Saturday, January 30, 2010

மூன்று முட்டாள்கள். ( 3 Idiots)




தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்காமே.. அதான் 3 Idiots பெயரை தமிழ் "படுத்தி" இருக்கிறேன்

தமிழில் இலக்கியத்தில் முற்போக்கு சிந்தனை காணப்படுகிறதா அல்லது பிற்போக்கு சிந்தனை காணப்படுகிறதா என்ற வினாவிற்கு ஜெயகாந்தன் சொன்னது “ இலக்கியத்தில் முற்போக்கு, பிற்போக்கு என்பதெல்லாம் கிடையாது.. எல்லாம் ஒரே போக்குத்தான், அது முற்போக்கு மட்டுமே” என்று.

அப்படி முற்போக்காய் சிந்திக்கும், படமெடுக்கும் அளவு போய்க்கொண்டிருக்கும் சமகால நடிகர் மற்றும் தயாரிப்பாளராகியுள்ள அமீர்கானும், அவரது வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் இந்தித் திரைப்பட உலகமும், ரசிகர்களும்.

படத்தைப்பற்றிய ஒரு அறிமுகம்

இம்பீரியல் பொறியியல் கல்லூரியல் படிப்பவர்கள் ஃபர்ஹான், (மாதவன்), ராஜு ரஸ்தோகி (ஷர்மான் ஜோஷி) மற்றும் ரன்ச்சோட் என்றழைக்கப்படும் ரன்ச்சோட்தாஸ் ஷியாமள்தாஸ் ச்சன்சட் ( அமீர்கான்) மூவரும் தங்கியிருப்பதும் ஒரே அறையில்தான்.

ஃபர்ஹானும், ராஜுவும் குடும்பத்தின் கஷ்டத்தை நிவர்த்திப்பதற்காக பொறியியல் கல்லூரிக்கு வந்திருப்பவர்கள், ஆனால் ரன்ச்சோட் படிக்கும் மகிழ்ச்சிக்காகவும், வாகனங்களை வடிவமைப்பதிலும் அதன் பொறியியல் மீதான ஆவலாலும் கல்லூரிக்குப் படிக்க வந்துள்ள பணக்கார மாணவன்.

ரன்ச்சோட்வின் புதியதான, வழக்கத்திற்கு மாறான பதில்களால் கல்லூரியின் முதல்வர் வீரு சஹஸ்ரபுதே ( பொமான் இரானி) வின் கோபத்திற்கு ஆளாகிறார்.

இரக்கமற்ற முதல்வரின் செயலால் ( பிராஜக்டை முடிக்க கொஞ்சம் அவகாசம் தராமலும், உங்கள் மகன் பாஸ் செய்ய மாட்டான் என மானவனின் பெற்ற்றோருக்கு போன்மூலம் தெரிவிப்பதும்) ரன்ச்சோட்வின் கூடப்படிக்கும் மாணவன் ஜாய், மனஅழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறான்.

அந்த தற்கொலைக்குக் காரணம் முதல்வரின் முட்டாள்தனமான, மனிதாபிமானம் அற்ற, வெற்றுப்படிப்பை மட்டுமே படிப்பு எனக் கொள்ளும் அவரது குணமே என்று குற்றம் சாட்டுகிறான் ரன்ச்சோட். கோபம் கொள்ளும் முதல்வர் ரன்ச்சோட்டை மாணவர்களுக்கு வகுப்பெடுக்கச் சொல்ல, ரன்ச்சோட் உண்மையில் இல்லாத ஒன்றைச் சொல்லி அதைக் குறித்து விளக்குமாறு கேட்க ஆசிரியர்களும், மாணவர்களும் புத்தகத்தை முன்னும் பின்னும் புரட்டிக் கொண்டிருக்க இறுதியில் அப்படி ஒன்றுமே இல்லை என்பதைச் சொல்லி வைரசையும், இதர ஆசிரியர்களையும் தர்ம சங்கடத்துள்ளாக்குகிறான். முதல்வர் வைரஸ் ரன்ச்சோட்விடம் நட்பாய் இருக்கும் மற்ற இருவரையும் பிரிக்க முயல்கிறார்.

அதிக மதிப்பெண்கள் எடுப்பவதே வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வழி, அதுவே மதிப்பையும், பணத்தையும் சம்பதித்துத் தரும் என்பதை குறிக்கோளாய்க் கொண்டிருக்கும் இன்னொருவன் சதுர் ராமலிங்கம் எனும் சைலன்ஸர் ( ஓமி வைத்யா)

தான் அதிக மதிப்பெண்கள் இவன் எடுக்க வேண்டுமெனில் மற்றவர்கள் குறைவாய் எடுக்க வேண்டும் என்பதற்காக எல்லாருடைய அறையிலும் ஆபாசப் புத்தகங்களை போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறான். கொஞ்சம்கூடப் புரியாமல் படித்து ஒப்பிப்பது மட்டுமே இவனது சாமர்த்தியம். சரியான பாடம் புகட்ட ரன்ச்சோட் தீர்மானிக்கிறான். சைலன்ஸருக்கு முதல்வர் வைரஸ் பட்டமளிப்பு விழாவில் பேசுவதற்கான வாய்ப்பை வழங்க, அவன் பேச வேண்டிய இந்திக் குறிப்பை கல்லூரி நூலகர் ஆங்கிலத்தில் டைப்படித்து வைத்திருக்க அதில் ”சமத்கார்” என்று வரக்கூடிய இடங்களிலெல்லாம் ”பலாத்கார்” என்று மாற்றிவைத்துவிடுகிறான். சைலன்சர் உனர்ச்சிகரமாக அந்த உரையைப் படிக்க மொத்த அரங்கமே குலுங்குகிறது. அவமானத்தின் உச்சத்தை அடைகிறான் சைலன்ஸர். வாழ்க்கையில் அவர்கள் அனைவரையும் விட மிக உயர்ந்த நிலையை அடைந்த பின் நிச்சயம் சந்திப்பேன் என்கிறான்.

ரன்ச்சோட் வைரசின் மகள் பியாவுடன் ( கரீனா கபூர்) காதல் - தனி டிராக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருநாள் நண்பர்கள் மூவரும் குடித்துவிட்டு வைரஸுக்குத் தெரியாமல் வைரஸின் மகள் பியாவைப் பார்க்கச் சென்றுவிட்டு அவரது வீட்டிலுள்ள பெயர்ப் பலகையில் சிறுநீர் கழித்துவிட்டு வருகின்றனர். அந்தப் போதையுடன் கல்லூரி வகுப்பரையில் உளரும் ராஜுவை கல்லூரியிலிருந்து வைரஸ் நீக்குவதாக சொல்கிறார். அதிலிருந்து தப்பிக்க ரன்ச்சோட்தான் இதைச் செய்தான் எனச் சொல்லிவிட்டால் போதும் என்கிறார் வைரஸ்.

கல்லூரியிலிருந்து வெளியேயும் வரமுடியாமல், நண்பனையும் காட்டிக்கொடுக்க இயலாமல் மாடியிலிருந்துகீழே குதித்து விடுகிறான். தீவிர சிகிச்சையும், ரன்ச்சோட் மற்றும் பர்ஹானின் இடைவிடாத முயற்சியும் ராஜுவை படுக்கையிலிருந்து காப்பாற்றுகின்றது. பர்ஹானும், ராஜுவும் ரன்ச்சோட்வின் வழிமுறையை உனர்கின்றனர். பர்ஹானுக்கு வரும் நேர்முகத்தேர்வுக்கு கால், கையில் கட்டுடனும், சக்கர நாற்காலியிலும் சென்று ராஜு கலந்துகொள்கிறான். அவர்கள் எதிர்பாராத ஆனால் நேர்மையான பதிலால் ராஜுவுக்கு வேலை கிடைக்கிறது.

பர்ஹானும் அவனதுபெற்றோரிடம் வாதாடி விருப்பமான புகைப்படக்காரனாய் ஆகிறான்.

ராஜு தேர்வை முடித்தால்தான் வேலைகிடைக்கும் என்பதால் அவனை தேர்வில் வெற்றிபெற முடியாத அளவு கடினமான கேள்விகளை வைத்து அவனைத் தோற்கடிப்பேன் என்கிறார் வைரஸ்..

பியாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை எப்படி பணம் மட்டுமே வாழ்க்கை என இருக்கிறான் என இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் ரன்ச்சோட் நிரூபிக்க, கலியாணம் நடக்க இருக்கும் சில மணி நேரத்தில் மற்ற இரு நண்பர்கள் மற்றும் தனது பெருமையை நிரூபிக்கவும், தனது வியாபாரத்திற்க்கான கூட்டணி அமைக்கவும் இந்தியாவுக்கு வந்திருக்கும் வைரசுடனும் ரன்ச்சோட்வுடன் சேர போகிறாள்.

அதன் பின்னர் பியா ரான்ச்சோவுடன் சேர்ந்தாளா,

ரன்ச்சோட் என்பவன் ரன்ச்சோட்தானா ? அதன் பிண்ணனி என்ன?

வாழ்க்கையில் வெற்றியடைந்த மற்ற இரு நண்பர்களும், பியாவும் ரன்ச்சோட்வைக் கண்டார்களா?

சைலன்ஸர் வாழ்க்கையில் அவன் எதிர்பார்த்த வெற்றியடைந்தானா?

எது உண்மையில் வெற்றி என நமக்கும் புரிகிறதா?

என்ற கேள்விகளுக்கு விடை வெண் திரையில் ..

தாரே ஜமீன் பர் ( மண்ணில் வின்மீன்கள்) என்ற முதல் படத்திலேயே குழந்தைகளின் பிரச்சினைகளைக் கூட கண்டுகொள்ளமுடியாத அளவு கண்ணை மூடிக்கொண்டு போட்டியில் ஜெயிக்க வைக்க முயலும் பெற்றோரைச் சாடியிருந்தார்.

இந்தப் படத்தில் நமது கல்வித்துறையின் போக்கை நகைச்சுவை கலந்த, சீரியஸ்தனத்துடனும் அனுகி இருக்கிறார்.

தனது சொந்த மூளையை உபயோகித்து படிக்கிறவனுக்கும், மனப்பாடம் செய்து ஒப்பிப்பவனையும் கானும் இன்றைய ஆசிரியர் மனப்பாடம் செய்து ஒப்பிப்பவனையே நல்ல மாணவனாகக் கொள்கிறார்.

ஒரு சிறிய உதாரனமாக இயந்திரம் என்றால் என்ன என்ற கேள்விக்கு “ மனிதனின் வேலையை எளிதாக்கும் எல்லாமே” இயந்திரம் தான் என்பார் அமீர்கான். ஆனால் ஒரு இயந்திரம் என்றால் என்ன என்பதை புத்தகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதுபோல ஒப்பிக்கும் ஒரு மாணவனை பாராட்டுவார் ஆசிரியர்.

படித்ததை பரீட்சையில் வாந்தி எடுப்பவர்களில் அதிகம் வாந்தி எடுப்பவருக்கு அதிகம் மதிப்பெண்கள் கிடைக்கிறது. உலக நடப்பில் அவரே சிறந்தவராகவும் வெற்றியாளராகவும் அறியப்படுகிறார். இதில் உள்ள அபத்தத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார் அமிர்கான்.

போட்டி, போட்டி என குழந்தைகளின் இயல்பாய் மலர வேண்டிய அறிவை பாடங்களினால் நிரப்பி அதை வாந்தியெடுக்க வைக்கும் அபத்தத்தையும், குழந்தைகளின் உண்மையான திறனை அடையாளம் கண்டு அதனை அந்தந்த துறையில் வளரவிடாமல் பெற்றோர்களின் ஆசைப்படி வளரவேண்டிய கட்டாயத்தில் இன்றைய குழந்தைகள் இருக்கும் நிலையையும் சுட்டிக் காட்டுகிறார் இந்தப் படத்தில்.

சோகம், மகிழ்ச்சி, கிண்டல் என படம் முழுக்க சந்தோஷமாய்ச் செல்கிறது.

உகாண்டாவில் பிறந்து, பாண்டிச்சேரியில் படித்த தென்னிந்தியர்போல சித்தரிக்கப்பட்டுள்ள (ராமலிங்கம்) ஒருவரை வைத்து தென்னிந்தியர் அனைவரும் மொட்டை மனப்பாடம் செய்பவர்கள் என்பதுபோல கிண்டலடித்திருக்கிறார் அமீர். இது வடக்கின் எண்ணம் நம்மைப் பற்றி.

”எத்தனையோ பன்னிட்டோம், இதச் செஞ்சிரமாட்டமா” என்பதன் நாகரீக வடிவம்தான் ”ஆல் இஸ் வெல்” என்று பிரமாதப்படுத்தப்படும் வசனம்.

மொத்தத்தில் உன்மீது நம்பிக்கை வை என்பதை மாணவர்களுக்கும், குழந்தைகள் மீது உங்கள் ஆசையை தினிக்காமல் அவர்கள் ஆசைப்படி அவர்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள் என பெற்றோருக்கும் அமீர் விடுத்துள்ள வேண்டுகோளே இப்படம்.

அவசியம் பெற்றோருடன் சென்று பாருங்கள். உங்க தம்பியோ, தங்கச்சியோ விரும்பியபடி படிக்க உங்க அம்மாப்பா வாய்ப்பளிக்கலாம்.

Tuesday, January 26, 2010

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.


வலையுலகில் அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும், இந்தியர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

பாரதத்தாயானவள்,

வரும் ஆண்டுகளில் இந்தியர்கள் அனைவரும் தமது நாட்டைப் பற்றி குறைந்தபட்சம் சிந்திக்கவும்,

நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கவும், இல்லையெனில் நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்கும் கருப்புப் பணம், கள்ளக்கடத்தல், பதுக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடாமலிருக்கவும்,

அரசியல்வாதிகள் பிற மத தீவிரவாதிகளால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து உண்மையான கவலைகொண்டு செயலாற்றவும், சிறுபான்மையினரின் வாக்குவங்கிகளுக்காக நாட்டை பலிகொடாதிருக்கவும்,

சக இந்தியர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தாவிடினும் பிரிவினையை தூண்டாதிருக்கவும்,

நமது நாட்டின் சுதந்திரம் குறித்து சிறிதளவாவது தெரிந்துகொள்ளவும், தற்போதைய தலைவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு உண்மையாக சுதந்திரத்திற்காக உழைத்த “நேதா” ஜி குறித்தும், ”சர்தார்” குறித்தும், தாதாபாய் குறித்தும், ஜெயப்ரகாஷ் நாராயணன் குறித்தும் தெரிந்து கொள்ளவிழைவோம்.

தாயைக் காப்பதும், நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்.. - பாரதிதாசன்..

பாரத நாட்டின் புதல்வர் நாம்.. நம் தாயை பாதுகாக்க உறுதி கொள்வோம்..


ஜெயக்குமார்

Monday, January 18, 2010

UP - Animation Movie. ( பறக்கும் வீடு.)



வால்டிஸ்னி - பிக்ஸார் குழுமத்தின் சிறப்பான குழந்தைகளுக்கான அனிமெஷன் ப்டங்களை உருவாக்கும் திறனை மான்ஸ்டர் இன்க் படம் முதலில் காட்டியது என நினைக்கிறேன். ( நான் முதலில் பார்த்ததே அந்தப் படமாகவும் இருக்கலாம்)

அதன்பின்னர் “அப்” என்ற ஆங்கிலப் பெயரில் ஒரு குழந்தைகளுக்கான படம் வந்திருக்கிறது அவசியம் பாருங்கள் என நண்பரின் பரிந்துரையில் இந்தப்படத்தைப்பார்க்க ஆரம்பித்தேன்..

முதலில் இதை ஒரு குழந்தைகளுக்கான படம் என்பதையே நாம் நம்ப முடியாது, அவ்வளவு அருமையாக எடுத்திருக்கிறார்கள்.

சார்லஸ் முண்ட்ஸ் என்ற சாகசவீரரை தனது ஆதர்சமாகக் கருதும் கார்ல்பிரடெரிக்சனும், சாகசத்தில் ஆர்வமுள்ள அதேசமயம் கார்லைப்போலவே சார்லஸ் முண்ட்ஸை தனது ஆதர்சமாகக் கருதும் எல்லியும், நண்பர்கள். சார்லஸ் முண்ட்ஸ் தென் அமெரிக்கக் காடுகளில் இருக்கும் ஒருவகையான அபூர்வப் பறவையின் எலும்புக்கூடைக் கொண்டுவர அதை அறிவியலாளர்கள் அவர் எலும்புக்கூடுகளை வைத்து இல்லாத ஒன்றைக் காண்பித்துவிட்டார் என அறிவிக்க, அவரது அறிவியலாளர் குழு உறுப்பினர் தகுதி கூட பறிக்கப்படுகிறது. அவமானமடைந்த சார்லஸ் உண்ட்ஸ் , அவர் காண்பித்த எலும்புக்கூட்டிற்கு சொந்தமான அதே இனப்பறவையை உயிருடன் பிடித்துவருவேன், அதுவரை திரும்பமாட்டேன் என சபதம் செய்து ஆகாய பலூனில் பறந்து செல்கிறார். அதன் பின்னர் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.


தென் அமெரிக்காவில் இருக்கும் பாரடைஸ் பால்ஸுக்கு அருகில் வீடு கட்டுவதும் அங்கு சென்று மனிதனின் கால்படாத இடங்களைப் பற்றி ஆராய்வதும், அங்கிருக்கும் விலங்கினங்கள், பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதும் எல்லியின் கனவு. எல்லியைப்போலவே ஒத்த சிந்தனை கொண்ட கார்லும் நட்பைத்தொடர்கின்றனர்.

காலப்போக்கில் எல்லியும், கார்லும் காதலும் செய்து, திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதும், அவ்வப்போது தென் அமெரிக்காவில் பாரடைஸ் ஃபால்ஸில் வீடுகட்டும் கனவை அசைபோடுவதும் அதன் பின்னர் பலவித காரணங்களால் அதைத் தள்ளிப்போட நேர்வதுமாக காலம் கழிகிறது. தென் அமெரிக்கா செல்வதற்காக பணமும் சேகரிக்கிறார்கள். அந்தப் பணம் சேகரிக்கும் உண்டியல் வீட்டின் பல தேவைகளுக்காக மகிழ்ச்சியுடனே உடைக்கப்படுகிறது.

இதற்கிடையில் எல்லி, கார்ல் இருவருக்கும் குழந்தைகள் இல்லையே என்ற சோகமும் படர்கிறது. ஒரு நாள் கார்ல் தென் அமேரிக்கா செல்ல இருவருக்கும் விமான டிக்கெட் வாங்கி வீட்டிற்கு வரும் போது எல்லிக்கு உடம்பு சுகமில்லாமல் போகிறது. அதன் பின்னர் சில காலத்தில் எல்லி இறக்கிறாள். தனிமையில் தவிக்கும் கார்ல், எல்லியின் நினைவாகவே வாழ்ந்து வருகிறார். அவரது தனிமையில் ஒரு சிறுவன் குறுக்கிடுகிறான் (ரஸ்ஸல்). சாரணச் சங்கத்தைச் சேர்ந்த அவனுக்கு பலமெடல்கள் கிடைத்தாகி விட்டது. இன்னும் வயதானவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் இன்னொரு பதக்கத்தை அவன் பெற்றால் அவனது பதக்கப் பட்டியல் பூர்த்தியாகும். அவன் கார்லிடம் வந்து உங்களுக்கு எப்படி உதவ முடியும் எனக் கேட்க, அவனை துரத்துவதற்காக அவரது தோட்டத்தில் ஒரு விசித்திரப் பறவை வருவதாகவும், அதைப் பிடிக்கும்படியும் சொல்கிறார்.

ஒருநாள் அவரது வீட்டின் எதிரில் கட்டிட வேலைகள் நடக்கிறது. அவர்கள் கார்லின் வீட்டையும் வாங்குவதற்காக தரமுடியுமா எனக் கேட்கின்றனர். கிடைக்கும், ஆனால் நான் செத்த பிறகு எனச் சொல்லி கதவை அடைக்கிறார். மனைவியின் நினைவாய் அந்த வீட்டைத் தர மறுக்கிறார். ஒருநாள் அங்கு வேலை செய்யும் ஒருவன் தெரியாமல் அவர்களது வீட்டின் தபால் பெட்டியை வாகனத்தால் இடித்து விடுகிறான். அது கார்லும், அவரது மனைவியும் வண்ண மையினால் தங்களது கையை அதில் பதித்து செய்த தபால் பெட்டி. அதை சேதப்படுத்திவிட்டானே என்ற ஆத்திரத்தில் இடித்தவனை தனது வாக்கிங் ஸ்டிக்கால் ஒரு போடு போட ரத்தம் வருமளவு அடிபட்டு விடுகிறது. உள்ளூர் கோர்ட்டில் நடக்கும் கேஸில் பெரியவர் கார்லை முதியோர் இல்லத்தில் சேர்க்க தீர்ப்பாகிறது.

அவரை அழைத்துச் செல்ல வருபவர்களிடம், ஒரு நிமிடம் இருங்கள் என சொல்லிவிட்டு வீட்டினுள்ளே செல்பவர் அப்படியே ஆயிரக்கணக்கான பலூன்களின் உதவியால் வீட்டோடு ... ஆமாம் வீட்டோடு பறந்து போகிறார், தனது மனைவியின் ஆயுள் கால கனவான தென் அமெரிக்கக்காடுகளில் இருக்கும் பாரடைஸ் ஃபால்ஸ் நீர்வீழ்ச்சியை நோக்கி... பறந்துகொண்டிருக்கும்போது அவரது வீட்டுக் கதவு தட்டப்படுகிறது..

அங்கு பார்த்தால் நம்ம ஸ்கௌட் ரஸ்ஸல் நிற்கிறான். கார்ல் வீட்டில் தொந்தரவு செய்துவந்த பறவையைப் பிடித்துவிட்டதாகவும், அவரோடு சேர்ந்து கொள்வதாகவும்..வேறு வழியின்றி அவனையும் சேர்த்துக் கொண்டு செல்கிறார். பலவித சிக்கல்களுடன் வீடு பறந்து, பறந்து தென் அமெரிக்கக் காடுகளை அடைகிறது.

பின்னர் இருவரும் இணைந்து தென் அமெரிக்கக் காடுகளில் சுற்றி வருகின்றனர். பெரியவர் தனது மனைவி எல்லி சொன்ன இடத்தைத் தேடி அதில் அவரது வீட்டை வைத்துவிட ரஸ்ஸல் உதவியுடன் முயல்கிறார். அங்கு அவர்கள் பேசும் நாய்களையும், விநோதப் பறவையையும் சந்திக்கின்றனர். உடனே ரஸ்ஸல் அந்த வண்ண மயமான, நீள்மூக்கு கொண்ட பறவைக்கு கெவின் எனப் பெயரிடுகிறான். முதலில் கார்லிடம் பினங்கும் கெவின் பின்னர் கார்ல், ரஸ்ஸல் இருவரிடமும் நட்பு பாராட்டுகிறது.

ஊரில் சபதம் செய்துவிட்டு வெளியேறிய விஞ்ஞானி ஊண்ட்ஸ், அந்தப் பறவையை ( கெவின் என ரஸ்ஸல் பெயரிட்ட) பிடிப்பதற்காக காடுகள் முழுவதும் இதைப் போன்ற பேசும் நாய்களை உலவ விட்டிருப்பார். இவர்களிடம் அந்தப் பறவை இருப்பதை அந்த ஆராய்ச்சியாளர் அந்த உளவு நாய்கள் மூலம் அறிய வர அவர்களை வீட்டோடு அங்கு இழுத்து வரவைக்கிறார்.

கார்லுக்கு அவரது ஆதர்ச சாகச வீரரை நேரில் பார்த்த சந்தோஷத்தில் நீங்கள் சார்லஸ் முண்ட்ஸ் தானே எனக் கேட்க ஆமாம் என அவர் ஆமோதிக்க கைதிபோல வந்த கார்ல் தற்போது விருந்தினர் ஆகிவிடுவார். ஆனால் அவர் கெவின் என்ற அந்தப் பறவையைப் பிடிக்கத்தான் இங்கு இருக்கிறார் என அறிந்தவுடன், முண்ட்ஸிடமிருந்து பறவையைக் காப்பாற்றுவதுதான் ரஸ்ஸல் மற்றும் கார்லின் வேலையாகிப் போகிறது.


பலவிதப் போராட்டங்களுக்குப் பின்னர் முண்ட்ஸ் மற்றும் அவரது பேசும் நாய்களிடமிருந்து கெவினைக் காப்பாற்றி இறுதியில் கெவினை அதன் குடும்பத்துடன் சேர்த்து விட்டு கார்ல் மற்றும் ரஸ்ஸல் முண்ட்ஸின் பலூன் விமானத்திலேயே ஊர் திரும்புகின்றனர்.

முழுக்க முழுக்க கிராஃபிக்ஸில் செய்ப்பட்டிருந்தாலும், நாம் அதை உணர முடிவதேயில்லை என்பது அதன் மிகப்பெரிய பலம். கார்லும் சரி, அவரது மனைவி எல்லியும் சரி அப்படியே ஒரு ஆதர்ச கணவன், மனைவியாக வாழ்வதையும், சந்தோசமான தருணங்களை ஒரு மரத்தடியில் தலைக்குத் தலை தொட்டுக்கொண்டு வானத்தைப் பார்ப்பதும், சோகமான நேரங்களில் இருவரும் இருட்டில் இருக்க வெளியிலிருந்து நிழல்கள் போல காண்பிக்கும் நேரங்களிலும், முதுமையடையும் தருணங்களையும் மிக மிக அழகாக எடுத்துள்ளனர்.

செலவினங்களுக்காக தென் அமெரிக்கா போக சேர்த்துவைக்கும் உண்டியலை உடைக்க நேரும்போது இது வைத்தியத்துக்கு, இது வீடு மேல் மரம் விழுந்துவிட்டதால் பராமரிப்பிற்கு என நமது நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கையைப் போல வாழ்வதும், அதை சந்தோஷமாய் செய்வதும் இயல்பு..

படத்தில் முதியோர் இல்லத்தில் அவரை அழைத்துச் செல்ல வந்திருப்பவர்களிடம் கொஞ்சம் பொறுங்கள் என உள்ளே சென்றுவிட்டு, இத்தனை நாள் செய்துவைத்திருந்த பலூன்களை விடுவிக்க வீடு அப்படியே காற்றில் மிதந்து செல்வதும், ஒவ்வொருவரும் அவரவர் வீடு மாடியிலிருந்து பார்ப்பதும், கிராஃபிக்ஸ் என்பதை நினைக்கவே மலைப்பாக இருக்கிறது.. ஆயிரக் கணக்கான வன்ன வன்ன பலூன்கள் அப்படியே கூம்புவடிவத்தில் இருக்க அவற்றை அனைத்துள்ள நூல்களின் உதவியுடன் வீடு பறப்பது அழகு.

கார்ல் தானே வடிவமைத்த சுக்கான் உதவியுடனும், பாய்மரத்துடனும் காற்றில் பறந்து செல்வதும், திசைகாட்டும் கருவியை வைத்து தென் அமெரிக்கக் காடுகளை அடைவதும், ரஸ்ஸலின் தொந்தரவையும், அதே சமயம் அவனது எதையும் நல்லவிதமாகவே அனுகும் முறையும் அந்தந்த பாத்திரத்தை இயல்பாய் வைக்கின்றன.