Monday, December 28, 2009

சொல்வனம் - இசைச் சிறப்பிதழ் குறித்து..


வலையுலகமெலாம் மொக்கைகளின் பின்னாலும், நுன்னரசியல்களின் பின்னாலும் சென்று அறிவியல் தந்த வசதியை வெட்டி அரட்டைகளாக ஆக்கி வைத்திருக்கும் இந்த சூழ்நிலையில், தமிழில் உருப்படியான வலை இதழ்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் ஒன்று சொல்வனம் என்பதை நிச்சயம் சொல்லலாம்.


மாதமிருமுறை, வித்தியாசமான கட்டுரைகளையும், முயற்சிகளையும், அபூர்வமான கலைஞர்களையும், அறிவியலையும் நமக்குத் தருவதில் காட்டும் முனைப்பில் அவர்களது சமூக அக்கறை புலப்படுவதைக் கானலாம்.


அதன் தொடர்ச்சியாக இந்த இதழை சொல்வனம் “இசைச் சிறப்பிதழ்” ஆக தயாரித்துள்ளது. நமது வாராந்தரிகளைப் பொருத்தவரை ”இசைச் சிறப்பிதழ்” என்றால் என்னென்ன வாத்தியங்கள் உண்டோ அவைகளைப் பற்றிய சிறுகுறிப்பும், அதை நடிகையர் வைத்திருப்பதுபோல படமிட்டும் வெளியிடுவது மட்டுமே. பெரிய பத்திரிக்கைகள், அதிகம் விற்கும் பத்திரிக்கைகள் என தங்களை அழைத்துக்கொள்ளும் குமுதம், விகடன் போன்ற இதழ்களும் இப்படித்தான் வெளியிடுகின்றன. விதிவிலக்குகளாக சில நல்ல கட்டுரைகள் வந்துவிடுவதும் உண்டு. இந்த மாதிரியான வணிக சூழ்நிலையில் , வலைப் ப்த்திரிக்கை ஒன்றில் இசையைப் பற்றி இப்படி ஒவ்வொரு கட்டுரையையும் மிக நேர்த்தியாக எழுதப்பட்டு, ஒரு நல்ல இசை ரசிகனுக்கு என்னெவெல்லாம் பிடிக்குமோ, அதை தரமான முறையில் வாசகர்களுக்கு வழங்கி இருக்கிறது சொல்வனம் குழு.


சேதுபதி அருணாச்சலம் எழுதிய பட்டம்மாள் ஒரு சமூக நிகழ்வு என்ற கட்டுரையில், எப்படி இன்றைய தலைமுறைக்கு நமது முந்தைய தலைமுறையின் இசையுலகின் அரசியைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் கூட இல்லாமல் நமது ஊடகங்கள் திரைப்படங்கள் மூலம் சமூகத்தை மழுங்கடித்து வைத்திருக்கிறது என்பதையும், சாதீய ரீதியான உணர்வு எப்படி தகுதியுள்ள ஒருவரை அவரது மறைவின்போது கூட புறக்கனிக்கச் செய்துவிட்டது எனபதைப் பற்றி அக்கறையுடனும், தற்போதைய தமிழ் சமூகம் குறித்தான கவலையுடன் எழுதியிருக்கிறார்.

வழக்கம்போல இலங்கை தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ”தாமரை பூத்த தடாகம்” என்ற கட்டுரையில் அவரது இளமைக் காலங்களில் அவருக்கிருந்த இசையுடனான அனுபவங்களை நல்ல நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறார்.


அதில் ஓரிடத்தில்

//தனக்குப் பக்கத்தில் ஒருத்தன் நின்று மினக்கெட்டு சுருதிப்பெட்டியை இந்த அமத்து அமத்துகிறானே, இவனுடன் கொஞ்சம் ஒத்துப்போவோமே, என்றெல்லாம் வேலுச்சாமி நினைக்கவில்லை. அவன் தன் பாட்டுக்கு பாடினான். நான் என் பாட்டுக்கு சுருதிப் பெட்டியை போட்டேன். அன்று வானொலியில் பாடியபோது அவன் பாட்டுக்கு பக்கத்து பக்கத்தில் தனியாக ஒலித்த சுருதி நான் உண்டாக்கியதுதான்.//

//அதன் பிறகு எப்படியோ செய்தி பரவி ஒருவரும் என்னை சுருதிபோட அழைக்கவில்லை. நானும் அதை பெரிய இழப்பாக கருதவில்லை. ஏனென்றால் நான் அப்பொழுது இசைப்பருவத்தை தாண்டி இன்னொரு பருவத்துக்குள் நுழைந்துகொண்டிருந்தேன்//

எனற தனது இசை அனுபவத்தை நகைச்சுவையுடன் பதிவு செய்கிறார்.


பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”க் கட்டுரையில் எப்படி ஒரு நல்ல இசையை அனுபவிக்க சங்கீதம் தெரிந்திருக்க வேண்டியதில்லை என்பதை தனது வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாகவே நமக்குக் காட்டுகிறார். தனது குட்டிக்கு பால் தராத ஒரு ஒட்டகம எப்படி இசைக்கு மயங்கி தாயுணர்வுடன் தனது குட்டிக்கு பால் தந்தது எனபதை குறித்தான ஒரு மங்கோலியத் திரைப்படம் குறித்து சொல்லும்போது இசையின் வலிமையை குறிப்பால் உனர்த்துகிறார்.


ரா.கிரிதரன் எழுதிய ”எப்படிப் பெயரிட” ( How to name it?") என்ற இளையராஜாவின் அருமையான இசைமுயற்சி எப்படி கண்டுகொள்ளப்படாமலேயே போனது என்பது குறித்தும், அதன் சிறப்பு குறித்தான கட்டுரை என்னைப்போன்ற இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு பூஸ்ட்டாக இருக்கும்..


ஒரு நல்ல நாதஸ்வர இசையில் மனம் கரையும் ஒரு வெள்ளையனைப் பற்றிய ஒரு கதை தி.ஜானகிராமனின் ”செய்தி” கதையிலும், இன்றைய சபாக்களில் பாடும் இசைக்கலைஞர்களின் தரம் குறித்தும், அவர்களது இசை அறிவு குறித்தும், சபாக்களில் பாட கிடைக்கும் வாய்ப்புகளுக்கு பின்னிருக்கும் அரசியல் பற்றியும் அங்கதமான நடையில் தேசிகன் எழுதியுள்ள “கல்யாணி” கதையும், ராமன்ராஜாவின் வழக்கமான அதிரடி நகைச்சுவையுடன் கூடிய அறிவியலைக் கலந்துதரும் ”வயலின் 35 லட்சம் டாலர், வசூல் 32 டாலர்” கட்டுரையும் வாசகர்களை அதிகம் கவரும்.

இதுதவிர கர்நாடக இசைப்பிரியர்களுக்கென எழுதப்பட்டுள்ள பல அரிய தகவல்களை உள்ளடக்கிய பல கட்டுரைகளும் இருக்கின்றன.

மொத்தத்தில் சொல்வனத்தில் இதுவரை வெளியான இதழ்களில் இந்த இசைச் சிறப்பிதழ் ஆகச்சிறந்த சொல்வனம் இதழ்களில் ஒன்றாக இருக்கும். இனிமேல் வரும் இதழ்கள் இதையும் விஞ்சும்படி தயாரிக்கவேண்டிய சோதனை சொலவனம் குழுமத்தாருக்கு...

ஆதரித்து, வாழ்த்த வேண்டிய இதழ் சொல்வனம் எனபதில் சந்தேகமில்லை..

Sunday, December 20, 2009

நேரில் கண்ட விபத்து

நேற்றிரவு வேலை விஷயமாய் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு ரவுண்டபவுட்டில் (நம்மூர் ரவுண்டானா) யூ டர்ன் அடிக்கக் காத்திருக்கிறேன்.. எனது வண்டியின் பின்னாலிருந்து டயர் அதிக பட்ச சத்தத்துடன் ரோட்டில் உராயும் சத்தம் கேட்கிறது. என்ன நடக்கிறது என திரும்பிப் பார்த்தால் ஒரு லேண்ட்க்ரூசர் ( டொயோட்டா) வண்டி முழுக்கட்டுப்பாட்டையும் இழந்து பக்கவாட்டில் நான்கு சக்கரங்கள் தேய அதிக பட்ச வேகத்தில் வந்து ரண்டபௌட்டின் கர்பில் மோதி தலைகீழாய் கவிழ்ந்து ரவுண்டானாவில் வைத்திருந்த கைகாட்டி மரத்தை கீழே சாய்த்து, அதன் விசையில் அப்படியே காற்றில் பறந்து, பறக்கும்போதே நேராகி, மீண்டும் தலைகீழாகி அதிக பட்ச சப்தத்துடன் தரையில் தலைகீழாய் மோதியது.

உள்ளே எத்தனைபேர் இருந்தனரோ.. நான் எனது காருக்குள்ளேயே அதிகபட்ச படபடப்புடன் ஹசார்டு லைட் அல்லது பார்க்கிங் லைட் எனப்படும் விளக்கை இட்டுவிட்டு ஒரு நிமிடம் கிட்டத்தட்ட என்ன செய்வதெனத் தெரியாமல் அமர்ந்திருந்தேன்.. அதற்குள் மூன்று, நான்கு வாகனங்கள் வந்து அவர்களுக்கு உதவ ஆரம்பித்து விட்டனர்.

அந்த அதிர்ச்சி வீடு திரும்பும் வரையிலும் விலகவேயில்லை.

மத்திய கிழக்கில் இதுபோன்ற விபத்துகள் கிட்டத்தட்ட ஏதேனும் ஒரு சாலையில் தினமும் நடந்துகொண்டுதானிருக்கிறது. இருப்பினும் இதுபோன்ற விபத்துகள் பற்றிய செய்திகளை போக்குவரத்து துறை ஒவ்வொரு சாலை நிறுத்தங்களிலும், வணிக வளாகங்களிலும், படங்களாகவும், வீடியோக்களாகவும் பொதுமக்களுக்கு காட்டினாலும் திருந்தியபாடில்லை.

நான் இந்தவிபத்திலிருந்து தப்பித்தது ஒரு அதிசய நிகழ்வு. அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஓடிவரும்போது அருகில் இருந்த சாலையில் எனது வாகனம் இருந்தது. ( அது ஒரு இருவழிப்பாதை) அதிர்ஷ்டவசமாக மட்டுமே எனது வாகனத்தின்மீது மோதவில்லை. மோதியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்கவும் விரும்பவில்லை. எனது கண்முன்னாலேயே எப்படிப்போய் உருண்டது? எவ்வளவு விசையுடன் அது சென்றது என்பதெல்லாம் நேரிலேயே கண்டிருந்ததால் யோசிக்க விரும்பவில்லை.

நரி இடம்போனால் என்ன வலம்போனால் என்ன மேலே விழுந்து பிடுங்காத வரை சரிதான்....இல்லையா?

Sunday, December 13, 2009

தோஹா (கத்தார்)வில் மழை.



கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று மாலை முதல் இந்த நிமிடம் வரை விட்டு விட்டு நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது.

நம்மூரில் பெய்வதுபோல அடைமழை நேற்றிரவும் இன்று அதிகாலையும் பெய்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் மழை என்பது அபூர்வம். நம்மூர்போல மழைக்கால மழையாக இருப்பதில்லை. எப்போதாவது ஏற்படும் புயல்சின்னங்கள் மூலமே மழை பெய்கிறது. ஆதலால் எப்போதும் சேதாரங்கள் இல்லாமல் மழைகள் செல்வதில்லை.

போன மாதம் ஜெத்தாவில் ( சவுதி)மழையினால் கிட்டத்தட்ட 120 பேர்கள் வரை இறந்தனர். 2007ல் ஏற்பட்ட கோரமான மழையினால் பல நாட்கள் மஸ்கட் (ஓமன்) நகரம் தண்ணீரில் தத்தளித்தது. குடிக்கக்கூட நீரின்றி மக்கள் சில நாட்கள் இருந்தனர். ஓமன் நாடு முழுதும் பேரழிவைச் சந்தித்தது.

மத்திய கிழக்கு நாடுகளில், சாலைகளில் தேங்கும் நீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் ஒன்றும் இருப்பதில்லை. மழை எப்போதவது பெய்வதால் அதற்கு தனிக்கவனம் செலுத்துவதில்லை. நம்மூர் போல எல்லாக் காலநிலைகளுக்கும் ஏற்ற "ஆல்வெதர்" சாலைகளும் கிடையாது. அதானாலேயே வண்டிகள் நீரில் அடித்துச் செல்லப்படுவதும், ஆட்கள் ஜலசமாதியடைவதும் சர்வசாதாரனமாக நடக்கிறது. நல்லவேளையாக கத்தாரில் அந்த அளவுக்கு பயங்கர மழையாக இல்லாமல் நல்ல மழையாகவே இதுவரை பெய்து வருகிறது.



மேகம் மறைத்த ஆசிய விளையாட்டுப்போட்டி நினைவு விளக்குத்தூண்.





மழையில் மிதக்கும் தோஹா.

இங்கு இன்னும் ஓரிரு வாரங்களுக்கு தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் இருக்கும் மன்னும், நீரும் தொடர்ச்சியக வண்டிச் சக்கரங்களில் அரைக்கப்பட்டு அது கூழாகி அந்த இடங்கள் மனிதன் கால் வைப்பதற்கே லாயக்கில்லாமல் ஆகி பின்னர் வண்டிச்சக்கரங்கள் மூலம் பல இடங்களுக்கு சென்று தூசியாகி மீண்டும் அதன் இருப்பிடம் அடையும்.

போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் இடத்திலுள்ள நீரைமட்டும் உறிஞ்சி வெளியே விடுவார்கள். இதர இடங்களுக்கு நான் மேலே சொன்ன கதிதான்..

நம்மூரிலாவது ஆங்காங்கே குளம் குட்டைகளில் ஒரு 10 முதல் 20 சதமான தண்ணீராவது சேரும், பின்னர் ஏதோ ஒரு வகையில் பயன்படும். ஆனால் இங்கெல்லாம் அப்படியே தாழ்வான இடங்களில் தண்ணீர் சேர்ந்து முழுதும் ஆவியாகியும், தரைக்குள்ளும் சென்று வீணாகும்.

நம்மூரில் மழைபெய்யும்போது ஏற்படும் மகிழ்ச்சி இங்கும் ஏற்படும். ஆனால் நம்மூர் போல கடைக்குப் போய் ரெண்டு பஜ்ஜியும், ஒரு டீயும் சாப்பிட்டு மழையை அனுபவிக்க முடியாது.. அல்லது வெளியே சென்று மழையில் நனைதல் சாத்தியமில்லை.

இனி இந்த மழை ஓய்ந்து வெயில் வந்துவிட்டால் அடுத்த வருடமோ இல்லை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரோதான் மழையைப் பார்க்க முடியும்.

இந்த முறை ஊருக்கு வந்துவிட்டு மழையைப் பார்க்காமல் சென்ற குறை இப்போது கத்தாரில் வந்த மழையினால் தீர்ந்தது. மழையைப் பார்க்காத ஒவ்வொரு ஆண்டும் மனதை என்னவோ செய்கிறது.. என்னமோ யாருமே இல்லாத அல்லது சீக்கிரம் அழியப்போகும் உலகில் வாழ்வதுபோன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இந்த 2009 இந்த மழையினால் அருமையாக கழிந்தது..

மழை பெய்து முடிந்தால் கடுமையான குளிர்காலம் ஆரம்பிக்கும். அதையும் அனுபவிக்க வேண்டியதுதான்..

சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ என்ற பாடலில் வரும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை..

அந்தப்பாடலின் ஒலியும், ஒளியும் இங்கே..




(படங்கள் எனது அலைபேசியில் எடுத்தது.)

Saturday, December 12, 2009

சீ திஸ் விமர்சனம் ஐ சே... ( குயிக் கன் முருகன்)


ரைஸ்பிளேட் ரெட்டிதான் வில்லன் சார்..

குயிக் கன் முருகந்தான் ஹீரோ சார்..

வில்லனோட ”வப்பு” தான் மேங்கோ சார்

”ரவுடி”தான் ரைஸ் பிளேட்டோட கையாள் சார்.

”மெக் தோசா” தான் ரைஸ்பிளேட் ரெட்டி விக்கிற தோசையோட பேரு சார்..

" குயிக் கன் முருகன சுடுறவன் இன்னும் பொறக்கலை, ஐ சே” அப்படின்னு சவுண்டு விடுற குயிக் கன்ன ரைஸ் பிளேட் ரெட்டி கொன்னுடுறான்..

குயிக் கன் முருகன் பசுக்களை பாதுகாக்கிற, சைவ உணவுக்கு ஆதரவு அளிக்கும் மாட்டுப் பையன், அதாங்க கவ் பாய் பாய் (cow Boy)

ரைஸ் பிளேட் ரெட்டி (நாசர்) ஊர்ல இருக்குற சைவ ஓட்டலையெல்லாம் அவனோட அடியாள்கள வச்சி பிடுங்கி அசைவ ஓட்டலா மாத்துறான். அத தட்டிக்கேட்ட குயிக் கன் முருகன சுட்டுக்கொன்னுர்ரான் ...

குயிக் கன் முருகன் மேல ( செத்து) போய் சித்திரகுப்தண்ட்ட பூமியில் ரைஸ்பிளேட் செய்யுற அநியாயங்களை எடுத்துச் சொல்லி மீண்டும் பூலோகத்துக்கே மனுஷனா பசுக்களை காப்பாத்துறதுக்கும், சைவ பழக்க வழக்கத்த காப்பாத்துறதுக்கும் திரும்பி வந்து பூமியில பெரிய ஆளா ஆய்ட்ட நம்ம ரைஸ் பிளேட் ரெட்டிய பழி வாங்குறதுதான் கதை.

நாலு பைட்டு, ஆறு சாங்கு, மூனு செண்டி கடைசியில சுபம்னு பாத்துப் பாத்து அலுத்துபோன ஆளுகளுக்கும், நகைச்சுவைய வித்தியாசமா குடுத்தா ரசிக்கத் தெரிஞ்ச ஆளுகளுக்கும் நான் இந்த படத்தை சிபாரிசு செய்வேன்.. கமல் டைப் காமெடியையும், வடிவேல் காமெடியையும், விவேக் காமெடியையும் மட்டுமே காமெடினு நம்புற ஆளுகளுக்கு.. தயவு செஞ்சு இந்தப் படத்துக்கு போயிறாதீங்க..

ரைஸ்பிளேட் ரெட்டியால சுடப்பட்டு மேலோகம் போற குயிக் கன்னுக்கு அங்க லட்சுமிசாமியப் பாக்குறாரு.. காலண்டர்ல பாத்த மாதிரியே இருக்குனு சொல்லிட்டு அடுத்த ரூமப்பாத்தா தேவலோக ரம்பைகள் ஸ்டெப் வச்சு டான்ஸுக்கு ட்ரெயினிங் எடுத்திட்டிருக்காங்க..

எப்படியாச்சும் பூமிக்குப் போயி அந்த ரைஸ்பிளேட் கிட்ட இருந்து பசுக்கள காப்பாத்தனும்னு சித்திரகுப்தன்ட்ட கெஞ்சுறார். அவரும் சீனியாரிட்டி மற்றும் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் விளக்கிட்டு இருந்தாலும் உங்க கேஸ் வித்தியாசம்கிறதனாலயும், வெஜிடேரியனிஸம்தான் இப்ப நீட் ஆஃப் த ஹவர் எப்படின்னு சொல்லி அவருடைய மறுஜென்மத்திற்கு (மறுபடியும் குயிக் கன் முருகனாவே)அப்ப்ரூவ் பன்றார்.

பூமிக்கு வந்து ரெட்டிய தேடிப்புடிச்சு அவன கொல்றதுதான் மீதிக்கதை.

இந்தியா கேட் பக்கத்துல மேலோகத்துல வந்து இறங்குறதும் அதுல ட்ரான்ஸ்மிஷன் எர்ரர் ஆகி பாதி ட்ரெஸ்ல வந்து இறங்குறவருக்கு மீதி ட்ரெஸ் மேலோகத்துல இருந்து சாரி ட்ரான்ஸ்மிஷன் எர்ரர் அப்படின்னு சொல்லிட்டு மீதி ட்ரெஸ்ஸும் வந்து இறங்குறதுல ஆரம்பிச்சு, வில்லனுக சுடுற துப்பாக்கிக் குண்டை பல்லுல கவ்வுறது, கையில புடிக்கிரது அப்படின்னு பல கிறுக்குத்தனமான ஜோக்ஸ்.


இதுக்கு நடுவுல் குயிக் கன் முருகனோட அண்ணன், மற்றும் அன்னிய பாக்குறதும், ரைஸ்பிளேட் ஆளுங்க குயிக் கன் முருகன்னு நெனச்சி கொன்றுவிட்டுஅவங்க அண்ணிய மெக் தோசைக்கு அருமையான ரெசிப்பிக்காக கொண்டுபோக பழிவாங்குறார் ஹீரோ, குயிக் கன்

ரம்பா வோட பேரு மேங்கோ.. ரைஸ்பிளேட்டோட காதலியா வர்ராங்க..நல்ல அழகு இந்தப்படத்துல..


இந்த படத்துல அப்படி என்ன விசேஷம்??

நம்ம எகத்தாளமா பாக்குற பழைய சினிமா படங்களையும், ஒருகாலத்துல எம்.டீ.வியிலோ, வி.டீவியிலோ வந்த “குயிக் கன் முருகன்” அப்படிங்கிற ஒரு கேரக்டரை அப்படியே கிண்டல் பன்னி ஒரு முழுநீளத் திரைப்படம் எடுப்பதென்பதும் அதை வனிக ரீதியாக வெற்றிபெற வைக்க முடியும் என்பதும் ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை.. ஆனல் நம்பி எடுத்திருக்கிறர்கள்.. வெற்றி பெற்றார்களா எனத் தெரியவில்லை.

கதை முன்னும், பின்னும் போவதும், தொடர்ச்சி இல்லாமல் போல தெரிவதும், காமெடிப் படத்தில் வில்லன் மிக சீரிஸாக இருப்பதும் பலவீனங்கள்..


பழைய கால முறையில் ட்ராப் த கன் ஐ சே என்பது போல எதற்கெடுத்தாலும் ஐ சே சேர்ப்பது நன்றாகத்தான் இருக்கிறது கேட்க..

கேரக்டர்களின் பெயர்களும் கன் பவுடர், ரவுடி எம்.பி.ஏ, ரைஸ்பிளேட் ரெட்டி, மேங்கோ டாலி என வித்தியாசமாய்த்தான் வைத்திருகிறார்கள்.

இந்துக்கடவுள்களை கிண்டல் செய்கிறார்கள்..ஆனல் இந்து கடவுள் படமல்ல. யாரையும் புண்படுத்தவோ, கிண்டல் செய்யவோ இல்லை.. அப்படி இருப்பின் அது தற்செயலே என சொல்கிறார்கள். நம்புவோம்..

இதர மதங்கள் சொல்லும் மேலுலகம் என ஒன்றிருப்பதை நம்பவில்லையோ, இவர்கள்??

மற்றபடி நான் ரசித்த ஒரு திரைப்படம் இது..

அதன் ட்ரெயில இங்கே