Wednesday, September 16, 2009

இனிமேல் இன்று ஒரு தகவலை கேட்க இயலாது.


ஊடகங்களில் குரலால் மட்டுமே பிரபலம் அடைய வேண்டியது வானொலியில்தான்.. தமிழகத்தில் அனைவரையும் காலை 6.40க்கு மாநிலச் செய்திகளுக்கு முன்னதாக வரும் “ இன்று ஒரு தகவலை” கேட்காதவர்களே இருக்க முடியாது என்ற அளவில் தனது வித்தியாசமான குரலால் நல்ல நல்ல தகவல்களை நகைச்சுவையுடன் கலந்து சொல்வதை தமிழகமே கேட்டு மகிழ்ந்தது ஒரு காலத்தில்...

கிராமங்களில் இன்னிக்கு தென்கச்சி கதை நல்லா இருந்துச்சில்ல என ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளும் அளவு பிரபலமாக இருந்தது அவரது நிகழ்ச்சியும், அவரது குரலும்.


இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியின் வெற்றியின் காரனமே துனுக்குச் செய்திகளை கேட்க விரும்பும் நமது மனநிலைதான் என எண்ணுகிறேன். அதை தென்கச்சி அவர்கள் தனது குரலில் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தி கதை சொல்லும் பானியில் சொல்லி இறுதியில் ஒரு நகைச்சுவை துனுக்குடன் சொல்லியவிதம் நம்மையெல்லாம் ரசிக்க வைத்தது.

இவரது இன்று ஒரு தகவல் நிகழ்ச்ச்சி 1988 ஜூலையில் தொடங்கியது. அவர் வேலை செய்த நிலைய இயக்குனர் திரு.செல்வம் சொன்னதைத் தட்ட முடியாமல் ஆரம்பித்து பின்னர் அமோக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாகவும், அதிக பட்சவருவாயை ஈட்டித்தரும் நிகழ்வாகவும் ஆனபின்பு அந்நிகழ்ச்சி தென்கச்சி அவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக ஆனதாக அம்புலிமாமா வலைத்தளத்திற்கு அளித்த நேர்கானலில் கூறி இருக்கிறார்.

இனிய உதயம் என்ற இதழுக்கு பேட்டியளித்த இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்:

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

அது “ஈழத் தமிழர்கள்!'


அனைவராலும் விரும்பப்படும் அரிய மனிதராக வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்திருக்கிறார் திரு.தென்கச்சி கோ. சாமிநாதன்.

ஒரு அருமையான கதை சொல்லியை இழந்து வாடும் தமிழர் அனைவருக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது அஞ்சலிகள்.

அண்ணாகண்ணன் அவர்களுக்கு தென்கச்சி அளித்த நேர்கானல் இங்கே