் அடுத்து எந்திரன் படத்திலிருந்து ஒரு பாடல் என அறிவிக்க, தவறுதலாக சித்ரா மேடையில் நுழைந்து விட்டார்.. நிலைமையை அழகாக சமாளித்த தொகுப்பாளர் சித்ராவின் உற்சாகத்துக்கு ஒரு கரகோஷம் எழுப்புங்கள் எனக்கேட்க மக்களும் ஆரவாரம் செய்தனர். பின்னர் சித்ரா ஒரு மலையாள பாடலை பாடியபின்பு எந்திரன் பாடப்பட்டது.

எந்திரனில் வரும் அரிமா, அரிமா பாடலை இசைக்குழுவின் நடத்துனரே கொடுமையாகப் பாடினார். மக்கள் மிகப் பெருந்தன்மையுடன் அந்தக் கொடுமைக்கும் கை தட்டினர்..

இறுதியாக பாடகர் ஷாகுல் ஹமீதுக்கும்,ஸ்வர்னலதாவுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக அவர்கள் பாடிய சில பாடல்களை கோரஸ் பாட வந்த ஒரு பெண் அருமையாகப் பாடினார்.

தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அரங்கில் இருந்த மக்கள் தேசிய கீதத்துக்கு கொடுத்த மரியாதை மனநிறைவை அளித்தது..

அடுத்த ஆண்டும் நிகழ்ச்சிக்கு கண்டிப்பாய்ச் செல்ல வேண்டும்.

Tuesday, October 12, 2010

மத்திய கிழக்கில் வாழ்பவரா நீங்கள்?

மத்திய கிழக்கில் வாழ்பவரா நீங்கள்? தூதரகத்தால் கைவிடப்பட்டு, நீங்கள் அநாதையாய் செத்தால் இந்திய தூதரகமே உங்களை பெட்டியில் வைத்து அனுப்பும். குரூர நகைச்சுவைபோலத் தெரிந்தாலும் அதுதான் உண்மை என நிரூபித்திருக்கிறது ஓமான் - மஸ்கட்டிலுள்ள இந்தியத் தூதரகம்.


மத்திய கிழக்கில் வேலை செய்பவர்களுக்கு பிரச்சினையான நேரத்தில் இருக்கும் ஒரே துணை இந்தியத்தூதரகம் மட்டுமே.. ஆனால் அதுவே கைவிட்டுவிட்டால் நடுரோட்டில் இறக்க வேண்டும். அப்படி ஒரு நிலை ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது மஸ்கட் விமான நிலையத்தில்...

படிக்காத, இரு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் வீட்டுவேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவிட்டு , திரும்பி ஊருக்கு போக வந்திருக்கிறார். கத்தார் ஏர்வேஸ் விமானம் என்பதால் தோஹாவில் இறங்கி வேறு விமானம் மாற்றிக்கொள்ள வேண்டும். தோஹாவில் கடவுச் சீட்டை தொலைத்து விட்டார். எனவே இந்தியாவிற்கு செல்லும் விமானத்தில் ஏற்றாமல் மீண்டும் மஸ்கட்டிலேயே இறக்கி விட்டுவிட்டது விமானக் கம்பெனி. ஓமானிலிருந்து வெளியேறும்போதே விசாவை கேன்சல் செய்துவிட்டதால் மீண்டும் ஓமானுக்குள் நுழைய முடியாதநிலை. இதனால் விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையை விமானக் கம்பெனியும், மஸ்கட் விமான நிலைய அதிகாரிகளும் இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.

தொடர்ந்து தகவல் கொடுத்தும், தூதரகத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக யாருமே வந்து பார்க்கவில்லை. அந்தப் பெண்ணிற்கு உணவு, படுக்கை போன்றவற்றை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மனிதாபிமான அடிப்படையில் கொடுத்து உதவியிருக்கிறது. தூதரகத்திலிருந்தும் வேறு எந்த வகையிலும் உதவி கிடைக்காத சோகத்தில் பரிதாபத்திற்குரிய அந்தப் பெண் மன அழுத்தத்தின் உச்சியில் புத்தி பேதலித்து இறந்திருக்கிறார்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகநாடு, தெற்காசியாவில் வல்லரசு என்ற பதவிக்கு போட்டியிடும் இந்தியா தனது குடிமக்களை இப்படியா இறக்க விடுவது? இது நமது நாட்டிற்கு எவ்வளவு பெரிய அவமானம்? நம்மைவிடச் சிறிய நாடான நேபாளம் கூட தனது மக்களை இப்படி அல்லாட விடுவதில்லை.

எனது கேள்வியெல்லாம் தனது நாட்டு பிரஜை தன்னால் சமாளிக்க முடியாத, தூதரகத்தின் உதவியால் மட்டுமே வெளியேற முடியும் என்ற நிலையில் இருக்கும்போது அவருக்கு உதவமுடியாத அளவு என்ன மிக முக்கியமான சாதனையைச் செய்துகொண்டிருந்தனர் என்பதுதான், அதுவும் ஐந்து நாட்களாக...

அரசாங்க அதிகாரிகள் எவ்வளவு தூரம் மனசாட்சியின்றி பேசக்கூடியவர்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம், அந்தப் பெண் இறந்த பின்னர் அறிக்கை விட்ட இந்தியத் தூதுவர் “அந்தப் பெண்ணின் சவப்பெட்டியை இந்தியாவுக்கு அனுப்பும் செலவை தூதரகமே ஏற்றுக்கொள்ளும்’’ என்று சொன்னதுதான்..

தனது பொறுப்பில் இருக்கும் தூதரகத்தின் அஜாக்கிரதையாலும், பொறுப்பின்மையாலும் ஒரு உயிர் போக காரனமாயிருந்தது தெரிந்தும், ஏதோ மிகப்பெரிய உதவியைச் செய்வதுபோல தொனிக்கும் இப்படிப்பட்ட அறிக்கையை விட எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்? மனித உயிருக்கு எந்தவித மரியாதையும் செய்யாத அல்லது எந்த மரியாதையும் காட்டவிரும்பாத ஒருவரால் மட்டுமே இப்படிப் பேச முடியும்.

இரு நாட்களுக்கு முன்னர்தான் எனது நண்பரிடம் இதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். நேற்று அகரமுதல வலைத்தளத்தில் வற்றாயிருப்பு சுந்தரின் இந்தப் பதிவைப் பார்த்ததும் எனது எண்ணத்தையும் பதிகிறேன்.

பொதுவாகவே தூதரகங்களில் மனிதாபிமானம் எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள், பணபலம், வசதி வாய்ப்புகள் உள்ளோர், உதவி செய்தால் ஆதாயம் கிடைக்கும் என்போர், பதவியில் இருப்போர் இவர்களுக்கெல்லாம் செலவழித்தது போக மீதமுள்ளது மட்டுமே சாதாரன இந்தியனுக்குக் கிடைக்கும்..

துரதிருஷ்டவசமாக சாதாரண இந்தியர்களின் எண்ணிக்கைதான் மத்திய கிழக்கில் அதிகம்..

இந்தியத் தூதரகங்களின் இப்படிப்பட்ட ”பொறுப்பான” செயல்பாடுகளை பார்க்கும்போது மத்திய கிழக்கு நாட்டில் வாழும் நமது பாதுகாப்பை நினைத்து பயம் மேலிடுகிறது.

இந்த பரிதாப நிகழ்விற்கு தொடர்புடைய சுட்டிகள்

தட்ஸ்தமிழில் வந்த செய்தி இது

டைம்ஸ் ஆஃப் ஓமனில் வந்த செய்தி

டைம்ஸ் ஆஃப் ஓமனில் வந்த செய்தி இரண்டு

டைம்ஸ் ஆஃப் ஓமனில் வந்த செய்தி மூன்று

Wednesday, October 6, 2010

எனக்கு வீணை வாசிக்கிற பொண்ணு பாத்த சரித்திரம் ( வரலாறு முக்கியம் அமைச்சரே..)

கத்தார்ல வேலை செஞ்சுகிட்டு வருஷத்துக்கொருவாட்டி ஊருக்குப் போய்ட்டிருந்தேன். எனக்கும் பொண்ணு பாத்து கல்யாணம் செஞ்சு வச்சிரனும்னு எங்க அண்ணனும், அண்ணியும் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சிட்டிருந்தாங்க.. மேட்ரிமோனியல் வெப்சைட்டுல எல்லாம் ”அண்ணன் அழைக்கிறார்” ரேஞ்சுலையும், சாதாரனமாயும் பல போஸுல படம் போட்டுப் பாத்தேன். பொண்ணுகளோ அல்லது அவங்க அப்பாக்களோ சீந்துற மாதிரியே தெரியலை. ஊர்ல இருந்தாலாவது நாலு கல்யாணத்துக்கு கூப்டாலும், கூப்டாட்டாலும் போய் தலையக் காட்டிட்டு வந்தா நாம இருக்குறது நாலுபேருக்காவது தெரியும். அதுக்கும் வழியில்லாம் வெளிநாட்டுல உக்காந்தாச்சு.

கல்யாணத்தப் பத்தி யோசிச்சு என்ன ஆகப்போகுதுங்குற பக்குவத்துக்கு வந்து ரொம்ப நாள் ஆயிருந்தது. அப்படி இருக்குறப்ப ஒரு நா எங்கண்ணன் திடீர்னு ஒருநாள் சாயந்திரம் போன் செஞ்சு ஒடனே மெயில் பாருன்னார். நான் அண்ணே நான் வெளிய இருக்கேன், கம்ப்யூட்டர் பக்கத்துல போறதுக்கே இன்னும் அரைமணி நேரம் ஆகும்ணே அப்படின்னு சொன்ன ஒடனெ சரி, காலையில சொல்லுன்னுட்டார்.

காலையில பாத்தா எங்கண்ணன் எனக்கு ஒரு பொண்ணு பாத்து அவங்களோட போட்டோவையும் அனுப்பியிருந்தார். ஃபிளாஷ் அடிச்சா கீழ விழுந்திரும்கிற மாதிரி ஒரு நோஞ்சான். அதுக்கு பொடவை கட்டி விட்டு இருக்குற நகையையெல்லாம் போட்டு விட்டு ஒரு போட்டோ.

ஆரம்பத்துலையே நம்ம கண்டிஷன் என்னான்னா, டிகிரி படிச்ச பொண்ணா இருக்கனும்.. நான் டிப்ளொமாதான்.. இருந்தாலும் அப்படி ஒரு கண்டிஷன போட்டு வச்சேன். உன்னோட கண்டிஷனையே அவங்களும் போட்டா அபப்டினு எங்கண்ணன் ரொம்பநாள் சொல்லிட்டிருந்தார்.

அண்ணன் என்னோட போன எதிர்பார்த்து ஓய்ஞ்சு போய் காலையில் பத்துமணிக்கு ஃபோன் செஞ்சு என்ன புடிச்சிருக்குல அப்படினு ஒப்புக்குக் கேட்டுட்டு மே 12 கல்யாணம்டா அப்படின்னுட்டார்..அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு மே 10 கல்யாணம் அப்டின்னார். அப்புறம் ஒரு மணிநேரம் கழிச்சு மே 12ம் தேதினு சொன்னார். அண்ணே யாருன்னே பொண்ணு, யார் போய் பாத்தாங்க? எப்படி இப்படின்னே. என்னோட, அப்பா, அத்தை பையன் அக்கா இப்படி ஒரு 5 பேர் கொண்ட குழு பாத்து முடிவு செஞ்சுட்டு வந்துட்டாங்க. அவங்களுகெல்லாம் பிடிச்சிருக்கு அப்டின்னுட்டார். அண்ணிக்கு தூரத்துச் சொந்தம் வேற அப்படின்னார். கடவுள் மேல பாரத்தப் போட்டுட்டு நீங்க என்ன செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும் அண்ணே னு சொல்லி சரின்னுட்டேன்.

பொண்ணப் பத்தி எங்க அண்ணி சொன்னதுதான் ஹை லைட்

பொண்ணு பி.சி.ஏ படிச்சிருக்கு ( கத்தாரில் என் வீட்டுக்காரம்மாவுக்கு வேலை தேடும்போது என் வீட்டுக்காரம்மா சொன்ன பதில்களை தனிப்பதிவாக போடவேண்டும்)

நல்லா வீணை வாசிப்பா ( மனசுக்குள்ள கிரீடத்தோட மயில்மேல் உக்காந்து இருக்குர ராஜா ரவிவர்மா வரைஞ்ச சரஸ்வதி ஞாபகம்தான் வந்துச்சி.. அடடா கலைவாணியே மணைவியாவா அப்படினு அப்டியே மனசுக்குள்ள ஒரு சந்தோஷம்.. ஆனா நமக்கு அப்படி வாய்க்கிறதுக்கு வாய்ப்பே இல்லையேன்னும் ஒரு குரல் சொல்லிகிட்டே இருந்துச்சி.)

ஒரு வழியா பொண்ணோட நம்பரெல்லாம் கிடைச்சி தொடர்ந்து பேச ஆரம்பிச்சு ஸ்வீட் நத்திங்க்ஸ் எல்லாம் ரியாலா கரைஞ்சு போய்ட்டிருந்தது. நீ நல்லா வீணை வாசிப்பியாமே அப்டினு தெரியாம கேட்டு வச்சேன். இண்டர்நேஷனல் லைன ஆன்ல வச்சிகிட்டு உறையைப் பிரிச்சு சுதி சேத்து ஒரு பாட்டு பாடுனாங்க. முடிஞ்ச உடனே எப்படினு கேட்டாங்க.. சுருதி சேத்ததுக்கெல்லாம் பாராட்டு கேக்குது பாரு இந்தப் பொண்ணுனு மனசுல நெனச்சிகிட்டு, பாட்டை வாசிச்சு காமிம்மா என தொலைபேசியில் சீட்டு எழுதி கொடுக்க..எனது வருங்கால மணைவி அந்த நிமிடமே மணைவி ஸ்தானத்துக்கு வந்தார். இப்ப வாசிச்சது என்னவாம் என எகிற, அட, வாசிச்சியா, நான் கூட சுதி சேக்குறையோனு நெனச்சிட்டேன் என உளரி வைக்க, அப்புறம் எனக்குப் புரிவதுபோல ஜனகனமன வீணையில் வாசித்தார். ஒருவழியாய் நம்மூர் காசு கிட்டத்தட்ட 250 ரூபாய் செல்வில் ஜனகனமன கேட்ட பாக்கியசாலி ஆனேன்.

அப்புறம் அந்த மே வந்தே விட்டது. திருமணமும் சிறப்பாய் நடந்து முடிய, அன்று அவர்கள் வீட்டுக்கு வரவேண்டிய முறை. தொலைபேசியில் மட்டுமே கேட்டிருந்த வீணையின் நாதத்தை நேரில் கேட்கும் நாளும் வந்தது. என்னென்னமோ வாசித்துக் காண்பித்தார் அம்மணி. ஆனால் யாருக்கு ஏதும் புரியவில்லை. எனது பெரியப்பா மட்டும் சுவாரஸ்யமாய் தலையாட்டிக்கொண்டிருந்தார். கடைசியில் பெரியப்பா எப்டி இருக்குனு கேட்டதுக்கு, அப்படியே சரஸ்வதி மாதிரி இருக்காடா உன்னோட பொண்டாட்டி என ஆசிர்வதித்தார். அதெல்லாம் சரிப்பா, பாட்டு எபப்டி இருந்துச்சி எனக் கேட்க, அவரோ நான் மெஷின மண்டபத்துலையே வச்சுட்டு வந்துட்டேன், அதனால சரியாக் கேக்கல, நல்லாதான வாசிச்சிருப்பா என ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.

ஒருவழியாய் எல்லோருக்கும் கிட்டத்தட்ட அனுமானிக்கும்படியாக ஜனகனமன வாசித்து வீணையை மூடிவைத்ததுதான்.. திருமணத்திற்குப் பின்னர் அதை கத்தார் கொண்டுவந்துவிடவேண்டும் என ஒரு பில்டப்.. நானும் என்ன செலவானாலும் கொண்டுவந்து விடுவோம் என ஓக்கே சொல்லிவிட்டேன். இதை எதிர்பார்க்காத வீட்டுக்காரம்மா அடுத்தவாட்டி போய்ட்டு வரும் போது ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வருவோம் என்றார். ஒருவருடம் வாசிக்கவில்லயெனில் பழக்கம் விட்டுப்போய்விடாதோ என நான் சிரிக்காமல் கேட்க, அதெல்லாம் ஞாபகம் இருக்கும் என சீரியசாய் பதில் சொன்னார். அடுத்த முறையும் வந்தது. அதற்குள் அம்மணியின் தோழி இன்னொரு வீணை காயத்ரியாகும் முயற்சியில் இருப்பது தெரியவர பெருந்தன்மையாயும், அப்பாடா தப்பித்தோம் என அவருக்கு அன்பளித்து விட்டார் அம்மணி.

இப்போதுவரை எனது நண்பர்கள் அனைவருக்கும் என் வீட்டுக்காரம்மா ஒரு வீணை காயத்ரிபோலவும், நான் அவருக்கு வீணை வாங்கித்தராமல் அவரது கலையை சீரழித்தது போலவும் ஒரு வெளியே சொல்லாத வதந்தி நிலவுகிறது.

இதைக்கேட்டால் எனது மணைவியே விழுந்து விழுந்து சிரிப்பார் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

--