Sunday, June 20, 2010

அப்பா என்றால் அன்பு ... தந்தையர் தினம்

எப்பவுமே எனக்கு எங்கப்பாவ ரொம்பப் புடிக்கும். முக்கியமான காரணம், நான் எப்ப பெரியாளாய்ட்டேன்னு எங்கப்பாவே நெனச்சுக்கிட்டாரோ அன்னையில இருந்து என்னைய அனாவசியமா திட்டுறதோ, அடிக்கிறதோ கிடையாது.

படிப்புல எப்பவுமே 40 அல்லது 45 தரத்துக்கு கீழ போனதே இல்ல. ஆனாலும் எங்கப்பா அவன் பொழப்பு அவந்தான் பாத்துக்கனும்னு எங்கம்மாட்ட சொல்வாரு... இன்னிக்கு படிக்குற புள்ளைகளோட அம்மா, அப்பாவ நெனச்சுக்கிறேன்

வீட்டுல யாருக்கும் பயப்பட மாட்டேங்கிறான், அவன கண்டிச்சு வைங்க, அப்படிங்கிற எங்கம்மாவோட குற்றச்சாட்டுக்கு, ராத்திரி சாப்டுட்டு கையக் கழுவ கொல்லைப்புறமா வருவான்ல, அப்ப கருப்புப் போர்வையப் போத்திகிட்டு அவன மிரட்டுறேன் அப்படினு கிண்டலா சொன்ன எங்கப்பா

கூட்டுக்குடும்பமா கிட்டத்தட்ட 15, 20 பேரு இருந்த எங்க வீட்ல இன்னிக்கு எங்கப்பாவும், அம்மாவும் மட்டும்.. அன்னிக்கும், இன்னிக்கும் வீட்டுக்கு யார்வந்தாலும் சந்தோஷமா உபசரிச்சு அனுப்புறத வாழ்க்கையாவே சொல்லிக்குடுத்த எங்கப்பா.

என்ன நடந்தாலும் கூட்டுக் குடும்பமாவே இருக்கனும்னு இன்னிக்குவரை கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து எங்க ஊர்ல இப்படியில்ல இருக்கும் கூட்டுக்குடும்பம்னா அப்படினு எல்லோரையும் சொல்லவச்ச அப்பாவும், பெரியப்பாவும்

கூட்டுக்குடும்பத்துல பொம்பளகளுக்குள்ள நடக்குற சண்டையில ஆம்பளைக நுழையாம இருந்தாலே கூட்டுக்குடும்பம் ஸ்திரமா இருக்கும்னு வாழ்ந்து காட்டுன அப்பாவும், பெரியப்பாவும்...

பத்தாப்பு முடிச்சுட்டு ஐ.டி.ஐ சேருரேன்னு போய்ச் சேந்து அதை பாதியிலேயே விட்டுட்டு, எங்கூர்ல தரையத் தேச்சப்பகூட ஒன்னும் சொல்லாம என்ன்ன செய்யனுமோ செய்டானு சொன்ன அப்பா

வேலைக்குப் போனப்புறமும், 2000 ரூபாய அம்மா கையில குடுத்து ஆசிர்வாதம் வாங்குனா, வாங்காத, வாங்காதனு அலறுவாரு அப்பா.. திரும்பி ஊருக்குப் போகும்போது 3000 கேப்பான் அப்படினு பிரியத்தோட சொன்ன அப்பா..

சம்பாதிச்ச ஒவ்வொரு பைசாவையும் அளந்து போட்ட, குறிப்பா குழந்தைக படிப்புக்காகவே எல்லாத்தையும் செலவழிச்ச அப்பா..

அண்ணன் குழந்தைகளை தன்னோட குழந்தைகளைவிடவும் ஜாஸ்தியா நேசிச்ச அப்பா..

ஒரு மிகப்பெரிய சரிவுல, எல்லாத்தையும் இழந்து குடும்பமே ஸ்தம்பிச்ச நின்னப்ப, விடுங்க, எல்லாம் சரியாகும்னு எங்க பெரியப்பாவுக்கும், தனக்கும் சேர்த்து தேறுதல் சொல்லி குடும்பத்த நிமுத்துன அப்பா..

என்ன சம்பாதிக்கிறார், எப்படி சமாளிக்க முடியுது அப்பாவால் அப்படினு எந்தக் கவலையும் இல்லாம நாங்க பாட்டுக்கு கோனார் நோட்ஸ் வேணும், நாய்க்கர் நோட்ஸ் வேணும்னு படுத்துனப்ப, படிக்கிற புள்ள கஷ்டப்படக்கூடாதுனு எல்லாத்துக்கும் கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்த அப்பா..

பள்ளிக்கூடத்துல பனிரெண்டாம் வகுப்புல மூணாவது ஆளா வந்தப்ப மைனர் ஸ்கூல்ல மூணாவதா வந்துருக்காப்ல அப்படினு கேக்காதவங்களுக்கும் சொல்லி சந்தோஷப்பட்ட அப்பா,

வெட்னரி காலேஜ் போகனுமா வேனாமானு நீ முடிவு பன்னிக்க.. அப்பா கஷ்டப்படுறாருன்னு படிக்காம இருக்காத, வேணும்னா வீட்டையே வித்துக்கிறலாம்னு தைரியம் சொன்ன அப்பா..

டெல்லியில வேலைக்குப் போறேன்னு சொன்னப்ப மதுரையில வந்து ட்ரெயின் ஏத்திவிட்ட அப்பா..

வெளிநாட்டுக்குப் போறேன்னு சொன்னப்ப, நம்ம பய எங்கையும் பொழச்சுக்குவான்னு சந்தோஷமா அனுப்பி வச்ச அப்பா..

ஒரு காலத்துல அம்மாவ படுத்துன அப்பா, இன்னிக்கு அம்மாவ குழந்தை மாதிரி பாத்துக்குற அப்பா..

இப்படி எங்கப்பாவப் பத்தி தினமும் நெனச்சுகிட்டும், என்னோட மனைவிகிட்ட தினமும் இதைச் சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டுகிட்டு இருக்கனே, நான் தனியா எங்கப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துச் சொல்லனுமா?

Saturday, June 19, 2010

புகைப் பிடிப்போரா நீங்கள்? உங்களுக்கு ஒரு நல்ல தகவல்!!

 
Posted by Picasa


படத்தைப் பெரிதாக்க, படத்தின் மீது சொடுக்கவும்.

Friday, June 18, 2010

ராவணன்




மணிரத்னத்தின் இன்னுமொரு மெகா முயற்சி. ராமாயணமும், மஹாபாரதமும் இன்னும் எத்தனையோ படங்களுக்கு கதை தரும் போல.. மீண்டும் ஒரு ராமாயணக் கதை கொஞ்சம் மாடர்னாக பர்னச்சாலையில் இருந்து ஆரம்பித்து ராவணன் இறப்பதுவரையாக தொடர்கிறது.

அண்ணன் விக்ரம்தான் ராவணன். ஐஷ்வர்யாதான் சீதா, கார்த்திக்தான் கிட்டத்தட்ட அனுமார், விக்ரமின் தம்பியாக வருபவர்தான் விபீஷணன்.

ராவணனால் கடத்தப்பட்ட தனது மனைவியை மீட்டு வரும் ராமர்தான் பிரித்விராஜ்.

இப்படியும் புரிந்து கொள்ளலாம்..

அல்லது

தமிழ்த் தேசியவாதியாக இறப்பதற்கு முன்னும், இன்னும் ஆக்கப்பட்ட வீரப்பர் கதையைப் போலவும் இதைப் புரிந்துகொள்ளலாம். போலிஸ் அராஜகங்களில் இருந்து மலைவாழ் மக்களை காக்கும் காவலாளியாக விக்ரமையும், முத்துலட்சுமியாக ரஞ்சிதாவையும், அவனது அடிப்பொடிகளாக பிரபு வகையறாக்களையும், சேர்க்கலாம்.

அல்லது

தங்கையைக் (பிரியாமணி) கொன்ற போலீஸ்காரர்களை பழிவாங்கும் அண்ணனின் கதையாகவும் கொள்ளலாம்.

படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிக அழகான காடுகளிலும், அருவிகளிலும் அலைந்து திரிந்து வருகிறோம், நாம். நல்ல தியேட்டரில் பார்க்கக் கொடுத்துவைத்திருந்தால் அருவியின் சாரல் நம்மீது அடிப்பதைக் கூட உணரலாம்.

துல்லியமான ஒளிப்பதிவு, சந்தோஷ் சிவனும் அவரது உதவியாளர் ஒருவரும் கலக்கியிருக்கிறார்கள். நிச்சயம் எல்லோருக்கும் படத்தில் பிடித்த மிக நல்ல அம்சமாய் ஒளிப்பதிவு இருக்கும்.

இசை - ஏ.ஆர்.ரஹ்மான், ஓரிரு பாடல்கள்தவிர மற்றதெல்லாம் சுமார் ரகம். பிண்ணனி இசை, ஓவர் சத்தம்.

சுகாசினியின் வசனங்கள் சுமார் ரகம். சந்தன வீரப்பனின் கிறுக்குத்தனமான உடல் மொழிகளுக்கேற்ற சில ஒலிகளை விக்ரம் அடிக்கடி விட்டுக்கொண்டே இருக்கிறார். ஓரளவுக்குமேல் எரிச்சல் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

ஐஷ்வர்யா பச்சன்.

படத்தின் மிகப்பெரிய பலம் இவரே. மிக மிக அழகாய் இருக்கிறார். எளிமையான உடையில், கண்ணை உறுத்தாத கவர்ச்சி காட்டுகிறார்.

அழகாய் இருப்பதாலோ என்னவோ, அவரது முகபாவனைகளும், அவரது உடல்மொழிகளும் மிக நன்றாய் இருக்கிறது.

விக்ரம்.

இந்த பாத்திரத்திற்கேற்ற உடல் முறுக்கும், வேஷங்களுமாக சூப்பராய் இருக்கிறார். ஐஷ்வர்யாவுடனான சொல்லாமலே காதல் காட்சிகளில் உடல்மொழிகளிலும், சிரிப்புகளுமாக கலக்குகிறார். படத்தின் இன்னொரு முக்கிய பலம் இவரே.

பிரித்விராஜ்.

மிக நல்ல நடிகர். இந்ந்தப்படத்தில் போலிஸ் அதிகாரியாக வந்து கடத்திச்செல்லப்பட்ட மனைவியை மீட்பது மட்டுமே இவரது வேலை. இவரது திரைவாழ்க்கையில் ஐஷ்வர்யாவின் ஜோடி என்பது மிக முக்கியமானதொரு விஷயமாய் இருக்கும்.


விக்ரமும், ப்ரித்விராஜும் தொங்கு பாலத்தில்போடும் சண்டை மிகப்பெரிய பிளஸ்பாயிண்ட். இருவருமே கலக்கியிருப்பார்கள்.

ரஞ்சிதா.

நித்தி கேசுக்குப் பின்னர் வெளியாகும் ரஞ்சிதா நடித்த படம் இது. ஐஷ்வர்யாவைவிட மிக அதிக கைதட்டல் கிடைப்பது இவருக்குத்தான். இவர் திரையில் தோன்றும் முதல் காட்சி முதல் எப்போதெல்லாம் திரையில் தோன்றுகிறாரோ அப்போதெல்லாம் கைதட்டல் காதைப் பிளக்கிறது. அருகிலிருந்த மலையாளி கூட்டம், எதுக்குடா இந்த சப்பை பிகருக்கு இந்தக் கைதட்டல் என நினைத்திருக்கும். படத்தில் ஏன் இவர் இருக்கிறார் எனத்தெரியவில்லை. இவர் இருக்கும் பகுதிகளை வெட்டியிருந்தால்கூட படத்தில் ஒரு வித்தியாசமும் இருந்திருக்காது. படத்தில் திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். நித்தி கேசினால் மட்டுமா இல்லை, மணிரத்னமே போதும் என நினைத்ததாலா எனத் தெரியவில்லை.

பிரியாமணி

படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் கதையில் வரும் இவர் இருக்கும் சில நிமிடங்களில் நன்றாய்ச் செய்திருக்கிறார். போலிஸ் ஸ்டேஷனில் நடந்ததை விவரிப்பதும், அதன் பின்னர் கிணத்தில் விழுந்து இறப்பதுடன் அவரது பகுதி முடிந்து விடுகிறது. இதற்குத்தான் அண்ணன் விக்ரம் பழிவாங்கப் புறப்படுகிறார்.

கார்த்திக்

சிறிய வேடம் என்றாலும் கிட்டத்தட்ட படம் முழுக்க வருகிறார். புரியும்படி வசனம் பேசிய அவரது மிகச்சில படங்களில் இதுவும் ஒன்றாய் இருக்கும்.

மணி ரத்னத்தின் திரைக்கதை, இயக்கம், அவருக்கு அவர் நினைத்ததுபோல வந்திருக்கும் போல. ஆனால் நமக்குத்தான் ஒரு சராசரி தமிழ் படத்தை விட ஒரு படி மேலான படம் பார்த்த நிறைவு அவ்வளவே. குத்துப்பாட்டுகள், அனாவசிய சண்டைகள் ஏதுமின்றி ஒரு படம் காணக்கிடைப்பதே அரிதாய் இருக்கும் நேரத்தில் நிச்சயம் இது ஒரு இலுப்பைப் பூ சர்க்கரைதான்.

உயிரே படத்தில் எல்லையோரக் காவல்படையை வில்லனாக்கியிருந்தார். இந்தப் படத்தில் தமிழகக்காவல் துறையை வில்லனாய்க் காட்டியிருக்கிறார், மணிரத்னம்.


Thursday, June 17, 2010

நான் பத்தாப்புப் படிச்சதை இன்னிக்குப் படிப்பவர்களுடன் ஒப்பிட்டு திரும்பிப் பார்க்கிறேன்

இன்றைக்கு தினமலரில் ஒரு செய்தி

4.கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி ராமநாதபுரம் கல்வி அதிகாரி விசாரணை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பள்ளி கழிப்பறையில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பெண் குழந்தை பெற்றது குறித்து விசாரணை நடத்த, மாவட்ட கல்வி துறை அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சுரிதா (மாணவி நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி கழிப்பறையில் யாருடைய உதவியுமின்றி தானாக குழந்தை பெற்று, கழிப்பறையில் போட்டுவிட்டு சென்றார். குழந்தையின் அழுகுரல் கேட்டு மற்ற மாணவிகள் கூறியதை தொடர்ந்து , கழிப்பறையில் உயிருக்கு போராடிய பச்சிளம் பெண் குழந்தையை ஆசிரியர்கள் மீட்டனர். பள்ளி நிர்வாகத்தினர் கல்வி துறை அதிகாரிக்கே தெரியாமல் ,மாணவியின் பெற்றோரிடம் மாணவி மற்றும் பச்சிளம் குழந்தையை ஒப்படைத்து, மாணவியின் பள்ளி டி.சி.,யையும் வழங்கினர். தகவல் வெளியே தெரிந்ததை தொடர்ந்து ,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலசுப்பிரமணியம் உத்தரவின்படி, பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட கல்வி அதிகாரி ஹெப்சிபா பியூலா ஜெயராணியை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளனர்.
மாவட்ட கல்வி அதிகாரி கூறியதாவது: தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவிகள் என அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தினேன். சம்பவம் நடந்த தினத்தில்,"" மாணவி உடையில் அதிக ரத்தம் இருந்ததால் ஆசிரியர்கள் மாதவிலக்கு அதிகமாக போயிருக்கலாம்,'' என, கருதி மாணவிக்கு தேவையான நாப்கின் வழங்கி உரிய உதவி செய்துள்ளனர். முதலில் மாணவிக்கு ரத்தபோக்கு அதிகமாகியிருக்கிறது என்றுதான் அனைவரும் நினைத்துள்ளனர். குழந்தை பெற்றிருப்பார் என யாரும் நினைத்துகூட பார்க்கவில்லை . குழந்தையின் அழுகுரல் கேட்டதை தொடர்ந்துதான் ஆசிரியர்களுக்கே தெரியவந்துள்ளது.இதன் விசாரணை அறிக்கை கல்வி துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.
குழந்தையை காப்பாற்றிய ஆசிரியர்கள் : மாணவி பெற்ற பெண் குழந்தை சிவப்பு நிறந்தில் அழகாக இருந்துள்ளது. குழந்தையை பெற்ற மாணவியோ, செய்வதறியாமல் பெற்ற பச்சிளம் குழந்தையை கழிப்பறை ஓட்டையில் திணித்து விட்டு வந்துள்ளார். அழுகுரல் கேட்டு மற்ற மாணவிகள் கூறிய தகவலை தொடர்ந்து, ஓடிவந்த ஆசிரியர்கள் ஆறு பேர் துரிதமாக செயல்பட்டு கழிப்பறையில் உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றி முதலுதவி வழங்கினர். ஆசிரியர்களின் துரிதநடவடிக்கையால் பச்சிளம் குழந்தை காப்பாற்றப்பட்டது. "" மாணவியின் நிலைக்கு யார் காரணம்,'' என, வெளியே சொல்ல மாணவி மறுத்துவருகிறார் என கூறப்படுகிறது. மாணவியை ஏமாற்றியவரை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்


முதலில் இந்தப் பெண்ணைப் பெற்றோருக்கு மகளைப்பற்றி எவ்வளவு அக்கறை இருந்திருக்கும்? இப்படி ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள் என்பதுகூட அறிய முடியாத அளவு..

அடுத்த அதிர்ச்சி, பத்தாம் வகுப்புப் படிக்கும்பெண் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமின்றி கடந்த 10 மாதங்களாக இருந்திருக்க முடிந்திருக்கிறது.

இந்தப் பெண் பெற்றோரிடம் கூறியிருந்தாலாவது இந்த அவமானத்தையாவது தடுத்திருக்கலாமே? எது தடுத்திருக்கும்? பிள்ளையைப் பெற்று தூக்கி எறிந்துவிடலாம் என்ற தைரியமா?

இப்போதெல்லாம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. போட்டியான உலகில் அதிக மதிப்பெண்கள் பெற ஒரு குழு தன்னார்வத்தாலோ அல்லது பெற்றோர்களின் வற்புறுத்தலாலோ ஓடிக்கொண்டிருக்க, இப்படி ஒரு குழு எதிர்காலத்தை தனது வயதிற்குப் பொருந்தாத செயல்கள்மூலம் வாழ்க்கையை வீணடித்துக்கொண்டிருக்கிறது.

ஆசிரியர்களுக்கு தன்னிடம் படிக்கும் குழந்தைகளின் ஜாதகமே தெரிந்திருந்தது நாங்கள் படிக்கும் காலங்களில். இத்தனைக்கும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை எனில் எல்லாப் பிரிவுகளுக்கும் ( அ பிரிவு முதல் ஊ பிரிவு வரை) அவர்தான் கணிதமோ, அறிவியலோ எடுப்பார். அப்படியிருந்தும் அது சாத்தியமானது. ( சுப்பையா மகந்தானடா நீயி? நாளைக்கு உங்கப்பாவக் கூப்டுட்டு வா)

இதுபோன்ற வருத்தம் தரும் நிகழ்வுகளுக்கு பெற்றோர்களின் செல்லம் ஒரு பங்கு எனில் ஊடகங்களின் பங்கு முக்கால் பங்கு. காலைமுதல் மாலைவரை ஓடும் பாடல் நிகழ்ச்சிகளின் கீழே பார்த்திருக்கிறீர்களா? ரம்யா ஐ லவ் யூ - அய்யப்பன், சுப்பு, மீட் மி அட் அவர் ப்ளேஸ் என ஓட விடுவதன்மூலம் டி.ஆர்.பி ரேட்டிங்கோ, காண்போர்களை தக்க வைக்கவோ முயல்கிறது ஊடகங்கள். ஆனால் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய கெடுதலைச் செய்கிறோம் என உணர்வதேயில்லை. உண்மையில் காதலிப்பவர்கள் இப்படி டி.வியில் ஓட விட்டா காதலிப்பார்கள்?. எதையும் செய்துபார்க்கத் துடிக்கும் இளைய தலைமுறையை இப்படியா வீணடிப்பது?

தினமலர் கொஞ்சமவது பொறுப்புனர்ச்சியுடன் நடந்து கொண்டிருக்கிறது. இல்லையெனில் பத்திரிக்கையை விற்பதற்காக அந்த பெண்ணின் புகைப்படத்தைக்கூட போடத்தயங்க மாட்டார்கள் சில வியாபாரிகள்.

சமீபத்தில் பள்ளியை விட்டு வெளியேவந்தபோது கூட மாணவர்களின் தரம் ஓரளவு நன்றாய் இருந்தது ( 1992). இன்றைய நிலையை நினைத்துப்பார்க்கவே அச்சமும், மலைப்புமாய் இருக்கிறது, வயதுக்கு வந்த குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களை நினைக்கையில்.

நன்றி: தினமலர்.

Saturday, June 12, 2010

ஓராண்டை நிறைவு செய்யும் - சொல்வனம்



இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கும் சொல்வனத்திற்கு வாழ்த்துக்கள்.

தரமான ஒரு இணைய இலக்கியப்பத்திரிக்கையை ஓராண்டு காலம் தொய்வின்றியும், இலக்கிய இதழ்களுக்கே உரித்தான சிண்டுமுடிதல்கள், உள் அரசியல்கள், பிற எழுத்தாளர்களை வசைபாடுதல் என்ற அக்கபோர்கள் ஏதுமின்றி ஒரு இலக்கியப் பத்திரிக்கையை "இப்படியும் நடத்தலாம்" என்று நடத்திக்காட்டியிருக்கும் சொல்வனம் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சொல்வனம் மென்மேலும் சிறப்பாய் செயல்படவும், நல்ல இலக்கியக் கட்டுரைகளையும், ஆய்வுகளையும், கலைச்செல்வங்கள் யாவையும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அளிக்கவும் வாழ்த்துக்கள்.

சொல்வனத்தின் வெற்றிக்கான காரணங்களாக நான் நினைப்பது,

மிகச் சிறப்பான விமர்சனங்களையும், இலக்கியவாதிகளின் பேட்டிகளையும், இசைகுறித்தான கட்டுரைகளையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்ததும்...

வலைப்பக்கத்தை இளமைப் பொலிவுடன் கட்டியமைத்ததும், மகரந்தம் போன்ற பொதுத்தளத்தில் கிட்டாத பொதுஅறிவுச் செய்திகளை தவறாமல் வழங்கியதும்..

புன்முறுவலுடனே படிக்க வைக்கும் ராமன்ராஜாவின் அறிவியல் கட்டுரைகள் மற்றும், சுகாவின் அனுபவக் கட்டுரைகள்..

மொழிமாற்றக் கதைகளில் மிகச் சிறப்பானதொரு நேர்த்தியும், தொடர்ந்து அதை கடைப்பிடித்ததும்...

வழக்கமான கேலிச்சித்திரங்களாய் இல்லாமல் இன்றைய குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கும் விதமாய் அமைந்த கேலிச்சித்திரங்களும் ...

தரமான கவிதைகளும், சினிமா விமர்சனங்களுமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளதே சொல்வனத்தின் வெற்றி.

குறைகளே இல்லையா என்றால்..

தரமான எழுத்தாளர்களாகவே இருப்பினும், தெரிந்த பெயர்களையே மீண்டும், மீண்டும் பார்க்கும்போது படிக்கும் ஆர்வம் சிறிது குன்றாமலில்லை.

இன்னும் கொஞ்சம் இறங்கிவந்து, தரத்தில் சமரசமின்றி அதேசமயம் பெருவாரியான வாசகர்களைக் கவர என்ன செய்யலாம் என்பதுகுறித்து சொல்வனம் குழு யோசிக்கலாம்.

ஆனால், இவையெல்லாம் தாண்டி இலக்கிய உலகில் வாராதுவந்த மாமணி “சொல்வனம்” என்றால் அது மிகை இல்லை.

சொல்வனம் இதழ்களை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Wednesday, June 9, 2010

ராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்


ஒரு கொலை வழக்கை நாவல் போல விவரிக்க முடியுமா? முடியும் என காட்டியிருக்கிறார் ரஹோத்தமன்.

இந்த புத்தகத்தைப் படிக்கையில், நமது நாட்டில் ஆள் பலமும், அதிகார பலமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து விட முடியும் என்பதையும், நமது தலைவர்களின் பாதுகாப்பு ஏற்படுகளைப்பற்றி அறிய நேர்கையில் பொதுஜனமாகிய நாமெல்லாம் பிழைத்திருப்பது கடவுள் புண்ணியத்தால் என்பதும் தெரிய வருகிறது.

புத்தகம் முழுக்க கேஸ் நம்பரும், இடங்களுமாக எழுதி அறுத்துத் தள்ளாமல், தோளில் கைபோட்டு “என்ன நடந்துச்சி தெரியுமா” எனப்பேசும் ஒரு நண்பனைப் போல இருக்கிறது இப்புத்தகம்.

இன்றைய இலங்கை நிலவரத்தைக் காண்கையில், இதற்காகவா இவ்வளவும் செய்தார்கள் என்பதை குறைந்தபட்சம் மனதளவிலாவது கேட்காமல் இருக்கமாட்டார்கள் தமிழ்பேசுவோர். தமிழர்களுக்காக, அவர்தம் உரிமைகளுக்காக போராடுவதாகச் சொன்ன இயக்கம், அதற்குத் தடையாக இருப்பவர்கள் என அவர்கள் நினைத்தவர்களையெல்லாம் ஒழித்தார்கள். அவர்கள் நினைத்ததுபோல நடக்காத ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பழிவாங்க தீர்மானித்ததில் முக்கிய குறி நமது முன்னாள் பாரதப் பிரமர் ராஜீவ் காந்தி. ஆனால் அதைக்கூட உணரமுடியாத அளவு நமது உளவுப்படைப்பிரிவினர் சாதாரன அரசு குமாஸ்தாவின் மனநிலையில் செயல்பட்டதால் நமது முன்னாள் பிரதமரை இழந்தோம் என்பதைத் தெளிவாய்ச் சொல்கிறது புத்தகம்.

விடுதலைப்புலிகள் எப்படி தங்கள் இயக்கத்துக்கான ஆதரவாளர்களை உருவாக்குகிறார்கள், தனது வாழ்க்கையையே அர்பனிக்க வைக்கிறார்கள்? எப்படி தங்களது திட்டங்களுக்கு தேவையெனில் சாகவும் தயங்காத ஆட்களைச் சேர்க்கிறர்கள், மூளைச்சலவை எப்படியெல்லாம் செய்யப்படுகிறது என்பதெல்லாம் அப்படியே போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். அவர்கள் ராஜீவைக் கொலைசெய்தல் என்ற திட்டத்தைச் செயல்படுத்த எப்படி இயங்கினார்கள் என்பதை படிக்கையில், நமது உளவுத்துறையினர் போகவேண்டிய தூரத்தை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.

விடுதலைப் புலிகள்தான் இந்தக் கொலையைச் செய்திருப்பார்கள் என இந்திய உளவுத்துறையில் இருக்கும் ஒருவருக்குமே சந்தேகம் வராதபடிக்குத்தான் விடுதலைப்புலிகள் இயக்கம் இயங்கியிருக்கிறது. விடுதலைப்புலிகளும் நாங்கள் இதைச் செய்யவில்லை, செய்தவர்களை முடிந்தால் கண்டுபிடியுங்கள் என சவால் விடும் நிலையில்தான் நமது உளவுப்பிரிவுகள் இயங்கிக்கொண்டிருந்தன. விடுதலைப்புலிகளின் கர்னல்கிட்டு சொல்வதை வைத்து தமது கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார் நமது உளவுப்பிரிவுத் தலைவர் என்ற அதிர்ச்சித் தகவலைக் கேட்டபின் மற்ற தகவல்கள் எதுவுமே நமக்கு அவ்வளவு அதிர்ச்சியைத்தருவதில்லை.

இன்றைக்கு பூனைப்படை, எலிப்படை என எல்லா வகையான படைகளையும் வைத்துக்கொண்டு சுற்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், மக்களின் தலைவனாய், எளிமையாய், இந்தியாவை வல்லரசாக்கும் கனவில் இருந்தவரை உடலைச் சிதறடித்துக் கொன்றுவிட்டார்கள். எல்லோரும் எளிதில் அனுகும் விதத்தில் அவர் இருந்ததும், பாதுகாப்பு வளையத்தைத் தாண்டிச்செல்வதை அவர் விரும்பியதுமே எதிரிகளுக்கு வசதியாகவும், அவருக்கு எமனாகவும் அமைந்துவிட்டது.

விசாரனையை எங்கிருந்து ஆரம்பிப்பது என தெரியாமல் இருந்த விசாரனை அதிகாரிகளுக்கு உளர ஆரம்பிக்கும் போட்டோகிராபர் மூலமாய் முதல்துப்பு கிடைக்கிறது. பிறகு நளினி - முருகன் காதல், வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. எப்படி திட்டமிட்டார்கள் என்பதையும், எப்படி செயல்படுத்தினார்கள் என்பதையும் கொலையாளிகளின் வாக்குமூலத்தையே நமக்கு எழுதிக்காட்டியிருக்கிறார் ரகோத்தமன்.

ஆழமாய்ப் படிக்க ஒன்றுமே இல்லைபோலத் தோன்றினாலும், தமிழகத்தில் இருந்த மற்றும் இன்றிருக்கும் பல பெரிய தலைகளுக்கு தெரிந்தேதான் இந்தப் படுகொலை நடந்திருக்க முடியும் என்பதை ரகோத்தமன் நம்புகிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாய், அவர் விசாரிக்க விரும்பிய தலைவர்களான வை.கோ, கருணாநிதி, மரகதம் சந்திரசேகர் எனப் பலரை விசாரிக்க விடாமல் மூத்த அதிகாரி கார்த்திகேயன் நடந்துகொண்டதை சுட்டிக்காட்டுகிறார். ஒருவகையில் பார்த்தால் புத்தகத்தில் பல இடங்களில் நேரடியாகவே கார்த்திகேயன் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டே இருக்கிறார். சரியாக விசாரிக்க அனுமதித்திருந்தால் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்க முடியும் என்பதுதான் அவரது வருத்தமெல்லாம்.

மொத்தத்தில் நமது ஆட்சியாளர்களின் ஊழல்களை மட்டுமே பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன நமக்கு அவர்களுக்கு இருக்கும் இன்னொரு முகத்தையும் நமக்கு காட்டுகிறார் ரகோத்தமன். அவர்கள் நிஜமாகவே கையும், களவுமாய் பிடிபட்டால் நொட்டைநியாயம் செய்வதற்கு என்ன காரணங்கள் வேண்டுமானலும் சொல்லலாம். ஆனால் அப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் தொடர முடிந்ததும், மீண்டும் ஆட்சியில் அமர்வதும் நாம் நமக்காக பொதுவாழ்க்கையில் ஈடுபட இருப்பவர்களில் எவ்வளவு தரமானவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதற்கு ஒரு சாம்பிள்.

இந்தியாவில், குறிப்பாய் தமிழகத்தில் ஆளும் கட்சியின் ஆதரவிருந்தால் நீங்கள் உலகமகா கொலைகாரனாய் இருந்தாலும் உங்களை போலிஸ் பிடிக்காமல் போலிஸே பார்த்துக்கொள்ளும். ஆளும் கட்சிக்கு எதிராய் இருந்தால் உங்கள் வீட்டில் உங்களுக்குத் தெரியாமலேயே கஞ்சாபொட்டலம் இருக்கும். உங்களை கைது செய்து அழைத்துச் செல்வார்கள்.

பத்மநாபாவைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவர்களை கைது செய்ய வேண்டாம் என ஒரு வாய்மொழி உத்தரவு வந்ததாக ரகோத்தமன் குறிப்பிடுகிறார். அப்படியெனில் வாய்மொழியாக உத்தரவிடும் பொறுப்பில் இருப்பவருக்கு யார் கொல்லப்படப் போகிறார் என்பதும், யார் கொல்லப்போகிறார் என்பதும், தெரிகிறது. அவரை தப்ப விட உத்தரவிட்டதன் மூலம் ஏதேனும் ஒரு ஆதாயமோ அல்லது தனக்கு ஆபத்து வராமலோ பார்த்துக்கொள்ள முடிகிறது. நமது நாட்டில் மட்டுமே இப்படியெல்லாம் நடக்க சாத்தியங்கள் உண்டு. அப்படி யார்வாய்மொழி உத்தரவிட்டார்கள் என்பதை இன்று வரை பொதுமக்களுக்கு தெரியாமல் மறைத்துவிட முடிகிறது. இந்த வழக்கின் உயரதிகாரியான ரகோத்தமன் அவர்களுக்கே தெரியாமல் மறைத்துவிட முடிகிறது.

நாட்டின் பாதுகாப்பில் ராணுவத்திற்கு எத்தனை பங்கு இருக்கிறதோ அதே அளவு அல்லது அதைவிட மேலேயே உளவு நிறுவனங்களுக்குப் பங்கிருக்கிறது. ஆனால் அதிலும் திறமையின்மை, ஊழல், சுயநலம் எல்லாம் புரையோடிய மனிதர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் நமது நாட்டை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.
ராஜீவ் கொல்லப்பட காரணமான அலட்சியத்துடன் நடந்துகொண்ட அதிகாரிகள் குறித்த விசாரனைகூட முறையாய் நடைபெறவில்லை என்று ரகோத்தமன் பதிவு செய்கிறார். அதற்கான கேஸ் டயரிகூட இல்லை என எழுதுகிறார்.

எங்கெங்கு காணினும் ஊழலடா என்பதைப் போல இன்றும் அங்கிங்கெனாதபடிக்கு ஊழல் புரையோடிப்போயிருப்பதை ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியில் காணமுடிகிறது. மத்திய அமைச்சர் பதவி யார்யாருக்கு என்பதை ஒரு தரகுப் பெண்மனி முடிவு செய்கிறார். மந்திரியாக வரப்போகும் நபரிடம் பேரம் பேசுகிறார். இன்று ஊழல் என்ற ஒன்று இல்லாத ஏதேனும் ஒரு அமைச்சகம் இருக்குமா என்றால் இல்லை என்பதே பதிலாய் இருக்கும்.
நம் நாட்டு ராணுவ ரகசியங்களையும், ராஜாங்க ரகசியங்களையும் எதிரி நாட்டினருக்கு பனத்திற்காகவோ, அல்லது காதலுக்காகவோ விற்கும் கும்பல்தான் நமது ராஜாங்க அதிகாரிகள்.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை ஏன் இத்தனைகாலம் காலம் தாழ்த்திச் சொல்லவேண்டியிருந்தது என்பதற்கு ரகோத்தமன், வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த தேடப்படும் குற்றவாளியான பிரபாகரன் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதும், இந்த வழக்கு முடிந்துபோனதாக அறிவிக்கப்பட்டிருப்பதாலும்தான் என்றிருக்கிறார்.


இந்தப் புத்தகத்தில் பல கருப்பு நகைச்சுவையும் உண்டு.

சீக்கிய தீவிரவாதிகளால் இந்திராவிற்கு ஆபத்து என உளவுப்பிரிவு எச்சரிக்க, இந்திராகாந்தியின் பாதுக்காப்புப் பணியில் இருந்த அனைத்து சீக்கியர்களும் விடுவிக்கப்பட்டு வேறு ஆட்கள் அமர்த்தப்படுகிறார்கள். இப்படிச் செய்ததன்மூலம் சீக்கியர்களை அவமதித்து விட்டீர்கள் என குரல் எழுந்தவுடன் எல்லா சீக்கியரும் மீண்டும் இந்திராகாந்தியின் பாதுகாப்புப் பணியில். சில மாதங்களில் அன்னை இந்திரா சீக்கியர்களால் சுடப்பட்டு இறக்கிறார்.


மந்திரியாய் இருக்கும் சுப்ரமணியசாமி விடுதலைப்புலிகள்தான் இந்தக் கொலையைச் செய்திருப்பார்கள் என அடித்துச் சொல்ல, உளவுப்பிரிவுத்தலைவர் சொல்கிறார், நான் விடுதலைப் புலிகள் கூட்டத்தில் நமது உளவாளியை வைத்திருக்கிறேன், நிச்சயமாய் இந்தக் கொலையை விடுதலைப்புலிகள் செய்யவில்லை என்கிறார். அவர் சொல்லும் உளவாளி கர்னல் கிட்டு.
மொத்தத்தில் ஒரு துப்பறியும் நாவலைப் படித்துமுடித்த திருப்தியும், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய சோர்வும் ஒருசேர எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சென்னையில் விமானத்தில் ஏறும்போது படிக்க ஆரம்பித்து 4 மணிநேரத்திற்குள் படித்து முடித்துவிட்டேன். அவ்வளவு எளிமையான, சுவாரசியமான மற்றும் விறுவிறுப்பான எழுத்து நடை.

வாய்ப்புக்கிடைத்தால் அவசியம் படியுங்கள்.

ராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்

ஆசிரியர் : கே.ரகோத்தமன்

விலை : ரூ.100

கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.


நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்