Wednesday, November 18, 2009

ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்




சங்க கால இலக்கியங்கள் நமக்கு அறிமுகம் ஆவதெல்லாம் ஏதேனும் ஒரு திரைப்படத்தின் பாடலில் முதல் இரண்டு வரியாகவோ அல்லது காதல் காட்சிகளில் பின்னனியாகவோ ஓட விடுதல் மூலமே..

காலஞ்சென்ற சுஜாதா அவர்கள் அடிக்கடி சங்க இலக்கியங்களில் உள்ள சுவைகளை அடிக்கடி மேற்கோள் காட்டியும் வந்தார்.

அதற்குப்பின்னர் தற்போது பல்கலைக்கழகங்களில் தமிழை முக்கியப்பாடமாக எடுத்து படிப்போர் தவிர இதர தமிழர்களுக்கு சங்க இலக்கியங்களில் பரிச்சியமோ, அப்படி ஒன்று இருப்பதை அறிந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே.

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது ஜெயமோகனின் சில புத்தகங்களை வாங்கி வந்தேன்.. அதில் சங்கச் சித்திரங்களும் ஒன்று.

அவருக்குப் பிடித்த சங்க காலப் பாடல்களை தமது வாழ்க்கை அனுபவங்கள் மூலம் கதையாகச் சொல்லி அந்தப் பாடலின் எளிய தமிழ் வடிவத்தை அந்தக் கட்டுரையின் இறுதியில் தருகிறார். படிக்க படிக்க சுவாரசியமாகவும், சங்க காலப் பாடலை நாம் நேரடியாக படிக்கும்போது ஒன்றுமே புரியாததுபோலத்தெரிந்த அதே பாடல் அவரது எளிமைப் படுத்தப்பட்ட பாடலை படித்த பின்பு மீண்டும் படிக்கும்போது கொஞ்சம் புரிந்துகொள்ள முடிகிறது.

பாடல்களை அக்குவேறாக ஆனிவேறாக அலசாமல், அந்தந்தப் பாடலுக்கு ஏற்றாற்போல் தனது வாழ்க்கை அனுபவங்களை சொல்லியிருப்பது படிக்க சுவாரசியமாய் இருக்கிறது. நமக்குப் பிடிக்காத விஷயங்களை நாம் எப்போதுமே தாண்டிச் செல்லவே விரும்புவோம். ஆனால் அதே விஷயத்தை நமக்குப் பிடித்ததுபோல அறிமுகம் செய்யும்போது அதன்மீது ஒரு மரியாதை வந்துவிடுகிறது. அதைத் தெரிந்துகொள்ள விழைகிறோம். அதைத்தான் இந்த சங்கச் சித்திரங்கள் செய்கிறது.

தமிழர்களின் சொத்தான சங்கப்பாடல்கள், கூலிக்கு மாரடிக்கும் பெரும்பான்மையான தமிழாசிரியர்களால் தானும் சரியாகப் புரிந்துகொள்ளாமல், தனது மாணவனுக்கும் சரியாக சொல்லித்தராமல் கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள் சங்கப்பாடல்களின் வாசனையே இன்றி பள்ளிக்கூடங்களைத் தாண்டிவந்துவிட்டது.

ஒரு நல்ல ஆசிரியனைபோல நல்ல விஷயங்களை நமது மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கும் ஜெயமோகனின் இந்த உழைப்பு பாராட்டப்படவேண்டியது.

ஏற்கனவே ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த சமயத்திலேயே பரவலான பாராட்டைப் பெற்றது இந்த சங்கச் சித்திரங்கள்.

Sunday, November 15, 2009

ராமன் ராஜா எனும் புன்னகைக்க வைக்கும் அறிவியல் கதை சொல்லி.

ராமன்ராஜா என்ற பெயர் எழுத்துலகில் எனக்கு அறிமுகம் ஆனது சொல்வனம் இதழில்தான். அவரது கட்டுரைகள் அனைத்தும் அறிவியல் சம்பந்தப்பட்ட ஆனால் பொதுவாக அதிகம் விவாதிக்கப்படாத வறண்ட தலைப்புகள்.

அப்படிப்பட்ட விஷயங்களை கையில் எடுத்துக்கொண்டு வாசகனை மிகுந்த ஆர்வத்துடன் படிக்க வைப்பதென்பது சவாலான விஷயம், சொல்லப்போனால் ஓரிரு கட்டுரைகளுக்கு மேல் அப்படி சுவாரசியமாக எழுதிவிட முடியாது.

தமிழில் சுஜாதாவுக்கு அறிவியலை எளிய மக்களுக்கு புரியும் வகையில் கொண்டு சென்றவர் என்ற நற் பெயரும், இலக்கியத்தை தேவையில்லாமல் எளிமைப்படுத்தினார் என்ற கெட்ட பெயரும் உண்டு.

அவரது வரிசையில் அறிவியல் கட்டுரைகளை எழுதுவதிலும் அதை எளிதாய் மாற்றுவதிலும், ஜனரஞ்சகமாக்குவதிலும், சொல்லப்படும் விஷயம் எந்த விதத்திலும் நீர்த்துப்போகாமலும் வாசகர்களுக்குத் தருவதில் வெற்றி பெற்று வருகிறார் திரு.ராமன் ராஜா அவர்கள்.

அவரது சொல்வனம் கட்டுரைகளில் காணப்படும் வித்தியாசமான தலைப்புகளினால் ஈர்க்கப்படும் வாசகன் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தால் அதன் சரளமான நடையிலும், நகைச்சுவையிலும் இருந்து வெளிவருதல் சாத்தியமில்லாத ஒன்று. ராஜன் ராமனின் விசிறியாக மாறிவிடுவார். அப்படிப்பட்ட சிறந்த நடையைக் கொண்டது அவரது எழுத்துக்கள்.

சில தலைப்புகள்..

சாத்தியத்தை மீறிய சத்தியங்கள்.

விழப்போகிறது

பளிச்சென்று எரிந்த பொருளாதாரம்

எறும்பு மூளையின் சிறந்த முடிவு.

மரணமில்லாத மனிதன் மகிழ்ச்சியாக இருப்பானா?

இன்னும் பல...

அவரது நான்கே நான்கு கட்டுரைகளை மட்டும் படித்துவிட்டு எனது கருத்தாக இதைப் பதிக்கிறேன். நிச்சயம் நீங்களும் நான் சொல்வதை உண்மை எனக் கண்டுகொள்வீர்கள்.

அவரது சொல்வனம் கட்டுரைகளின் சுட்டிகள் இங்கே.